Wednesday, October 22, 2008

அடக்கி வாசித்தல்.

ஆண்களை எப்படி ஹேண்டில் செய்வது என்று நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டுமா? இது காலங்காலமாய் பெண்கள் பயின்று வந்த ஒரு மிகப் பெரிய சாஸ்திரம். ஆனால் ரொம்பவே சீக்ரெட்டான ஒரு சாஸ்திரம்.

எதற்கு இவ்வளவு ஒளிவு மறைவு என்று கூட நீங்கள் யோசிக்கலாம். ஆனால் இந்த ரகசியத் தன்மைக்கு ஒரு வலுவான காரணம் இருக்கிறது. தன்னை ஒரு பெண் ஹேண்டில் செய்யப் போகிறாள் என்று தெரிந்தாலே... அட, ஆண்களை விடுங்கள்... குட்டிக் குட்டி குழந்தைகள் கூட பெரிதாக முரண்டு பிடித்து எப்படியாவது நழுவி தப்பித்துவிட முயலும் போது, இத்தனை வலிய, பெரிய ஆண், அப்படிச் செய்ய மாட்டார்களா? ஆகவே, ஆண்களை சமாளிக்க வேண்டும் என்றால் அதற்குத் தேவையான முதல் அஸ்திரமே இந்த ஒளிவு மறைவுதான்.

காட்டில் வாழும் மிகக் கொடிய விலங்குகளில் ஒன்று சிங்கம். சாதாரணமாக, சிங்கத்தைப் பார்த்தால் மனிதர்கள் ஓடிப் பதுங்கிக் கொள்வார்கள். மற்றபடி சிங்கம் மனிதர்களை மருந்துக்குக் கூட மதிக்காது. முடிந்தால் மிதித்துக் கடித்துக் குதறி தின்றுவிடும். ஆனால் அதே சிங்கத்தை சர்க்கஸில் சேர்த்து அதை ஒரு நெருப்பு வளையத்தினுள் குதிக்க வைக்க அதே மனிதனால் முடிகிறதே. எப்படி?

சாதாரண சிங்கம் நெருப்பைக் கண்டால் ஒதுங்கும். மனிதர்களைக் கண்டால் தாக்கும், இது தான் அதன் இயல்பு. ஆனால் இந்த சர்க்கஸ் சிங்கம் மட்டும் எப்படி மனிதன் சொன்னதைக் கேட்டு நெருப்பு வளையத்தினுள் குதிக்கிறது?

அதுதான் மனிதனின் சாதுர்யம். தன்னை விடப் பல மடங்கு வலிமையும், ஆக்ரோஷமும் கொண்ட ஒரு விலங்கை வெறும் சில உபாயங்களைக் கொண்டு அடக்கி, வழிக்குக் கொண்டு வருவதுதான் மனிதனின் சாமர்த்தியம்.

மனித ஆணும், மனிதப் பெண்ணை விட வலிமையானவன். ஆக்ரோஷம் மிக்கவன், அபாயகரமானவன். ஆனால், அந்த சர்க்கஸ்காரி உபயோகிக்கும் அதே சாதுர்யத்தை சாதாரணப் பெண்களும் பயன்படுத்த பழகிக்கொண்டால், மனித ஆணும், சிங்கத்தைப் போலவே சாந்தமாய் மாறிப்போவான்.

அதெல்லாம் சரி. இந்த சர்க்கஸ்காரி உபயோகிக்கும் அந்த சாதுர்யம்தான் என்ன? எடுத்த எடுப்பில் எந்த சர்க்கஸ் காரியும், ``ஏய் சிங்கமே, உன்னை நான் என்ன செய்கிறேன் பார். உன்னை ஹேண்டில் செய்ய கற்றுக் கொண்டு இதோ தெரிகிறது பார், இந்த நெருப்பு வளையம், அதன் உள்ளே உன்னைக் குதிக்க வைக்கப் போகிறேன்... தெரிந்துகொள்!'' என்று தன் நோக்கத்தை வெட்ட வெளிச்சமாய் போட்டு உடைப்பதே இல்லை. அதற்கு மாறாய் நெருப்பு என்று ஒன்று இருப்பதாகவும், அதை ஒரு வளைய வடிவில் வைத்திருப்பதாகவும் இந்த ஏற்பாட்டிற்கும் தனக்கும் சம்பந்தம் இருப்பதாகவும் அவள் காட்டிக் கொள்வதே இல்லை.

அதற்குப் பதிலாய் சிங்கத்திடம் சாதாரணமாய் பழகுகிறாள். அதன் பராமரிப்பில் கவனம் செலுத்துகிறாள், வேளா வேளைக்கு தன் கையாலேயே உணவு பரிமாறுகிறாள். அதன் பக்கத்திலேயே இருந்து பரிச்சயத்தை ஏற்படுத்திக் கொள்கிறாள். இப்படி ஆரம்பித்து, அப்புறம் சிங்கத்தின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகும் வரை காத்திருந்து பிறகு மெல்ல மெல்ல அதைப் பழக்கி, முதலில் சாதா வளையம், பிறகு சிவப்பு நிற வளையம், அப்புறம் தூரத்தில் கொஞ்சம் நெருப்பு, பிறகு பக்கத்தில் நெருப்பு, பிறகே வளைவில் நெருப்பு என்று மிகவும் நிறுத்தி நிதானமாகத் தானே செய்கிறாள்.

இவ்வளவு செய்யும் போதும் எந்தக் கட்டத்திலுமே தன் நோக்கத்தை அவள் சிங்கத்திடம் தெரிவிப்பதே இல்லை. அதனால்தான் சிங்கமும் தன் கெடுபிடியைத் தளர்த்தி, அவள் மனம் போல நடக்கப் பழகிக்கொள்கிறது.

இதற்கு மாறாக இவள் ஆரம்பத்திலேயே ``வா சிங்கம்... இந்த நெருப்பு வளையத்தினுள் போய் குதித்துவிடு'' என்று மிகவும் ஓப்பனாய் தன் எண்ணத்தை வெளிப்படுத்தி இருந்தால், சிங்கம் அவளை அங்கேயே சிங்கிள் லபக்கில் விழுங்கியிருக்குமே.

அதனால் ஆண்களை ஹேண்டில் செய்யும் அரிய அஸ்திரங்களை கற்றுக்கொள்ள நீங்கள் விரும்பினால் முதலில் நீங்கள் பழக வேண்டிய கலை, உங்கள் உண்மையான நோக்கம் என்ன என்று வெளியே காட்டிக் கொள்ளாத ரகசியம் காக்கும் திறமை.

``அதெல்லாம் முடியாது. என்னால் இப்படி எல்லாம் ரகசியம் காத்துக் கொண்டிருக்க முடியாது. நான் எப்போதுமே வெட்டு ஒன்று துண்டு இரண்டுதான். மனசுல பட்டதை பட்டு பட்டுனு செய்துதான் பழக்கம். இப்படி எல்லாம் ஒளிவு மறைவா என்னால் இயங்க முடியாது,'' என்று நீங்கள் நினைத்தால், வெல் அண்ட் குட், நீங்கள் நீங்களாகவே இருக்கலாம், உங்களை யாரும் எதற்கும் கட்டாயப்படுத்தவில்லை. ஆனால் ஆண்களை எப்படி ஹேண்டில் செய்வது என்ற இந்த கலையை கற்றுக்கொள்ளும் அடிப்படை தகுதி உங்களுக்கு இல்லை, அதனால் நீங்கள் இந்த ஆட்டத்திலிருந்து விலகிவிடுவதே நல்லது.

இல்லை. இந்தக் கலையை நான் கற்றுக்கொள்ளத் தான் விரும்புகிறேன். ஆனால் உள்நோக்கம் மறைத்துப் பழக்கமில்லை. எப்படிச் செய்வது என்று தெரியாது என்று தயங்குகிறீர்கள் என்றால் டோன்ட் ஒர்ரி. இது ரொம்ப சுலபம் தான். உதாரணத்திற்கு ஒரு குழந்தை இருக்கிறது என்று வையுங்களேன். அந்தக் குழந்தைக்கு ஜுரம் என்று மருந்து தர வேண்டியுள்ளதென்றால் அதை எப்படிச் செய்வீர்கள்? ``இந்தா புடி, மருந்தைக் குடி'' என்று நேரடியாகவா சொல்வோம்? அப்படிச் சொன்னால்தான் குழந்தை முழு சவுண்டில் சைரனை ஆரம்பித்துவிட்டு அங்கிருந்து ஜகா வாங்கி விடுமே!

தன்னைத் தானே பராமரித்துக் கொள்ளக் கூடிய பெரிய குழந்தை என்றால் உண்மையைச் சொல்லி குடிக்க வைக்கலாம். மிகவும் சின்னக் குழந்தை என்றால், எதுவுமே பேசாமல் குழந்தையை மடியில் போட்டு, எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் ஏற்கெனவே எடுத்து வைத்திருந்த சங்கு நிறைய மருந்தை டபக் என்று குழந்தை வாயில் ஒரேயடியாக ஊற்றி, உடனே பாலைக் கொடுத்து குழந்தையை அப்படியே சமாதானப்படுத்துகிறவள்தான் சாமர்த்தியமான தாய்.

இப்படி அந்தத் தாய் குழந்தைக்கு தன் நோக்கத்தைத் தெரிவிக்காமல் மடார் என்று காரியத்தைச் செய்து முடிப்பது அந்தக் குழந்தைக்கு நன்மை தானே? அதைப் போலத்தான் இந்த `யுத்தி நம்பர் ஒன்று'ம், நீட்டி முழக்கி, விளக்கி, விவாதித்து முன்னறிவிப்புக் கொடுத்து எல்லாம் ஆண்களை நீங்கள் ஹேண்டில் பண்ண முடியாது. நீங்கள் பாட்டிற்கு இயல்பாக ஆண்களை அணுகுங்கள், உங்கள் உள்நோக்கம் வெளியே தெரியாதபடிக்கு. எப்படியும் ஆண்கள், ``இவள் வெறும் ஒரு பெண் தானே... இவளுக்கு அப்படி என்ன பெரிதாகத் தெரிந்து விடப் போகிறது'' என்று அஸால்ட்டாகத் தான் இருப்பார்கள். அநேக ஆண்களுக்குத் தான் தெரியாதே, எல்லா ஜீவராசிகளையும் போல், மனித வர்க்கத்தில் பெண் தான் ஆணை விட ரொம்ப பொல்லாதவள். என்று...

இந்த ``ஆஃப்டர் ஆல் பெண் தானே'' என்கிற அஜாக்கிரதையை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டால்தான் பெண்களுக்கு அட்வான்டேஜ் என்பதனால், `ஆண்களை ஹேண்டில் செய்யும் இந்தக் கலையின் முதல் பாடம் : `அடக்கி வாசியுங்கள்.' நீங்கள் ஹேண்டில் செய்யப் போகும் ஆணுக்கு கடைசிவரை தெரியவே கூடாது, அதுதான் ஆரம்பத்திலிருந்தே உங்கள் உள்நோக்கம் என்று.

எங்கே இந்த முதல் பாடத்தை வெற்றிகரமாய் கடைப்பிடித்து, ஏதாவது சில ரகசியங்களை பத்திரமாய் காப்பாற்றிக் காட்டுங்கள், பார்ப்போம். `சொல்லக்கூடாதது பெண்ணிடம் ரகசியம்' என்பதை மட்டும் நீங்கள் பொய்ப்பித்துக் காட்டிவிட்டீர்கள் என்றால், நீங்கள் இந்த முதல் டெஸ்டில் பாஸ் என்றும், இனி வரும் அடுத்தடுத்த அஸ்திரங்களை கற்றுக் கொள்ள தகுதியானவர் என்றும் அர்த்தம். பார்த்துவிடலாமே, நீங்கள் பாஸா இல்லையா என்று!

குமுதம் ஸ்நேகிதியிலிருந்து வெட்டி ஒட்டியது

Monday, October 6, 2008

ஆண்களை ஹாண்டில் செய்வது எப்படி, 3

இந்த ஆண்கள் ஏன் வித்தியாசமாகிப் போனார்கள்? அவர்களும் பெண்களைப் போலவே இருந்திருந்தால் உலகில் எந்த ஆண்_பெண் பிரச்னைகளுமே வந்திருக்காதே! என்று நீங்கள் யோசிப்பது நியாயமானதுதான். ஆனால் என்ன செய்வது? இயற்கையின் லாஜிக் வேறாக இருந்ததே.

இயற்கையில் பெண் என்பவள் ரொம்ப பெரிய பொக்கிஷம். ஏன் தெரியுமா? பெண்ணிடம் தான் ஜனத்தொகையைப் பெருக்கும் பெரும் ஆற்றல் இருக்கிறது. ஜனத்தொகையை மட்டுமே பெருக்கிக் கொண்டு இருப்பதா ஒரு பெண்ணின் வேலை? பெண் என்ன பிள்ளை பெறுகிற யந்திரமா? என்று நீங்கள் ஆட்சேபித்தால், வெயிட் வெயிட். நாமெல்லாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நூற்றாண்டில் வேண்டுமானால் மனித ஜனத்தொகை ஓவராய் இருப்பதினால், தாமத திருமணம், கருத்தடைச் சாதனம், பிள்ளை பிறப்பை சுயமாகக் குறைத்துக் கொள்ளும் போக்கு, கருக்கலைப்பு முறைகள், குடும்பக் கட்டுப்பாட்டு திட்டம் என்று நாம் தீவிர ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறோம். ஆனால் மனிதர்கள் தோன்றிய மூன்று மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னிருந்த காலத்தில் மிக மிகக் குறைந்த எண்ணிக்கையில் வாழ்ந்த ஒரு சிறுபான்மை உயிரினம் மனிதர்கள் மட்டுமே. அந்த கால கட்ட ஜீவனத்தில் பிறப்பு விகிதத்தை விட இறப்பு விகிதம் தான் அதிகம் என்பதால், குழந்தைகளைப் பெற்றுத் தரவல்ல பெண் மிகப் பெரிய பொக்கிஷமாகவே கருதப்பட்டாள்.

பெண்கள் பாதுகாப்பாய் சவுக்கியமாய் இல்லை என்றால் ஒட்டுமொத்த உயிரினமே அழிந்து போய்விடுமே என்றுதான், பெண்களைப் பாதுகாக்கவென்றே இயற்கை ஆண்களைப் படைத்தது. உங்களுக்கு ஒன்று தெரியுமா? உலகத்தில் உயிர்கள் முதல் முதலில் தோன்றிய காலத்தில் ஆண் என்ற பாலினமே இருக்கவில்லை! எல்லா உயிர்களுமே ஆரம்பத்தில் பெண்பாலாக மட்டுமே இருந்தன. அவ்வளவு ஏன்? இன்று வரை பூமியில் மிக அதிக எண்ணிக்கையில் வாழும் வைரஸ், பாக்டீரியா, ஆல்கே, அமீபா மாதிரியான நுண்ணுயிர்களில் ஆண் பால் என்ற இனமே இல்லை... எல்லாமே ஒன்லி விமென்! ஏன் என்றால் இந்த உயிர்களுக்கு ஆணின் தேவை இல்லை! எந்தெந்த உயிர்களில் எல்லாம் பிற கிருமிகள் அல்லது வேறு உயிரினம் தாக்கும் ஆபத்து அதிகமாக உள்ளதோ அந்தந்த உயிர்களில் மட்டும் தான் ஆண் என்கிற ஒரு தனி பாலினம் இருக்கிறது.

மனிதர்களிலும் ஆணின் கடமை, பெண்ணைப் பாதுகாப்பதுதான். அதனால் தான் எரியும் விமானம், மூழ்கும் டைடானிக் கப்பல் ஆகிய செயற்கை விபத்துக்கள் ஆகட்டும், சுனாமி, நிலநடுக்கம், புயல் வெள்ளம் என்ற இயற்கைச் சீற்றங்கள் ஆகட்டும்... எங்கு ஆபத்து நேர்ந்தாலும் முதலில் காப்பாற்றப்படுவது பெண்ணினம் தான்.

இந்தக் காலத்தில் பெண்களைப் பாதுகாப்பது அவ்வளவொன்றும் கஷ்டமில்லை. சமுதாயம், சட்டம், போலீஸ், மகளிர் ஆணையம் என்று பல கட்டமைப்புகள் இருப்பதால் பெண்களுக்கு நிறையவே பாதுகாப்பு உள்ளது. ஆனால் மனிதர்கள் தோன்றிய காலத்தில், இந்த ஏற்பாடுகள் இருக்கவில்லை. பிற மிருகம் தாக்கிவிடும் அபாயம் எந்நேரமும் இருந்த அந்த ஆரண்ய காண்ட வாழ்க்கை முறையில் ஒரு பெண்ணைப் பாதுகாக்க வேண்டும் என்றால் சும்மா சாதாரண நபரால் அது முடியாதே. அதுவும் ஆயுதங்கள் எதுவும் கண்டுபிடிக்காத காலத்தில் பெண்ணைக் காப்பாற்ற வேண்டுமென்றால், அதிக பட்ச வீரமும், அதைவிட அதிகமான தேகபலமும் கொண்டவனால் மட்டும்தான் முடியும்.

இந்த அதிகபட்ச வீரமும் தேக பலமும் தானாய் தோன்றிவிடாதே! அதை உருவாக்க டெஸ்டோஸ்டீரான் என்கிற தேகபலம் கூட்டும் ஹார்மோன் தேவைப்படுமே. இன்று ஒலிம்பிக்ஸ் மாதிரியான போட்டியில் கலந்துகொள்ளும் வீரர்கள் ஜெயித்தே ஆகவேண்டும் என்ற வேட்கையில் டெஸ்டோஸ்டீரான் மாதிரியான ஹார்மோன்களை ஊசி, மாத்திரை என்று செயற்கையாக உடம்பில் ஏற்றி, திடகாத்திரமான உடலைப் பெற முயல்கிறார்கள். அந்தக் கால காட்டு வாழ்க்கையில் ஆண் இப்படிச் செய்யவெல்லாம் வாய்ப்பே இல்லை. அவனே சுயமாகப் போராடி, தன் உடம்பை வளைத்து நிஜ டெஸ்டோஸ்டீரானை சுரந்தாக வேண்டும். அப்போதுதான் ஆபத்துகளுடன் மோதி, அயராமல் தன் துணைவியையும், பிள்ளைகளையும் அவன் காப்பாற்ற முடியும்.

ஆண்கள் இப்படி டெஸ்டோஸ்டீரான் உற்பத்தியை அதிகரிக்கும் நிர்பந்தத்திற்கு தள்ளப்பட, பெண்கள் தங்களது பாதுகாப்பு கருதி, அதிக பட்ச டெஸ்டோடீரான் சுரத்தலை வெளிப்படுத்தும் ஆண்களோடு மட்டுமே கூட விரும்பினார்கள். அதற்கும் ஒரு காரணம் இருந்தது. இவள் பாட்டுக்கு ஒரு சோப்ளாங்கிக்கு பாவம் பார்த்து அவனோடு கூடி, பிள்ளை பெற்றாள் என்று வையுங்களேன். ஆபத்து காலத்தில் சோப்ளாங்கி, தைரியமாகப் போய் போராடி, மனைவி மக்களைக் காப்பாற்றிடாமல், பயந்து போய் எல்லாப் பொறுப்பையும் மனைவியின் தலையில் கட்டிவிட்டு எங்கோ ஓடி ஒளிந்துகொண்டால் பிறகு அவளுக்குத் தானே எல்லா கஷ்டமும்? இந்த துர்பாக்கியம் எல்லாம் நேர்ந்துவிடக் கூடாதென்று தான் பெண்கள் எல்லோரும் மிக உஷாராக போதுமான டெஸ்டோஸ்டீரான் சுரத்தலை நிரூபிக்கும் ஆண்களோடு மட்டுமே கூட முயல்கிறார்கள்.

அவதார புருஷன் ராமனாகவே இருந்தாலும் வில்லை வளைத்தால் தான் சீதை என்று கட்டளைவிதித்தது கூட ராமனின் டெஸ்டோஸ்டீரான் அளவைச் சோதிக்கும் ஒரு நேரடி முயற்சியே! ஆக அந்தக் காலப் பெண்கள் எல்லாம் பார்த்துப் பார்த்து அதிக பட்ச டெஸ்டோஸ்டீரான் சுரந்த ஆண்களை மட்டும் ஜலித்து எடுத்து உறவுகொண்டதால், ஆண்வர்க்கம் போகப் போக அதிக அளவு டெஸ்டோஸ்டீரான் கொண்டவர்களாக மாறினார்கள். ஒரு நாள் இரண்டு நாட்களுக்கு அல்ல, முழுவதாய் மூன்று மில்லியன் ஆண்டுகளுக்கு ஆண்கள் இப்படி அதிக டெஸ்டோஸ்டீரான், இன்னும் அதிக டெஸ்டோஸ்டீரான் என்று சுரந்துகொண்டே போனதில், ஆண்கள் அதிக தசைப் புடைப்பு, அதிக ரத்த அணுக்கள், அதிக நுரையீரல் கொள் அளவு, அதிக வலி தாங்கும் தன்மை, அஞ்சாத நெஞ்சம் என்று பல அனுகூலங்களைப் பெற்றார்கள்.

இந்த அதிகபட்ச டெஸ்டோஸ்டீரான் ஆணின் உடம்பை பல விதங்களில் மாற்றி அமைத்ததைப் போலவே அவனது மனதையும் மாற்றியது. அடிப்படை பெண் வடிவ மூளையில் மொழி மையம் பெரிது. கை ஜாடை, முக அசைவு போன்றவற்றை அறியும் மையங்கள் அதிகம். ஆணுக்கோ வேட்டையாடும் திறனை அதிகரிக்கும் ஆற்றல்கள் அதிகம் தேவை. ஓடும் இரையைத் துல்லியமாய் தேடிப் பிடித்து, அதன் வேகம், தன்னை விடவும் எவ்வளவு தூரம் என்பதையும் கணித்துக் குறிதவறாமல் ஆயுதத்தை எறிந்து, வேட்டையில் வெற்றி பெறத் தேவையான இந்த திறமையைத் தான் visuo spatial ஆற்றல் என்போம். அதாவது கண், கை அசைவு, தூரம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து செயல்படும் திறன்.

இந்தத் திறனெல்லாம் மனித இனத்திற்கு ஆரம்பத்திலிருந்தே இருக்கவில்லை. மனிதர்கள் பூச்சி உண்ணும் தாவர பட்சிணி வகையைச் சேர்ந்தவர்கள். பெரும் பனி யுகத்தில் கஷ்ட ஜீவனத்தை வெல்ல வேறு வழியில்லாமல் மாமிச பட்சிணி வாழ்க்கை முறைக்கு மாறியவர்கள். அடிப்படையில் பூச்சி தின்னிகள் என்பதால் வேட்டைக்கு உதவாத ஒரு சாதா மூளைதான் ஆரம்பகால மனிதர்களுக்கு இருந்தது. மனித மரபணுக்கள் துரிதமாக செயல்பட்டு, மனித இனத்தைக் காப்பாற்ற புதிதாய் ஒரு சூப்பர் வேட்டை மூளையை உருவாக்க வேண்டியிருந்தது.

ஆனால் தாவர பட்சிணி மூளையை, மாமிச பட்சிணி மூளை ஆக்குவது அவ்வளவு சுலபமில்லையே! மூளையின் அளவு கொஞ்சம்தான். அதை ரொம்பவும் பெரிதாக்க முடியாது. அப்புறம் பிரசவத்தின்போது சிசுவின் தலை, இடை எலும்பிலேயே மாட்டிக் கொள்ளுமே! தலையும் பெரிதாக வேண்டும், பெண்ணின் மெல்லிடையை விட்டுப் பிரசவித்து வெளியேறத் தோதாகவும் இருக்க வேண்டும் என்றால் அது எப்படி சாத்தியமாகும்? அதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடித்தன மரபணுக்கள். தலையைக் கொஞ்சம் பெரிதாக்கி, இடையைக் கொஞ்சம் அகலமாக்கி, மூளையில் இருந்த அநாவசிய மையங்களைக் காலிசெய்து வெற்றிடங்களை வாழ்க்கைக்குத் தேவையான வித்தைகளை வைத்து நிரப்பின.

அதனால் ஆண்கள் முக்கால்வாசி மொழி மையத்தை இழந்தார்கள். கூடவே கை ஜாடை, முக ஜாடை அறியும் மையங்களும் காலியாகின. எப்படியும் ஒரு ஆணுக்கு இந்தச் செயல்பாடுகள் தேவைப்படவில்லை. ஒரு நல்ல வேட்டுவன் மௌனமகத்தானே இருந்தாக வேண்டும். பேசிக்கொண்டே இருந்தால் மிருகமல்லவா அவனை வேட்டையாடிவிடும்! கை இருக்கிறதே என்று இவன் விஸ்தாரமாய் ஜாடை செய்து நண்பர்களோடு உரையாடினாலோ, அசைவைக் கவனித்ததுமே மிருகங்கள் உஷாராகி ஓடிவிடும். அதோடு, `நான் பாவமில்லையா! என்னை விட்டுடேன்! என்று ஏதாவது மிருகம் பரிதாபமாய் அவனைப் பார்த்தால், `போனா போகட்டும், இன்னிக்கு நாம பட்டினியா கிடந்தாத்தான் என்ன! என்று இவன் பச்சாதாபத்தில் வெறும் கையோடு வீட்டிற்கு வந்தால் போச்சு! அன்றே மனித வரலாறுக்கு முற்றுப்புள்ளி விழுந்திருக்கும்! ஆக, முக ஜாடையை உணரும் மையமும் அவுட்.

இது போக டெஸ்டோஸ்டீரான் இன்னொரு பெரிய மாற்றத்தையும் மனித மூளையில் ஏற்படுத்தியது. அது ஆணை விடாமுயற்சி கொண்டவனாக்கியது... தொடர்ந்து ஒரே விஷயத்தில் குறியாய் இருந்து தன் இலக்கை எட்டும் வரை அயராதிருக்க வைத்தது.

ஆனால் இதிலும் ஒரு சிக்கல்.. அவன் என்னதான் முயன்று தொடர்ந்து குறி வைத்தும், கடைசி நேரத்தில் இரை டிமிக்கி கொடுத்து ஓடிவிட்டால், அந்தத் தோல்வி இவனை `சை!' என்று சலிப்புற செய்யும். இவ்வளவு கஷ்டப்பட்டும் பலனில்லையே என்று சோர்ந்துபோய், தன்னம்பிக்கை இழந்து வேட்டைக்கே ஒரு முழுக்குப் போட்டுவிட்டால் அவன் தோல்வி மனப்பான்மை மனித இனத்தை நிர்மூலமாக்கிவிடும்.

வேட்டையில் வெற்றி பெறாவிட்டாலும் அவனை உற்சாகம் குறையாமலிருக்க வைப்பதுதானே மரபணு ரீதியாகப் பயனளிக்கும். அதனால் டெஸ்டோஸ்டீரான் ஆணின் மூளையிலுள்ள இன்ப மையத்தை மாற்றி அமைத்து, ஒவ்வொரு வேட்டையும் சந்தோஷம். அதன் வெற்றி தோல்வி இரண்டாம் பட்சம் என்ற உணர்வை ஏற்படுத்தியது.

அளவிற்கு மிஞ்சினால் அமுதமே நஞ்சாகும்போது, டெஸ்டோஸ்டீரான் மட்டும் விதிவிலக்கா என்ன? டெஸ்டோஸ்டீரான் சுரப்பு அதிகரிக்க அதிகரிக்க அதன் பக்க விளைவுகள் பல தலை தூக்க ஆரம்பித்தன.

அது ஆண்களை எதிலும் முந்திச் செல்லத் தூண்டியது. காரணம், மற்ற ஆண்களை விட முந்தியிருக்கும் `ஆல்ஃபா ஆணை'த்தானே எல்லா பெண்களும் விரும்புகிறார்கள். அதனால் எடுத்த காரியம் எதுவாக இருந்தாலும், பிற ஆண்களை விட தான் பெரியவன் என்று காட்டிக்கொண்டே ஆக வேண்டும் என்ற உத்வேகமும் ஆண்களுக்கு அதிகமாய் இருந்தது. போகப் போக, இந்த `நான் தான் உசத்தியாக்கும்' என்கிறா போக்கே ஆண்களை ஆதிக்க மனப்பான்மை கொள்ள வைத்தும் விட, உலகிலேயே தான் ஒருவன் தான் சூப்பர், மற்றவை அனைத்தும் மட்டம் என்ற எண்ணம் தலைதூக்க, மற்ற எல்லாவற்றையும்' தன் ஆதிக்கத்திற்குள் கொண்டுவர பெரிதும் போராடினான் ஆண். இதில் ஒரு சிக்கல் என்னவென்றால் இந்த `மற்ற எல்லாவற்றையும் என்ற பட்டியலில் மனிதப் பெண்ணும் அடங்கிப் போய்விட்டாள். அதனால் அவளையும் அடக்கி ஆள்வது தன்னுடைய பிறப்புரிமை என்றே நினைக்க ஆரம்பித்துவிட்டான் ஆண். ஓவர் டெஸ்டோஸ்டீரான் சுரத்தல் அவனை முன்கோபியாய், முரடனாய், மூர்க்கனாய் மாற்றியது. பதவி ஆசை, பெண்ணாசை, போர் வெறி, வன்முறை என்று ஆண் தடம் புரள, இதற்கெல்லாம் பெண்ணும் பலியாக ஆரம்பித்தாள்.

ஆக, ஆணைத் தன்னுடைய ஆயுதமாக பயன்படுத்தவே பெண் அவனுக்குள் அதிகபட்ச டெஸ்டோஸ்டீரானை சுரக்கச் செய்தாள். ஆனால் காலப் போக்கில் இந்த டெஸ்டோஸ்டீரானே ஆண் - பெண் வித்தியாசங்களை ஊதி ஊதிப் பெரிதாக்கி, இன்றைய தேதியில், இந்த இரு பாலினரும் ஒருவருக்கு மற்றவர் புரியாத புதிராகவே போய்விட்டார்கள். ஆனால் உற்றுப் பார்த்தால் தெரியும் ஆணின் இந்த எல்லா வித்தியாசங்களுக்கும் காரணம் ஆண்கள் அல்ல, பெண்களே!

இதெல்லாம் படிக்க சுவாரசியமாய் இருந்தாலும், பெண்ணின் கை மீறிப் போய்க் கொண்டிருக்கும் இந்த ஆண்களை மறுபடியும் பெண்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது எப்படி? சும்மா இருந்த ஆணை பயங்கரவாதியாக்கிவிட்டாளே பெண், இனி அவனை எப்படி ஹேண்டில் செய்து அமைதியை நிலைநாட்டுவாள்?

அதற்கும் ஏகப்பட்ட ஐடியாக்களை கைவசம் வைத்திருக்கிறார்கள் பெண்கள். அவற்றைப் பற்றி எல்லாம் அடுத்த சிநேகிதியில்!

Friday, October 3, 2008

பதின் பருவத்தின் top பத்து பிரச்சனைகள்!

குழந்தைகளாய் இருக்கும் வரை அப்பா அம்மா என்றாலே அடங்கிப்போய் அன்பாய் பழகியவர்கள் எல்லாம் இந்த பதின் பருவத்தை தொட்டு விட்டாலே போதும், புது புது பிரச்சனைகள் பல தலை தூக்கிவிடுகின்றன. இப்படி பலதரப்பட்ட பதின் பருவ பிரச்சனைகள் இருந்தாலும், மிக அதிகமாய் ஆலோசனை மையத்திற்கு வருபவை எவை தெரியுமா?
1. படிப்புல் வீக்”அஞ்ஜாம் கிளாஸ் வரைக்கும் அவ்வளவு சூப்பரா படிச்ச பிள்ளை தான், என்னனே தெரியல, வர வர படிப்புல ரொம்வ வீக்காயிட்டே போய், மார்க்கெல்லாம் சொல்லிக்கிறா மாதிரியே இல்லை” என்ற புகாருடன் வரும் பெற்றோர்களின் எண்ணிக்கை தான் மிக அதிகம். குழந்தையை அழைத்து விசாரித்தால், “எவ்வளவு படிச்சாலும் மறந்து போயிடுது” என்கிறார்கள், அல்லது, “புக்கை திறந்தாலே, பகல் கனவா வருது” என்கிறார்கள். பரிசோதித்து பார்த்தால் அநேக குழந்தைகள் புத்திசாலிகளாகவே இருந்தாலும், வெறுமனே மக் அடித்து, அர்த்தமே புரியாமல் படிக்கும் பாணி தெரியவரும். இந்த “டப்பா அடிக்கும்” பாணி எல்லாம் சின்ன கிளாஸ் சிம்பிள் பாடங்களுக்கு ஓகே. ஆனால் பெரிய கிளாஸ் போக போக, பாடங்களின் ஆழம் அதிகம், புரிந்துக்கொள்ள வேண்டிய மேட்டரின் அகலமும் அதிகம் என்பதால் இந்த மனப்பாட யுத்தி அதற்கு மேல் பிரயோஜனமே படாது.
முழு பாடத்தையும் அப்படியே முறுக்கி பிழிந்து வெறும் முக்கியமான சாரை மட்டும் கரந்தெடுத்து, கரைத்து குடிக்கும் யுத்திகள் பல உள்ளன. நியாயமாய் பாடம் நடத்தும் ஆசிரியர்களே இந்த யுத்திகளையும் சேர்த்து மாணவர்களுக்கு சொல்லித்தந்தால் தான் கற்றவை நிற்கும் அதற்கு தக. ஆனால் என்ன செய்வது, இந்த யுத்திகளை எல்லாம் சொல்லித்தர ஆசிரைய பெருமக்களுக்கு நேரம் இல்லா காரணத்தினால், இதையெல்லாம் தனியாக சொல்லித்தர வேண்டியுள்ளது. இப்படி புரிந்து, படித்து, கிரகித்துக்கொள்ளும் யுத்திகளை தெரிந்துக்கொண்டாலே, அநேக மாணவர்கள் படிப்பில் முன்னேறி விடுகிறார்கள். அப்படியும் கொஞ்சம் முன்னே பின்னே என்று இருக்கும் மாணவர்களுக்கு மூளையை கூராக்கும் சில ஊக்க மாத்திரைகளை கொடுத்து முன்னேற்ற பார்க்கலாம்.
2. ஓவர் டென்ஷன்:அணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் பொதுவாய் எல்லா பதின்பருவக்கார்ர்களை பற்றியும் வரும் அடுத்த புகார், இந்த முன்கோபம். அது வரை சொல் பேச்சை கேட்டு, அமைதியாய் வளைய வந்த பிள்ளைகள், பருவ வயதை தொட்ட உடனே, “எல்லாம் எனக்கு தெரியும், நீங்க ஒண்ணும் சொல்ல வேண்டாம்”. என்று பெற்றோரையே எதிர்த்து பேசிவிடுகிறார்கள். சரி பிள்ளை தான் ஏதோ மனநிலையில் ஏடா கூடமாக பேசுகிறதே, நாமாவது கொஞ்சம் விட்டு கொடுத்து போவோமே என்கிற விவஸ்த்தையில்லாமல் பெற்றோர், “உன்னை எவ்வளவு கஷ்டப்பட்டு, பெத்து வளர்த்து, இவ்வளவி பெரியா ஆளாக்கினேன், என்னையே நீ....” என்று முழம் முழமாய் லெக்சர் அடிக்க ஆரம்பித்து விட, பொருத்து பொருத்து பார்த்து விட்டு, “உங்களை யாரு பெக்க சொன்னா?” என்று பொறித்து தள்ளிவிடுகிறார்கள் பிள்ளைகள். உடனே தாய் மார்கள் எல்லாம் மனமுடந்து போய், இந்த பிள்ளைக்காக நான் என்னவெல்லாம் செய்திருப்பேன், என் அருமை புரியாமன் என்னையே இப்படியெல்லாம் ...” என்று இன்னும் நொந்துப்போகிறார்கள்.
இந்த வயதில் இந்த இளைஞர்களின் ரத்த்தில் எக்கசெக்க ஹார்மோன்கள் பிரவாகமாய் சுரக்கின்றன. அதனால், தொட்டதிற்கெல்லாம் டென்ஷன், எரிச்சல், மூடி அவுட் என்று இள ரத்தம் எப்போதுமே ஒரு சல சலப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கும். எதையும் சகித்துக்கொள்ளும் தன்மை, பொருத்துபோகும் பக்குவம், அடங்கி போகும் லாவகம் எதுவுமே இந்த வயதில் ஏற்படுவதில்லை. இதை புரிந்துக்கொண்டு, பெரிசுகள் நாம் மிக பக்குவமாய், ஹாசியமாய், தோழமையாய் முக்கியமாய், பொறுமையாய் இவர்களை கையாண்டால் தான் ஹார்மோன்களின் ஆக்ரோஷம் தணிந்து அமைதியாவார்கள். இதை விட்டு விட்டு, “முளைச்சி மூணு இலை விடலை, அதுக்குள்ள இவ்வளவு திமிரா, உனக்கே இவ்வளவுனா, எனக்கு எவ்வளவு இருக்கும்” என்று போட்டிபோட்டுக்கொண்டு, அவர்களை விட அதிக முதிர்ச்சியின்மையை பெரிசுகள் வெளிபடுத்தினால், பிரச்சனை பெரிதாகிவிடும். அதனால் சிறியவர்கள் சினம் கொள்ளும் போது இந்த மாதிரி கோபதாபங்களை எப்படி நேர்த்தியாய் சமாளிப்பது என்பதை கற்றுத்தர இதையே ஒரு சந்தர்ப்பமாய் எடுத்துக்கொண்டு, பெரியவர்கள் சாந்தமாய் விஷயத்தை கையாண்டாலே போதும். மனிதர்கள் இயல்பிலேயே மற்றவர்களை பார்த்து காப்பியடித்து தான் பலதும் பற்றுக்கொள்ளும் தன்மை கொண்டவர்கள் என்பதால், முன் மாதிரி சரியாக் இருந்தால், இளைஞர்களும் தங்களை திறித்திக்கொள்வார்கள்,
3. ஓவர் கூச்சம்:”விருந்தினர் வந்தால் ஒரு வணக்கம் சொல்வதில்லை, கடைக்கு போனால், எல்லாரும் பார்க்குறாங்க, நான் இந்த பையை தூக்கீட்டு வந்தா சிரிப்பாங்கனுறது, மத்தவங்க முன்னாடி என்னை பத்தி ஏன் சொன்னேனு எல்லாரும் போன பிறகு திட்டுறது...” இப்படியாக, பதின் பருவ சிறுசுகளின் வெட்க உணர்வை பற்றி நிறைய புகார்கள் வருவதுண்டு. என்ன செய்வது, இந்த வயதில் நேரும் உடல் மாற்றங்கள் இவர்களை பிறர் எதிரில் கூசி போக செய்கிறது. போக போக இந்த கூச்சமெல்லாம் குறைந்து, முதிர்ச்சி வர வர தன்னம்பிக்கையும் தானே அதிகரித்து, “ஆமா, நான் இப்படி தான், எனக்கு என்னை பிடிச்சிருக்கு, வேறு யாருடைய அபிப்ராயமும் எனக்கு முக்கியமில்லை” என்று சுயமதிப்புக்கொள்ளவும் இவர்கள் முடிகிறது. என்ன இந்த அளவு சுவாபிமானம் வர குறைந்தது நான்கைந்து ஆண்டுகள் ஆகின்றன- அதுவரை இந்த வெட்கத்தை பெரிது படுத்தாமல் விட்டாலே, தானாய் தெளிந்து விடுகிறார்கள் இளையவர்கள்.
4. பியர் பிரஷர்.பதின் பருவத்தினருக்கு தங்கள் சமவயதுக்காரர்களின் அபிப்ராயம் மிக முக்கியம் என்று தோன்றுகிறது. இந்த சமவயதுக்காரர்கள் என்ன செய்கிறார்கள், என்ன சொல்கிறார்கள், எப்படி விஷயங்களை அனுகுகிறார்கள் என்பதை எல்லாம் மிக மும்முரமாக நோட்டம் விட்டு, அதை போலவே தானும் இருந்தால் தான் தன்னை “செட்டில் சேர்த்துக்கொள்வார்கள்” என்று அரும்பாடுபட்டு, மந்தையோடு மந்தையாய் கலந்துவிட முயல்கிறார்கள். “உன் ஃபிரெண்டு சொன்னா தான் கேட்பியா? நான் சொன்னா கேட்க மாட்டியா?” என்று பெரிசுகள் என்ன தான் தலை பாடாய் அடித்துக்கொண்டாலும் இளையவர்களின் இந்த பழக்கத்தை மாற்ற முடியாது. காரணம் பெற்றவர்களை விட இந்த மாதிரி சமவயதுக்கார peersசிடமிருந்து அதிக விஷயங்களை கற்றுக்கொள்ளூம் படியாகத் தான் மனித மூளையின் டிசைனே அமைந்திருக்கிறது. இந்த இயற்கை ஏற்பாட்டை மீறி அவர்களால் செயல் படமுடியாது. “அப்படினா, கண்டவங்களோட சேர்ந்து கெட்டு குட்டிசுவரா போயிட்டா?” என்று பெற்றவர்கள் பதைபதைக்கத் தான் செய்வார்கள். இதற்கு ஒரே வழி, உங்கள் குழந்தையின் பியர்களை பரிச்சையபடுத்திக்கொள்ளுங்கள். எந்த மாதிரி நண்பர்களுடன் பழக்கம் என்பதை நேரடியாக க்ண்காணித்தால் தானே, அவர்கள் போக்கு எப்படி என்பதை நீங்கள் சதா கண்காணிக்க முடியும்.
5. வயதிற்கு வருதல்:
பெண்களூக்காவது பரவாயில்லை, புட்டு சுற்றுகிறேன் பேர்வழி என்று ஏரியா பெண்கள் எல்லாம் கூடி, தங்கள் வயதிற்கு வருதல் அனுபவத்தை பற்றி பேசி பகிர்ந்துக்கொள்கிறார்கள், அதனால் பெண்களுக்கு தங்கள் வயதிற்கு வரும் சமாசாரம் பற்றி தெளிவு ஏற்படிகிறது. பாவம், ஆண் குழந்தைகளுக்கு இந்த அதிர்ஷ்டம் இருப்பதில்லை. இவன் வயதிற்கு வந்தால், அம்போ என்று அப்படியே விடபடுகிறான். என்ன ஏது என்று சொல்லித்தர நாதியே இருப்பதில்லை. விளைவு, விந்து வெளியேறும் வயதுக்கு வருதல் அறிகுறியை இவன் ஏதோ பெரிய விபரீதம் என்று எண்ணி கலவரம் கொள்கிறான். இருக்கவே இருக்கிறார்கள் போலி டாக்டர்கள், இந்த சாதரண உடலியக்கத்தை பெரிய வியாதி மாதிரி பில்ட் அப் கொடுத்து இவர்கள் அச்சுறுத்த, “அய் நான் வயதுக்கு வந்துட்டேனே,” என்று எண்ணி பெருமை கொள்ள வேண்டிய வாலிவன், “அய்யோ, எனக்கு வியாதி வந்துவிட்டது” என்று தவறாக எண்ணி கவலை கொள்கிறான்.
”விந்து வெளியேறி விட்டது, அதனால் சாக்க்கிடக்கிறேன்” என்ற வகை புகாருடன் ஆலோசனை பெற வரும் இளைஞர்களின் எண்ணிக்கை நல்ல வேலையாக இப்போதெல்லாம் குறைந்துக்கொண்டு வருகிறது. தமிழ் நாட்டு ஆண் சிங்கங்கள் எல்லாம் அறிவியலை புரிந்துக்கொண்ட அறிவாளிகள் ஆகிவிட்டார்கள் போல. அப்படியே, தப்பித்தவறி, ஒன்றிரண்டு ஆண்கள் இந்த பிரச்சனையோடு வந்தாலும், அவர்களது பயத்தை கிளப்பும் மூட நம்பிக்கைகளை தெளிவு படுத்தி, அநாவசிய பதட்டத்தை தணிக்கும் மருந்துகளை கொடுதாலே போதும், ”இதெல்லாம் ஒரு மேட்டருனு யாராவது கவலைபடுவாங்களா!” என்று மாறிவிடுகிறார்கள் ஆண்கள் எல்லாம்.
6. சுய இன்பம்: என்ன தான் வேற்று கிரகத்தில் கொண்டு போய் வைத்து எவர் சவகாசமும் இல்லாமல் குழந்தையை மஹா பவித்திரமாக வளர்க்க வேண்டும் என்று பெற்றோர்கள் முயன்றாலும் பருவ வயது வந்ததுமே பாலுணர்வும் தலை தூக்கிவிடும். நூறு ஆண்டுகளுக்கு முன் என்றால் இந்த பருவம் வந்த உடனே திருமணம் என்று ஒன்றை நடத்தி, ஒரு கலவியல் துணையை பெற்றோரே ஏற்பாடு பண்ணித் தந்திருப்பார்கள், தாபம் தோன்றும் போதெல்லாம் தாம்பத்தியம் கொள்ள ஏதுவாக இருந்துருக்கும். ஆனால் இந்த நூற்றாண்டிலோ, வயதிற்கு வந்து பல வருடங்கள் கழித்து தான் திருமணம் என்று நிலைப்பாடுகள் மாறிவிட்டன. இதை பற்றி எல்லாம் சட்டையே செய்யாமல் இயற்க்கை இன்னமும் அதே பதிமூன்று – பதினேழு வயதிற்குள் எல்லோரையும் வயதிற்கு வர வைக்க, கூடவே தலையெடுக்கும் உடல் ரீதியான தேவைகளை எப்படி சமாளிப்பது என்று யாருமே சொல்லி தருவதில்லை. தாபம் ஏற்படும் போதெல்லாம் தன்னை தானே சாந்தப்படுத்திக்கொள்ளும் டெக்னிக்கை அநேகமாக எல்லா ஆண்களும் சுயமாகவே தெரிந்துக்கொள்கிறார்கள். ஆனால் இது ஒரு பெரிய குற்றம் என்று சிலருக்கு தோன்றுவதால், கவலை பட ஆரம்பித்துவிடுகிறார்கள். ஆனால் இதில் பெரிய ஆட்சரியம் என்ன தெரியுமா? அமெரிக்கா, ஐரோபா, ஆஸ்திரேலியா, ஸ்காண்டினேவியா மாதிரியான பகுத்தறிவு அதிகம் உள்ள நாடுகளில் எந்த ஆணும் சுயஇன்பத்தை பெரிய தவராகவே நினைப்பதில்லை. பாலில்லாத குறையை போக்க, குழந்தை கையை சுவைப்பது போல, துணையில்லா சமயத்தில் தாபத்தை தணிக்க இது ஒரு சிம்பிள் டெக்னிக், இதில் பெரிதாக ஃபீல் பண்ண என்ன இருக்கிறது என்பது இவர்களது மனப்பான்மை. ஆனால், இந்தியா, ஆப்பிரிக்கா, சீனா ஆகிய நாடுகளில் தான், அதுவும் படிக்காத ஆண்களிடம் தான் சுய இன்பத்தை பற்றின அநாவசிய பயங்களும் குற்ற உண்ர்வும் இருக்கிறது. இதில் பெரிய வேடிக்கை என்ன தெரியுமா? இதே இந்தியாவில் தான் அந்த காலத்தில் ’ஜீவ காருண்யம்’ என்ற பெயரில், பொது இடங்களில் நடுகல்லை நிறுத்திவைக்கும் வழக்கம் ஒரு தர்ம காரியமாய் கருதப்பட்டு, பலரால் பின்பற்ற பட்டது. நடு கல்லை நடுவதில் என்ன பெரிய ஜீவ காருண்யம் என்று யோசிக்க தோன்றூகிறதா? போகிற வருகிற மிருகங்களுக்கு மதம் பிடித்தால், இந்த கல்லில் உராய்து சாந்தபடுத்த உதவுவது, புண்ணியங்களில் சிறந்த புண்ணியமாய் கருதப்பட்ட்து. ஆக, மிருகங்கள் சுய இன்பம் புரிய கூட சாதனங்களை ஏற்பாடு செய்து கொடுத்த கலாச்சாரத்தில், மனிதன் சுய இன்பம் கொள்வதை பற்றி இத்தனை மூட நம்பிக்கைகள் தோன்றியது வேடிக்கை தான்! ஆக, மனிதர்கள் உட்பட, எல்லா ஜீவராசிகளிலும் தகுந்த துணை இல்லாத போது சுய இன்பம் கொள்வது என்பது இயல்பான ஒரு நடவடிக்கையே. என்ன, நடுகல்லே கதி என்று இதே வேலையாய் இருக்காமல், விளையாட்டு, படிப்பு, பாட்டு, கூத்து, கேளி, கும்மாளம் என்று வேறு பல வழிகளிலும் சுகம் காணும் தன்மையை வளர்த்துக்கொண்டால், இன்பம் கொள்ளை கொள்ளையாகுமே!
7. முதல் காதல்:
மூளை சுரக்கும் ஹார்மோன்கள் ஏற்கனவே எதிர் பாலின கவர்ச்சியை தூண்டிவிட, கூடவே உடகங்களும், அதன் ஊக்கத்தால் நண்பர்களும் ”சூப்பரா இருக்கும் செய்து பார்”, என்று காதலை பெரிதும் சிபாரிசு செய்ய, கேட்க வேண்டுமா! காதல் என்கிற போதை இளமனதுகளை ஈர்க்க ஆரம்பித்துவிடுகிறது. இதனால் “எட்டாவது தான் படிக்கிறா, அதுக்குள்ள காதல் என்ன வேண்டி கிடக்குது. வயசுக்கு மீறுன வேலையெல்லாம் செய்யுறாளே” என்று பதறும் தாய்மார்கள் பலர்.
உண்மை என்ன தெரியுமா? பதிமூன்று வயதில் ஒரு பெண் காதல் வயப்படுவதென்பது வயதிற்கு மீறிய செயலே இல்லை. மனிதன் தோன்றிய காலம் முதல் பெண்களுக்கு முதல் காதல் ஏற்படும் வயதே இது தான். முதல் காதல் என்றால், இன்னும் நிறைய முறை வேறு காதல் வருமோ என்கிறீர்களா? ஆமாம். உயிர் உள்ள வரை எதிர் பாலினத்தின் மேல் ஈர்ப்பும் அவ்வப்போது காதலும் ஏற்படும் படியாக தான் இயற்கை மனிதர்களை வடிவமைத்துள்ளது. அதனால் மகள் காதல் கொண்டு விட்டாளே என்று ஓவராய் பதராதீர்கள். அந்த வயதில் முதல் காதல் கொள்வது அவள் உடம்பில் ஹார்மோன்கள் நார்மலாய் ஊருகின்றன, அவள் ஒரு நார்மல் பெண் என்பதற்கான அறிகுறி.
ஆனால் இது அவளுக்கு முதல் அனுபவம் என்பதால் சினிமாவில் வருவது போல காதல் மஹா அழகான, புனிதமான உணர்வு என்றெல்லாம் அவள் தவறான கற்பனையில் மிதக்கக்கூடும். உடனே அத்தை, மாமி என்று யாராவது ஒரு பெண் உறவினரை பிடியுங்கள். அல்லது ஒரு கவின்சிலரை அனுகுங்கள். முதல் காதல் சொதப்பல்களை பற்றி விளையாட்டாக பேசி புரியவைத்தாலே, ’ஓகோ, இது இந்த வயதில் எல்லோருக்கும் ஏற்படுகின்ற ஒரு மிக சாதாரண் உணர்ச்சி தான்’, என்பதை புது இளைஞி புரிந்துக்கொள்வாள். இந்த புரிதலே அவள் முதல் காதலின் புனிதத்துவத்தை குறைத்து விடும் என்பதால், கொஞ்ச நாள் கழித்து இந்த உணர்வு அவளுக்கே போரடிக்க ஆரம்பித்துவிடும். சினிமாவில் சொல்வது போல காதல் அவ்வளவு ஒன்றும் ஸ்வாரசியமான உணர்வு இல்லை என்று புரிந்த்துமே, அதன் போதையிலிருந்து அவள் வெளி வந்துவிடுவாள்.
8. மூட் அவுட்
பதின் பருவத்தினர் பலரும் அடிக்கடி மனநிலை மாற்றங்களுக்கு உள்ளாவதால், திடீர் கோவம், திடீர் அழுகை, திடீர், “என்னை கண்டாலே யாருக்கு பிடிக்கல!” மாதிரியான உணர்ச்சிவெடிப்புக்கள் ஏற்படுகின்றன. மூளையின் நரம்புகள் இந்த வயதில் அதிகமாக வளருவதால் அடிக்கடி சிக்காகி விடுவதாலும், புதிதாய் ரத்ததில் ஓடும் ஹார்மோன்கள் இன்னும் ஒருனிலைபடாததாலும் இந்த வயதுக்காரர்களுக்கு அடிக்கடி இப்படி மூட் அவுட் ஆவது சகஜம். பெண் குழந்தைகள் “என்னை யாருமே புரிஞ்சிக்க மாட்டேன்றாங்க!” என்று புலம்பி அழுவதும், ஆண்கள் “என்னை கவனிக்கிறதே இல்லை” என்றி எரிந்துவிழுவதும் உங்கள் மேல் உள்ள கோபத்தினால் அல்ல, ரசாயண ஸ்ருதிபேதத்தினால். அதனால் சிறுசுகளோடு சரி சம்மாய் கத்தி சண்டையை பெரிதாக்காமல், அந்த நேரத்திற்கு அமைதி காத்து, பிறகு விளக்கம் தந்து புரியவைக்க முயன்றால் தான் குடும்ப நிம்மதியை காப்பாற்ற முடியும்.
9. ஆக்ரோஷம்.
குறிப்பாக நிறைய இளைய ஆண்களை அவர்களது பெற்றோர்கள் இந்த காரணத்திற்காக தான் சிகிச்சைக்கை அழைத்து வருகிறார்கள். “முன்னெல்லாம் அவன் உண்டு அவன் வேலை உண்டுனு குட் பாயா இருந்த பையன் தான். பெரியவங்கன்னா அவ்வளவு மரியாதையா இருந்த பிள்ளை, இப்ப எல்லாம், நீ சொன்னா, நான் கேட்கணூமானு எதிர்த்து பேசுறான். அடிக்க கைய ஓங்குனா, பதிலுக்கு அடிக்க வர்றான். நேத்து ஏதோ திட்டினேனு ரிமோட்டை தூக்கிஎரிஞ்சதுல அது ஒடஞ்சே போச்சு. எங்கிருந்து தான் அவனுக்கு இவ்வளவு ஆத்திரம் வருதோ?”
வேறெங்கும் இல்லை. அதே ஹார்மோன்கள் தான். ஆண் குழந்தை வயதிற்கு வருவதே டெஸ்டோஸ்டீரான் என்ற ஹார்மோனின் சுரத்தலால் தான். இந்த ஹார்மோன் சுரக்க ஆரம்பித்து விட்டால், ஆக்ரோஷம் ததும்ப அரம்பித்துவிடும், உடல் பலம் அதிகரித்து விடும், எதிலுமே வேகம், வீரம், அவசரம் என்கிற போக்கு ஏற்படும். பழக பழக டெஸ்டோஸ்டீரானின் இந்த தன்மையை எப்படி சாமார்தியமாய் கையாள்வது என்பதை இவர்கள் காலப்போக்கில் கற்றுக்கொள்வார்கள் தான் என்றாலும் வயதிற்கு வரும் போதே இந்த உணர்ச்சி மேலாண்மை எதுவும் சாதியமாவதில்லை தானே. அதனால் தோலுக்கு மேல் வளர்ந்த பிள்ளையை ஓவராய் மிரட்டி அவன் “நானும் ஆம்பிளை தான்” என்கிற ஆக்கிரோஷத்தை கிளறாமல் முடிந்த மட்டும் அன்பாய் பேசி, தண்டத்தை எடுக்காமல் வெறும் சாம, தான, பேத முறைகளிலேயே இளம் ஆண்களை கையாள்வது தான் புத்திசாலி தனம்.
10. தீயவை தீய பயத்தலால்.....குழந்தை பருவம் போய் வாலிய வயதை அடைய போகும் எக்களிப்பில், எதை எதையோ பரிட்சை செய்து பார்க்க தோன்றும் இள மனம். புகை, மது, மாது, பிற போதை வஸ்துக்கள் என்று களவும் கற்றுமறக்க முயலும் வயது இது தான். இந்த போதை வஸ்துக்கள் கூட ஒரு வகையில் மனிதர்களை தரம் பிரித்து யார் பிழக்க தோதானவர்கள் என்று சோதித்து பார்க்கும் ஒரு test for survival தான். இத்தனை வகை போதை பொருட்கள் இருந்தும் யார் இதில் எதுவும் மாட்டிக்கொள்ளாமல் தப்பித்து பதின் பருவத்தை தாண்டி வருகிறார்களோ, அவர்களே வாழ்வை ஜெயிக்க லாயக்கான புத்திசாலிகள் ஆகிறார்கள். ஏன் தெரியுமா? பெட்டிக்கடையில் சின்ன சின்ன பாக்கெட்டில் தொங்கும் வாசனைமிக்க பான் ரக பொருளானாலும், ஃபாரின் சரக்கு, ஒஸ்தி சரக்கு, லோக்கல் சரக்கு என இந்த வகை மது பானமானாலும், அவ்வளவு ஏன், சட்டம் போட்டு தடுக்கப்படும் மிக மோசமான போதை பொருட்களானாலும், அவை எல்லாமே அடிப்படையில் வேலை செய்கின்ற விதம் ஒன்று தான். மூளையின் இன்ப மையத்தை தூண்டி, மதி மயக்குகின்றன. அத்தோடு, ஆண்மை/பெண்மை திசுக்களை அழித்து விடுகின்றன. ஆக, போதை வயப்பட்ட மனிதர்கள் இனபெருக்க வாய்ப்பை இழப்பது தான் இயற்கையின் ஏற்பாடு. இந்த விவரங்கள் எல்லாம் சிறுசுகளுக்கு தெரியாதென்பதால் விளையாட்டு தனமாய் போதை பொருட்களை பயன்படுத்த ஆரம்பித்துவிடுகிறார்கள். ஆனால் ஒரு முறை மட்டுமே உபயோகித்தாலும், உடனே தொற்றிக்கொள்ளூம் தன்மை இருப்பதனால் தானே அதை போதை பொருள் என்றே சொல்கிறோம். ஆக சர்வைவலுக்கு ஃபிட் ஆன புத்திசாலிகள் அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில் என்று இந்த பழக்கதுக்கே ஒரு பெரிய கும்பிடு போட்டு ஜகா வாங்கிவிடுவார்கள்.
எவ்வழி பெரிசுகள்...
என்ன இருந்தாலும் பதின் பருவம் என்பது காற்றாற்று வெள்ளம் மாதிரி ஹார்மோன்கள் எந்த பதபடுத்தலும் இன்றி பச்சையாய் ஓடும் வயது. இந்த வெள்ளத்தை எப்படி அனைகட்டி அமோக விளைச்சலுக்கு ஆட்படுத்துவது என்று சொல்லித்தர யாரவது தேவை. அப்பா அம்மா, அண்ணன் அக்கா, ஆசிரியர், மதகுரு ஆகிய பெரிசுகள் எல்லாம் மொக்கை போடுங்கள், பெரிதாய் லெக்சர் அடிப்பார்கள். இப்படி இல்லாமல் தம்முள் ஒருவராய் இருந்து கேலிபேச்சு, சிரிப்பு, கலகலப்புடனே ”சரக்கு வேண்டாம் மச்சி, இனிக்கு கிரவுண்டு பக்கம் போய் கலாய்சிட்டு வரலாம்” என்று வாழ்வியல் வித்தைகளை சுலபமாக சொல்லித்தரும் ஒரு சீனியரின் ஜாலி டிப்ஸ் இருந்தால் இளைஞர்கள் எப்போதுமே சரியான தடத்தில் இருக்க உதவும்.
இளைஞர்களுக்கு விளையாட்டாய் விவரங்களை சொல்லித்தர எப்போதுமே ஒரு மூத்த ஸ்நேகிதர் தயாராக இருப்பது அவசியம். சும்மா இளைஞர்களை குறை சொல்லிக்கொண்டில்லாமல் நம்மை போன்ற பெரிசுகள் எல்லாம் இப்படிப்பட்ட ஜாலியான சீனியர்களாய் மாறினாலே போதும், பதின் பருவ பிரச்சனைகளை தாண்டி பிரமாதமாய் வெளிவந்துவிடுவார்கள் நம் இளைஞர்கள்.


குமுதம் இதழிலிருந்து வெட்டி ஒட்டியது