Wednesday, January 28, 2009

1879, Sep 17th

1879 ஆம் ஆண்டு.

தாமஸ் ஆல்வா எடிசன், மின் விளக்கை கண்டு பிடித்தார்.

அதே ஆண்டு அமேரிக்காவில் பெண் வழக்கறிஞர்கள் நீதி மன்றத்தில் வழக்காட அனுமதி தரப்பட்டது.

சார்லஸ் டார்வின், தி ஓரிஜன் ஆஃப் ஸ்பீஷீஸ் புத்தகத்தை எழுதி அத்தோடு இருபது வருடங்கள் ஆகி இருந்தன.

இந்த 1879 ஆம் ஆண்டு செப்டெம்பர் 17ஆம் தேதி தான் வெங்கடசாமி நாயகருக்கும், சின்ன தாயம்மாளுக்கும் ஒரு ஆண் குழந்தை பிறந்தான். இந்த பையன் பிற்காலத்தில் என்ன ஆவான், எப்படி போவான் என்றெல்லாம் தெரியாத அவன் பெற்றோர்கள் அவனுக்கு ஆசையாய் ராமசாமி என்று பெயர் வைத்தார்கள். காரணம் அவர்கள் குடும்பம் ஆசாரமான வைஷ்ணவ மரபுகளை கடைபிடித்த பணக்கார வியாபாரி வர்க்கம். தொன்று தொட்டு ராமநாமத்தை ஜெபிக்கும் குடும்பம். அதனால் தங்கள் அருமை மகனுக்கு ராமனின் திரு நாமத்தையே சுட்டினார்கள்.

குட்டி ராமசாமியும் அப்பா அம்மா மீது அதிக பாசம் கொண்டு, அவர்கள் சொல்வதை எல்லாம் அப்படியே கேட்டு நடக்கிற மிக சமத்து பிள்ளையாக தான் இருந்தான்.

அவன் அம்மா வேறு தீவிரமான ராம பக்தையா, அதனால் அந்த ஊர் பக்கம் யாராவது வேதம், மதசொற்பொழிவு, கதாகாலஷேபம் என்று சொல்லிக்கொண்டு வந்தாலே போதும். வீட்டிற்கு வரவேற்று, ராஜ உபசாரம் செய்து, மதவிளக்கங்களை கேட்டு வைத்தால் நிறைய புண்ணீயம் கிடைக்கும் என்று சின்ன தாயம்மாள் நம்பினார். அதனால் ஈரோடு பக்கம் யாரவது மதப்பெரிசுகள் வந்தாலே போச்சு, குட்டி ராமன் வீட்டில் பெரிய தடபுடல் தான்.

இப்படி சின்ன தாயம்மாள் விருந்தோம்பிக்கொண்டிருக்க, அவர் வீட்டிற்கு வந்து பல பேர் மத போதனைகளையும், புராணக்கதைகளையும் சொல்ல, இதை எல்லாம் கேட்டே வளரும் வாய்ப்பு குட்டி ராமசாமிக்கு.

சாதாரணமாகவே குழந்தைகள் நிறைய கேள்வி கேட்பார்கள். என் தோழி ஒருத்தி, ஏரியா பொடிசுகளுக்கு நீதி கதைகள் சொல்வதற்காக தேவர்களையும், அசுரர்களையும் பற்றி ஏதோ ஒரு புராண கதையை சொல்லிக்கொண்டிருந்தாளாம். அப்போது அசுரர்கள் தலையில் கிரீடமும் கொம்பும் இருக்கும் என்றாளாம். குழந்தை கேட்டதாம், கிரீடத்து மேல எப்படி கொம்பு இருக்கும்? கொம்பு மேல எப்படி கிடீடத்தை வெக்க முடியும் என்று. கடைசியில் கிரீடத்தில் கொம்பை செருகி இருப்பார்கள், கிருஷ்ணன் கிரீடத்தில் மயில் தோகையை செருகிக்கொண்டதை போல என்று ஒரு வழியாக விளக்கம் சொல்லி முடித்தால், குட்டி கேட்டதாம், அதெப்படி கொம்பை மிருகத்து கிட்டேர்ந்து எடுக்கலாம், அது மிருக வதை, சட்ட விரோதமாச்சே என்று!

இப்படி குழந்தைகள் ஃப்ரெஷ்ஷாய் உலகை பார்ப்பதினால் பெரிசுகள் நமக்கு அதுவரை உரைக்காத பல விஷயங்கள் அவர்களுக்கு பட் பட் என்று தென்படுகின்றன. குழந்தைகளின் இந்த குணத்தை ரசிக்க தெரிந்த பெரிசு என்றால், இந்த சைல்டிஷ் க்யூடியாசிடியை ஊக்கு விப்பார்கள். ரசனையற்ற ஏதாவது முசுடு என்றால், “அதிக பிரசங்கிதனமாய் என்ன ஏடாகூட கேள்வி இது. வாய மூடிக்கிட்டு கதையை கேட்டு தொலை இல்லனா சாமி கண்ணை குத்தீடும் பார்!” என்று தன் இயலாமையை மறைக்க உதார் விட்டு நழுவ பார்க்கும்.

இதென்ன அநியாயம் கேள்வி கேட்டதுக்கெல்லாமா சாமி கண்ணை குத்தும், சரியான சிடுமூஞ்சி சாமியா இருக்கே! என்று குழந்தை அந்த சமையத்திற்கு வாயை மூடிக்கொண்டாலும், அதன் கேள்வி கேட்கும் இயல்பை அதனால் மாற்றிக்கொள்ள முடியாதே. அதுவும் போக, சாமி இத்தனை நாளா கண்ணை குத்தவே இல்லையே, அப்படினா இது டூப்பு என்று புத்திசாலி குழந்தைகள் புரிந்துக்கொள்வார்களே!

குட்டி ராமசாமி, ரொம்ப சுட்டியான புத்திசாலி குழந்தை என்பதால் அவனும் தன் வீட்டில் வந்து சொற்பொழிவு செய்த பெரிசுகளிடம் நிறைய கேள்விகள் கேட்டான், “ அதெப்படி, வாமணன் மூணே நடையில் மூணு உலகத்தையும் அளந்தார்? ஒரு கால் இந்த இந்த உலகத்துல இருக்குற ராஜாவோட தலையிலன்னா, அதெப்படி, இன்னொரு கால் உலத்துமேல படும்? “ இந்த கால குழந்தையாக இருந்தால், ”அப்ப ஒரு கால் குட்டியா, இன்னொரு கால் பெரிசா இருந்ததா? இரண்டு காலையும் இப்படி வெக்கணும்னா அப்ப இந்த சாமி எங்கே நின்னுகிட்டு இருந்ததாம், லாஜிக்கே சரியா இல்லையே? இந்த கதை சரியில்லை, வேற கதைய சொல்லு” என்றிருக்கும்.

இதே கேள்விகள் தான் அந்த கால குட்டி ராமசாமிக்கும் தோன்றின. கேட்டால், “கடவுளாச்சேனு கொஞ்சமாவது மதிக்கிதா பார், வாய்க்கு வந்த கேள்வி எல்லாம் கேட்குதே, இதெல்லாம் உருப்படுறத்துக்கே இல்லை. பிள்ளையா பெத்து வெச்சிருக்காங்க” என்று திட்டு தான் கிடைத்தது.

சரி தான் இந்த பெரிசுகளுக்கு பதில் தெரியலை போல, என்று அவர்கள் மேல் மரியாதை இழந்தான் குட்டி ராமசாமி.

அவர்கள் மேல் தான் மரியாதை போனதே தவிற அவர்கள் சொல்லித்தந்த போதனைகள் எல்லாமே உண்மை என்று தான் நம்பி இருந்தான். குழந்தை பெரியவர்கள் சொல்வதை நம்பித்தானே ஆகவேண்டும்.

பெரியவர்கள் சொன்னார்கள் இறைவன் எல்லோருக்கும் பொது என்று. ராமாவதாரத்தில் கடவுள், குகனை கட்டிபிடித்து, “நீ என் உடன் பிறந்தவனை போல” என்று சொன்னார் என்றால் என்ன அர்த்தம்? படகோட்டியும், ராஜகுமாரனும் சமம் என்று தானே அர்த்தம்.

ஆனால் அன்றாட வாழ்க்கையில் இப்படி சம்த்துவம் எதுவுமே பழக்கதில் இல்லையே.
உதாரணத்திற்கு குட்டி ராமாவின் பள்ளிக்கூடத்திற்கு பக்கத்தில் ஒரு மாமி வீடு இருந்தது. தாகம் எடுக்கிறது என்று ராமா மாமியிடம் போய் தண்ணீர் கேட்டால், மாமி, “ஜலத்தை தூக்கி, வாயில் வைக்காமல் குடி” என்றாள். குட்டி பையன் தண்ணீரை தூக்கி குடித்தால், வாஅயில் படவில்லை தான், ஆனால் ஜலம் எல்லாம் மூக்கினுள் போய் புரக்கேறிக்கொண்டது. மாமி அது பற்றி எல்லாம் கவலை படவில்லை. அவளை பொறுத்த வரை, அவள் வீட்டு தம்பளர் ராமாவின் வாயில் படாத வரை ஷேமம்! என்று ராம உபயோகித்த தம்பளரை தண்ணீர் தெளித்து தீட்டு நீக்கி எடுத்துக்கொண்டு போய் விட்டாள்!

ஓ அப்படினா, நம்ம வீட்டை தவிற மற்றவர்கள் வீட்டில் தண்ணீரை இப்படித்தான் குடிக்கவேண்டும் போல, என்று குட்டி ராமா நினைத்துக்கொண்டான். பிறகு ஒரு சமயம் வேறொரு பெண் வீட்டில் தாகம் என்று தண்ணீர் கேட்டபோது, அந்த பெண்ணோ, “எங்க வீட்டுல எல்லாம் நீ தண்ணீயே குடிக்கக்கூடாதுப்பா,” என்றாள் பயந்துபோய். இல்லை ரொம்ப தாகம் என்ற போதோ, “சும்மா சப்பியே குடிப்பா” என்று அனுமதி தர, அப்பாடா, நிம்மதி என்று மட மடவென்று தண்ணீரை குடித்தான் ராமசாமி.

அப்புறம் தான் உரைத்து....அந்த மாமி துக்கி குடின்னு சொல்லுறாங்க, இந்த பெண்ணோ
முதலின் தண்ணீரே தரமாட்டேன் என்றார், பிறகு சப்பிக்குடி என்கிறாள்....ஏன் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி இருக்கிறார்கள். எல்லோருமே ஏன் ஒரே மாதிரி இல்லை, ஏன் இப்படி போட்டு குழப்புறாங்க என்று யோசிக்க ஆரம்பித்தான். இதுவே அவன் சின்ன மனதில் பிரதான சிந்தனையாகி விட “ஏன் இத்தனை வித்தியாசம்?” என்று கேட்டு கேட்டு பார்த்தான்.

யாரும் தெளிவான பதிலை சொல்லவில்லை.
அது அப்படி தான். அவங்க மேல் ஜாதி, இவங்க கீழ் ஜாதி.

மேல் ஜாதி என்றால் என்ன, கீழ் ஜாதி என்றால் என்ன?
மேல் ஜாதினா பிராமணர்கள், கீழ் ஜாதி என்றால் சூத்திரர்கள்.

பிராமணர்னா யார், சூத்திரர்னா யாரு?
பிராமணர்னா பூனூல் போட்டு, குடுமி வெச்சிருப்பாங்க, சூத்திரர்னா, அப்ப்டி இல்லை.

அப்படினா, பிராமணர் பூனூலை கழட்டி, குடுமியை வெட்டிக்கிட்டா, சூத்திரர் ஆயிடலாமா?
சீ, சீ, முடியாது

அப்ப, சூத்திரர், குடுமி வெச்சி, பூனூல் போட்டா பிராமணர் ஆயிடலாமா?
வாயை கழுவு, அதெப்படி முடியும். பிராமணர்னா பிரம்மாவோட தலைலேர்ந்து பிறந்தவங்க, சூத்திரர்னா பிரம்மவோட கால்லேர்ந்து பிறந்தவங்க...அதனால் பிராமணர்னா உசத்தி, சூத்திரர்னா மட்டம்.

ஓ, கால்லேர்ந்து பிறந்த மட்டமா?
இல்லையா பின்னே, ஆமா!

அப்ப, கால்னா மட்டமா?
ஆமா, ஆமா

அப்படின்னா....ஏன், எல்லாரும் பெரியவங்ளை பார்த்தா பாத பூஜை பண்ணுறாங்க, கால்ல விழுந்து கும்பிடுறாங்க? சாமி காலடியில் காணிக்கை வெக்குறாங்க. பாத கமலம், பாத புஷ்பம்னு சொல்லுறாங்க. கடவுளே உன் காலடியில் விழுந்து கிடக்குறேன்னு சொல்லுறாங்க?

இப்படியெல்லாம் அபத்தமா பேச எங்கே தான் கத்துகிட்டியோ. உன்னை எந்நேரத்துல பெத்தாங்களோ!

இப்படி தன்னுடைய கேள்விகளுக்கு பதில் கிடைக்காமலே தன் இளம் வயதை தாண்டி வந்தான் குட்டி ராமசாமி....

அதனாலேயோ என்னவோ, ராமசாமியின் மனநிலை பெரிய மாறுதலுக்கு உள்ளாயிற்று. அவன் அம்மா ஆசை ஆசையாய் வணங்கி வழிபட்டு, தன் மகனுக்கும் பெயர் வைத்து மகிழ்ந்த அதே ராமனை, சாமியே இல்லை என்று செருப்பால் அடுக்கும் தன்மைக்கு பிறகாலத்தில் மாறினான் இந்த ராமிசாமி. அவன் ஏன் அப்படி மாறி போனான்?

அனலைஸ் செய்து தான் பார்ப்போமே!

Monday, January 26, 2009

பெரியார் - நதிமூலம், ரிஷிமூலம்

சரி, பெரியாரை பற்றி எனக்கு அனா ஆவன்னா தெரியாது என்கிற என் அறியாமையை நான் ஒத்துக்கொண்ட போது தான் எனக்கு அதன் மிக பெரிய சவுகரியமே புரிந்தது. ஏற்கனவே யாரோ எதையோ சொல்லி, அதை நான் வேறு நம்பி தொலைத்திருந்தேன் என்றால், என் மனம், முன் பதிவு செய்யப்பட்டிருக்கும். அதனால் என் சொந்த கருத்து என்று ஒன்று உண்மையில் இல்லாமல், யாரோ சொன்னதை வைத்து second hand டாய் உருவான கருத்தே மிஞ்சி இருந்திருக்கும். இப்போது அப்படி இல்லையே. பெரியாரை பற்றி a, b, c, d கூட எனக்கு தெரியாது என்பதால், காலி ஸ்லேட்டிலிருந்து புதிதாய் இனி நானே அவரை பற்றி, ஃப்ர்ஷ்ஷாய் தெரிந்துக்கொள்ளலாம், எந்த விதமான கலப்படமும், assumptionsசுமே இல்லாமல்!

தியானம் செய்யும் போது ஒரு டெக்னிக் சொல்லுவார்கள். மனதில் ஏற்கனவே இருக்கும் சரக்கை எல்லாம் இறக்கி வைத்து விட்டு, மனதை முதலில் காலி செய்துக்கொள்ள வேண்டுமாம், அப்போது தான் தெளிவு பிறக்குமாம். இந்த 0 நிலையில் இருந்து ஆரம்பித்தால் தான் சத்தியம் விளங்குமாம். ஆனால் இந்த 0 நிலைக்கு வருவது தான் இருப்பதிலேயே ரொமப கஷ்டமான காரியமாம். காரணம் இந்த மனம் என்கிற விசைக்குள் இதுவரை வாழ்ந்து, கேட்டு, பார்த்து, படித்து, அனுபவித்து, கற்பனை செய்து என்று பல பல குப்பைகள் ஏற்கனவே அடஞ்சிருக்குமாம். இந்த குப்பையை எல்லாம் ஒட்டடை அடித்து, பெருக்கி, கழுவி விட்டு, மனதை முதலில் சுத்தமாக காலி ஆக்கிக்கொண்டால் தான் எல்லா ஞானமும் சாத்தியமாம்.

அதிர்ஷடவசமாக, பெரியார் விஷயத்தில் என் மனம் டோட்டலால் squeaking cleanனாய் எந்த வித முன் தகவலுமே இல்லாமல் இருந்தது. இந்த காலி ஸ்லேட் மனதை வைத்துக்கொண்டு, பெரியார் என்கிற இந்த மனிதனை புரிந்துக்கொள்ள போகிறேன். பெரியார் பெரிய அவர், இவர் ஆஹா ஓஹோ என்று சும்மாவெல்லாம் நான் துதிப்பாடிக்கொண்டிருக்கப்போவதில்லை. பெரிய மாஹாத்மா என்று ஒரு நாடே ஒட்டு மொத்தமாய் போற்றித்தள்ளும் மனிதனில் எத்தனை விதமான வக்கரங்கள் இருக்கின்றன என்பது ஆராய்ந்து பார்த்தால் தானே தெரிகின்றன. எதற்கு சும்மா தலையில் தூக்கிவைத்து கொண்டாடுவது, அப்புறம், அந்த மனிதனின் ஓட்டை உடைச்சல்கள் தெரிந்தபின், சீ நீ இவ்வளவு தானா என்று கீழே தூக்கிப்போட்டு உடைப்பது? ஆரம்பத்திலேயே நடுநிலையாய், எந்த வித பற்றுமே இன்றி, உள்ளதை உள்ளபடி பார்க்க பழகிவிட்டால் தானே நல்லது. இத்தனை வருட அறிவியல் என்னுள் ஏறபடுத்தி இருக்கும் default மன நிலையும் அது தான் என்பதால், யாரையும் ஒரேயடியாக புகழவும் எனக்கு வருவதில்லை, சாமினியர் தானே என்று யாரையும் குறைத்து மதிப்பிடவும் முடிவதில்லை. இதற்காக ”சரியான திமிர் பிடிச்ச கழுதை, கொஞ்சமாவது பயப்படுதா பாரேன்” என்று நிறைய பேரிடம் நிறைய அர்ச்சனை எல்லாம் வாங்கிகட்டிக்கொண்டிருக்கிறேன்! ஆனால் இந்த objectivity மட்டுமெ அடங்கவே மாட்டேன் என்கிறது.

அதுவும் நல்லதற்குத்தான். இந்த அப்ஜெக்டிவிட்டியோடே பெரியார் என்கிற இந்த ஆசாமியை அனலைஸ் பண்ணித்தான் பார்போமே என்று களமிறங்கினேன். இன்னொரு பி, எச்டி, மாதிரி, இதையும் ஆராய ஆரம்பித்தேன். எந்த ஆராய்ச்சியாக இருந்தாலும் review of literature தானே துவக்க பணி, அதனால் பல பேரிடம் பேசி, பல புத்தங்களை புரட்டி பெரியாரை பற்றி துளாவினேன்.

அப்போது தான் முதல் ஆட்சரியம் உண்டானது. பெரியாரை பற்றி ஏற்கனவே தெரிந்தவர்களுக்கு இதெல்லாம் நிச்சயமாய் தெரிந்திருக்கும், ஆனால் நான் தான் சைஃபர் ஆயிற்றே, அதனால் எனக்கு இது கொஞ்சம் பெரிய ஆட்சர்யமே. அது என்னவெனறால், தமிழ் நாட்டில் இத்தனை சமூக பணிகள் செய்த பெரியார் என்கிற இந்த ராமசாமி, உண்மையில் தமிழரே இல்லை. இவர் கர்னாட்டகாவை சேர்ந்த கன்னடம் சேசுகிற பலீஜா நாயிடு வகுப்பை சேர்ந்த வைஷிய குடும்பத்தை சேர்ந்தவராம். அவர் மூதாதையர்கள் ஈரோட்டிற்க்கு வந்து செட்டில் ஆகிவிட்டதால் தமிழோடு பரிச்சையம் ஏற்பட்டுவிட்டதாம்.
மற்றபடி, ஈ வே ராமசாமிக்கும், தமிழுக்கும் தமிழர்களுக்கும், எந்த விதமான ரத்த பாசமோ, பற்றோ இல்லை.

அப்புறம் எதற்க்காக இந்த மனிஷன் மற்ற ஆண்களை போல, தான் உண்டு, தன் வேலை உண்டு, பெண்ட்டாட்டி, பிள்ளை உண்டு என்றில்லாமல், பிழைக்க வந்த ஊர்காரர்களுக்கு சேவை செய்கிறேன் பேர்வழி என்று தன் வாழ் நாளின் பெரும் பகுதியை செலவழித்தார்? what a waste of time! என்ன வியாபார குடும்பமோ போங்கள், இந்த பேஸிக் சர்வைவல் கூட தெரியாத பேக்காக தானே இருந்திருக்கிறார் இந்த மனிதன்! அறிவுள்ள எவனாவது பிழைக்க வந்த வேலையை விட்டு விட்டு பரோபகாரம் செய்கிறேன் என்று தன் நேரத்தையும் உழைப்பையும் பணத்தையும் இப்படி விரையம் செய்வானா?

ஆனால் இந்த மனிதன் செய்திருக்கிறானே, ஒரு நாள் இரண்டு நாளைக்கல்ல, தன் வாழ் நாள் முழுவதுமே. எதற்க்காக இந்த வேண்டாத வேலை இந்த ஆளுக்கு?

Friday, January 23, 2009

புதிதாய் பெரியார்!

யோசித்து யோசித்து பார்த்தேன், எனக்கு ஒரு விஷயம் மட்டும் புரியவே இல்லை. நான் ஒன்றும் அவ்வள்வு மக்கு இல்லையே, வெளிஉலக பரிச்சையம் கொஞ்சமாவது உண்டு, நிறைய நபர்களோரு பேசுகிறேன், நிறைய புத்தங்கள் படிக்கிறேன், அப்புறம் எப்படி இத்தனை கழுதை வயதாகியும் பெரியாரை பற்றி இத்துனூண்டு தான் தெரிந்திருக்கிறது?

சரி, தமிழ் கொஞ்சம் தகராறு, அதனால் லோக்கல் பத்திரிக்கைகளை தவிர பெரிதாய் மொழிசார் புத்தகங்களை படித்ததில்லை. ஆங்கிலத்தில் இத்தனை படித்திருக்கிறேனே, அப்புறம் ஏன் பெரியாரை பற்றி எனக்கு தெரியவில்லை. அது சரி ஆங்கில புத்தகங்களில் தமிழர்களை பற்றி எழுத யாருக்கு பெரிய அக்கறை இருந்துவிடபோகுது?

சரி, வெளி புத்தங்களை படிக்கவில்லை என்றாலும் பள்ளிக்கூடத்தில் ஓரளவு உருப்படியாக படித்த கேஸ் தானே. ஏன் என் பள்ளிக்கூட பாடங்களில் பெரியார் என்ற ஒரு கேரக்டரை பற்றி எதுவுமே சொல்லித்தரவில்லை. சீ.பி, எஸ். சி சிலபஸ் கொண்ட பள்ளிக்கூடத்தில் ஹிந்தி
இரண்டாம் மொழியாய் கொண்டு படித்ததினால் பெரியாரை கோட்டை விட்டேனோ?

சரி, பள்ளிக்கூடத்தில் தான் சொல்லித்தரவில்லை, வீட்டிலாவது சொல்லி இருக்கக்கூடாதா என்றால் அம்மாவும் பீட்டர் பரம்பரை என்பதால் அவருக்கே தமிழ் கலாச்சாரமும் வரலாறும் பெரிதாய் தெரியாது. அப்பா பிஸி, இது பற்றியெல்லாம் பேச அவருக்கும் நேரமில்லை, வீட்டு பெரிசுகள் பெரும்பாலும் ஒரே பழம் பெருமை பேசித்தீர்ப்பார்கள் என்பதால், அவர்கள் புராணத்தை கேட்கத்தான் முடியுமே தவிர ஊர் விஷயம் எதுவும் வெளி வராது. ஆக வீட்டிலும் இது பற்றி சொல்வாரில்லை.

தோழிகள் எல்லோரும் எப்போதுமே அழகு சாதனம், ஆண்கள் பிரதாபம், மிஞ்சி மிஞ்சி போனால் சப்ஜெக்ட்! தோழர்களோ வெறும் விளையாட்டு, படிப்பு, பெண்கள், வாகனங்கள், எதிர்காலம், பிளஸ் வெட்டி பேச்சு....இப்படியே இருந்ததால் பெரியார் என்ற ஆசாமியை பற்றி பெரிதாய் எதுவும் தெரியாமலேயே படிச்சு, பட்டமெல்லாம் வாங்கியும் விட்டேன், அதுவும் ஈ, வே, ரா பெரியார் சாலையில் உள்ள மருத்துவ கல்லூரியிலேயே!

நிறைய ரேடியோவும், டீ வியும், செய்தித்தாள்களும் சிறு வயதிலிருந்தே கேட்டு, பார்த்து, படித்ததுண்டு தான், அவற்றிலும் பெரியாரை பற்றி எதுவுமே கேள்விபடவே இல்லை. பெரியார் காலத்திற்கு பிறகு பிறந்ததினால், அவரது இன்ஃப்லூயென்ஸ் இல்லாமலே போய் விட்டதா எனக்கு?

அதெப்படி முடிந்தது, இத்தனை ஆண்டுகள் சென்னையில் வாழ்ந்து, செண்ட்ரலில் படித்து, திருவல்லிக்கேணியில் குப்பை கொட்டிய எனக்கு பெரியாரை பற்றி தெரியாமலே எப்படி இருக்க போச்சு? நினைக்கவே மஹா அவமானமாகவும், வெட்கமாகவும் இருந்தது எனக்கு.

ஆட்சரியம் தாளாமல், வீரமணி அவர்களிடம் கேட்டேன், “அதெப்படி சார், இத்தனை வருஷமா, இப்படி ஒரு மனிதன் வாழ்ந்து இவ்வளவு தொண்டு ஆற்றியதை பற்றியே தெரியாமல் காலத்தை ஓட்டி இருக்கேன். என் நிலைமையே இப்படின்னா அப்ப மத்தவங்க கதி?”

“பெரியாரை பத்தி எங்களை தவிர யாரும் பெரிசா பேசுறதில்லைம்மா” என்றார் வீரமணி, “ஐயாவை எல்லாருமே பிராமண எதிர்ப்பாளரா, கடவுள் மறுப்பாளரா தான் பேசுறாங்களே தவிர அவரோட மக்கள் தொண்டை யாரும் தெரியபடுத்துறதே இல்லை. உங்களுக்கு தெரியுமா, இனிக்கு ஒரு பெண்ணா நீங்க மருத்துவம் படிச்சு, இப்படி ஆணுக்கு சமமா வாழ காரணமே பெரியார் தான். பெரியார் படம் பாத்திருப்பீங்களே.” (நான் எங்கே அதை எல்லாம் பார்த்தேன்! அதற்கப்புறம் வீ சீ டீ வாங்கி போட்டு பார்த்தேன் என்பது வேறு கதை!) ”அவரை பத்தி உங்களுக்கு தெரியலன்னா என்ன, அவர் ஆசை பட்டமாதிரியே, உங்களை மாதிரி பெண்கள் இனிக்கு தமிழ் நாட்டுல இருக்குறதே பெரியாருக்கு பெரிய வெற்றி தானே?” என்றார்.

என்னது, என்னை மாதிரி ஒரு பெண் இனிக்கு தமிழ் நாட்டுல உருவாகக்காரணமே பெரியார் தானா? ஐ! அப்ப பழி எல்லாம் பெரியார் மேல தானா! என்று ஹாசியமாய் யோசித்தாலும், அப்படி என்ன செய்தார் இந்த பெரியார்? யாரிவர்? ஏன், எதற்காக, எப்படி, இதை எல்லாம் செய்தார்? இதை எல்லாம் செய்ததால் அவருக்கு என்ன கிடைத்தது? what is the story behind this man? என்று தீவிரமாய் பெரியார் என்கிற கேரக்டரை சைக்கோஅனலைஸ் செய்ய ஆரம்பித்துவிட்டேன் நான்!

Monday, January 19, 2009

தாமதமாக கண்டுபிடித்த ஆல்ஃபா ஆண்!

ஆண்களிடம் ஒரு ஸ்பெஷல் திறமை உண்டு, அவர்கள் அறிவை எப்போதுமே நன்றாக தீட்டிவைத்திருக்கிறார்கள். நிறைய உலக ஞானமும், விஷய ஞானமும் தெரிந்து வைத்திருக்கிறார்கள். சும்மா அவர்கள் பேசுவதை தூரத்தில் இருந்து கேட்டாலேயே கூட, நமக்கு “அய், இவ்வளவு மேட்டர் இருக்கா இதுல!” என்ற வியப்பு ஏற்பட்டு விடும்! அப்படி பல ஆண்களிடமிருந்து நான் பல விஷயங்கள் தெரிந்துக்கொண்டுள்ளேன்.

அப்படி சமீபத்தில் நான் posthumousசாய் கண்டுபிடித்த இந்த ஆண் ரொம்பவே சூப்பர்மேன் என்று தான் சொல்லவேண்டும். இந்த மனிதர் வாழ்ந்த காலத்தில் நான் பிறக்கவில்லையே என்ற ஒரு ஏமாற்றம் எனக்கு. இதில் என்ன பெரிய விசித்திரம் என்றால் நான் படித்த கல்லூரி அவர் பெயரிலான சாலையில் தான் இருக்கிறது. கட் அடித்த நாட்கள் போக மீத நாட்கள் எல்லாம் அவர் சிலையை தாண்டி தான் கல்லூரிக்கே போனேன். நான் ரொம்ப காலம் குப்பை கொட்டிய மருத்துவமனையின் முகவரியிலேயே அவர் பெயர் வரும்! போகிற ஊரெல்லாம் அந்த மனிதனின் சிலைகள் தான்....இத்தனை இருந்தும் இந்த ஆளை பற்றி எனக்கு பெரிதாக எதுவுமே தெரியாது.

ஏதோ மதங்களுக்கு எதிரானவர், கொஞ்சம் டேஞ்சரான ஆசாமி என்ற அளவில் தான் தலைவரை பற்றி எனக்கு தெரியும். மற்றபடி அவர் விஷயத்தில் நான் சுத்த சைஃபர்!
இது இப்படி இருக்க, ஒரு நாள், தூர்தர்ஷன் அலுவலகத்தில், “ஆசிரியர் உங்க பேச்சை கேட்டாராம், நேர்ல பாராட்டணும்னு சொல்லுறார், போன் போட்டு தர்றேன், பேசுறீங்களா?” என்று ஒருவர் கேட்க, என் ஆசிரியர்களில் யார், எனக்கு ஆண் ஆசிரியர்களே கிடையாதே என்று குழம்பும் போதே, ஃபோன் தரப்பட, அதை வாங்கி ஹெலோ சொன்னால், எதிர் முனையில் ஒருவர், “நான் திராவிடர் கழகத்துலேர்ந்து வீரமணி பேசுறேன்” என்றார் பாருங்கள். எனக்கு பெரிய அதிர்ச்சி, இவர் தான் ஆசிரியரா, யாருக்கு!....யோசிக்கும் போதே அவர் என் நிகழ்ச்சியை பாராட்டி, நேரில் சந்திப்போமே என்று சொல்ல நானும் ஓகே என்று வைத்தேன்.
அப்புறம் தான் தெரிந்தது, அவர் எனக்கு ஆசிரியர் இல்லை, விடுதலை என்ற பத்திரிக்கையின் ஆசிரியர், அதனால் எல்லோரும் அவரை அன்பாய் அப்படித்தான் கூப்பிடுவார்கள் என்று.

அவரை அடுத்த நாள் போய் பெரியார் திடலில் பார்த்தேன். என் வழக்கமான யூனிஃபார்மில். கை குளிக்கினோம். என் பேச்சை பாராட்டினார், பிறகு, “பெரியாரிஸ்ட் குடும்பமா நீங்கள்?” என்றார். பெரியாரிஸ்ட் குடும்பமா, அப்படினா, அப்படி எல்லாம் ஒன்று இருப்பதே தெரியாத கேஸாயிற்றே நான்! நான் பிளாங்காய் பார்த்ததை வைத்தே எனக்கு புரியவில்லை என்று உணர்ந்து, “இல்லை, பெரியார் சொன்னா மாதிரியே டிரெஸ் பண்ணி இருக்கீங்களே, அதான் கேட்டேன்..”என்றார்

”பெரியார் டிரெஸ் பண்ணுறதை பத்தி என்ன சொன்னார், எனக்கு தெரியாதே,” என்றேன்.

என் அறியாமையை கண்டு எரிச்சல் படாமால், “பெரியார் பெண்களை இப்படி தான் டிரெஸ் பண்ண சொன்னார்...” என்றார் ஆசிரியர் பொறுமையாய். “முழம் முழமாய் புடவையை சுற்றிக்கொண்டு தலைப்பு சரியாக, இருக்கிறதா, முந்தானை சரியாக இருக்கிறதா என்று சரி பார்ப்பதிலேயே நேரத்தை வீணடிக்காமல் வெளிநாட்டு பெண்கள் மாதிரி தமிழ் பெண்களும் பேண்ட் சட்டை போட்டுக்கொண்டு, கிராப் வெட்டிக்கொள்ள வேண்டும் என்றார் ஐயா.”

நான் ஆட்சரியமாக பார்த்தேன், “அப்படினா, இன்னும் ஏன் தமிழ்நாட்டு அறிவியல் யூனிவர்சிட்டி வைஸ்சான்சலர் எல்லாம் பெண்கள் காலேஜுக்கு பாண்ட் சட்டை போட்டுக்கிட்டு வரக்கூடாதுன்னு ரூல் போடுறாங்க இன்னும்?”

அவர் சிரித்தார், “அவங்க எல்லாம் இன்னும் பிற்போக்கா இருக்காங்க, நீங்க வல்லத்துல இருக்க எங்க காலேஜுக்கு வந்து பாருங்க, அது பெண்களுக்கான எஞ்சினியரிங் காலேஜ், அங்கே எல்லா கேர்ச்சுக்கும் யூனிஃபார்மே பாண்ட் சட்டை தான். கிட்ட தட்ட இருவது வருஷமா அப்படித்தான்...”

”அட, பரவாயில்லையே!” நான் வியப்புடன் விழிக்க, அவர் கை நிறைய புத்தகங்களை எடுத்து என்னிடம் கொடுத்தார், “இதெல்லாம் ஐயா பெரியாரோட புத்தகங்கள், பெண் ஏன் அடிமையானாள், பெரியார் கழஞ்சியத்தோட தொகுப்பெல்லாம் இதுல இருக்கு, படிச்சிப்பாருங்க” என்றார்.

அத்தோடு விடைபெற்றுக்கொண்டு வந்துவிட்டேன், வழியில் புத்தகங்களை புரட்டி பார்த்தால், பெரியாரின் எழுத்துக்களையும் அவை வெளிபடுத்திய அறிவியல் ரீதியான முற்போக்கு சிந்தனைகளும் எனக்கு அதிசயமாய் இருந்தன. கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கு முன்னாடியே, இவ்வளவு அறிவுகூர்மையாய், லேட்டெஸ்ட் ஞானத்துடன் எழுதிதள்ளி இருக்கிறாரே, இந்த மனிதன் என்ன படித்திருக்கிறார் என்று புரட்டி புரட்டி பார்த்தால், அஞ்சாவதோ, ஆறாவதோ தான்!

ஆக, நம்மை போல, ஏட்டு சுரக்காய் அறிவில்லை, எல்லாமே சொந்த சிந்தனையா!! அப்படி என்றால் என்ன அபாரமான சிந்தனையாளராய் இருந்திருப்பார் அந்த மனிதர்!
இத்தனை நாளாய் இந்த ஆளை பற்றி எதுவுமே தெரியாமல், அவர் பெயரிலான சாலையில் உள்ள கல்லூரியில் படித்து வேறு முடித்திருக்கிறேன் என்று நினைத்தால், எனக்கு ரொம்பவே வெட்கமாகி விட்டது!

சரி, இப்போதாவது தெரிந்துக்கொண்டேனே பெட்டர் லேட் தென் நெவெர், என்று மனதை தேற்றிக்கொண்டு, அவர் புத்தகங்களை படித்ததும் தான், வெறும் ராமசாமி நாயகராக இருந்த இவரை பெண்கள் எல்லாம் சேர்ந்து பெரியார் என்று அழைக்க என்ன காரணம் என்று புரிந்தது. சும்மா சொல்லக்கூடாது, ஒன் மேன் ஆர்மியாய் மனிதர் எத்தனை பெரிய சமூக புரட்சிகள் செய்திருக்கிறார்! சாதாரண ஆண்களால் முடியாத பல சாதனைகளை இந்த தனி ஒரு ஆள் செய்து ஜெயித்தால் தான் பெண்கள் எல்லாம் அவரை பேராண்மைமிக்கவராய் கருதி, பெரியார் என்றார்கள் போல!

அப்படி என்ன செய்துட்டார் பெரியார் என்று கேட்கத்தோன்றுகிறதா? பெ. மு வில் நானும் அப்படி தான் இருந்தேன். எப்பேற்ப்பட்ட கொம்பனாக இருந்தாலும் “பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே” என்று சட்டைசெய்யாமல் இருப்பது தான் என் வழக்கம். ஆனால் பெ.பியில் நான் கொஞ்சம் மாறிவிட்டேன். பெரியாரை கண்டு வியக்க ஆரம்பித்தேன்!

அது சரி, பெ.மு என்றால் என்ன, பெ.பி என்றால் என்கிறீர்களா? சிம்பிள், பெரியாருக்கு முன், பெரியாருக்கு பின். பெரியார் பரலோகம் போய் சேர்ந்து இத்தனை நாளான பிறகு என்ன பெ.மு, பெ.பி என்கிறீர்களா? எனக்கு அவரை இப்போது தானே தெரியும்!

அப்படி என்ன பெரிதாய் தெரிந்துக்கொண்டேன், இவ்வளவு வியக்கும் அளவுக்கு என்கிறீர்களா? ஒன் பை ஒன் சொல்லி புரியவைக்க முயல்கிறேன்....

Thursday, January 15, 2009

அந்த நான்கு குணங்கள்.....


பெண்ணின் மறுபக்கம் புத்தகத்திலிருந்து....

என் கல்லூரியில் ஒரு வழக்கம் இருந்தது. யாருக்காவது பிறந்த நாள் என்றால் ஒரு பெரிய வாழ்த்து மடலை வாங்கி, எல்லோருமே அதில் கையெழுத்திட்டு தருவார்கள். எனக்கு அப்படி ஒரு அட்டை தரப்பட, அது ஏதோ ஒரு பரணையில் தலைமறைவாய் கிடந்து வந்தது. ஒரு நாள் வேறு எதையோ தேடி பரணைக்கு ஒரு சாப விமோட்சனம் தந்து சுத்தம் செய்யும் போது தற்செயலாய் கையில் சிக்கியது. மஞ்சலும் பழுப்புமாய் மங்கிபோயிருந்த அந்த வாழ்த்து அட்டையை எடுத்து அசட்டையாய்ப் பார்த்துக்கொண்டிருந்தேன். என் இனிய கல்லூரிக் கிறுக்குகள் எல்லாம் கிறுக்கியிருந்ததைப் படித்து சிரித்துக்கொண்டிருந்தேன். அந்தக் கிறுக்கல்களில் ஒன்றில், "அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு - கிலோ எவ்வளவு? பெண்ணின் பெருமையைக் கெடுக்காதே..." என்று என்னைத் திட்டித் தீர்த்திருந்தான் கையெழுத்துப்போடாத ஒரு தைரியசாலி.
அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு.
எல்லோரையும் போல நானும் பெண்களின் இந்த நான்கு உயரிய குணங்களைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இந்த அச்சம், நாணம், மடம், பயிற்ப்பு என்றால் என்ன என்று எனக்கு தெளிவாக தெரியவில்லை. அதை தெரிந்துக்கொள்வது அவ்வளவு முக்கியம் என்று தோன்றாததால் நான் பாட்டிற்கு என் வேலைகளின் மும்முரமாய் இருந்தேன். இப்படி வேலை நிமித்தமாக தான் டாக்டர் ரெஜீனா பாப்பாவை சந்திக்க நேர்ந்தது. டாக்டர் ரெஜீனா மகளிரியல் வித்தகர். தமிழகத்தில் மகளிரியலுக்காகத் தனியாக கல்லூரிப் படிப்புகளை உருவாக்கிய முன்னோடி. சதா சர்வகாலமும் அவர் பேச்சு, மூச்சு, சிந்தனை எல்லாம் பெண்களின் நிலை பற்றியேதான். என்னைப் பார்க்கும்போதெல்லாம், "பெண் என்ற பிரக்ஞையே இல்லாமல் இருக்கியே! பெண்ணினத்தோடு ஒன்ற மாட்டேங்கிறியே!" என்று கண்டிப்பார்.
நான் என்ன செய்வது - என் தொழில் அப்படி! வெறும் ஒரு மருத்துவருக்கே ஆண்-பெண் பேதம் கிடையாது என்கிறபோது நானோ உளநலவியல் மருத்துவர். அன்றாடம் பெண்களால் அவதிப்படும் ஆண்கள், ஆண்களால் அவதிப்படும் பெண்கள்... என்று சமுதாயத்தின் நேரெதிர் துருவங்களுக்கு ஆறுதல் அளித்து, சிகிச்சை தருவது என் வேலையான பிறகு... எனக்கென்று ஒரு பாலினப் பற்றுதல் ஏற்படுத்திக்கொள்ளும் சொகுசுக்கு இடமே இல்லாமல் போய்விட்டது. ஆண், பெண் என்ற பாகுபாட்டைக் கடந்து, என் சொந்த விருப்பு வெறுப்புகள், என் தனிப்பட்ட அபிப்பிராயங்கள் ஆகியவற்றை மறந்து, பாலினமற்ற ஒருவகை பிறவியாக இயங்குவது என் தொழில் தேவையாகிவிட்டது. இதனாலேயோ என்னவோ, உண்மையிலேயே, அச்சம், நாணம், மடம், பயிர்ப்பா, அதெல்லாம் கிலோ எவ்வளவு? என்று கேட்கும் அளவில் தான் அடியேளுக்கு அவற்றோடு பரிச்சயம்!
எப்படியோ, நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் போது இந்த அச்சம் நாணம் இத்யாதி இத்யாதியை பற்றி பேச நேர்ந்த்து. "இந்த அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு எல்லாம் என்ன மேடம்?" டாக்டர் ரெஜீனாவைக் கேட்டேன்.
"உக்கும்!" என்று சலித்துக்கொண்டார் ரெஜீனா. "நால்வகைப் பெண்டிர் குணம் என்பார்கள். எல்லாப் பெண்களுக்கும் இருக்க வேண்டியதாகக் கருதப்படும் குணங்கள்."
"ஆமாமா, நிறைய பேர் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கேன், ஆனா மேடம், எனக்கு ஒண்ணு மட்டும் புரியல... அச்சம்னா பயந்தாங்கொளித்தனம், மடம்னா மடத்தனம்... ஏன் நம்ம சமுதாயம் தாய்க் குலத்துக்கிட்ட இந்த மாதிரி வெட்டி விஷயங்களை எதிர்பார்க்குது?"
"அப்படியில்ல. அச்சம்னா பயம், தயக்கம். மடம்னா மடமை, அதாவது அறியாமை. நாணம்னா வெட்கம், கூச்சம். பயிர்ப்புன்னா ஆண் தொட்டதும் மயிர்கூசிப் புல்லரிச்சுப் போறது..."
"ஓ, தொட்டால் பூ மலரும் மாதிரியா! அடடா - ரொம்ப செக்ஸியா இருக்கே!" என்று ஆச்சரியப்பட்டேன். காரணம் இந்த நால்வகைப் பெண்டிர் குணம் கலவி சம்பந்தப்பட்ட சமாச்சாரங்களாய் இருக்கும் என்று நான் கொஞ்சம்கூட எதிர்பார்க்கவேயில்லை.
"ஆமாமா, அந்த நால்வகைப் பெண்டிர் குணமும் முழுக்க முழுக்கப் பெண்களின் கலவியல் கவர்ச்சி, அதாவது செக்ஸ் அப்பீல் பற்றியதுதான். மிரண்ட, ஒண்ணும் தெரியாத, கூசி சிலிர்க்கிற பெண்ணைத்தான் எல்லா ஆண்களுக்கும் பிடிக்கும்ங்கிறதுனால இந்த குணங்களைத்தான் பெண்கள்கிட்ட எதிர்பார்த்தாங்க."
"ஆனா இப்படி மிரண்டு முழிச்சுக்கிட்டு இருந்தா, சொந்தமா சிந்திச்சு செயல்படுற அறிவோ ஆற்றலோ இல்லாத வடிகட்டுன பேக்குனு இல்ல அர்த்தம்! எவன் தொட்டாலும் ஊ, ஆன்னு கூசி சிணுங்குகிற தொட்டாச் சிணுங்கியா இருக்கிறதுல என்ன பிரயோஜனம் மேடம்!"
"இங்கதான் ஒரு விஷயத்தை நாம் புரிஞ்சுக்கணும் ஷாலினி. அந்தக் காலத்துப் பொம்பளைய யாரும் மனுஷியாகவே மதிக்கல. ஆணுக்கு சுகம் தர்றது, பெத்த பிள்ளைகளை வளர்த்து ஆளாக்குறது - இதைத் தவிர வேறு எதுக்கும் பிரயோஜனமில்லாதவர்களாகத்தான் நடத்தப்பட்டாங்க. சொன்னா ஆச்சரியப்படுவே - ஒண்ணுமே தெரியாதவளா இருக்குறதைத்தான் நல்ல பெண்ணுக்கு அழகுன்னு நெனைச்ச காலம் அது. காரணம், ஆய கலைகள் அறுபத்திநாலையும் தெரிஞ்சு வெச்சிக்குறது ஒரு பரத்தையோட தொழில் தேவை - அது நல்ல குடும்பத்துப் பொண்ணுங்களுக்கு வேண்டாத வேலைனு கருத்து இருந்தது. அதனாலதான் வீட்டுப் பெண்களுக்கு எழுதப் படிக்கக்கூடச் சொல்லித் தராம இருந்தாங்க. தப்பான வழில போகிற பொண்ணுக்குத்தான் எழுதப் படிக்க வேண்டிய அவசியமாம். தனக்குன்னு ஓர் ஆம்பிளை இருக்குற பொண்ணுக்கு எழுதப் படிக்கிறது மாதிரியான வெட்டி வேலைக்கு அவசியமே இல்லையேன்றது அந்தக் கால லாஜிக்."
"அடக் கண்றாவியே! ஜமக்காளத்துல வடிகட்டின அடிமைத்தனமா இருக்கே!"
"அதுதானே அந்தக் காலத்து நிலவரம்! உனக்குத் தெரியுமா? இந்த நூற்றாண்டுக்கு முன் வரைக்கும் நம்மூர் பொம்பளைங்க யாருக்குமே மேலாடை அணிய அனுமதியே இல்லாமதான் இருந்தது. அரச குடும்பம், புரோகிதக் குடும்பம் தவிர மற்ற எல்லாப் பொதுப் பொம்பளைக்கும் மாராப்பு சட்டவிரோதமா இருந்தது..."
"என்னது! நிஜமாவா?"
"ஆமா. ஆடை அணியுற அளவிற்கு மரியாதைக்குரிய நபர்களாகப் பெண்கள் மதிக்கப்படலை. என்ன... ஆடு, மாட்டை விடக் கொஞ்சம் மேலானவர்கள் என்கிற மாதிரி நடத்தப்பட்டதனால கீழாடை மட்டும் அணிய அனுமதிச்சாங்க. அதனாலதான் நம்ம கோயில் சிற்பங்கள்ல எல்லாம் பெண் சிலைகள் வெற்று மார்பா இருக்கு. அதனாலதான் இன்னைக்கும் நம்ம கிராமத்துப் பாட்டிகள் மேலாடை போட்டுக்குறதில்ல..."
யோசித்துப் பாருங்கள் - அத்தனை பெண்கள் - எல்லாம் நமது மூதாதையர்கள் - அரை நிர்வாணமாக வலம் வந்தார்களா! "என்ன அநியாயம். பொம்பளைங்களை இப்படியா நடத்துறது!" என்னை மறந்து ஆட்சேபித்தேன்.
"ஏதோ இந்த ஒரு நூற்றாண்டாத்தான் பொம்பளைங்களுக்குக் கொஞ்சமாவது கரிசனம் காட்டுறாங்க. இந்தக் காலத்துப் பெண்களால படிக்க முடியுது, வீட்டை விட்டு வெளியே வேலைக்குப் போக முடியுது, சொத்துரிமை இருக்கு, யாரைக் கல்யாணம் பண்ணிக்கிறதுன்னு சுதந்திரமா முடிவெடுக்க முடியுது... ஆனா இந்த சுதந்திரமெல்லாம் சுலபமா வந்துடல. நம்மோட பாட்டி, கொள்ளுப் பாட்டி எல்லாம் எவ்வளவோ அவமானம், அநியாயம், அக்கிரமத்தை சகிச்சுக்கிட்டாங்க... ஆனா உங்களை மாதிரி நாகரீக சிறுசுங்க, இந்த வரலாறே தெரியாத சுத்த மண்டுகளாய் இல்ல இருக்கீங்க. பெண் சுதந்திரம் என்பது என்னவோ நியூட்டனோட ஆப்பிள் மாதிரி அப்படியே தானா வந்து மடியில விழுந்தா மாதிரி இல்ல அசால்ட்டா இருக்கீங்க!"
என் பாலினப் பற்றற்ற நிலையை மீறி அவர் சொன்னது என்னைச் சிந்திக்கவைத்தது. காச் மூச் என்று கொதித்து பேசினாலும், இந்தப் பெண் விடுதலைப் போராளிகள் சொல்வதிலும் சமாச்சாரம் இருக்கத்தான் செய்கிறதோ என்று தோன்றிவிட அன்றிலிருந்து நான் ரொம்பவே சமர்த்தாய் மனிதப் பெண்களின் வரலாற்றைப் பற்றித் துப்புத் துலக்குவதில் மும்முரமாய் இறங்கிவிதட்டேனாக்கும்.
அதென்ன 'மனித'ப் பெண்கள் என்று புருவம் உயர்த்துகிறீர்களா?
ஜீவராசிகளிலேயே மனித குலம் மட்டும்தான் 'தன் மேலான பாதி'களை இவ்வளவு மோசமாய் நடத்துகிறது என்பது தெரிந்தால் இன்னும் ஆச்சரியப்படுவீர்கள். மற்ற மிருகங்களைப் பொறுத்த வரை பெண்தான் ஆணை விடவும் உஷாராய் இருக்கும். ஆண் புலியை விடப் பெண் புலி சிறந்த வேட்டைக்காரி. ஆண் சிலந்தியை விடப் பெண் பெரியது. ஆண் பாம்பை விடப் பெண் பாம்பு அதிக விஷமமானது. அவ்வளவு ஏன்? மழை காலம் வந்தாலே நம்மை எல்லாம் கடித்தே பாடாய் படுத்துகிறதுகளே கொசு, அதில் கூட ஆண் கொசு அப்புரானி, கடிக்காது. பெண் கொசு தான் கடித்து மலேரியா கிருமிகளை மனிதர்களுக்கு விண்ணியோகம் செய்யும்!
இப்படியாக எல்லா உயிரினங்களிலும் பெண் இவ்வளவு உஷாராக இருந்தாலும் மனித வர்கத்தில் மட்டும் பெண் ஏன் ஆணை விட வீரியம் குறைந்தே காண்ப்படுகிறாள்? வீரியம் உண்மையிலேயே குறைந்தவளா, அல்லது காரணத்தோடு தான் அப்படி காணப்படுகிறாளா?
இத்தனைக்கும் மனித வர்க்கத்திலும் கூட ஆணை விடப் பெண் பலசாலி. உடலால் மட்டுமல்ல, மரபணுவாலும். பெண்களுக்கு இருக்கும் அந்தக் கொசுறு X குரோமோசோம் அவளை சுலபமாகப் பிறக்கவும் சீக்கிரமாய் நடக்க-பேசவும், குறைவாக நோய்வாய்ப்படவும், கொஞ்சமாய் ரிஸ்க் எடுக்கவும் வைக்கிறது. பொதுவாய் ஆணை விட அதிக காலம் வாழ வைக்கிறது. அறிவியல் தொழில்நுட்பங்களின் வளர்ச்சியால், வெறும் பெண்களை வைத்தே உலக ஜீவனத்தைத் தொடரச் செய்ய முடியும்... குழந்தைகளை உருவாக்க இனி ஆணின் விந்தணு அவசியமில்லை என்கிற கருத்துக்கள் தலை தூக்க ஆரம்பித்துள்ளன.
இத்தனை சக்தி. இவ்வளவு இன்றியமையாத தன்மை. இருந்தும் ஆண்கள் பெண்களைக் கேவலமாய்த்தான் நடத்துகிறார்கள். அதை பெண்களும் அனுமதிக்கிறார்கள்....இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கும் கூட. ஏன் என்று யோசித்திருக்கிறீர்களா?
எல்லாம் காரணத்தோடுதான். சாதாரணக் காரணங்கள் அல்ல. சில சுவாரசியமான, நியாயமான காரணங்கள்...

Monday, January 12, 2009

கண்டுஃபிகேஷன்!

அடக்கி வாசித்து ஆண்களை உள்ளது உள்ளபடி அப்படியே ஏற்றுக்கொள்ளும் திறன், உறவின் ஆரம்பத்தில் பார்வையை தாழ்த்தி, அவனை ஊக்கு வித்தல், பிறகு சிரிப்பாலேயே ஒரு அழைப்பிதழ் விரித்தல் ஆகிய ஆரம்ப அஸ்திரங்களை நீங்கள் வெற்றிகரமாக கையாள கற்றுக்கொண்டிருந்தீர்கள் என்றால், லெட் அஸ் மூவ் ஆன் டூ அஸ்திரம் நம்பர் 5, அதாகப்பட்டது, கண்டுஃபிகேஷன்.
இந்த அஸ்திரத்தை பற்றி சொல்வதற்கு முன்னால், ஆண்பாலின இயல்பை பற்றி உங்களுக்கு சொல்லியே ஆக வேண்டும். உங்களை சுற்றி இருக்கும் விலங்கினங்களை ஒரு முறை நன்றாக உற்று பாருங்களேன். அதே ஆடு, மாடு, நாய் , பூனை, கோழி, சேவல், கொசு, ஈ, எறும்பு, கரப்பாண்பூச்சி, தானே, இதில் புதிதாக பார்க்க என்ன இருக்கிறது? என்று அலுத்துக்கொள்ளாதீர்கள்....நீங்கள் அன்றாடம் பார்க்கும் இந்த விலங்குகளில் ஆண் எப்படி இருக்கிறது என்று கவனியுங்கள். உதாரணத்திற்கு பேடை கோழிக்கு தலைக்கு மேல் அழகான அந்த சிகப்பு கொண்டை இருக்காது, ஆனால் சேவலுக்கோ பளிச்சென்று ஒரு கொண்டை இருக்கிறதே. ஆண் அடுக்கு தான் தாடியும், வளைந்த வணப்பான கொம்புகளும் இருக்கும். காலை மாட்டுக்கு தான் முதுகில் பெரிதான அந்த வளைவு இருக்கும். ஆண் கரப்பாண்பூச்சு பெரிய ஆண்டனாவோடு திரியும்.....ஆக, யானை, சிங்கம், மான், மயில் என்று நீங்கள் எந்த விலங்கை எடுத்தாலுமே ஆண் பெண்ணை விட கொஞ்சம் கூடுதல் கவர்ச்சியாக இருக்கிறதே, அது ஏன் என்று யோசித்தீர்களா?
இந்த ஆண் விலங்குகள் இவ்வளவு கவர்ச்சியாக இருப்பது, யாரை கவர? இவை இப்படி கவர்ச்சியாக இருந்து தொலைப்பதினால் தானே வேடர்களின் கையில் சுலபமாக மாட்டிக்கொள்கின்றன. ஆக இந்த விலங்குகள் இவ்வளவு கவர்ச்சியாக இருப்பது அதுகளுக்கே ஆபத்தாகியும் போவதுண்டு. அப்படி இருந்தும் இந்த விலங்குகள் எல்லாம் இத்தனை எக்ஸ்டிரா ஃபிட்டிங்ஸ்ச்சுடன் சுற்றி வருகிறதென்றால், இதெல்லாம் யாரை கவர்வதற்கான முயற்சி?
இந்த கேள்வி தான் சார்லஸ் டார்வினுக்கும் வந்தது. அவரும் பல தரப்பட்ட விருகங்களை பரிசோதித்து பார்த்து விட்டு, கடைசியில் கண்டு பிடித்த உண்மை என்ன தெரியுமா? இந்த ஆண் விலங்குகள் எல்லாம் இப்படி ஓவராய் ஷோ காட்டியதே பெண் மிருகங்களை கவரத்தானாம்!
பெண் மிருகங்களை ஆண் மிருகங்கள் ஏன் கவர வேண்டும் என்று பார்த்தால், மிருக ஜாதியில் இப்படி ஒரு நடை முறை இருந்ததை கவனித்தார்கள். பெண் மிருகம் தேமே என்று மேய்ந்துக்கொண்டிருக்கும். இனபெருக்க காலம் வரும் போது அதன் உடலில் சில ஹார்மோன்கள் சுரக்கும். இந்த ஹார்மோன்களை மோப்பம் பிடித்துக்கொண்டு, ஆண் மிருகங்கள் அந்தப்புறம் வந்து சேர, பெண் மிருகமோ, உடனே ஆணோடு கூடிவிடாது. வந்து சேர்ந்த அத்தனை ஆண்களுக்குள் முதலில் ஒரு பல பரிட்சை நடக்கும். கொம்புள்ள மிருகங்கள் தலையோடு தலை மோதி, யார் பெரிய கொம்பன் என்று போட்டியிடும். இதை ரட்டிங் (Rutting) என்போம்.
மயில், குயில் மாதிரி ஆண் பறவைகளோ, தோகையை விரித்து ஆடி காட்டி, அல்லது, தேன்மதுர குரலில் பாடி காட்டி, தன் திறமையை வெளிபடுத்தும்.
இப்படி ஆண்பால், மோதலில் ஜெயித்து, தன் அருமை பெருமைகளை எல்லாம் கடை பரப்பி, தன் பராக்கிரமத்தை எல்லாம் பரைசாற்றியதும், தான், பெண்பால் அதனோடு கூடவே இசையும்.
ஆக ஆண் பாலின் அனைத்து பிரையாசைகளுமே, பெண் பாலின் பார்வையில் தான் , “பெரியவன்” என்று காட்டிக்கொள்ளவே செய்யபடுகின்றன. இப்படி எல்லாம் விஞ்ஞானிகள் புட்டு புட்டு வைக்க, சே சே, அதெல்லாம் மிருக நடத்தையாக இருக்கலாம், ஆனால் மனித ஆண்கள் போயும் போயும் பெண்ணை கவருவதற்காக இப்படி எல்லாம் நடந்துக்கொள்ளவே மாட்டார்களாக்கும் என்று பல பேர் ஆட்சேபனை தெரிவித்தார்கள்.
ஆனால் மானுடவியல்காரர்கள் உலகம் முழுக்கும் இருக்கும் எல்லா விதமான மனித நாகரீகங்களையும் போய் பார்த்து, மனித நடத்தையை ஒரு விசாலமான பார்வையில் ஆராய்ந்துவிட்டு, கடையில் கண்டுபிடித்தது என்ன தெரியுமா? மனிதர்களிலும் ஆண், தன் கவர்ச்சிகளை கடைபரப்புவது பெண்ணின் கவனத்தை ஈர்க்கத்தான்! பல ஆண்கள் இதை தெரிந்தே செய்கிறார்கள், சில ஆண்கள் தங்கள் அறியாமலேயே செய்துக்கொண்டிருக்கிறார்கள்.
நீங்களே உங்களை சுற்றி இருக்கும் ஆண்கள் அனைவரையும் கவனித்து பாருங்களேன். கதை கவிதை, இலக்கியம், சினிமா, அரசியல், விளையாட்டு, வர்த்தகம், வணிகம், அறிவியல், ஆண்மீகம், பென்பொருள், என்று எத்துறையை சேர்ந்த ஆணாக இருக்கட்டுமே, அவர்களின் எல்லா பிரயர்த்தனைகளுமே கடைசியில் பெண்களுக்காக தான் என்பது புரியும்! வயதிற்கு வந்த அந்த தருணம் முதல், நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஆண்ணில் பெருபாண்மை பொழுதும், பெண்ணிடம் எப்படி நன்மதிப்பு பெருவது என்ற போராட்டத்திலே தான் போகிறது.
இதற்க்காக, அவன் கல்வி கற்று அறிவாளி ஆகிறான், பொழுதுபோக்குகள் பல கொண்டு திறமைசாலி ஆகிறான், நேர்த்தியாக, நாகரீகமாக, தன் நடை உடை பாவனைகளை மெருகேற்றிக்கொள்ள பாடுபடுகிறான், வேலைக்கு போய் நிறைய சம்பாதிக்க முயல்கிறான். நான் எவ்வளவு சம்பாதித்திருக்கிறேன் பார், என்று காட்டிக்கொள்வதறக்காக விலை உயர்ந்த பொருட்களையும் வாகனங்களையும் வாங்கி, பிரயோகித்து, தன் அந்தஸ்த்தை அதிகரிக்க பார்க்கிறான்....எல்லாம் எதற்க்காக? பெண்களிடம் நற்சான்றிதழ் பெருவதற்க்காக தானே!
அதனால் ஸ்நேகிதிகளே, ஆண்களின் இந்த அவஸ்த்தைகளை புரிந்துக்கொள்ளுங்கள். அவன் இத்தனை பாடுபட்டு, தன் கவர்ச்சி விகித்தை கூட்டிக்கொள்ள முயலும் போது, நீங்கள் அவனை சட்டை செய்யாமல் போனீர்கள் என்றால், அவனுக்கு எவ்வளவு வலி உண்டாகும். ஒரு மனிதனின் மனம் புண் பட நீங்கள் காரணமாக இருக்கலாமா? அதனால் உங்களை கவர முயலும் ஆண், உங்கள் எதிரில் தன்னை விளம்பரப்படுத்திக்கொள்ள செய்யும் நடவடிக்கைகளை கவனியுங்கள். அவனை நீங்கள் ஒரு பெரிய ஹீரோவாக நினைக்க வேண்டும், உங்கள் மனதில் வேறு யாருக்குமே தராத பிரத்தியேக இடத்தை அவன் ஒருவனுக்கு மட்டுமே தர வேண்டும் என்றெல்லாம் அவன் ஆசை படுவதை புரிந்துக்கொள்ளூங்கள்.
வேறு எதையும் கவனிப்பதை நிறுத்திவிட்டு, அவனுக்கு உங்கள் முழு undivided attention னையும் கொடுங்கள். அவனை ஆசையாய் பாருங்கள். அவன் பேசுவதை கவனமாய் கேட்டு, அவன் காரியங்களை ஊக்குவித்து, உம் கொட்டு வையுங்கள். இப்படி நீங்கள் அவனை கண்டுக்கொண்டே இருந்தால் தான், “அப்பாடா, கடைசியில என்னை கவனிச்சிட்டா!” என்று அவன் பட்ட பாட்டிற்கெல்லாம் பலன் கிடைத்த ஆனந்தம் அவனுக்கு கிடைக்கும். இன்னும் இன்னும் உங்களை மகிழ்வித்து பார்க்கும் ஆசை அவனுக்கு அதிகரிக்கும்.
நீங்கள் நேசிக்கும் ஆணை இப்படி கண்டுஃபை செய்தீர்கள் என்றாலே போதும், சூரியன் பட்டதும், போஷாக்கேற்பட்டு, செழிப்பாய வளரும் மரம் மாதிரி, அவன் தன்நம்பிக்கையும், சுய மரியாதையும் அதிகரிக்கும். சந்தோஷம் பெருகும். உங்களை சந்தோஷப்படுத்தி பார்க்கும் ஆசையும் அதிகரிக்கும்!
ஆனால் ஒரு எச்சரிக்கை. பார்க்கும் எல்லா ஆண்களையும் கண்டுஃபை பண்ணி வைத்துவிடாதீர்கள். பிறகு உங்கள் மேல் மையல் கொண்டு, “நீ என்னோட இல்லைனா என்னால உயிர் வாழவே முடியாது” என்று ஓவர் செண்டிமெண்டில் உருக ஆரம்பித்துவடுவார்கள் நீங்கள் கண்டுஃபை செய்த அத்தனை ஆண்களூம். இதுவே அநாவசிய பிரச்சைனைகள ஏற்படுத்தி விடுமே.
அதனால் இந்த கண்டுஃபிகேஷன் எல்லாம் நீங்கள் விரும்பும் ஆண்களுக்கு மட்டும் தான். பிற ஆண்களை கண்டுஃபை பண்ண இந்தியாவில் மட்டும் நூறு கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கும் சந்தர்ப்பம் தந்தாக வேண்டுமே, அதனால் உங்கள் காதலன், கணவன், மகன், நண்பன், மருமகன், பேரன் மாதிரியான ஆண்களை மட்டும் கண்டுகொண்டு வையுங்கள். மீதமுள்ள மற்ற ஆண்களை கண்டுக்கொள்ள தான் அவரவர்க்கு என்று தாய் குலங்கள் இருப்பார்களே. அதனால் பேட்டை மாறி பரோபகாரம் செய்யாமல் உங்கள் எல்லைகளை உணர்ந்து இந்த கண்டுஃபிகேஷன் என்கிற அஸ்திரத்தை உபயோகித்து பாருங்கள்! ஆண்களை ஹாண்டில் செய்வது எவ்வளவு ஈஸி என்பது புரியும்!