Thursday, September 10, 2009

ஆண்களை ஹாண்டில் செய்ய: அத்தியாயம் 22

உங்களை முற்றுகை இடும் ஆண், பெண்களிடம் கண்ணியமாக நடக்க தெரிந்த ஜெண்டில்மேனா, அல்லது, மகளிர் மட்டும் இருக்கையில் முந்திக்கொண்டு அமரும் காட்டுமிராண்டியா; தித்திக்க தித்திக்க பேசி கவிழ்த்துவிடும் காசாநோவா ரகமா, அல்லது அளவாய் பேசி, இன்னும் கொஞ்சம் பேச மாட்டானா என்று ஏங்க வைக்கும் ரகமா; சொன்ன சொல்லை காப்பாற்றும் கற்புக்கரசனா; அல்லது வாய்ப்பந்தல் போட்டு நம்ப வைத்து கழுத்தறுக்கும் நயவஞ்சகனா; வேலை வெட்டி என்று இருக்கும் ஹீரோவா; வெட்டியாய் திரியும் ஸீரோவா; என்று கடந்த பல வாரங்களாக பல விஷயங்களை அனலைஸ் செய்திருப்பீர்கள்... அதன் தொடர்ச்சியாக இந்த வாரம், ஆணிடம் கட்டாயம் இருந்தே ஆக வேண்டிய ஒரு மஹா முக்கியமான குணத்தைப் பற்றி பார்ப்போம்.

அதென்ன அவ்வளவு மஹா முக்கியமான மேட்டர், என்கிறீர்களா? அது தான் துணிவு. பெண்களுக்கும் துணிவு உண்டு தானே, அப்புறம் இந்த குணம் ஆணிடம் இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன? என்று நீங்கள் கூட ஆட்சேபிக்கலாம்.

ஆனால், என்ன தான் வீரம் என்பது பெண்மைக்கும் பொதுவான விஷயமாக இருந்தாலும், ஆண்கள் வீரமாக இருப்பது தான் அவர்களுக்கு அழகு என்பதே சமூகக் கருத்தாக இருந்திருக்கிறது.

இந்த சமூகம் ஏன் இப்படிப்பட்ட கருத்துக்களை வைத்துக்கொண்டிருக்கிறது? என்கிறீர்களா? அது ஒரு பெரிய கதை. உங்களுக்காக ரொம்பச் சுருக்கமாய் சொல்ல முயற்சிக்கிறேன்... மனிதர்கள் தோன்றிய புதிதில், பெண்கள் தான் வேட்டைக்கெல்லாம் போய்க் கொண்டிருந்தார்கள். இது பெரிய அதிசயமெல்லாம் இல்லை. இயற்கையில் எல்லா ஜீவராசியிலுமே பெண் தான் ஆணைக் காட்டிலும் பெட்டர் ஹண்டர். சிங்கமாகட்டும், புலியாகட்டும், கொசுவாகட்டும், பேனாகட்டும், சகலவிதமான ஜீவராசியிலும் பெண் தான் ஆணைக் காட்டிலும் அதிக வீரியத்துடன் வேட்டை ஆடும். காரணம் பெண் தனக்கு மட்டும் வேட்டை ஆடுவதில்லை, தன் பிள்ளைகளுக்கும் சேர்த்தல்லவா வேட்டை ஆடுகிறாள். அதனால் இயற்கை, பெண்களுக்கு கூடுதல் வேட்டுவத்திறனை கொடுத்தருளியது இதனாலேயே... ஆண் விலங்கைவிட, சட்டென அசைவுகளை உணரும் விதமாக விழித்திரையும், வாசனைகளை கபால் என கிரகித்துக்கொள்ளும் நாசிநரம்புகளும், நுணுக்கமான ஒலிகளைக் கூட உடனே உணரும் செவிநரம்புகளும், அவ்வளவு ஏன்... விதம் விதமான சுவைகளை உணரும் நாக்கும், தொடுகையில் பல சமிக்ஞைகளை உணரும் சருமமும் பெண் விலங்கிற்கே உண்டு. இதனால் தான் மனிதர்களிலும் பெண்தான் இந்த ஐந்து புலன்களையும் அதிகமாக உபயோகிக்கிறாள்.

இப்படி இவள் புலன்கள் எல்லாமே செம்ம ஷார்ப்பாய் இருப்பதினாலேயே, பெண் ஆணைவிட தேர்ந்த வேட்டுவச்சியாக இருந்தாள். நிறைய மாமிசம் கொன்று தின்று, ஆதிமனித பெண்கள் ஸ்பஷ்டமாய் வளர, இதன் பக்க விளைவாய் இவர்கள் சுமந்த மனித குட்டிகளும் நன்றாக புஷ்டியாக வளர்ந்தன. இப்படி புஷ்டியாய், பெரிய சைஸாகிவிட்ட மனித குட்டிகளை பெற்றெடுக்கவே,இயற்கை தன் பரிணாம வளர்ச்சி முறைப்படி மனுஷியின் இடுப்பை அகலமாய் விரியச் செய்தது. இடுப்பெலும்பு இப்படி விரிந்ததால் அதனோடு கூடியிருந்த தொடை எலும்பு புரண்டு போனது.

இப்படி தொடை எலும்பு புரண்டு போனதால் மனிதப் பெண்களால் முன்பைப் போல லாவகமாய் ஓடவோ, நடக்கவோ, மரம் ஏறவோ முடியாமல் போனது. அதுவும் போக, பெரிய பாப்பாவை பெற்று சோர்ந்து போனவளால் என்னத்தை பெரிதாய் வேட்டை ஆடிவிட முடியும்? அதனால் காலப் போக்கில் மனிதப் பெண்கள் நேரடியாக வேட்டைக்குப் போவதை நிறுத்திக்கொண்டார்கள். தனக்காக திறமையாக வேட்டையாடும் ஆணாகப் பார்த்து தேர்ந்தெடுத்து,அவனை கொண்டு தன் ஜீவனத்தை நடத்தும், Second Hand Survival முறைக்கு மாறினார்கள் மனிதப் பெண்கள் எல்லாம்.

இது சரியான போங்கா இருக்கே? இந்த பெண்கள் எப்படி ஆண்களின் உழைப்பின் மீது இப்படி ஓசிச் சவாரி செய்யலாம், இது ஞாயமே இல்லை, என்று நீங்கள் கூட வாதிடலாம்..... ஆனால் இன்னொரு விஷயமும் இதில் முக்கியமாக கவனிக்க வேண்டும்... பிள்ளைப்பேறு சமாசாரத்தில், ஆணின் பங்கு மிக சொற்பமே. சில மில்லி ஸ்பெர்ம், சில விநாடிகள், சில அசைவுகள், அவ்வளவு தான். இந்த குறைந்த முதலீட்டிலேயே அவன் குலத்தைத் தழைக்க செய்துவிட முடியும். ஆனால் அதே பிள்ளைப் பேற்றில் பெண்ணின் முதலீடோ, ரொம்பவே அதிகம். ஒரு கருமுட்டை, ஒரு கருப்பை, பல லிட்டர் ரத்தம், பல விதமான ஹார்மோன்கள், பத்து மாத சிரமம், அதன் பிறகு பிராணனே போகும் படியான ஒரு பிரசவம், அதன் பிறகும், தொடர்ந்து பாலூட்டல், பிள்ளைப் பராமரிப்பு, என்று ஒரே ஒரு குழந்தையை வளர்க்க ஒரு பெண் தன் ஒட்டுமொத்த வாழ்க்கையையுமே செலவிட வேண்டியுள்ளது.

இப்படி பிள்ளைப் பேற்றில் பெண்ணின் பங்களிப்பு மிக அதிகம் என்பதாலேயே, ஒருவேளை பெண்கள் நொந்து போய், குழந்தையைப் புறக்கணித்து விட்டாலோ, அல்லது வேறு ஆணுடன் அடுத்த கட்ட உறவுக்கு மாறினாலோ, இந்த முதல் ஆணின் குலம் தழைக்காமல் போய்விடுமே. இப்படி தன் வித்து பிழைக்காமல் போய்விடும் ஆபத்து ஏற்பட்டுவிடக்கூடாது என்று தான் பொறுப்புள்ள அப்பாக்கள் எல்லாம், பிள்ளைப் பராமரிப்பில் தங்கள் பங்களிப்பை இன்னும் அதிகமாகச் செய்ய முற்படுகிறார்கள்.

இது தான் இயற்கையின் ஏற்பாடு என்றால் பெண், தன் வாழ்க்கையையும் பிள்ளைகளின் வாழ்க்கையையும் சுமுகமாக ஆபத்தின்றி கழிய வேண்டுமானால் அவள் எந்த மாதிரியான ஆணைத் தேர்ந்தெடுத்தால் காரியம் கைகூடும்? சதா சுறுசுறுப்பு, வேட்கை, வேகம், வீரம், வீரியம், துணிவு என்றே இருக்கும், எதற்கும் தயங்காத அசகாய சூரனை தேர்ந்தெடுத்தால் அவளுக்கு நன்மையா? அல்லது எப்போதுமே சோம்பித்திரியும், ஆபத்து என்றாலே அஞ்சி ஒளியும் சோப்லாங்கியை தேர்ந்தெடுத்தால் அவளுக்கு நல்லதா?

ஆபத்துனா எனக்கு அல்வா மாதிரி என்று அஞ்சாமல் களமிறங்கும் ஆசாமி தான் நிச்சயம் அவளுக்கு நன்மை செய்வான். இப்படி ஒரு வீரனைத் தேர்ந்தெடுத்தால்தானே, வேட்டை, உணவு ஆகியவை மட்டும் இன்றி, எதிரியின் தாக்குதல், விலங்கு அச்சுறுத்தல், இயற்கை சேதம் என்று எந்த வித ஆபத்து நேர்ந்தாலும் இந்தப் பெண்ணுக்கும் அவள் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு கிடைக்கும்?அதனால் தான் காலம் காலமாக பெண்கள் வீரம் ஒழுகும் ஆண்களைக் கண்டாலே உடனே காதலால் கசிந்துருகிப் போய் விடுகிறார்கள்.

இப்படி வீரம் நிறைந்த ஆண்களைக் கண்டாலே, பெண்களின் உடம்பில் எக்கச்சக்க ஹார்மோன்கள் பெருக்கெடுத்து ஓடுகின்றன. அதேபோல, இப்படி தன்னைக் காதலுடன் பார்க்கும் பெண்ணின் பக்கம் வந்தாலே நிஜ ஆண்களின் உடம்பிலும், ஏகத்திற்கு வீர ஹார்மோன்கள் பீறிட்டு ஓடுவதால், கண்ணின் கடைப்பார்வையை பெண்கள் காட்டிவிட்டால், மண்ணில் குமரருக்கு மாமலையும் ஓர் கடுகாம் என்கிற நிலை தான்!

அதற்காக, எங்கே ஆபத்து? என்று சதா வேண்டாத வம்பை எல்லாம் விலைகொடுத்து வாங்கும் அசட்டு வீரம் கொண்ட அல்டாப்பு பேர்வழியை இந்தப் பெண் தேர்ந்தெடுத்தால், இவன் நிச்சயம் அல்ப ஆயுசிலேயே போய்ச் சேர்ந்து விடுவானே! அதனால், ஜாக்கிரதையாய் யோசித்து, அவசியமானபோது மட்டும் தன் முழு வீரத்தையும் காட்டி காரியத்தை ஜெயிக்கும், Calculated Risk எடுக்க தெரிந்த விவேகமான வீரனாய் பார்த்து தேர்ந்தெடுப்பதுதான் என்றைக்குமே Safe.

பல சமயத்தில் பெண்கள், போனாப் போகுது, இவனை விட்டா வேற எவனும் கிடைக்கலைன்னா? என்ற பயத்திலோ, போகப் போக சரியா போயிடும் என்ற நப்பாசையிலோ, அதெல்லாம் நான் திருத்தி சரியாக்கிடுவேன் என்கிற ஓவர் கான்ஃபிடன்ஸிலேயோ, வீரம் குறைவாக இருக்கும் ஆண்களுக்கு வாழ்க்கைப் பட்டு போகிறார்கள். ஆனால் போகப் போக அவன் சுபாவமே இவர்களுக்கு பெரிய சுமையாகிப் போக, போயும் போயும் உன்னை மாதிரி ஒரு பயந்தாங்கொள்ளியை கட்டித் தொலைச்சேனே... என்று சதா பாவம் அந்த ஆசாமியைப் போட்டு வார்த்தைகளாலேயே விரை நீக்கம் செய்துவிடுகிறார்கள். இதனால் இந்த தம்பதியினருக்கு மட்டும் அல்ல, குழந்தைகளுக்கும் கூட நிம்மதியே போய் விடும் சூழல் வரலாம். அதனால் சிநேகிதிகளே, ஆரம்பத்திலேயே உஷாராய் இருங்கள். வீரமுள்ள ஆணாய்ப் பார்த்து தேர்ந்தெடுங்கள். அப்படி ஒரு ஆண் கிடைக்காவிட்டால் இட்ஸ் ஓ.கே... கிடைக்கும் வரை ஜாலியாய் லேடி பாச்சுலர் லைஃப்பை என்ஜாய் பண்ணுங்க.

ஆகையால் சிநேகிதிகளே... உங்களுக்கு பெட்டிஷன் போடும் ஆணின் வீரம் + விவேகம் ஸ்கோரை கவனியுங்கள். ஓரளவிற்கு வீரமும், நிறைய விவேகமும் இருக்கிற ஆணாய் இருந்தால், ஓகே, ப்ரோசீட்!

2 comments:

பூமகள் said...

அருமையான கட்டுரை டாக்டர்.

பெண்கள் தான் முதன் முதலாக வேட்டைக்குச் சென்றார்கள் என்பது எனக்கு புதுத் தகவல். நன்றி.

சிறு ஐயம். தலைப்புக்குச் சம்பந்தமில்லாமல் இருந்தாலும் கேட்டத் தோன்றுவதால் கேட்கிறேன்.

சிலர், பெண்கள் கையில் உலகம் சென்று கொண்டிருக்கிறதா? என்ற கேள்விக்கு பதிலாக,

ஆண்களை விட எந்த செயலையும் பெண்களால் திறம்பட செய்ய இயலாது. அவர்களின் மூளை வடிவமைப்பு முக்கிய காரணம் என்றும் சொல்கிறார்கள். அதாவது, பெண்களின் குணாதிசியங்களையும் ஆண்களின் குணாதிசியங்களையும் ஆராயும் போது, புள்ளியியல் "normal of the bell curve" ஆண்களுக்கு பெண்களை விட அதிகமாக இருப்பதாகச் சொல்கிறார்கள்.

ஆக, பெண்களால் ஆண்களைப் போல எல்லா வேலைகளையும் திறம்படச் செய்ய இயலாதா??

அறிவியல் ரீதியான மூளை வடிவமைப்பைக் காரணம் காட்டி பெண்கள் பலவீனமானவர்கள் என்று சொல்வது சரியா??

உங்களின் மேலான கருத்தை எதிர்பார்க்கிறேன்.

நன்றிகளுடன் உங்கள் தோழி,
பூமகள்.

கிட்டிபுல்லு said...

மிக நேர்த்தியான கட்டுரை,கண்டிபாக ஆண்களும் படிக்க வேண்டும்.ஆனா முதல் பாராவில் சொன்னதுபோல் ஆண்களில் இத்தனை ரகமா????"Total damage"