Friday, January 23, 2009

புதிதாய் பெரியார்!

யோசித்து யோசித்து பார்த்தேன், எனக்கு ஒரு விஷயம் மட்டும் புரியவே இல்லை. நான் ஒன்றும் அவ்வள்வு மக்கு இல்லையே, வெளிஉலக பரிச்சையம் கொஞ்சமாவது உண்டு, நிறைய நபர்களோரு பேசுகிறேன், நிறைய புத்தங்கள் படிக்கிறேன், அப்புறம் எப்படி இத்தனை கழுதை வயதாகியும் பெரியாரை பற்றி இத்துனூண்டு தான் தெரிந்திருக்கிறது?

சரி, தமிழ் கொஞ்சம் தகராறு, அதனால் லோக்கல் பத்திரிக்கைகளை தவிர பெரிதாய் மொழிசார் புத்தகங்களை படித்ததில்லை. ஆங்கிலத்தில் இத்தனை படித்திருக்கிறேனே, அப்புறம் ஏன் பெரியாரை பற்றி எனக்கு தெரியவில்லை. அது சரி ஆங்கில புத்தகங்களில் தமிழர்களை பற்றி எழுத யாருக்கு பெரிய அக்கறை இருந்துவிடபோகுது?

சரி, வெளி புத்தங்களை படிக்கவில்லை என்றாலும் பள்ளிக்கூடத்தில் ஓரளவு உருப்படியாக படித்த கேஸ் தானே. ஏன் என் பள்ளிக்கூட பாடங்களில் பெரியார் என்ற ஒரு கேரக்டரை பற்றி எதுவுமே சொல்லித்தரவில்லை. சீ.பி, எஸ். சி சிலபஸ் கொண்ட பள்ளிக்கூடத்தில் ஹிந்தி
இரண்டாம் மொழியாய் கொண்டு படித்ததினால் பெரியாரை கோட்டை விட்டேனோ?

சரி, பள்ளிக்கூடத்தில் தான் சொல்லித்தரவில்லை, வீட்டிலாவது சொல்லி இருக்கக்கூடாதா என்றால் அம்மாவும் பீட்டர் பரம்பரை என்பதால் அவருக்கே தமிழ் கலாச்சாரமும் வரலாறும் பெரிதாய் தெரியாது. அப்பா பிஸி, இது பற்றியெல்லாம் பேச அவருக்கும் நேரமில்லை, வீட்டு பெரிசுகள் பெரும்பாலும் ஒரே பழம் பெருமை பேசித்தீர்ப்பார்கள் என்பதால், அவர்கள் புராணத்தை கேட்கத்தான் முடியுமே தவிர ஊர் விஷயம் எதுவும் வெளி வராது. ஆக வீட்டிலும் இது பற்றி சொல்வாரில்லை.

தோழிகள் எல்லோரும் எப்போதுமே அழகு சாதனம், ஆண்கள் பிரதாபம், மிஞ்சி மிஞ்சி போனால் சப்ஜெக்ட்! தோழர்களோ வெறும் விளையாட்டு, படிப்பு, பெண்கள், வாகனங்கள், எதிர்காலம், பிளஸ் வெட்டி பேச்சு....இப்படியே இருந்ததால் பெரியார் என்ற ஆசாமியை பற்றி பெரிதாய் எதுவும் தெரியாமலேயே படிச்சு, பட்டமெல்லாம் வாங்கியும் விட்டேன், அதுவும் ஈ, வே, ரா பெரியார் சாலையில் உள்ள மருத்துவ கல்லூரியிலேயே!

நிறைய ரேடியோவும், டீ வியும், செய்தித்தாள்களும் சிறு வயதிலிருந்தே கேட்டு, பார்த்து, படித்ததுண்டு தான், அவற்றிலும் பெரியாரை பற்றி எதுவுமே கேள்விபடவே இல்லை. பெரியார் காலத்திற்கு பிறகு பிறந்ததினால், அவரது இன்ஃப்லூயென்ஸ் இல்லாமலே போய் விட்டதா எனக்கு?

அதெப்படி முடிந்தது, இத்தனை ஆண்டுகள் சென்னையில் வாழ்ந்து, செண்ட்ரலில் படித்து, திருவல்லிக்கேணியில் குப்பை கொட்டிய எனக்கு பெரியாரை பற்றி தெரியாமலே எப்படி இருக்க போச்சு? நினைக்கவே மஹா அவமானமாகவும், வெட்கமாகவும் இருந்தது எனக்கு.

ஆட்சரியம் தாளாமல், வீரமணி அவர்களிடம் கேட்டேன், “அதெப்படி சார், இத்தனை வருஷமா, இப்படி ஒரு மனிதன் வாழ்ந்து இவ்வளவு தொண்டு ஆற்றியதை பற்றியே தெரியாமல் காலத்தை ஓட்டி இருக்கேன். என் நிலைமையே இப்படின்னா அப்ப மத்தவங்க கதி?”

“பெரியாரை பத்தி எங்களை தவிர யாரும் பெரிசா பேசுறதில்லைம்மா” என்றார் வீரமணி, “ஐயாவை எல்லாருமே பிராமண எதிர்ப்பாளரா, கடவுள் மறுப்பாளரா தான் பேசுறாங்களே தவிர அவரோட மக்கள் தொண்டை யாரும் தெரியபடுத்துறதே இல்லை. உங்களுக்கு தெரியுமா, இனிக்கு ஒரு பெண்ணா நீங்க மருத்துவம் படிச்சு, இப்படி ஆணுக்கு சமமா வாழ காரணமே பெரியார் தான். பெரியார் படம் பாத்திருப்பீங்களே.” (நான் எங்கே அதை எல்லாம் பார்த்தேன்! அதற்கப்புறம் வீ சீ டீ வாங்கி போட்டு பார்த்தேன் என்பது வேறு கதை!) ”அவரை பத்தி உங்களுக்கு தெரியலன்னா என்ன, அவர் ஆசை பட்டமாதிரியே, உங்களை மாதிரி பெண்கள் இனிக்கு தமிழ் நாட்டுல இருக்குறதே பெரியாருக்கு பெரிய வெற்றி தானே?” என்றார்.

என்னது, என்னை மாதிரி ஒரு பெண் இனிக்கு தமிழ் நாட்டுல உருவாகக்காரணமே பெரியார் தானா? ஐ! அப்ப பழி எல்லாம் பெரியார் மேல தானா! என்று ஹாசியமாய் யோசித்தாலும், அப்படி என்ன செய்தார் இந்த பெரியார்? யாரிவர்? ஏன், எதற்காக, எப்படி, இதை எல்லாம் செய்தார்? இதை எல்லாம் செய்ததால் அவருக்கு என்ன கிடைத்தது? what is the story behind this man? என்று தீவிரமாய் பெரியார் என்கிற கேரக்டரை சைக்கோஅனலைஸ் செய்ய ஆரம்பித்துவிட்டேன் நான்!

4 comments:

இராம்/Raam said...

பெண்கள் பெரியாரை பற்றி படிக்க ஆரம்பித்தால் அவருடைய "பெண் ஏன் அடிமையானாள்" புத்தகத்தை தான் பரிந்துரைப்பாங்க... :)

தமிழ் ஓவியா said...

மருத்துவர் அம்மா அவர்களுக்கு,
வணக்கம்.

மிகச் சிறப்பாக அதுவும் உண்மையை அப்பட்டமாக எழுதியுள்ளீர்கள்.

எல்லாம் தெரிந்தவர்களாகக் காட்டிக் கொள்பவர்கள் மத்தியில் உண்மையை எழுதியதின் மூலம் எங்களின் பார்வையில் உங்களின் மீதான மதிப்பு பல மடங்கு உயர்ந்து விட்டது.

//அப்படி என்ன செய்தார் இந்த பெரியார்? யாரிவர்? ஏன், எதற்காக, எப்படி, இதை எல்லாம் செய்தார்? இதை எல்லாம் செய்ததால் அவருக்கு என்ன கிடைத்தது? what is the story behind this man? என்று தீவிரமாய் பெரியார் என்கிற கேரக்டரை சைக்கோஅனலைஸ் செய்ய ஆரம்பித்துவிட்டேன் நான்!//

உங்களின் தேடல் வெற்றி பெறட்டும்.

இயலுமானால் எங்களது வலைப்பூவான

http://thamizhoviya.blogspot.com

- யைப் படிக்க வேண்டுகிறேன்.

தொடர்ந்து எழுதவும்.
மிக்க நன்றி.

Muruganandan M.K. said...

பெரியாரை பலரும் யானை பார்த்த குருடர்கள் போல பகுதி பகுதியாகத்தானே பார்க்கிறார்கள்.
தமிழர்கள் மனத்தில், வாழ்வில் பெரு மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன என்றால் அதற்கு காரணம் அவர்தானே.

பிச்சைப்பாத்திரம் said...

பிரபல உளவியல் மருத்துவராய் இருந்தும் [தொலைக்காட்சியில் வந்திருக்கிறீர்களே, :-)] அதற்கான அலட்டல்கள் எல்லாம் இல்லாமல் உங்கள் பதிவு மிகுந்த தோழமையுடனும் அறியாததை அறிந்து கொள்ளும் ஆர்வத்துடனும் காணப்படுகிறது.