Friday, April 24, 2009

ஆண்களை ஹாண்டில் செய்ய: அத்தியாயம் 15

என்ன சிநேகிதிகளே, ஆண்களை ஆன் ஆஃப் செய்யும் சிக்னல் சிஸ்டமான இன்விடேஷன் டிஸ்ப்ளேக்களை சரியாகக் கையாளப் பழகிக்கொண்டீர்களா? நீங்கள் உறவுக்காக ஊக்குவிக்க விரும்பும் ஆணின் எதிரில் இ.விக்களை அள்ளி விடுவதும், ஒத்து வராது என்று ஒதுக்க முயலும் ஆண்களிடம் இ.விக்களை அடக்கி வாசிப்பதுமாய், போன வார ஹோம் வொர்க்கை சரியாக செய்து பழகி இருந்தீர்கள் என்றால், லெட் அஸ்கோ டு அடுத்த லெசன்.

இந்தப் பாடத்தை கைனெஸ்திக்ஸ் என்போம், அதாவது அசைவுகளின் அறிவியல். போயும் போயும் அசைவுகளில் என்னத்த பெரிய அறிவியல் இருந்துவிட போகிறது என்று நீங்கள் இளக்காரமாகக் கூட நினைக்கலாம், ஆனால் மேட்டர் என்ன தெரியுமா? மனித நடவடிக்கை ஒவ்வொன்றின் பின்னாலும் பெரிய பெரிய அறிவியல் சமாசாரங்கள் ஒளிந்திருக்கின்றன.

மனிதர்களை விலங்கியல் ரீதியாக சோஷியல் மிருகங்கள் என்றுதான் பாகுபடுத்துகிறார்கள். அறிவுக் கூர்மை அதிகமுள்ள பிராணிகளான, யானை, டால்ஃபின், குரங்கு, சிம்பான்சி, கொரிலா, பொனோபோ மாதிரியானவையும் சோஷியல் மிருகங்கள்தான். இந்த வகை மிருகங்களில் ஒரு விசேஷம் என்ன தெரியுமா? இவற்றுக்கு எல்லைகள் தெரியும். இவைகளுக்கு ``இது என் ஏரியா, இங்கே எனக்கு மட்டும் தான் இடம்'' என்கிற பிரதேச மனப்பான்மை அதாவது டெரிடோரியல் பிகேவியர் உண்டு.

மனிதர்களுக்கும் இந்த பிரதேசக் குணம் உண்டு. எப்படித் தெரியுமா? நம்மை அறியாமலேயே நம்மைச் சுற்றி நான்கு எல்லைக் கோடுகளை வைத்திருக்கிறோம் நாம். அதில் முதலாவது பப்ளிக் இடைவெளி என்கிற Public Distance. முற்றிலும் அன்னியர்களுடன் பேசும் போது நான் விட்டு நிற்கும் இடைவெளி தான் இந்த பப்ளிக் இடைவெளி. இந்த எல்லை நின்று ஆரம்பத்தில் பேசும் மனிதரை நமக்கு பிடித்துப் போனால், அல்லது அவரை நாம் நம்ப ஆரம்பித்தால், அடுத்து நாம் அனுமதிக்கும் நெருக்கம் தான் சோஷியல் இடைவெளி, என்கிற Social Distance. அதாவது, கொஞ்சம் பரிச்சயமான நபர்களுடன் பேசிக் கொள்ள என்று நாம் உபயோகிக்கும் நெருக்கம்.

இதற்கு அடுத்து வருவதுதான் பர்சனல் இடைவெளி என்கிற அருகாமை. இது நமக்கு மிகவும் நன்றாகப் பரிச்சயமான, மிகவும் நம்பகத்திற்கு உண்டான நபர்களை மிக அருகில் வைத்து நாம் உறவாடும் இடைவெளி.

இந்த எல்லையைத் தாண்டிய பிறகு வரும் மிக நெருக்கமான டைட் குளோசப் தான் இண்டிமேட் இடைவெளி Intimate Distance, என்கிற அன்னியோன்னியம். இது தாய், சேய், நண்பர்கள், காதலர்கள், வாழ்க்கைத் துணைவர்கள் ஆகிய உரிமையானவருக்கு மட்டுமே உள்ள நெருக்கம்.

எல்லா மனிதர்களுக்கும் இந்த நான்கு இடைவெளிகளுமே உண்டு. நம்மை அறியாமலேயே நாம் எல்லோருமே அநிச்சையாக கடைப்பிடிக்கும் சமூக விதி இது. நமக்கு அதிகம் தெரியாதவர் என்றால் இரண்டு அடி தள்ளி நின்று பேசுவோம். கொஞ்சம் தெரிந்தவர் என்றால் ஒரு அடி கிட்டேயும் போய் பேசுவோம். ரொம்பத் தெரிந்தவர் என்றால் முகத்திற்குப் பக்கத்திலேயே போய், நின்று பேசுவோம். மிக மிக நெருக்கமானவர் என்றால் மூச்சுக்காற்று அவர் மீது படும் அளவிற்கு நெருங்கிப் போய் பேசுவோம்.

அதெல்லாம் சரி, இதை வைத்து ஆண்களை எப்படி ஹாண்டில் செய்வதாம் என்று தானே கேட்கிறீர்கள். இந்த கைனெஸ்திக்ஸ் தகவல் உங்களுக்கு இரண்டு விதத்தில் உதவும்.

ஒன்று, ஆண் உங்கள் பிரதேசத்தினில் எப்படி பிரவேசிக்கின்றான் என்பதை வைத்து அவன் உள் நோக்கத்தை நீங்கள் புரிந்துகொள்ள முடியும். அறிமுகமானதும் பவ்யமாய் உங்கள் எல்லைக் கோடுகளை மதித்து எட்ட நின்று பேசுகிறான் என்றால் ஓ.கே. நீங்கள் அனுமதித்து, அல்லது ஊக்குவித்ததினால் பக்கத்தில் வந்து நின்று பேசினால் என்றாலும் ஓ.கே.
ஆனால் சினிமா ஹீரோ அறிமுக காட்சியிலேயே ஹீரோயினை அப்படியே கட்டிப்பிடித்து ஏதோ பெரிய ஆபத்திலிருந்து காப்பாற்றும் பாணியில் எவனாவது முதல் சந்திப்பிலேயே உங்கள் இண்டிமேட் இடைவெளிக்குள் பிரவேசித்து, அவன் மூச்சுக்காற்று உங்கள் மேல் படும் அளவிற்கு மிகச் சமீபமாய் வந்து நின்றால், உஷார், நிஜமான ஆபத்திலிருந்து காப்பாற்றதான் அப்படிச் செய்தான் என்றால், இட்ஸ் ஓகே. ஆனால் இதுதான் சாக்கு என்று காய்ந்த மாடு மாதிரி உங்கள் மேல் பாய்கிறான் என்றால், நாட் அட் ஆல் ஓகே!

சில ஆண்கள் அறிமுகமாகும் போது சமர்த்தாய் தங்கள் எல்லை அறிந்து தள்ளி நின்று, ``சே இவன் நல்ல பையன்ப்பா!'' என்ற சர்டிஃபிகேட்டை எல்லாம் வாங்கிக்கொள்வார்கள். பிறகு வேறு ஏதாவது சந்தர்ப்பத்தில், நைசாக எல்லை தாண்டி வந்து அத்து மீற முயல்வார்கள். ``தெரிந்து செய்கிறானா, தெரியாமல் செய்துவிட்டானா?'' என்று நீங்களே கூட குழம்பிப்போவீர்கள்! ஆனால் விஷயம் இது தான், நீங்கள் அந்த நெருக்கத்தை அனுமதித்திராவிட்டால், அவ்வளவு அருகாமை உங்களுக்கு அசவுகரியமாக இருந்தால், நோட் தட் பாயிண்ட், அவன் எல்லை தாண்டிவிட்டான் என்று அர்த்ம். அது தெரிந்தா தெரியாமலா என்பது வேறு விஷயம். அதைப் பற்றி யோசித்து முடிவெடுக்க எல்லாம் நேரத்தை வீணடிக்காமல், உடனே விலகிக்கொள்ளுங்கள். ``கொஞ்சம் ஒதுங்குங்க'' என்று தெளிவாக சொல்லுங்கள் ``என்னடா பண்ணுற நீ, முண்டம்?'' என்று ஒருமுறை முறையுங்கள். நீங்கள் அந்த நெருக்கத்தை விரும்பவில்லை என்பதை அந்த ஆசாமி புரிந்துகொள்வான்.

அதையும் மீறி,மீண்டும் மீண்டும் எவனாவது உங்கள் இண்டிமேட் இடைவெளியை நெருங்கிக்கொண்டே இருந்தான் என்றால், இது தான் செக்ஷுவல் ஹராஸ்மெண்ட் எனப்படும் பாலியல் துன்புறுத்தல். Public Distance என்பதை பெரிய குற்றமாய்த்தான் இந்திய குற்றவியல் பிரிவு கருதுகிறது. அதனால் உங்கள் பள்ளியில், கல்லூரியில், வேலை இடத்தில் உள்ள தலைமை அதிகாரியிடம் போய்ப் புகார் கொடுங்கள். இந்த தலைமைப் பொறுப்பு வகிக்கும் நபரே இப்படி எல்லை மீறுகிறாரா, பெண்கள் எல்லோரும் சேர்ந்து போர்க் கொடி தூக்குங்கள்! இது ஆண் எல்லை மீறும் போது எடுக்கும் நடவடிக்கை.

இரண்டு, ஆனால் சில சமயத்தில் பெண்கள் அறிந்தோ அறியாமலோ, தங்கள் எல்லைக்கோடுகளை மீறி ஆண்களிடம் பழகிவிடுவது உண்டு. நண்பன், சகா, சகோதரன், மகன், ஊழியன் என்று எந்தவிதமான ஆரோக்கியமான உறவாக இருந்தாலும் சரி, இது போன்ற புற உறவுகள் பர்சனல் இடைவெளி வரை மட்டுமே இருக்க முடியும். இதை மீறி, அபரிமிதமான அன்பின் கொப்பளிப்பில், மிக அருகில் போய், உங்கள் மூச்சு, அந்த ஆணின் மீது படும்படி நீங்கள் இடைவெளியை குறைத்துக் கொண்டால், அது அநாகரிகம் மட்டும் அல்ல, பெரிய ஆபத்தும் கூட.

இதில் என்ன பெரிய அநாகரிகம், நட்பில் இதெல்லாம் சகஜம் தானே. என்றோ, இதில் என்ன ஆபத்து என்றோ நீங்கள் நினைக்கலாம். ஆனால் விஷயம் என்ன தெரியுமா? தகுந்த இடைவெளி தாண்டி நீங்கள் நெருங்குவதே, அந்த ஆணைத் தூண்டி, ஊக்குவிப்பதாகும், குழந்தை, காதலன், கணவன் ஆகிய மூன்று நிலைகளைத் தவிர வேறு எந்த நிலையில் உள்ள நபர்களும் இந்த நெருக்கத்தை அனுபவிப்பது ஆபத்தே.
உங்களைப் பொறுத்தவரை, ``சும்மா லேசா சாய்ந்தேன், முகம் கிட்ட வந்துடுச்சு. இதெல்லாம் ஒரு தப்பா?'' என்று நீங்கள் என்னதான் விளக்கம் கொடுத்தாலும், ஒரு ஆணின் மூளை வடிவமைப்பு என்ன தெரியுமா? ``இத்தனை அருகில் ஒரு பெண்ணின் முகத்தைப் பார்த்தால், நீ உடனே மோகம் கொள்வாயாக'' என்ற ரீதியில் தான் அவன் நரம்புமுனைகள் இயங்குகின்றன. அதற்கு அவன் பொறுப்பல்ல. இப்படி அவன் நரம்பு வடிவமைக்கப்பட்டிருப்பது தெரிந்தும், வேண்டுமென்றே நீங்கள் அவனை நெருங்கி ஆசை காட்டுவது அநாகரிகம் தானே.

அதனால் தான் எல்லாக் கலாச்சாரங்களிலும், தாயும் மகனும் என்றாலும் கூட, வயதிற்கு வந்த பையன் தாயை ரொம்ப நெருங்குவதும், அவள் பக்கத்தில் படுப்பதும், அவள் முந்தானையே கதி என்று இருப்பதும் மிக அதிகபட்ச தடைக்குள்ளாகின்றன. அதே போல், வயத்திற்கு வரும் நிலையிலுள்ள மகளைத் தகப்பன் நெருங்குவதும் தவறாக கருதப்படுகிறது.

பெற்றவர்களுக்கும் பிள்ளைக்குமே போதிய இடைவெளி விட்டுப் பழகுவது தான் நாகரிகம் என்கிற போது, மற்ற உறவுகளைப் பற்றிச் சொல்ல வேண்டுமா?

அதனால் ஆண்களை ஹாண்டில் செய்ய கற்றுக்கொள்ள விரும்பும் ஸ்நேகிதிகள், ஆண் பெண் உறவில் நீங்கள் சரியான எல்லைகளை கடைப்பிடிக்கிறீர்களா என்று கவனியுங்கள். உங்களுடன் பரிச்சயம் கொண்ட ஆண்கள் உங்கள் எல்லைகளை மதித்துப் பழகுகிறார்களா என்று பாருங்கள். புற உறவுகளில் இந்த எல்லை நிர்ணயம் ரொம்பவே முக்கியம். ஆனால் அகவுறவில்... எல்லை தாண்டி தீவிரவாதம் செய்வதே சுவாரசியம். அதைப் பற்றி எல்லாம் அடுத்த சிநேகிதியில்!

3 comments:

kayaljram said...

are public distance and flight distance, one and the same ?

Anonymous said...

Good one.

revathi said...

really fantastic!.. thank U madam.