Thursday, June 25, 2009

எதிராஜ் கல்லூரியில்





எதிராஜ் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவிகளுகான ஓரியண்டேஷன் வகுப்பு ஜூன் 24, 25 ஆம் தேதி நடைபெற்றது. பிரின்சிபால் முனைவர் தவமணி அவர்கள் ஏனோ என்னை அழைத்து ஓரியெண்டேஷன் கொடுக்கும் படி வேண்டி, விரும்பி கேட்டுக்கொள்ள(!), இரண்டு மணி நேரத்திற்கு மாணவிகளுடன் செம்ம அரட்டை!

Tuesday, June 23, 2009

ஆண்களை ஹாண்டில் செய்ய: அத்தியாயம் 19

உங்களுக்கு ரூட் விடும் ஆள், பெண்களிடம் கண்ணியம், கொஞ்சம் பேச்சு சுவாரசியம், சொன்ன சொல் காப்பாற்றும் கற்பு இதெல்லாம் வைத்திருக்கிறவனா என்று தரப் பரிசோதனை செய்ய ஆரம்பித்துவிட்டீர்களா? இந்த முதல் மூன்று விஷயங்கள் இருக்கிறவன் என்றால் அடுத்து நீங்கள் செக் அப் செய்ய வேண்டிய முக்கியமான விஷயம் தலைவரின் வேலை.

அவன் எத்தனைதான் கண்ணியம் சொட்டச் சொட்ட பழகினாலும், தேனாய் தித்திக்கத் தித்திக்க பேசினாலும், சொன்ன சொல்லை எல்லாம் ஒன்று விடாமல் காப்பாற்றினாலும், ஆசாமிக்கு வேலை என்று ஒன்று இல்லை என்றால் அவர் ஆட்டம் அம்பேல்தானே!

இது ஆணும் பெண்ணும் சரி நிகர் சமானமாக வாழும் காலம்தானே, அதனால் ஆண் வேலைக்குதான் போய் ஆக வேண்டும் என்கிற கட்டாயமா என்ன? அவன் பாட்டுக்கு வீட்டிலேயே ஒரு நல்ல ஹவுஸ் ஹஸ்பெண்டாய் இருந்தால் ஆகாதா? என்று நீங்கள்கூட நினைக்கலாம். ஆமாம். ஆணும் பெண்ணும் சமம்தான். அதனால்தான் இருவருமே வேலைக்குப் போவது நல்லது. பெண்ணுக்கு மகப்பேறு, பிரசவம், பிள்ளை வளர்ப்பு மாதிரியான கூடுதல் சுமைகள் இருப்பதால் அவள் இத்தனை வேலைகளை ஒரே நேரத்தில் செய்ய இயலாத பட்சத்தில் வீட்டிலேயே இருந்து குழந்தைப் பராமரிப்பை பிரதானப்பணியாய் செய்கிறாள். ஆனால் ஆணுக்குதான் இந்தப் பணிகள் எதுவும் கிடையாதே, பிறகு அவன் வீட்டிலேயே இருக்க என்ன அவசியம்?

ஆக ஆண் என்பவன் கண்டிப்பாக வேலைக்குப் போயே ஆக வேண்டியவன். சரி, இப்போது உங்களுக்குப் பலவிதமான ஆண்களை அறிமுகப்படுத்துகிறேன். இவர்களில் உங்களுக்கு யாரை அதிகமாகப் பிடித்திருக்கிறது என்று சொல்லுங்கள் பார்ப்போம்.

ஆண் 1

எனக்கு வேலைக்குப் போகவே மூடு இல்லை. விட்டா ஆஃபீசுலேயே படுத்துத் தூங்கிடுவேன் என்று நினைக்கிற ரகம்.

ஆண் 2

இந்த ஆஃபீசுக்கெல்லாம் மனுஷன் போவானா? எல்லாம் என் தலையெழுத்து! என்ன பண்றது என்கிற ரகம்.

ஆண் 3

தாத்தா காலத்துலேர்ந்து கட்டிக் காப்பாத்திட்டு வர குலத் தொழில். இதை கண்டினியூ பண்றது என் கடமை இல்லையா? அதான் செய்யுறேன், என்கிற ரகம்

ஆண் 4

இந்த வேலைதான் எனக்கு உயிர். எனக்கு லைஃபே என் வேலைதான், என்கிற ரகம்.

ஆண் 5

கிடைச்ச வேலை எதுவா இருந்தாலும் கரெக்டா செய்யணும். ஆனா வேலை நேரம் முடிஞ்சி வீட்டுக்குப் போனா அதெல்லாம் அப்படியே மறந்துவிடுவேன்.

ஆண் 6

என் பாஸ்னா எனக்கு உயிர். அவருக்காகத்தான் இந்த வேலையச் செய்யறேன் என்கிற ரகம்.


ஆண் 1 : இவன் சரியான சோம்பேறி. எந்த விதமான வேகமோ, உத்வேகமோ, சாதிக்கும் வெறியோ இல்லாத இவனை நீங்கள் தேர்ந்தெடுத்தால் வாழ்க்கை சூனியமாகி விடும். அதனால் `பாவம் பார்த்து தேர்ந்தெடுத்தேன். திருந்திடுவான்னு நினைச்சேன்' என்றெல்லாம் உங்கள் மேலான குணங்களை கற்பூர வாசனையே தெரியாத கழுதைகளுக்குக் காட்டி வீண்டிக்காதீர்கள்.

ஆண் 2 : எல்லா அலுவலகங்களிலுமே பாலிடிக்ஸ் இருக்கும். இதை எல்லாம் கடந்து ஜெயிக்கத் தெரிகிறவன் தான் ஃபிட்டான ஆண். அதை விட்டு விட்டு, எதற்கெடுத்தாலும் குறை கண்டு பிடித்துக்கொண்டு, சதா அலுத்துக்கொள்ளும் இந்த வகை ஆண்கள், பெஸிமிஸ்டுகள் என்பதால், இவர்களுடன் நீங்கள் ரொம்ப நேரம் சேர்ந்திருந்தால் இவரின் இந்த இருட்டான அணுகுமுறை உங்களுக்கும், தொத்திக்கொள்ளும் அபாயம் இருக்கிறது.

ஆண் 3 : தன் முனைப்பில்லாமல், வெறுமனே தன் பரம்பரை கௌரவம், அல்லது வருமானத்தை அடைகாக்கும் இந்த வகை ஆண்களுக்கு எல்லாமே சுலபமாக ரெடிமேடாகக் கிடைத்து விடுவதால், போராடும் குணம் அதிகமாக இருப்பதில்லை. அதனால் சோர்ந்து, மெத்தனமாய் கிடந்து உடல் ஊதிப் போய், சுவாரசியமே இல்லாமல் சலித்துக்கொண்டிருப்பார்கள் இந்த வகை ஆண்கள்.

ஆனால் இதே `பரம்பரை' சொத்துக் கேட்டகரியில் வேறு சில ரக ஆண்கள் இருப்பார்கள். தாத்தா சின்ன கடைதான் வெச்சிருந்தார். நான் பெரிசா, புதுமையா, பிரம்மாண்டமா மாற்றி அமைக்கப் போறேன் என்று தன் தாத்தா விட்டுப் போன அஸ்திவாரத்தில் தன் சொந்த முயற்சியால் மிகப் பெரிய சாதனைகளைப் படைக்க முயன்று, பல சமயங்களில் வெற்றியும் பெறுவார்கள். இந்த வகை முனைப்புள்ள ஆண்கள் என்றால் எப்போதுமே ஓ.கே. தான்.

ஆண் 4 : ``வேலை தான் உயிர்'' என்கிற ஆண்களை அநேகப் பெண்களுக்குப் பிடிக்கும். இவனை மாதிரி ஒரு கெட்டிக்காரனுக்கு வாழ்க்கைப்பட கொடுத்து வெச்சிருக்கணுமே என்று நினைப்பார்கள். ஆனால் இந்த வகை ஆண்களிடம் ஒரு பெரிய பிரச்னை என்னவென்றால் இவர்களுக்கு வேலை தான் காதலி, மனைவி, தாய், மகள் எல்லாமே. வேலை மேல் அவர்களுக்கு இருக்கும் காதல் அவர்களை முழு நேர ஷ்ஷீக்ஷீளீணீலீஷீறீவீநீ ஆக்கிவிடுவதால் வேறு எதற்குமே நேரம் இல்லாமல் சதா சர்வகாலமும் தன் தொழிலே கதி என்று இருந்துவிடுவார்கள். இவர்களுக்கு வாழ்க்கைப்படும் பெண்கள், ``சே, எனக்காக கொஞ்ச நேரமாவது ஒதுக்குறானா? இவனுக்கு நான் முக்கியமே இல்லை போல'' என்று நினைத்து நினைத்தே நொந்து போவார்கள். காரணம், அளவிற்கு மீறிய இவனின் வேலை மோகம். அதனால் அவன் தொழிலே அவளுக்கு ஒரு சக்களத்தி ஆகிவிட, கசப்புதான் மிஞ்சும். ஆக இந்த வகை ஆண்கள் எல்லாம் வீட்டில் வைத்து மேய்க்க சிரமமானவர்கள் என்பதனால் இவர்களும் அவ்வளவாக தேறுவதில்லை.

ஆண் 5 : எதைச் செய்தாலும் சரியா செய்யணும், மத்தபடி, வேலைய முடிச்சமா வீட்டுக்குப் போனமான்னு இருக்கணும் என்கிற இந்த வகை ஆண்கள் பார்க்க அவ்வளவு சுவாரசியமாக இருக்கமாட்டார்கள். அதென்னது, மிஷின் மாதிரி வர்றான், வேலையை பற்றே இல்லாம செய்யுறான், முடிஞ்சதும் போயிகிட்டே இருக்கானே, என்று லேசாக எரிச்சல் கூட வரலாம். ஆனால் ஆச்சரியம் என்ன தெரியுமா, இந்த வகை ஆண்கள் தான் தொடர் உறவிற்குத் தோதானவர்கள். எதிலுமே ஓவர் ஈடுபாடில்லாமல், எப்போதுமே மிதமாக இருக்கும் சுபாவம் தான் உறவிற்கு பலத்தைக் கொடுக்கும். ஆக இந்த வகை ஆண் என்றால் எப்போதுமே ஓ.கே!

ஆண் 6 : இந்த வகை ஆண்கள் ஓவர் இமோஷனல் டைப் என்பதால், இவர்களின் இந்த அளவிற்கதிகமான உணர்ச்சி விகிதமே போகப் போக உங்களுக்கு போதும் போதும் என்று ஆகி விடும். அதனால், இந்த வகை ஆண்களும் ஊகூம்!

ஆக, சிநேகிதிகளே, உங்களை முற்றுகை இடும் ஆண்களைக் கூர்ந்து கவனியுங்கள். மேலே சொன்ன குணங்களின் கலவைகளாக பல ஆண்கள் இருக்கக்கூடும். எது எப்படி இருந்தாலும், நிறை, குறை இரண்டையும் எடை போட்டு, அவற்றுள் எது அதிகம் என்பதை சரியாகக் கணித்துப் பாருங்கள். வெறும் அவனுடைய வேலை, மற்றும் அது பற்றிய அவன் அபிப்ராயத்தை வைத்தே இத்தனை தரப்பரிசோதனை செய்ய முடியும் என்பதால் இந்த வாரம் இதையே ஹோம் ஒர்க்காக செய்து பாருங்கள்.

Tuesday, June 2, 2009

ஆண்களை ஹாண்டில் செய்ய: அத்தியாயம் 18

சென்ற ஸ்நேகிதியில் சொன்னது உங்களுக்கு உயயோகமாக இருந்ததா? ஜால பேச்சுக்காரனிடமிருந்து ஜகா வாங்கி விட்டு, சுருங்க பேசும் சின்சியர் ஆசாமிகளை இனம் கண்டுக்கொள்ள பழகினீர்களா? அப்படியென்றால் அடுத்த லெசனுக்கு போக நீங்க ரெடி!

எந்த வகை ஆணை நம்பலாம் என்கிற இந்த தர பரிசோதனை வரிசையில் ஷிவல்ரி, இயல்பான பேச்சு ஆகியவற்றைத் தொடர்ந்து அடுத்து வரும் அதிமுக்கியமான ஐட்டம் கற்பு. உங்களுக்கு ரூட் விடும் ஆணுக்கு கற்பு இருக்கிறதா என்று கண்டு பிடிப்பதுதான் அடுத்த கட்ட தர ஆய்வு.

அதெப்படி ஆணிடம் போய் கற்பை எதிர்பார்ப்பது? கற்பு என்பது பெண் சம்பந்தப்பட்ட சமாசாரம் ஆச்சே, என்று ஆச்சரியப்படத் தோன்றுகிறதா; உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா? ஒரிஜினலாய் கற்பு என்பது வெறும் பெண்கள் சம்பந்தப்பட்ட சமாச்சாரமே கிடையாது.அது இரு பாலினருக்கும் பொதுவான மேட்டர்தான்.

தவிர கற்பு என்பது, சினிமாவில் வருவது போல, வெறும் உடல் ரீதியான ``கன்னித்தன்மை'' சம்பந்தமான விஷயமும் அல்ல. அது நாணயத்தைக் குறிக்கும் ஓர் சொல்.

ஔவையார் கற்பு பற்றிச் சொல்லும் விளக்கம் என்ன தெரியுமா?''

``கற்பெனப்படுதல் சொல் திறம்பாமை''. அதாவது சொன்ன சொல்லைக் காப்பாற்றுதல், கொடுத்த வாக்கை நிறைவேற்றுதல், பேச்சு மாறாமல் நாணயம் காத்தல், இதைத் தான் கற்பு என்கிறார் ஔவையார். இப்படி சொல் திறம்பாமல் இருப்பவனே கற்புள்ள ஆண்.

அது ``வர சண்டே சினிமாவுக்குப் போகலாம்'' என்று சொன்ன சொல்லாக இருக்கலாம் அல்லது ``என் தங்கை கல்யாணத்துக்கு அப்புறம் கண்டிப்பாக உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்'' என்று கொடுத்த வாக்காக இருக்கலாம். அல்லது, ``உன்னை கண் கலங்காம காப்பாற்றுவேன்'' என்று கொடுத்த உறுதிமொழியாக இருக்கலாம். எதுவாக இருந்தாலும், அவன் சொன்ன வார்த்தையைக் காப்பாற்றி, தன் சொல்படி நடப்பவன்தான் கற்புள்ள ஆண்.

இதற்கு மாறாக, ``நான் அப்படிச் சொல்லவே இல்லையே'' என்று மறுப்பவனோ, ``நான் அப்படியெல்லாம் சொல்லி இருக்கவே மாட்டேனே என்று சமாளிப்பவனோ, ``அப்ப என்னவோ தோணிச்சி சொன்னேன், ஆனா இப்ப மாறிட்டேன்'' என்று பேச்சு மாறுபவனோ, ``ஆமா சொன்னேன், சும்மா ஏதோ பேச்சுக்குச் சொன்னேன், இப்ப செய்ய முடியலை, அதுக்கு என்ன இப்ப?'' என்று மழுப்புகிறவனோ, கற்பு நெறியில் இருந்து தவறியவனே. இப்படி சொன்ன சொல்லைக்கூட காப்பாற்றத் துப்பில்லாதவன் எப்படி ஒரு பெண்ணை வைத்துக் காப்பாற்றுவான்?

அதனால் தான் காலம் காலமாய்,``சொன்ன சொல்லைக் காப்பாத்து-றவன்தான் நிஜமான ஆம்பிளை, அப்படி காப்பாற்றத் தவறுகிறவன் ஆம்பிளையே கிடையாது'' என்கிற பொது கருத்து நம்மூரில் இருந்து வருகிறது. இதனால்தான் ``பேச்சு மாறுறியே, நீ எல்லாம் ஒரு ஆம்பிளையா?'' என்று திட்டுவது இயல்பாகிறது.

ஆக பேச்சு மாறுவது என்பது தான் உச்ச கட்ட அயோக்கியத்தனத்தின் அறிகுறி என்பதால், உங்களுக்கு ரூட் விடும் ஆணை கவனமாக ஆழம் பாருங்கள். சின்னச் சின்ன விஷயங்கள் முதல் பெரிய பெரிய விஷயங்கள் வரை, அவன் சொல் திறம்பாமல் இருக்கிறானா என்பதைச் சரி பாருங்கள்.

அதற்காக, ரொம்ப பொடிபொடி விஷயங்களை எல்லாம் ஊதிப் பெரிதாக்கி ``ஆறு மணிக்கு வர்றேன்னு சொல்லிட்டு, ஏழு மணிக்கு வர்றியே, டிராஃபிக் ஜாமாவது மண்ணாவது. அதெல்லாம் கிடையாது, சொன்னக் சொல்லைக் காப்பாற்றலைனா நீ கற்பற்றவன்'' என்று உடனே இந்த விதியை ஓவர் கறாராக அமல்படுத்தி, உங்கள் ஆளை அல்லோலப் படுத்திவிடாதீர்கள். எந்த விதியாக இருந்தாலும், அதை கரிசனத்தோடு பயன்படுத்துவது-தானே மனித பண்பு!

அதனால், அன்பு சிநேகிதியே, எப்போதாவது ஒரு சமயம், ஏதோ நியாயமான காரணத்தினால் அவன் சூழ்நிலைக் கைதியாகி, சொன்ன சொல்லைக் காப்பாற்ற முடியாமல் போனால், இட்ஸ் ஓ.கே. சந்தர்ப்ப சூழ்நிலையினால் தானே அவன் சொல் திறம்பினான். ஆனால் உண்மையில் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முயன்றான் தானே. ஆக அவன் உள்நோக்கம், சரி தானே? One cannot judge a man for his action we only judge his intentions, அதனால் போனால் போகிறது, intention சரியாக இருந்தால், சந்தேகத்தின் பலனை அவனுக்குத் தந்து, அந்த ஒரு தரம் மட்டும் அவனை பொறுத்தருளி மன்னித்து வையுங்கள்.

ஆனால் தொடர்ந்து இதே பாணியில் பெரிதாய் வார்த்தைகளையும், வாக்குறுதிகளையும் அள்ளி வீசிவிட்டு, அப்புறம் அதை எல்லாம் மறந்து போவதே வேலையாக அவன் வைளய வந்தால்... போச்சு, அவனுக்கு கற்பு இல்லை என்பதை அவனே நிரூபிக்கிறான்! கற்பு இல்லாத ஆணை எப்படி நம்புவது? கழுத்தறுத்துவிடுவானே!

அதனால் சொல் திறம்புவதே அவன் தொடர் குணமாக இருந்தால், ``பாவம், பரிதாபம், தயவு, தாட்சண்யம் என்று நேரத்தை விரயம் செய்யாமல் உடனே அவனுக்கு ஒரு `டா டா' சொல்லி ஏறக்கட்டி விட்டு, உங்கள் வழியைப் பாத்துக்கொண்டு நகர்ந்துவிடுங்கள். அதை விட்டுவிட்டு, ``போனால் போகிறது. இந்த ஒரே ஒரு தரம் மட்டும், பாவம் அவன் எந்தச் சூழ்நிலையில் இப்படிச் செய்தானோ என்னவோ, நான் அவனைத் திருத்தி நல்வழிப் படுத்திவிடுகிறேன், போகப் போக எல்லாம் சரியாகி விடும்''... என்றெல்லாம் ஏதாவது வெற்று செண்டிமெண்ட் பார்த்தீர்கள் என்றால், போச்சு, உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்கிறீர்கள் என்று அர்த்தம்.

இப்படி நீங்கள் ஏமாறத் தயாராக இருக்கும்போது அவன் சும்மா விடுவானா? உங்கள் அன்பில் இன்னும் இன்னும் குளிர் காய ஆரம்பித்து விடுவான். கற்பே இல்லை என்றாலும், அவனை நீங்கள் மன்னித்து ஏற்றுக்கொண்டே தான் இருக்கப் போகிறீர்கள் என்றான பிறகு, அதற்குப் பிறகு அவன் மெனக்கெட்டு கற்பை இனி புதிதாக உருவாக்க முயலவா போகிறான்? என்ன செய்தாலும் இவள் என்னை விட்டு இனி இருக்கவே மாட்டாள் என்ற மிதப்பில் கழுதை தேய்ந்து கட்டெறும்பாய் போன கதையாய், இன்னும் இன்னும் சொல் திறம்பிக்கொண்டே இருப்பான்...

அதனால் சிநேகிதியே, விழிப்பாய் இருந்திடுங்கள். உங்கள் மனம் ரொம்பவே ஈடு இணையில்லா ஓர் பாகம். இதயம் போனால் இன்னொன்றைத் தானமாகப் பெறலாம். நுரையீரல், கிட்னி, கல்லீரல் என்று எந்த பாகம் போனாலும் மாற்றுக்கு வழி உண்டு. ஆனால் உங்கள் மனம்... அதற்கு வேறு மாற்றே இல்லை என்பதால் மிகவும் எச்சரிக்கையாய் இருங்கள். உங்கள் மனதில் இடம் பெறும் அளவிற்கு உயர் தகுதி உள்ளவனுக்கே நீங்கள் உங்கள் உள்ளத்தினுள் நுழையும் அனுமதியைத் தரலாம். அதனால் உங்களுக்கு ரூட் விடும் ஆணுக்கு கற்பு எனும் இந்த முக்கியத் தகுதி இருக்கிறதா என்பதைக் கண்காணியுங்கள். வேறு என்ன என்ன தகுதிகள் இருந்தால் அவன் தேறுவான் என்பதைப் பற்றி எல்லாம் அடுத்த சிநேகிதியில் பேசலாம்!