Tuesday, September 28, 2010

உயிர் மொழி: 6

தாய்மை வெளிபாடுகள்


இயற்கையின் அமைப்பு இது தான்: மிருகங்களின் எண்ணிக்கை அதிகமாகும் போது, இதில் யார் பிழைப்பார்கள் என்பதில் கடும் போட்டி நிலவுகிறது. Struggle for survival எனும் இந்த போட்டியில் அதிகம் சாப்பிடுவதற்கோ, அதிகம் சம்பாதிக்கிறதுக்கோ, அதிக அழகு சொட்டுவதற்கோ எல்லாம் வெற்றி கிடைப்பதில்லை. அதிக எண்ணிக்கையில் மரபணுக்களை பரப்பிக்கொள்பவற்களுக்கே வெற்றி. இந்த வெற்றியை பெற வேண்டுமானால் ஒவ்வொரு தாயும் தன் குட்டிகளுக்கு நல்ல ஜீன்ஸ், (மரபணுக்களை) மட்டும் கொடுத்தால் போதாது. இந்த மரபணுக்களை வைத்து சூழ்நிலைக்கு ஏற்றாற்மாதிரி எப்படி தன்னை தானே மாற்றிக்கொண்டு தொடர்ந்து ஆட்டத்தில் ஜெயிப்பது என்கிற வாழ்வியல் யுத்திகளான memes, மீம்ஸையும் குட்டிகளுக்கு சொல்லி தரவேண்டும். இப்படி சொல்லி தருவதில் பெண்குட்டிகளுக்கு வேறு மீம்ஸும் ஆண் குட்டிகளுக்கு வேறு மீம்ஸும் கற்பித்தாக வேண்டும்.

பெண் துணையை தேடிபோகாது, தானாய் வரும் துணையோடு சேர்வது மட்டும் தான் அதன் வேலை. ஆனால் ஆண் பெண்ணை தேடிக்கொண்டு போயாக வேண்டும். அதுவும் ஏதோ ஒரு பெண்ணோடு சேர்ந்துவிட்டால் குட்டிபிறக்காதே. தன் இனத்தை சேர்ந்த பெண்ணோடு கூடினால் மட்டும் தானே குட்டி பிறக்கும். ஆக, தன்னினம் என்பது எது? அதில் பெண் என்றால் எப்படி இருப்பாள், அவள் உடலை எப்படி கையாள வேண்டும் என்று தெரிந்திருக்க வேண்டும்…..அப்போது தான் அந்த குட்டி வெற்றிகரமாக தன் மரபணுக்களை பரப்பிக்கொள்ள முடியும்.

அதே போல பெண் குட்டிக்கு பிள்ளை வளர்ப்பு, பராமறிப்பு, வேட்டுவ வித்தைகள், அதை அடுத்த தலைமுறைக்கு சொல்லிதரும் யுத்திகள் ஆகிய மீம்களை தாய் சொல்லி தரவேண்டும். இப்படியாக ஆண்குட்டிகளுக்கு சில மீம்ஸ், பெண் குட்டிகளுக்கு வேறு சில மீம்ஸ் என்று இந்த எல்லா விவரங்களையும் தாய் தான் சொல்லித்தந்தாக வேண்டும். இதை எல்லாம் அவள் சொல்லித்தர தவறினால் அவள் குட்டிகள் அவள் மரபணுக்க்ளை செம்மையாக பரப்பாது, இப்படி பரப்பாமல் விட்டால் அவள் வம்சம் அழிந்துவிடும் அபாயம் இருக்கிறதே……..இந்த துரதுஷ்டம் நிகழக்கூடாது என்று தான் எல்லா ஜீவராசிகளிலும் தாய் மிக உஷாராக இயங்குகிறது. ஆண் குட்டி பருவம் அடையும் பிராயம் வந்ததும், அதை தன் கூட்டத்தை விட்டு வெளியேற்றி, வெளி பிரசேத பெண்களை தேடி போக தூண்டுகிறது. இதனால் புது புது பிரசேதங்களில் இந்த தாயின் மரபணுக்களை கொண்டு சென்று பரப்பி, அதிக மகசூல் பெற்று தருகிறது இந்த ஆண்குட்டி.

ஆக பிள்ளை பிராயம் முழுக்க குட்டியை தன்னுடனே வைத்து வித்தைகளை சொல்லித்தரும் தாய், அது பருவம் அடைந்துவிட்டால், விலகி அதை சுயேட்சையாக இயங்க விட்டு அதன் மூலம் தன் மரபணுக்களை பரப்பிக்கொள்கிறாள். இது தான் ஒரு தாயின் இயல்பு. பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் மனிதர்கள் காட்டுவாசிகளாக வாழ்ந்த போது, மனித தாய்மார்களும் மற்ற விலங்கின தாய்களை போலவே செயல்பட்டார்கள், அதனால் தன் குட்டி காடு மலை பள்ளத்தாக்கு என்று பிழைப்பு/துணை தேடி போவதை அவர்கள் தடுக்கவில்லை. மாறாக ஊக்குவித்தார்கள். இன்றும் காட்டுவாசிகளாக வாழும் பழங்குடி மனிதர்களில் இப்படி மகனை அம்மாவிடமிருந்து பிரித்து காட்டு வாழ்விற்கு தயார் படுத்தும் சடங்குகள் நடப்பதுண்டு. இதை ”coming of age ceremony” வயதிற்கு வருதல் சடங்கு என்போம்.

ஆஃப்ரிக்க பழங்குடி மனிதர்கள் பருவ வயதை அடைந்த ஆண்களை அம்மாவிடமிருந்து பிரித்து கொண்டுப்போய் ஒரு தனி கூடாறத்தில் அடைத்து, அந்த பையன்களின் தோலை சிறு கத்தியால் கீறி காயங்களை ஏற்படுத்துகிறார்கள். இந்த வலி, வேதனை, இதனால் ஏற்படும் இன்ஃபெக்ஷன், அது ஏற்படுத்தும் காய்ச்சல், தனி கூடாரத்தின் இருட்டு, எல்லாவற்றையும் தாண்டி அந்த பையன் பிழைத்தால் அவன் காட்டுவாழ்விற்கு உகந்தவன், சர்வைவலுக்கு ஃபிட் ஆனவன் என்று அவனை சீராட்டி, பாராட்டி, கடா வெட்டி கொண்டாடி,”முழுமைபெற்ற ஆண்” என்று பட்டம் கொடுத்து ஏற்றுக்கொள்கிறார்கள். அதுவே அந்த பையன் குழந்தை மாதிரி அம்மாவை கட்டிக்கொண்டு, அவளை விட்டு பிரிய மறுத்தாலோ, உடல் வலியை பொறுத்துக்கொள்ள முடியாமல் பாதியில் ஓடி போனாலோ, உயிர் பிழைக்க தவறினாலோ, அவனை முழு ஆண் என்று ஏற்கமாட்டார்கள்.

கிட்ட தட்ட இதே போன்ற மரபு, தமிழ் நாட்டிலும் அந்த காலத்தில் இருந்து வந்ததை நம் இலக்கியங்கள் வெளிபடுத்துகின்றன. தாயை ஒட்டிக்கொண்டு இருக்கும் மகன்களை நிஜ ஆண்கள் என்று யாரும் கருதியதில்லை. அவளை விட்டு பிரிந்து போர், வேட்டை, வியாபாரம், கல்வி, துறவு என்று வெளி பிரதேசங்களுக்கு போன ஆண்களை தான் நிஜ ஆண்களென கருதினார்கள். அதிலும் தன் உடம்பில் காயமே இல்லாத ஆண்களை முழு ஆண்கள் என்று ஆதி தமிழர்கள் ஏற்றுக்கொண்டதில்லை, அதனால் பிறந்த சின்ன குழந்தை ஏதோ காரணத்திற்க்காக இறந்துவிட்டால் அதை அப்படியே காயமற்று புதைப்பது அதன் ஆண்மைக்கு களங்கம் ஆகிவிடும் என்று அந்த குட்டியின் உடம்பை வாலால் கீறி காயப்படுத்தி, அவனை ”முழுமைபெற்ற ஆண்” ஆக்கிவிட்டு தான் அவனை புதைத்தார்கள்.

அந்த கால தமிழ் பெண்களும் ஆண் குழந்தைகளை தங்களின் தனி சொத்தாகவோ, முதுமைகாலத்து காப்பீடுகளாகவோ கருதவில்லை. புறநானூற்று தாய் ஒருத்தி தன் கடமைகளும் எதிர்பார்ப்புகளும் என்ன என்பதை தெள்ள தெளிவாக தெரியபடுத்துகிறாள்:

ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே!

சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே!

வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே!

நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே!

ஒளிறு வால் அருஞ்சமம் முருக்கிக்

களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே!

ஆக அந்த காலத்து தமிழ் தாய் தன் மகனிடம் எதிர்பார்த்ததெல்லாம், காளை மாதிரி போய் போரில் யானைகளை தோற்கடித்து, வென்றுவரும் வீரத்தை மட்டுமே. அப்ப மரபணுக்கள் என்கிறீர்களா? இவ்வளவு வீரம் இருக்கும் வெற்றியாளன் மரபணுக்களை பரப்பாமலா இருப்பான்!

இந்த காலத்து தமிழ் தாய் எப்படி இயங்குகிறாள் என்பதற்கு இந்த புது கவிதை ஓர் உதாரணம்: மழையில் பையன் நனைந்துவிட்டானாம். ”ஏன் குடை எடுத்துட்டு போகலை, சளி பிடிக்க போகுது, ஜூரம் வரப்போகுது, கொஞ்சம் கூட பொருப்பே இல்லை”, என்று அப்பா, அண்ணா, தங்கை என்று எல்லோருமே பையனை திட்டினார்களாம். அம்மா மட்டும், “என் பையன் வெளியெ போகுற நேரத்துலயா வந்து தொலைக்கணும் இந்த சனியன் பிடிச்ச மழை” என்று மழையை திட்டினார்களாம். என்ன தாய்பாசம்…..என்பதாக அமையும் இந்த தற்கால புதுகவிதை.

இந்த கவிதையில் வரும் அம்மா பையனுக்கு புத்தி சொல்ல மாட்டாள், அவனுடைய தப்பு என்று வெட்ட வெளிச்சமாக தெரிந்தாலும் பிறர் மீது பழி போட்டு தன் பிள்ளைக்கு பரிந்து பேசுவாள், அவனுக்கு வீரத்தை புகட்டாமல் அவனை வெறும் ஒரு குழந்தையாகவே கடைசி வரை பாவிப்பாள்…..இவை எல்லாம் தான் ஓர் அதர்ஸ் தாய்க்கு உண்டான அடையாளங்கள் என்று இந்த கவிதை சொல்லிக்கொள்கிறது.

இந்த இரண்டு கவிதைகளுக்கும் உள்ள கால இடைவெளி இரண்டாயிரம் ஆண்டுகள் மட்டுமே. அதற்குள் தமிழ் தாயின் சிந்தனையும் செயல்பாடும் இப்படி தலைகீழாக மாறிவிட்டனவே, ஏன்?

Sunday, September 19, 2010

உயிர் மொழி: 5

அம்மா செண்டிமெண்ட்


தமிழக முதல்வர் எப்போது தொலைகாட்சியில் தோன்றினாலும், அவருக்கு வலது பக்கமாய் ஆளுயர பெண் சிலை ஒன்று தெரியும். அவருடைய அம்மா அஞ்சுகத்தின் சிலை. தலைவருக்கு தாய் பாசம், அதனால் அம்மாவின் நினைவாக தத்ரூபமான சிலையை வடித்து தன் பக்கத்திலேயே வைத்திருக்கிறார்….ஆனால் ஒன்று கவனித்தீர்களா? முதல்வர் அவருடைய அப்பாவுக்கு ஒரு சிலையை வைக்கவே இல்லையே? ஏன்?

தமிழக முன்னால் முதல்வர் மக்கள் திலகம் எம் ஜி ஆர் கூட அன்னை சத்யாவின் பெயரில் அத்தனை ஸ்தாபித்தார், ஆனால் அப்பா கோபாலனின் பெயரை எந்த நிருவனத்துக்கும் வைக்கவில்லையே, ஏன்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ”அம்மா என்று அழைக்காத உயிரில்லையே” என்று உருகி உருகி பாடினாரே, அப்பாவை பற்றி ஒரு வரி கூட பாடவில்லையே, ஏன்?

இவர்கள் என்ன? சாமானிய மனித ஆண்கள் அனைவருக்குமே அவர்கள் அம்மா தான் தெய்வம். அம்மா செண்டிமெண்ட் தான் உலகின் உச்ச கட்ட செண்டிமெண்ட். அப்பாவை அடிக்க கை ஓங்கும் மகன்கள் கூட அம்மா என்றால் அடங்கி போகிறார்கள். இந்த நிலை இந்தியாவில் மட்டும் இருப்பதில்லை. உலகெங்கும் உள்ள எல்லா மட்டத்து மனிதர்களுமே இப்படி தான் இருக்கிறார்கள். ஏன்? இந்த கேள்விக்கு பல பேர் பல பதில்களை முன்வைக்கிறார்கள்.

சிக்மெண்ட் ஃப்ராய்ட் சொன்ன பதில் தான் உலகை உலுக்கிய முதல் பதில்: எல்லா ஆண் குழந்தைகளுக்குமே தன் தாய் தான் முதல் காதலி. 2 – 3 வயதில் இவளை ரசித்து, இவள் எனக்கே எனக்கு தான் என்று உரிமை கொண்டாடுகிறார்கள் ஆண் குழந்தைகள். இதை எடிபெஸ் காம்ப்லெக்ஸ் என்றார் ஃபிராய்ட். அநேகமான ஆண்கள் 5 – 6 வயதிலேயே இந்த எடிபெஸ் காம்ப்லெக்ஸிலிருந்து மீண்டு விடுகிறார்கள், அம்மா என்பவள் அப்பாவின் மனைவி, நான் வளர்ந்து அப்பாவை போல பெரியவன் ஆன பிறகு எனக்கே எனக்கென்று வேறொருத்தியை மணந்துக்கொள்வேன் என்கிற புரிதலுக்கு மாறூகிறார்கள். ஆனால் சில ஆண்கள் இப்படி மீளாமல் தொடர்ந்து அம்மாவையே ஓவராய் நேசிக்கிறார்கள், எடிபெஸ் காம்ப்லெக்ஸில் சிக்கிக்கொள்கிறார்கள் என்றார் ஃபிராய்ட்.

அடுத்த பதிலை சொன்னவர் ஹாரி ஹார்லோ என்கிற அமேரிக்க விஞ்ஞானி. இவர் குரங்குகளை வைத்து, தாய் சேய் உறவை பற்றிய ஆராய்ச்சிகளை செய்தவர். இவர் தன் ஆராய்ச்சியில் குட்டி குரங்கை பிறந்த உடனே தன் தாயிடமிருந்து பிரித்து வளர்த்தார். ஆனால் வேளா வேளைக்கு உணவையும், விளையாட்டு பொருட்களையும் கொடுத்து ஊக்குவித்தார். இப்படி தன் தாயை சந்திக்காமலேயே தனிமையில் வாழ்ந்த இந்த குரங்கு பிற்காலத்தில் பிற குரங்குகளுடன் எப்படி பழகுகிறது என்று பரிசோதித்து பார்த்தால், ஊகூம், மற்ற குரங்குகளின் பக்கத்திலேயே போகவில்லை குட்டி. சரி, மற்ற குரங்குகளுடம் தான் விளையாடவில்லை, குறைந்த பட்சம் பெண் குரங்கை கண்டால் கூடவாவது தோன்றுதா என்று பார்த்தால், ஊகூம், பெண்ணை சீண்டக்கூட விரும்பவில்லை இந்த விசித்திர குட்டி. இதிலிருந்து ஹார்லோ கண்டுபிடித்த விஷயங்கள்: தாய் சேய் உறவு தான் குழந்தையின் சமூக பழக்க வழக்கங்களுக்கும், எதிர்கால காம உறவுக்கும் ஆதாரமே. அப்பா இல்லை என்றால் நஷ்டமில்லை, ஆனால் அம்மா இல்லையென்றால் முதலுக்கே மோசமாகிவிடும். அதனால் குரங்குகளில் மட்டுமல்ல, எல்லா உயிரினத்திலும் தாய்வழியாக தான் சமூகம் அமைகிறது. மனிதர்கள் உட்பட. இது தான் இயற்கையின் விதி.

இதை நிரூபவிப்பது போல லண்டன் ஸூவில் ஒரு சம்பவம் நடந்தது. அந்த ஸுவின் காப்பாளர் டெஸ்மண்ட் மோரிஸுக்கு அப்போது குழந்தை இல்லை. அதனால் அவர் மனைவி அங்கிருந்த காங்கோ என்கிற குட்டி சின்பான்சியை தன்னுடனேயே வைத்து, வளர்க்க ஆரம்பித்தார். காங்கோ சட்டை போட்டு கொள்ளும், ஸ்பூனில் சாப்பிடும், கழிப்பறையை பயன்படுத்தும், அவ்வளவு என்ன மிக அற்புதமாய் ஓவியம் வரையும். காங்கோ வரைந்த ஓவியங்களை ஒரு கண்காட்சியில் வைத்தார் மோரிஸ். பிகாசோவின் ஓவியத்தை விட அதிக விலை கொடுத்து இதை வாங்கினார்கள் கலைஆர்வளர்கள். அத்தனை சுட்டியாக, சமர்த்தாக இருந்த காங்கோ கடைசிவரை இனபெருக்கமே செய்யவில்லை, ஏன் என்று ரொம்ப காலம் சோதித்து பார்த்தார் மோரிஸ். கடையில் தான் அவருக்கு புரிந்தது: காங்கோ மனித பெண்ணால் வளர்க்க பட்டபடியால் அது தன்னையும் மனிதன் என்றே நினைத்திருந்தது, அதனால் திருமதி மோரிஸ் மாதிரியான பெண்களை தான் அதற்கு படித்தது. சின்பான்சி பெண்களை அதற்கு பிடிக்கவில்லை. ஆக, “நீ இந்த இனம்” என்கிற ஜீவ அடையாளத்தை தருவதே தாய் சேய் உறவு தான், அதனால் தாய் எந்த இனமோ அந்த இனத்திலேயே துணை தேடுவது தான் உயிரினங்களின் கலவியல் லாஜிக் என்று விளக்கினார் டெஸ்மெண்ட் மோரிஸ்.

இதற்கு ரொம்ப வருடங்கள் கழித்து மைக்கேல் மீனி என்பவர் எலிகளின் தாய் சேய் உறவை பற்றி ஆராய்ச்சி செய்யும் போது, இன்னொரு முக்கியமான விஷயத்தை கவனித்தார். தாய் எலிகள் குட்டி எலிகளை நாவால் தடவி சுத்தம் செய்யும். அதிலும் ஆண் குட்டி என்றால் கூடுதல் நேரத்திற்கு இப்படி தடவிக்கொண்டிருக்கும். ஏன்? என்று அந்த ஆண் குட்டிகளின் மூளை பரிசோதித்து பார்த்தால் தெரிந்த திடுக்கிடும் தகவல்: தாயால் இப்படி வருடப்பட்ட ஆண் எலிகளுக்கு மூளையில் புதிய இணைப்புக்கள் உருவாகி இருந்தன. ஆனால் தாய் வருடாமல் விட்ட ஆண்களுக்கு இந்த இணைப்புக்கள் ஏற்படவே இல்லை. இந்த இணைப்புக்கள் தான் எலி குட்டியின் எதிர்கால கலவியல் தேர்வுகளை முடிவுசெய்கிறன, ஆக ஆண் குட்டியின் கலவியல் விசையை உருவாக்குவதே அம்மா தான்.

ஃபிராய்ட், ஹார்லோ, மோரிஸ், மீனி ஆகிய எல்லோருமே ஒன்றையே தான் திரும்ப திரும்ப நிரூபவித்துக்கொண்டிருக்கிறார்கள். எல்லா ஜீவராசியிலும் ஆண்குட்டிக்கும் அதன் தாய்க்கும் ஒரு பிரத்தியேகமான பாச பிணைப்பு இருந்து வருகிறது. இந்த பந்தம் தான் சுய அடையாளம், எதிர்பாலின அடையாளம், சமூக நடத்தை, கலவியல் தேர்வுகள் ஆகிய அனைத்து முக்கியமான விஷயங்களையும் நிர்ணயிக்கிறது. அதனால் இயற்க்கை இந்த தாய் சேய் பந்தத்தை மேலும் அழுத்தமாக வலியுறுத்துகிறது. இதனால் தான் எல்லா ஜீவராசி குட்டிகளும் அம்மா செண்டிமெண்டுக்கு ஆட்பட்டு போகிறதுகள். இப்படி கண்மூடித்தனமாக அம்மாவை நேசிப்பது பிள்ளை பிராயத்தில் இந்த குட்டியின் பிழைப்பு திறனை அதிகரிக்கும்.

ஆனால் வயதுக்கு வந்து இனபெருக்க பருவத்தை அடைந்துவிட்டால் ஆட்டவிதிகள் அப்படியே மாறிவிடும். அதன் பிறகு அம்மாவை கட்டிக்கொண்டு இருப்பது மரபணுமுன்னேற்றத்தையும் பிழைப்பையும் பாதித்துவிடும், அதனால் அம்மாவை மறந்து அடுத்த தலைமுறையை நோக்கி போயாக வேண்டும். இப்படி போவதை அம்மாவே ஊக்குவிக்கும். மற்ற எல்லா உயிரினத்திலும் இயற்கையின் இந்த இரட்டை நிலை அமைப்பு மிக கச்சிதமாக வேலை செய்கிறது. ஆனால் மனிதர்களில் மட்டும் இது மக்கர் செய்கிறது…..ஏன் தெரியுமா?

Saturday, September 18, 2010

உயிர் மொழி: 4

பெண்பாலின் நிஜமுகம்


மோசமான மாமியார்கள் ஏன் உருவாகிறார்கள்? அதெப்படி இந்திய ஆண்களுக்கு மட்டும் தன் அம்மாவின் குறைகள் எதுவுமே கண்ணில் தெரிவதே இல்லை? என்று பல வாசகிகள் ஃபோனிலும் நேரிலும் போட்டு தொலைத்தெடுத்துவிட்டார்கள். ஆண்களை விடுங்கள், பெண்களுக்கே கூட தெரியாத ஓர் அறிவியல் ரகசியம் என்ன தெரியுமா? ஆண்களை விட பெண்களுக்கு தான் பவர் வேட்கை அதிகம்.

உலகெங்கும் இருக்கும் சர்வ ஜீவராசிகளின் பெண்பாலினத்தை கூர்ந்து கவனித்தால் வெட்டவெளிச்சமாக தெரிந்துபோகும் உண்மை, the female of the species is deadlier than the male அதாகப்பட்டது எல்லா உயிரிலும் பெண்பாலே மிக ஆபத்தானது. காரணம் பெண்பாலுக்கு தான் ஆணைவிட அதிகபட்ச வேட்டுவகுணமும் பிழைக்கும் திறனும் இருக்கிறது. இப்படி இருந்தாகவும் வேண்டும், காரணம், குட்டிகளுக்கு இரை தேடுவதும், அவற்றுக்கு வேட்டையை கற்றுத்தருவதும் பெண்ணின் வேலை தானே….இவள் சிறந்த வேட்டுவச்சியாக இருந்தால் தானே அவள் குட்டிகள் பிழைக்கமுடியும். அதனாலேயே இயற்கை பெண்களை பிறவி வேட்டைகாரிகளாக படைக்கிறது. மனிதர்களிலும் அப்படித்தான், ஆனால் ஒரு சின்ன வித்தியாசம், பிற பெண்பாலினம் நேரடியாக தன் வல்லமையை வெளிபடுத்தும். தனக்கு வேண்டிய பவரை தானே போராடி பெற்றுக்கொள்ளூம்.

ஆனால் மனித பெண்கள் தங்கள் பவர் தேவைகளை இப்படி நேரடியாகவோ பகிரங்கமாகவோ தீர்த்துக்கொள்வதில்லை. எல்லாமே மறைமுக தாய்வழி ஆதிக்கமாய் தான். காரணம் பிற ஜீவராசி தாய்கள் யாரையும் அண்டிப்பிழைப்பதில்லை, சுயமாக வாழ்கின்றன. ஆனால் மனித தாய்க்கு மட்டும் சமீபத்திய சில காலம் வரை யாரைவாவது, அண்டி பிழைக்க வேண்டிய நிர்பந்தம் இருந்தது, காரணம் நம் சமூக அமைப்பில் எல்லா அதிகாரங்களும் ஆண்களிடமே இருந்தன. அதனால் யாரையாவது ஒரு ஆணை பிடித்து, அவன் மேல் ஒரு ஒட்டுண்ணியாய் வாழ்ந்தாலே ஒழிய இவளுக்கென்று ஒரு வாழ்க்கையே இல்லை என்கிற நிலை தான் மனித பெண்களுக்கு.

ஆக இயற்கையின் விதிப்படி பெண் வேட்கையில் சிறந்தவளாய் இருந்தாக வேண்டும், ஆனால் மனித சமூக அமைப்பில் அவளுடைய வேட்டுவகுணம் வெளியே தெரிந்தால் ஆண்கள் ஆட்சேபிப்பார்கள். இந்த முரண்பாட்டை சரி செய்யவும் பெண்கள் பல வழிகளை வைத்திருந்தார்கள்.

முதல் வழி: மற்ற மிருக பெண்களை போல தானே வேட்டைக்கெல்லாம் போய் நேரத்தை விரயம் செய்யாமல் ஒரு ஆணை தேர்ந்தெடுத்து, அவனுக்கு பதி/புருஷன்/பிராணநாதா/பிரபோ என்கிற பதவிகளை கொடுத்து, அவனுக்கு கொம்பு சீவிவிட்டு, அவனை வேட்டைக்கு அனுப்பி, அவன் மூலமாய் உணவு, ஆதாயம், ஆற்றல் என்று பல வசதிகளை பெற்றுக்கொள்வாள். இந்த ஆணும் லொங்கு லொங்கென்று இவளுடைய ஆசைகளை நிறைவேற்ற தன் ஒட்டு மொத்த வாழ்நாளையே அற்பணித்துவிடுவான். தன் பங்கிற்கு இந்த பெண் அவனுடைய மரபணுக்களை மட்டும் பரப்பித்தர தன் கர்பப்பையை பயன்படுத்துவாள். இந்த கொடுக்கல் வாங்கல் திருப்தி கரமாய் இருந்தால் எல்லாம் ஓகே. ஏதோ காரணத்திற்க்காக, இந்த பெண் எதிர்பார்த்த அளவுக்கு இந்த ஆண் வேட்டையாடி வெற்றியை குவிக்கவில்லை என்றால் அடுத்து அந்த பெண் என்ன செய்வாள் தெரியுமா?

2) முன்பு தேர்ந்தெடுத்த ஆணை கழற்றிவிட்டு, இன்னொரு புதிய ஆணை அந்த பதவிக்கு உயர்த்திவிடுவாள். இப்படி பகிரங்கமாக இன்னொரு ஆணுடன் கூட தைரியம் இல்லாத பெண் என்ன செய்வாள்? 3) கள்ளத்தனமாக, ரகசியமாக வேறொரு ஆணுடன் கூடி, அவன் மூலமாய் தன் காரியங்களை சாதித்துக்கொள்வாள்.

4) இப்படி பகிரங்கமாகவோ, ரகசியமாகவோ தன் தேவைகளை தீர்த்துக்கொள்ள வாய்ப்புகள் அமையாத பெண் என்ன செய்வாள்? தன் மகனை வைத்தே தன் எல்லா nonsexual தேவைகளையும் தீர்த்துக்கொள்வாள். பல இந்திய குடும்பங்களின் நிலை இது தான். ”இந்த மனிஷனை கட்டிக்கிட்டு நான் என்ன சுகத்தை கண்டேன்? இந்த ஆள் சுத்த வேஸ்ட்! நீயும் அப்படி இருந்துடாதேடா, அம்மா உன்னை நம்பி தான் இருக்கேன், என் பிள்ளை தான் என்னை கரைசேர்க்கணும்” என்று புலம்பி, அழுதுவைத்தால் போதும். என்னமோ உலகத்தில் இவனுக்கு மட்டும் தான் தாய்பாசம் பொத்துக்கொண்டு வந்துவிட்டது போல உடனே பையன் அம்மாவை ”சந்தோஷமா வெச்சிக்கணும்” என்று சந்தனமாய் இழைய ஆரம்பித்துவிடுவான். ”அம்மா கஷ்டப்படும் போது, நான் மட்டும் எப்படி என் பொண்டாட்டியோடு தனியா ஹனிமூன் போறது” என்றூ அங்கேயும் அம்மாவை மடியில் கட்டிக்கொண்டு போன மடசாம்பிராணிகள் நம்ம ஊரில் இருக்கிறார்கள்! இந்த ஆடவர் குல திலங்களுக்கு தெரிவதே தெரியாது, இவர்கள் இப்படி அரும்பாடுபட்டு வீடு, வசதி, புடவை, நகை, உணவு, ஊருலா என்று ஆற்றுவதெல்லாம் ஒரு மகன் தன் தாய்க்கு செலுத்தும் நன்றியை அல்ல, ஒரு கணவன் கொண்டவளுக்கு செய்யும் கடமையை என்று. இப்படி தன் ஆண்குழந்தையை கணவன் ஸ்தானத்திற்கு உயர்த்தி அவன் மூலமாய் தன் பவர் தேவைகளை தீர்த்துக்கொள்ளும் பெண்கள் இந்தியாவில் ஏராளம். காரணம், மறுமணம் செய்துக்கொள்ளும் சுதந்திரமோ, கள்ள உறவு வைத்துக்கொள்ளும் தைரியமோ, நம்மூர் பெண்களுக்கு பெரும்பாலும் இருப்பதில்லை. அதனால் தங்கள் மகனை வைத்தே தங்கள் ஆட்டத்தை ஆடிமுடிக்க பார்க்கிறார்கள்.

5) சரி மகனே பிறக்கவில்லை, அல்லது பிறந்ததும் உதவாக்கரையாகிவிட்டதென்றால், அடுத்து அந்த தாய் என்ன செய்வாள்? தனக்கு பிறந்த மகளையே ஒரு மகன் மாதிரி வளர்த்து, அந்த பெண்ணை “the man of the family” என்கிற அந்தஸ்த்துக்கு உயர்த்தி, ஒட்டுண்ணி மாதிரி அந்த மகளை உறிந்து வாழ்வாள் தாய்.

6) இந்த எந்த வழியும் வேலை செய்யவில்லை, என்றால் கடைசி கட்டத்தில் பெண்ணே கோதாவில் குதித்து சுயமாய் போராட ஆரம்பித்துவிடுவாள். ஜான்சி ராணி மாதிரியும், கித்தூர் செங்கமா மாதிரியும். தங்கள் ஆக்ரோஷத்தை வெளிபடுத்தி பவர் தேவையை தானே சுயமாய் பூர்த்திசெய்துக்கொள்ளும் பெண்களை, கண்டு வியப்போம் அல்லது, ”சே, பொம்பளையா அடக்கமா இருக்கானு பார்றேன்” என்று மிக துச்சமாய் விமர்ச்சிப்போம். ஆனால் பால் வடியும் முகத்திற்கு பின்னால் அம்மா செண்டிமெண்ட் எனும் பிரம அஸ்திரத்தை தனக்கு சாதகமாய் பயன்படுத்தும் பெண்களை பார்த்தால், கை எடுத்து கும்பிடுவோம்…….அந்த அளவுக்கு கைதேர்ந்த வித்தகி பெண் என்று புரியாமலேயே.

இதில் பெரிய வேடிக்கை என்ன தெரியுமா? பெண்கள் எல்லா காலத்திலும் இந்த ஆறு வழிகளையும் பயன்படுத்திக்கொண்டே தான் இருக்கிறார்கள், தங்கள் ஆதிக்க ஆசைகளை தீர்த்துக்கொள்ள. ஆனால் நம் கண் முன்னாலேயே இது நடந்துக்கொண்டே இருந்தாலும் நமக்கு இது உரைப்பதே இல்லை. அதுவும் இந்த ஆட்டத்தை ஆடுவது நம் அம்மா என்றால் நம்மால் அதை உணரவே முடிவதில்லை…..லேசாய் பொறி தட்டினாலும் ”சே சே எங்கமா அப்படி இல்லப்பா” என்று நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோம். ஏன் தெரியுமா? இது பற்றி எல்லாம் அடுத்த இதழில்…..