Showing posts with label Tabula Rasa. Show all posts
Showing posts with label Tabula Rasa. Show all posts

Thursday, March 11, 2010

நிர்வாணப்பார்வை 3: எத்னோ செண்ட்ரிஸம்….

குழந்தைகளுக்கும் பெருசுகளுக்கும் அறிவு விஷயத்தில் இருக்கும் மிக பெரிய வித்தியாசம் என்ன தெரியுமா? குழந்தைகள் உலகை புதிய கண்களோடு பார்க்கிறார்கள், அதனால் அவர்களுக்கு எல்லாமே அதிசயமாகவும், ஸ்வாரசியமாகவும் தோன்றுகின்றன. எதையுமே முன் அபிப்ராயம் இல்லாமல் ஃப்ரெஷ்ஷாக பார்க்கும் போது, எல்லாவற்றையுமே ஒரு தெளிந்த கண்ணோட்டத்துடன் பார்க்க அவர்களால் முடிகிறது. இதனால் தான் குழந்தைகளால் மிக வேகமாக, மிக திறமையாக பல புதிய விஷயங்களை கிரகித்துக்கொள்ள முடிகிறது. நம்மால் பதிலே சொல்ல முடியாத கேள்விகளை சளைக்காமல் கேட்டு துளைக்கிறார்கள்.

இதற்கு நேர்மாறாக பெரியவர்கள். எதை எடுத்தாலும் “அது தான் எனக்கு தெரியுமே, “ என்கிற முன் அபிப்ராயத்தோடே உலகை பார்ப்பதால், அவர்களால் எதையும் முழுமையாக புரிந்துக்கொள்ள முடிவதில்லை. காரணம் இந்த முன் அபிப்ராயமே அவர்கள் மனதை பெரும் அளவிற்கு நிரப்பிவிடுவதால், அவர்கள் உலகை பார்பதே மீதமுள்ள அறை குறை மனசுடன் தான். இப்படி அறையும் குறையுமாய் உலகை பார்ப்பதினால் தான் அவர்கள் பல விஷயங்களை கவனிக்கவே தவறிவிடுகிறார்கள். அதனால் தான் பெரியவர்களுக்கு எதையும் கிரகித்துக்கொள்ளுதல் போக போக கடினமாகிக்கொண்டே போகிறது.

அதனால் தான் எதையும் புரிந்துக்கொள்வதற்கு முன்னால் குழந்தையின் blank slate என்கிற நிலைக்கு வருவது உசிதம். இப்படி நிர்வாணப்பார்வையில் உலகை அளந்தால் தான் எல்லா ஞானமும் சாத்தியம்…. இதை பல காலமாக சமண பௌத துறவிகள் சொல்லிக்கொண்டே வந்திருந்தாலும், அறிவியல் ரீதியாக இந்த நிர்வாணப்பார்வையின் முக்கியத்துவத்தை விளக்கியவர் மானுடவியல் நிபுணரான பிரானிஸ்லா மேலினாஸ்கீ

மெலினாஸ்கீ போலாந்தை சேர்ந்த ஒரு மானுடவியல்காரர். உலக போரின் போது இவர் ஆஸ்திரேலியா பக்கமாய் சுற்றிக்கொண்டிருந்தார். அவர் போலாந்துக்காரர் என்பதால் ஆங்கிலேயர் ஆட்சிக்கு உட்பட்ட ஆஸ்திரேலியாவில் அவர் நடமாடுவது சட்டபடி குற்றமாக கருதப்பட்டது (காரணம் போலாந்துக்கு எதிராக இங்கிலாந்து போர் புரிந்துக்கொண்டிருந்தது) அதனால் அவரை டிராப்ரியண்டு தீவுக்கு நாடு கடத்திவிட்டார்கள். அந்த தீவு முழுக்க வெறும் ஆதிவாசிகள் தான் வசித்துக்கொண்டிருந்தார்கள். அந்த ஆதிவாசிகளுடன் வருடக்கணக்கில் தங்கி மானுடவியல் ஆய்வுகளை நடத்தினார் மெலினாஸ்கீ.

இப்படி ஒரு புதிய கலாச்சாரத்தை முதன் முதலில் பார்த்த போது மெலினாஸ்கீ ரொம்பவே திண்டாடி போனாராம்…..”இவங்க எல்லாம் ஏன் இப்படி இருக்காங்க? ஏன் இப்படி பேசுறாங்க? ஏன் இதை எல்லாம் சாப்பிடுறாங்க?” என்று ஆரம்பத்தில் அவருக்கு பல கேள்விகள் எழுந்து மக்களுடன் சகஜமாய் பழக விடாமல் தடுக்க, போக போக அவருக்கே புரிந்தது, “நான் என்னையும், நான் வளர்ந்த ஊரையும், அங்கு இருக்கும் மரபுகளையும் உசத்தி என்றே நினைக்கிறேன். அதை எப்போதுமே ஒப்பிட்டு பார்த்து தான் இவர்களை மட்டம் தட்டிக் கொண்டிருக்கிறேன்….இப்படி நான் என்னை உசத்தி பிறரை மட்டம் என்று நினைத்துக்கொண்டே இருந்தால், இவர்களை இவர்களது பின்புலத்தோடு என்னால் புரிந்துக்கொள்ளவே முடியாது. அதனால் என்னுடைய “எங்க வழக்கம் மாதிரி வர்றாது” என்கிற இந்த எத்னோ செண்ட்ரிக் நினைப்பை எல்லாம் ஏறக்கட்டினால் தான் இவர்களை சரியாக புரிந்துக்கொள்ள முடியும்” என்று முடிவு கட்டினார். தன் மனதில் தன்னை பற்றியும் தன் பாரம்பரியத்தையும் பற்றி இருந்த பதிவுகளை எல்லாம் ஓரம்கட்டிவிட்டு, புதிதாய் பூமிக்கு வந்தவனை போல ஒரு நிர்வாணப்பார்வையுடன் அத்தீவு மக்களை கவனித்தார்…..அப்போது தான் அவருக்கு மானுடவியல் ஞானமெல்லாம் ஒவ்வொன்றாய் உதயமானது.

ஆக இந்த “எங்க ஊர்/இனம்/மொழி/மதம்/மரபு/நம்பிக்கை/பாரம்பரியம் தாம் பெஸ்ட். மத்ததெல்லாம் வேஸ்ட்” என்று தன்னை முன்னிலை படுத்தி சிந்திக்கும் இந்த எத்னோ செண்ட்ரிஸம் இருக்கிறதே….இது நம் பார்வையை சுருக்கிவிடும். அறிவியலில் சுயத்துக்கு வேலையே கிடையாது என்பதால் இந்த சுயபிரதாப தன்மை விட்டு ஒழிந்தால் தான் தெளிந்த ஞானமே சாத்தியம்.

உதாரணத்திற்கு இந்தியாவில் வாழும் நாமெல்லாம், மாட்டு இறைச்சி சாப்பிட்டால் மத குற்றம் என்று நினைக்கிறோம். (இதே இந்திய வேதங்கள் தொட்டதற்கெல்லாம் யாகம் வளர்த்து, அதில் கோ பலி செய்து, அதன் மாமிசத்தை பிரசாதமாய் எல்லோருக்கும் விண்ணியோகமும் செய்தது ஒரு தனி கதை) ஆனால் ஐரோப்பாவில் வாழும் எல்லோருமே ஸ்பஷ்டமாய் மாட்டு இறைச்சி சாப்பிடுகிறார்கள். ஆஃப்ரிக்காவில் உள்ளவர்கள் புழு, பூச்சு, வண்டு மாதிரியானவற்றை சாப்பிட்டு கொள்கிறார்கள். சீனாவில் வாழ்பவர்கள் நாய், எலி, கறப்பாண்பூச்சி, பாம்பு, பல்லி மாதிரியானவற்றின் இறைச்சியை சாப்பிடுகிறார்கள். தாய்வானின் உள்ளவர்கள் அபார்ஷன் செய்யப்பட்ட மனித சிசுக்களையே உணவாக சாப்பிடுகிறார்கள்…..இதை எல்லாம் கேட்ட உடன் கூசி சிணுங்கி, “சீச்சீ, இப்படி எல்லாமா தின்பார்கள்? என்ன கேவலமான மனித ஜென்மங்கள்” என்று நீங்கள் முகம் சுளித்தால், போச்சு, நீங்கள் ரொம்பவே எத்னோ செண்டிரிக்கான மனிதர்……உங்கள் கலாச்சாரத்தை தவிற பிற மனிதர்களை சமநோக்கோடு பார்க்கும் பக்குவம் உங்களுக்கு இன்னும் வரவில்லை என்று அர்த்தம்.

அதற்கு மாறாக, “அது சரி, அந்தந்த ஊர்ல என்னென்ன புரத சத்து கிடைக்குதோ அதை சாப்பிட்டு உயிர் வாழ்ந்துக்குறாங்க….that that people, that that protein” என்று உணர்ச்சி வசப்படாமல், சகிப்புத்தன்மை சொட்ட சொட்ட, சமநோக்கோடு யோசிக்கிறீர்களா? வெரி குட். உங்களுக்கு எத்னோ செண்ட்ரிஸம் இல்லை. உங்களுக்கு எல்லா ஞானமும் இனி சாத்தியம்!