Tuesday, December 9, 2008

பொம்பளை சிரிச்சா...

எந்தவித உணர்ச்சிவசப்படலுமே இல்லாமல், மனித ஆண் என்கிற உயிரினத்தைப் பற்றித் தெரிந்துகொள்ளப்போகும் ஒரு உயிரியல் மாணவி என்ற மனப்பான்மையை நீங்கள் வளர்த்துக் கொண்டாயிற்றா? அடக்கி வாசித்து, உங்கள் குறிக்கோள் வெளியே தெரியாதபடி இருக்கப் பழகி வருகிறீர்களா? ஆண்களை ஓட்டை உடைச்சல், சொத்தை, வெத்து, தேறுவது தேறாதது என்று அனாவசியமாய் பாகுபடுத்தாமல், அவர்களை அப்படியே ஏற்றுக்கொள்ளும் அக்செப்டென்ஸ் என்கிற பக்குவத்தை அடைந்துவிட்டீர்களா? பார்வை விலக்கி, ஆணின் அபரிமிதமான கூச்சத்தைப் போக்கி, அவனை ஊக்குவிக்கும் வித்தையைப் பிரயோகிக்க ஆரம்பித்துவிட்டீர்களா? வெரிகுட், அப்படியானால் நான்காம் யுத்தியைக் கற்றுக்கொள்ள நீங்கள் தயார்.

இந்த நான்காம் யுத்தியைப் பற்றிச் சொல்வதற்கு முன்னால், ஆண் - பெண் பழகுமுறையைக் கொஞ்சம் ஆராய்வோம். உங்களுக்குப் பிடித்த ஆணிடம் நீங்கள் எப்படிப் பழகுகிறீர்கள் என்பதைக் கவனியுங்களேன். அது உங்கள் மகன், மாணவன், சகா, காதலன், கணவன், கொழுந்தன், மாமனார், மச்சினர் என்று யாராக இருந்தாலும், உங்களுக்கு அவர்களைப் பிடித்திருந்தால், அவர்களைப் பார்த்த உடனே உங்களை அறியாமலேயே நீங்கள் என்ன செய்கிறீர்கள்? அட, அவர்கள் ஆணாக இருக்க வேண்டும் என்றுகூட அவசியம் இல்லை, உங்களுக்குப் பிடித்த பெண்ணை, அல்லது பிடித்த நாய் குட்டி, பூனை குட்டி, அல்லது பொம்மை அல்லது ஏதாவது பொருளைப் பார்த்ததுமே என்ன செய்கிறீர்கள்?

``அய்'' என்று உங்களையும் அறியாமல் உங்கள் முகம் மலர்ந்து ஒரு புன்முறுவல் பூத்துவிடுகிறீர்கள்தானே? உங்கள் மனதிற்குப் பிடித்தவர், பிடித்தது என்றதுமே உங்கள் மூளை குஷியாகிவிடுகிறது. உடனே குஷி ரசாயனங்களைச் சுரக்கிறது. அகத்தின் இந்த குஷி முகத்திலும் உடனே தெரிந்துவிட, முகம் இறுக்கம் இன்றி, தளர்ந்து, விரிந்து, கண்கள் மலர்ந்து பிரகாசிக்கின்றன.

இப்படி முகம்மலர்ந்து ஒருத்தி இருந்தால், இந்த புன்முறுவலை பார்த்த உடனே, எதிராளிக்கு என்ன தோன்றும்? ``ஆஹா, என்னைப் பார்த்தவுடன் இவளுக்கு இவ்வளவு சந்தோஷம் என்றால், இவளுக்கு என் மேல் ரொம்பவே ஆசை போலிருக்கிறதே! இவளுக்கு என் மேல் இவ்வளவு ஆசை ஏற்பட என்ன காரணம்? நான் ரொம்ப ஓஹோ என்று இருக்கிறேன் போல், அதனால்தான் என்னைக் கண்டதுமே இவளுக்கு இத்தனை பரவசம் ஏற்பட்டு விடுகிறதுபோல!'' என்று எதிராளிக்கு தன் சுய அபிப்ராயம் சட்டென அதிகமாகி விடுகிறது.

உங்களின் சிரித்த முகம் அவர்களைப் பற்றிய கூடுதல் சுய மதிப்பீட்டை ஏற்படுத்துவது ஒரு பக்கம் என்றால், உங்களின் இந்த முகத் தோற்றம், உங்களைப் பற்றிய சில அபிப்ராயங்களையும் அநிச்சையாக ஏற்படுத்தும். ``இத்தனை சிரித்த முகமாக இருக்கிறாளே, அப்படியானால் இவள் உண்மையிலேயே மனுஷி தான்'' என்பதுதான் முதல் அபிப்ராயம். என்ன, சிரிக்கிறதுக்கும், இதுக்கும் என்னங்க சம்பந்தம் என்று யோசிக்கிறீர்களா? ரிமெம்பர் சிநேகிதி, ஒட்டுமொத்த மிருக ஜாதியில் சிரிக்கவல்ல ஒரே மிருகம் மானிடர்தான். ஆக நீங்கள் புன்னகை பூப்பதே மனித வர்க்கம் என்பதன் மிக முக்கியமான அடையாளம்தான்.

இந்த முதல் அபிப்ராயம் போக, சிரித்த முகத்தைப் பார்த்தால், இன்னொரு அபிப்ராயமும் தானாக ஏற்படும், ``புன்னகை பூக்கிறாள், ஆக மனுஷிதான். மனுஷி மட்டும் அல்ல, சந்தோஷமானவளும்கூட...'' என்று உடனே உங்கள் பக்கம் அந்த நபரை வசீகரித்து இழுக்கும் தன்மையும் இந்தச் சிரிப்புக்கு உண்டு.

சிரிப்பு ஏன் வசீகரிக்கிறது என்கிறீர்களா? மனிதர்கள் மற்றவர்களின் உணர்ச்சி நிலைகளை மிகத் துரிதமாக கிரகித்துக் கொள்ளக்கூடியவர்கள். சந்தோஷம், சோகம், கோபம், மோகம், பயம், பதட்டம், ஆசை, நிராசை என்று எல்லா உணர்ச்சிகளுமே நம்மை ஆட்கொள்ள வல்லவைதான். அதனால்தான் திரையில் ஓடும் யாரோ ஒருவரது உருவத்தைப் பார்த்து, சிரிக்கிறோம், அழுகிறோம், கோபிக்கிறோம், மகிழ்கிறோம். வேறு யாருக்கோ ஏற்படும் உணர்வுகள்கூட நம்மைத் தொற்றிக்கொள்ள வல்லவை. இப்படி உணர்ச்சிகளுக்கு தொற்றும் தன்மை இருப்பதினால், மிக கவனமாக நாம் மனிதர்களை பரிசீலினை செய்கிறோம். யாரிடமிருந்து நமக்கு சந்தோஷ உணர்ச்சி தொற்றிக்கொள்கிறதோ, அவர்களை நாம் விரும்பிவிடுகிறோம். அதனால்தான், சினிமா ஹீரோ, ஹீரோயின், காமெடி நடிகர்களுக்கு இத்தனை மவுசு ஏற்பட்டிருக்கின்றது.

இதுவே யாராவது நம்மில் சோகமான, குரோதமான, மோசமான உணர்வுகளை தொற்ற வைத்தால், அவர்களோடு இருக்க நமக்குப் பிடிப்பதில்லை. சதா ஒப்பாரி வைக்கும் பெண், சதா மூஞ்சை தூக்கி வைத்திருக்கும் ஆண், சதா நை நை என்கிற திரிகிற பெரிசு...

இவர்களைக் கண்டதும், நாம் டபக்கென தப்பி ஓடிவிட முயல்வதே இந்த நெகடிவ் உணர்ச்சி தொற்றலில் இருந்து தப்பிக்கத்தான்!

ஆக, பாஸிடிவ் உணர்ச்சி வெளிப்படுத்தும் ஆட்களை விரும்பி நாடுவது, நெகடிவ் உணர்ச்சி ஆசாமிகளைக் கண்டால் ஒதுங்கி விலகுவது, இதுதான் மனித நடைமுறை. இப்போது சொல்லுங்கள். சிரித்த முகமாக இருக்கும் பெண்ணைப் பார்த்தால், அவளோடு நேரம் செலவிடத் தோன்றும்தானே!

சிரிப்பு பொதுவாக எல்லோரையுமே ஈர்க்கும். அழும் குழந்தையைவிட, சிரித்த முக குழந்தையைக் கொஞ்சத் தான் எல்லோரும் விரும்புவார்கள். சிடுமூஞ்சி பெண்களைவிட சிரித்த முக பெண்களைத் தேர்ந்தெடுத்து, மாடலாக்கினால்தான் வியாபாரம் ஓடும். ஆக சிரித்த முகம் கூடுதல் வசீகரம், இதுதான் பொதுவிதி.

இந்த பொதுவிதி போக, பெண்ணின் சிரிப்புக்கு இன்னொரு முக்கியமான பணி உண்டு. பெண் சிரித்தால், ``அருகே வா'' என்கிற அழைப்பு மணி கேட்டுவிடும் சில ஆண்களுக்கு. இவளின் வெறும் இந்த புன்முறுவலாலே, உடனே அவள் அருகில் வந்துவிடும் உந்துதல் ஏற்பட்டுவிடும் ஆணுக்கு.
பெண்ணின் சிரிப்பு, ஆணுக்கு அத்தனை போதை ஏற்படுத்தும் தன்மை உண்டு.

``உன் ஒரு சிரிப்புக்காக ஊரையே தரலாமே'' என்கிற சினிமா வசனமாகட்டும், ``ஏன் உம்முனு இருக்கே, சிரிச்சா முத்தா உதிர்ந்திடும்'' என்று கெஞ்சும் காதலனாகட்டும், ``வீட்டுக்குப் போனா அவ மூஞ்சை தூக்கி வெச்சிருப்பா, பார்க்கும் போதே பத்திக்கிட்டு வரும்' என்று புகாரிடும் கணவர்களாகட்டும், எல்லாமே பெண்ணின் புன்னகை எத்தனை வலிமையான ஆயுதம் என்பதைச் சொல்லும் உதாரணங்களே.

இவ்வளவு வலிமையான ஆயுதம் என்பதினால் தான், ``பொம்பளை சிரிச்சாப் போச்சு!'' என்பது மாதிரி கட்டுப்பாடுகளை ஆணாதிக்க சமுதாயங்கள் முக்கிய கோட்பாடாகவே முன்வைக்கின்றன. ``இவப் பாட்டுக்கு சிரிச்சு வெச்சு, எவனாவது இவ பின்னாடியே வந்து தொலைச்சான்னா, எப்படிச் சமாளிக்கிறது?'' என்று பெண்களை அடக்கி ஆளும் போக்கும், அவர்களை கெடுபிடியாய் நடத்தும் போக்கும் இதனாலேயே ஏற்பட்டன. யார் என்ன கட்டுப்படுத்தினாலும், பெண்கள் தொடர்ந்து இயற்கை ஏவிய வழிகளில் இயங்கிக்கொண்டேதான் இருந்தார்கள் என்பது வேறு விஷயம்.

சரி, நம்ம மேட்டருக்கு வருவோம். உங்கள் ஆணை ஹேண்டில் செய்ய நீங்கள் அடுத்து செய்ய வேண்டியது, அவனைப் பார்த்து புன்னகை பூத்திடுங்கள். உங்களுக்கு அவனை உண்மையிலேயே பிடித்திருந்தால், நீங்கள் முயலாமலே தானாகவே உங்கள் முகம் புன்னகையில் மலர்ந்து விடுமே. முசுடு பாஸ், மோசமான கணவன், மூடியான மகன் இவர்களிடம் வலுக்கட்டாயமாகவேணும், ஒரு புன்னகையைப் பொழிந்து வையுங்கள். உடனே, உங்களை அவர்கள் நடத்தும் விதமே மாறிவிடும்.

இதே சிரிப்பென்னும் அஸ்திரத்திற்கு இன்னொரு ஆபத்தான முனையும் உண்டு. பெண்களைக் கவருகிறேன் பேர்வழி என்று எசகு பிசகாக உளறிக்கொட்டும் ரோட்டோர ரோமியோ, ஜொள்ளு விட்டே பிராணனை வாங்கும் சகா, மேலதிகாரி என்ற மிதப்பில் பெண்களிடம் தவறாக நடக்க முயலும் சீப்பான ஆசாமிகள், பெண்ணைப் பார்த்ததுமே தன் வீரதீர பராக்கிரமங்களைச் சொல்லிப் பீற்றிக்கொண்டே தீருவது என்று குறியாய் இருக்கும் மொக்கைகள்... இப்படிப்பட்ட ஆசாமியாக இருந்தால் மறந்தும்கூட சிரித்து வைத்து விடாதீர்கள். அப்புறம் அவ்வளவுதான்... ஏகத்துக்கு குஷியாகி ஓவராய் வழிந்து கொட்டி உங்களைத் திணறடித்து விடுவார்கள். ``ஏன்யா உனக்கு இந்த வேண்டாத வேலை?'' என்று யாராவது கேட்டால், ``நான் சும்மாதான் இருந்தேன். அவதான் என்னைப் பார்த்துச் சிரிச்சா, அதனாலதான் பேசினேன்'' என்பார்கள்.

நீங்கள் என்னதான் ``பாவம் பார்த்துச் சிரித்தேன், சும்மா சிரிச்சேன், வேறு யாரையோ பார்த்துச் சிரித்தேன்'' என்று சொல்லி நழுவ முயன்றாலும், அநாவசிய வம்பில் மாட்டிக்கொள்ளக் கூடும்.

அதனால் அஸ்திரம் நம்பர் நாலான இந்த சிரிப்பு, ரொம்பவே கூரானது என்பதை உணர்ந்து, அதை பிரயோகிக்கப் பழகுவதே உங்களுக்கான இந்த வார ஹோம் ஒர்க். இந்த அஸ்திரத்தைத் திறமையாக உபயோகிக்க நீங்கள் பழகிவிட்டீர்கள் என்றால், அடுத்த பாடத்தைக் கற்றுக்கொள்ள நீங்கள் தயார்.

Sunday, November 30, 2008

பார்வை ஒன்றே போதுமே

என்ன ஸ்நேகிதிகளே, உங்களைச் சுற்றியுள்ள ஆண்களை எல் லாம் குற்றம் குறை யோடு அப்படியே ஏற்றுக் கொள்ள பழகிவிட்டீர் களா? உங்கள் சகிப்புத் தன்மை அதிகமாகி யுள்ளதா? அப்படியானால், இந்த ஆண்களை ஹேண் டில் செய்யும் அரிய சாஸ்திரத்தின் அடுத்த லெசனைக் கற்றுக்கொள்ள நீங்கள் தயார்.

அடுத்த லெசனுக்குப் போவதற்கு முன்னால் உங்களுக்கு ஒரு சின்ன மனமாற்றம் செய்ய வேண்டும். நீங்கள் எத்துறையைச் சேர்ந்த பெண்ணாக இருந்தாலும், இனி அடுத்து வரும் சில வாரங்களுக்கு உங்களை ஒரு மானுடவியல் நிபுணராய்க் கற்பனை செய்துகொள்ளுங்களேன். உங்களுக்கு ஆண்களோடு ஏற்கெனவே இருக்கும் அனுபவங்களை எல்லாம் தாற்காலிகமாய் ஏறக்கட்டி வைத்துவிட்டு, எந்த முன் அபிப்ராயங்களுமே இல்லாத வெற்றுத்தாளாய் உங்கள் மனதை மாற்றிக்கொள்ளுங்கள் அதை எப்படிச் செய்வது என்கிறீர்களா? சிம்பிள், வேற்றுக் கிரகத்தில் இருந்து பூமிக்கு வந்து இறங்கிய ஒரு புது அமானுஷய ஜீவராசியாய் உங்களை கற்பனை செய்துகொள்ளுங்கள்! இதற்கு முன் நீங்கள், மனித ஆணைப் பார்த்ததே இல்லை, இப்போது தான் முதன் முதலில் பார்த்து அவனைப் பற்றிப் புரிந்துகொள்ளப் போகிறீர்கள். ஒரு தாவிரவியல் மாணவி செடி,கொடிகளை உற்று உற்றுப் பார்த்து இது என்ன? எப்படி? ஏது? எதனால்? என்றெல்லாம் புரிந்து கொள்வது போல, முழுக்க முழுக்க ஒரு அறிவியல் கண்ணோட்டத்துடன் ஆண்களை அக்கு வேறு ஆணி வேறாகப் புரிந்துகொள்ளப் போகிறோம். என்ன ரெடியா?

உங்கள் அருகில் இருக்கும் ஏதாவது ஒரு x,y,z ஆணை எடுத்துக்கொள்வோமே. உங்கள் அமானுஷ்ய கண்களால் அவனை லைட்டாய்ப் பாருங்கள். அவன் ஒட்டுமொத்த நடை, உடை, பாவனை, தன் சுயத்தைப் பற்றிய வெளிப்பாட்டை வெறுமனே கவனியுங்கள். என்ன தெரிகிறது? நீங்கள் பார்க்கிறீர்கள் என்றதுமே, பார்வை தடுமாறி, வார்த்தைகள் தவறி, கொஞ்சம் அசௌகரியமாய் நெளிவது தெரிகிறதா? இது தான் ஒரு ஆணின் அடிப்படை கூச்சம்.

சிம்பிளாய் ஒரு உதாரணம் சொல்லட்டுமா? நாங்கள் கிராமங்களில் குழந்தைகளுக்கான மனநல முகாம்கள் நடத்தும் போது, குழந்தைகள், ``அய்யோ, டாக்டர், ஊசி போட வந்திருக்காங்க'' என்று பயந்துவிடக் கூடாதே என்பதற்காக சில கேளிக்கை விளையாட்டுக்களை முதலில் நடத்துவது வழக்கம். விளையாட்டு மூடில் குழந்தைகள் சற்று நேரம் ஜாலியாய் ஆடிப் பாடி முடித்த பிறகு முகாமை ஆரம்பித்தால், குழந்தைகள் பயப்படாமல் யதார்த்த மன நிலையில் இருப்பார்கள் என்பதற்காக இந்த யுத்தி.

இப்படி விளையாட்டு, கேலி, கேளிக்கை என்று குழந்தைகளை அழைத்து, ``ஒரு பாட்டுப் பாடேன்'' என்று சொன்னால், பெண் குழந்தைகள் ஆரம்பத்தில் கொஞ்சம் பிகு செய்துகொண்டாலும், வெட்கம் சீக்கிரமே ஆசை ஆசையாக, பாடவும் ஆடவும் செய்கிறார்கள். ஆனால் ஆண் குழந்தைகள், மிகச் சில விதிவிலக்குகளைத் தவிர மற்றவர்கள் எல்லோருமே, கூசி, ஒதுங்கி பின்னாலேயே நகர்ந்து போய்விடுவார்கள்.

ஆக, இயல்பிலேயே ஆண்களுக்கு இந்த விதமான சமூக கூச்சம் அதிகம் உண்டு. பெண் குழந்தைகளுக்கு மற்றவர்களின் முகபாவத்தைப் பார்த்து, அவர்கள் மூடை யூகித்து, இடம், பொருள் ஏவல் தெரிந்து நடப்பதென்பது இயல்பிலேயே வரும். காரணம் பிறவியில் இருந்தே பெண்களின் மூளைக்கு இப்படிப்பட்ட முகபாவம் புரிந்துகொள்ளும் தன்மை அதிகம். ஆனால் ஆண் குழந்தையின் மூளையில் இந்த முகபாவகிரகிப்பு மையம் குறைவு என்பதால், அவனுக்கு மனித முகங்களைக் கவனமாய்ப் பார்த்து குறிப்பு உணரும் தன்மை குறைவே.

இதனால் யாராவது அவர்களை உற்றுப் பார்த்தாலோ, ஒரு மாதிரியாகச் சிரித்தாலோ, தன்னை ஏதோ தவறாகப் பேசி, கேலி செய்கிறார்களோ என்ற பயம் ஆண்களுக்கு வந்துவிடுவதுண்டு. நீங்களே பரிசோதித்துப் பாருங்களேன். வேறு எதுவுமே செய்யாமல் ஒரு வயது நிரம்பிய ஆண் குழந்தையை அவன் கவனிக்கும் படி, வெறுமனே உற்றுப் பாருங்கள், உங்கள் முகத்தில் எந்த வித உணர்ச்சி வெளிப்பாடும் இன்றி, உன்னிப்பாய் அவனை நீங்கள் தொடர்ந்து பார்த்தாலே போதும், குட்டிப் பையன் அழுது, அம்மாவைத் தேடி கத்தி ஊரையே கூட்டி விடுவான். அதுவே ஒரு வயது பெண் குழந்தையை நீங்கள் இப்படி முறைத்துப் பார்த்தால், அந்தக் குழந்தை உங்களை பதிலுக்கு முறைத்துப் பார்த்து, சிரித்து, கிட்டே வந்து கொஞ்சி, தாஜா செய்ய முயலும். இரண்டு குழந்தைகளுக்குமே, யாராவது தொடர்ந்து தங்களை முறைத்துப் பார்த்தால் பயமாகவே இருந்தாலும், ஆண் குழந்தை ஒதுங்கி ஆள் சேர்ப்பான். பெண் குழந்தை நைஸ் பண்ணி, நட்புண்டாக்க முயல்வாள்.

இப்படி ஆரம்பத்தில் சமூக கூச்சம் அதிகமாக இருந்தாலும், அநேக ஆண் குழந்தைகள் தொடர்ந்து பலருடன் பழகி, பக்கத்து வீடு, பள்ளிக்கூடம், விளையாட்டுத்திடல் என்று பல இடங்களுக்குப் போய், பல அன்னிய நபர்களுடன் பரிச்சயம் ஏற்படுத்திக்கொண்டே இருந்தால், இந்த கூச்ச சுபாவம் தணிந்து துணிந்து பேசிப் பழகும் பக்குவத்திற்கு வருகிறார்கள்.

ஆரம்பத்தில் இருந்தே பெண்களுடன் அரட்டை அடித்துப் பழகிய ஆண்களுக்கே பெண்களைப் போல, சரளமாய் வாயாடும் தன்மை தொற்றிக்கொண்டு விடுகிறது. இந்த வகை ஆண்களுக்கு சமூக கூச்சம் அவ்வளவாக இருப்பதில்லை.

இந்த அதிர்ஷ்டம் வாய்க்காத ஆண்கள் தான் நம்மூரில் அதிகம் என்பதால், சராசரி ஆணுக்குப் பெண்ணைக் கண்டால் கூச்சம் வந்துவிடுகிறது. இவனே இப்படிக் கூசி, பார்வை தடுமாறி, வார்த்தைகளை வலை வீசித் தேடிக்கொண்டிருக்கும்போது, பெண் பாட்டிற்கு வள வள என்று பேச ஆரம்பித்து விட்டால், போயே போச்சு... பையன் அவள் பேச்சு வெள்ளத்தில் திக்கு முக்காடிப் போய் விடுவான்.

அத்தோடு, அவள் இவ்வளவு சுலபமாய், சரளமாய், தடையின்றிப் பேசுகிறாள், நான் மட்டும் ஏன் இப்படி தயங்கித் தொலைக்கிறேன்! என்கிற சுயபரிகாசமே, அவனின் கொஞ்ச நஞ்ச தைரியத்தைச் சூறையாடி விடுமே. அப்புறம் அவன் பாட்டிற்கு இந்த ஆட்டத்திற்கு நான் வரலைப்பா என்று ஒதுங்கிப் போய்விட்டால், உங்கள் இஷ்ட ஆணை நீங்கள் எப்படி ஹேண்டில் செய்யப் பழகுவதாம்?

அதனால் ஆண்களை முதன் முதலில் சந்திக்கும் போது, அவன் அதீத வெட்க உணர்வை மதித்து, பெண் கொஞ்சம் அவள் பார்வையைத் தாழ்த்தியோ, திருப்பியோ வைத்தால், தன் ஆரம்ப ``அய்யோ, பெண், பார்க்கிறாளே, என்ன செய்வேன்?'' என்ற பதட்டத்தில் இருந்து ஆண் மீண்டுகொள்ள அவகாசம் இருக்கும். அதுவரை பெண் கப் சிப் என்று இருந்தால், ``அய், என்னை விட இவளுக்கு கூச்சம் அதிகமா இருக்கே, இவளை விட நானே மேல்!'' என்று மகிழ்ந்து, தலைவர் திருவாய் மலர்ந்து பேச்சைத் துவக்குவார்.

இந்தப் பெண் உண்மையில் கூச்சமே படவில்லை, விட்டால் ஒரு நிமிடத்தில் ஒன்றரைக் கிலோ வார்த்தைகளை உதிர்த்துவிடும் வாயாடி இவள் என்பதெல்லாம் காலப் போக்கில் இந்த ஆணுக்குத் தெரிய வரும். இருந்தாலும் உறவின் ஆரம்பத்தில் அவன் கூச்சத்தை வெளிக்காட்டாமல் தைரியமாகப் பேச முடிந்தால் தானே இந்த உறவே தொடர வாய்ப்பு.

``ஆண் பிள்ளை வெட்கப்படக்கூடாது'', என்று சமுதாயம் வேறு விதிகளைப் போட்டுத் தொலைக்கிறதா, அதனால் அவன் கூச்சப்படுவதே ஒரு அவஸ்தை என்றால், அதை அந்தப் பெண் பார்த்து, தன்னைக் குறைவாக மதிப்பிட்டு விடுவாளோ என்ற கவலையே அதை விடப் பெரிய இம்சை.

அதனால் அந்த ஆணை ஆட்கொள்ள வேண்டும் என்று ஏதாவது அபிப்ராயம் உங்களுக்கு இருந்தால், அவன் முகத்தை நேருக்கு நேர் பார்த்து வைக்காதீர்கள். அவன் தன் கூச்சத்தை விழுங்கிக்கொண்டு, ஆசுவாசப்படுத்திக்கொள்ள அவனுக்குக் கொஞ்சமாவது அவகாசம் தாருங்கள். தலைவர் கூச்சம் நீங்கி, தானாய் பேசும் வரை, அவனைக் கவனியாது போல பார்வையை வேறு பக்கம் திருப்பி வையுங்கள். இப்படி நீங்கள் அவனை மறைமுகமாய் ஊக்குவித்தால், அப்புறம் பாருங்களேன், பையன் எப்படி, துணிந்து பேச்சை ஆரம்பிக்கிறான் என்று.

இந்த யுத்தி பெண்கள் எல்லோருக்குமே இயல்பிலேயே வருவதுண்டு. ஒரு பெண் ஒரு ஆணை விரும்ப ஆரம்பித்திருக்கிறாள் என்பதற்கான முதல் அறிகுறியே அவள் அவன் முகத்தைப் பார்க்காமல் பார்வையைத் தாழ்த்திக்கொண்டு அவனை ஊக்குவிப்பது தான். இந்த இயல்பு தான் பெண்கள் தங்களை அறியாமலேயே ஆண்களை ஊக்குவிக்க பயன்படுத்தும் அஸ்திரம் நம்பர் 3!

இதே அஸ்திரத்திற்கு இன்னொரு முனையும் உண்டு. யாராவது ஆண் உங்கள் விருப்பத்திற்கு விரோதமாய் உங்களை நோட்டம் விடுகிறான், அவனை ஆஃப் செய்ய வேண்டிய அவசியம் உள்ளது என்றால், தலை குனிந்துகொண்டு, அவன் பார்வையை ஊக்குவிக்காமல், நிமிர்ந்து நேராய் அவன் கண்ணையே பார்த்து, ``சரிதான் அடங்குடா'' என்பது போல ஒரே ஒரு சிங்கிள் பார்வை விட்டாலே போதும், உடனே அண்ணன் ஒதுங்கி விலகிவிட ஆரம்பித்து விடுவார்.

பார்வை ஒன்றே போதும், யாரையுமே மிரட்டிவிடும்.

ஆக பார்வை என்ற இந்த மூன்றாம் யுத்தியை இம்முறை பழகிப்பாருங்கள். அடுத்த யுத்தியை அடுத்த சிநேகிதியில் சொல்கிறேன்!

Monday, November 3, 2008

ஆடவர் குணங்கள்

அடக்கி வாசித்து ஒளிவு மறைவாய் செயல்படுவது தான் ஆண்களை ஹேண்டில் செய்யும் முதல் அஸ்திரம் என்றெல்லாம் போன சிநேகிதியில் பார்த்தோமே... இத்தனை நாட்களில் நீங்கள் எத்தனை ரகசியங்களைக் காப்பாற்றினீர்கள்? எவ்வளவு ஒளிவு மறைவு சாதியப்பட்டது உங்களுக்கு? குறைந்த பட்சம் 35 சதவிகிதம் முடிந்தது என்றால் நீங்கள் பாஸ், அடுத்த அஸ்திரத்தைக் கற்றுக்கொள்ள யூ ஆர் ரெடி. இல்லை என்றால், இன்னும் கொஞ்சம் முயற்சி செய்து உங்கள் ஓட்டை வாயை அடக்கிப் பாருங்கள். வெற்றிகரமாய் அடக்கிவிட்டீர்கள் என்றால், நீங்களும் அடுத்த அஸ்திரத்தைக் கற்றுக்கொள்ள ரெடி.

அடுத்த அஸ்திரம் என்ன என்று பார்ப்பதற்கு முன்னால், ஆண்கள் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்று பெண்கள் நினைக்கிறார்கள் என்று பார்ப்போமா? தொல்காப்பிய காலத்திலிருந்தே பெண்கள் ஆண்களிடம் எதிர்பார்ப்பது நான்கே நான்கு குணங்களைத் தான். அவையானவை (1) தன்மை, (2) நிறை, 3) ஓர்ப்பு, (4) கடைபிடி. அதென்ன தன்மை, நிறை, லொட்டு, லொசுக்கு... கேள்விப் பட்டதே இல்லையே என்கிறார்களா?

அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு... இதைக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? இவை பெண்களின் குணம் என்று சொல்லப்படுவது போல, இதற்கு இணையாக ஆடவர் குணநலன்கள்தான் இந்த தன்மை, நிறை, ஓர்ப்பு மற்றும் கடைபிடி. பெண்களை ``இப்படி இரு, அப்படி இருக்காதே'' என்று சதா கட்டுப்படுத்திக்கொண்டே இருக்கும் சமுதாயத்தின் உபயத்தால் இந்த பெண் பால் குணங்கள் பிரபலமாகிவிட்டன. ஆண்களை இப்படி வற்புறுத்தாமல் விட்டதினாலோ என்னவோ இந்த ஆடவர் குணங்கள் இதுவரை பிரபலமாகவே இல்லை.

ஆனால் இப்படி தன்மையாக, நிறைவாக, பொறுமையாக சுயக்கட்டுப்பாடு அதிகம் கொண்டவனாய் இருப்பது தான் ஆண்களுக்கு அழகென்று தொல்காப்பியர் காலத்திலிருந்தே கருதப்பட்டு வந்தது. இவை எல்லாம் போக, பெரும்பாலான பெண்கள் ஆண் என்றாலே தைரியமானவன், பொறுப்பானவன், தன்னை பூ மாதிரி பார்த்துக் கொள்ளப் போகிறவன், தன் கடமைகளை முன் நின்று செய்பவன். எதற்கும் கலங்காத அஞ்சா நெஞ்சம் படைத்தவன், பரந்த மனப்பான்மை கொண்டவன், உலக நடப்புக்களை விரல் நுனியில் வைத்துக் கொண்டிருப்பவன் அன்பை லிட்டர் லிட்டராய் பொழிந்து, அவளிடம் ஆசையாய் பேசி, அவளை காதல் மழையில் நனைத்து களிப்புற வைக்கப் போகிறவன், தன்னைத் தவிர வேறு எந்தப் பெண்ணையும் திரும்பிக்கூட பார்க்க மனம் வராதவன் என்று எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகள் பெண்களிடம் உள்ளன.

சரியான வழிகாட்டுதல் கிடைக்க கொடுத்து வைத்த மிகச் சில ஆண்களே மேலே சொன்ன மாதிரி எல்லாம் இருக்கிறார்கள். துரதிர்ஷ்டவசமாக இப்படிப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை மிக குறைவாகவே உள்ளது. மீதமுள்ள சாமான்ய ஆண்கள் எல்லாம் யதார்த்தத்தில் எப்படி இருக்கிறார்கள் தெரியுமா?

* பொறுப்பைத் தட்டிக்கழிப்பதில் கில்லாடியாய் சிலர்,

* பிரச்னை என்றதும் இருந்த இடமே தெரியாமல் திடுமென மாயமாய் மறைந்து போகும் மகா கோழைகளாய் சிலர்,

* பெண்ணைக் காப்பாற்றுவது என்றால் என்ன என்றே தெரியாமல் ஆபத்து நேரத்தில்கூட அருகில் இருக்கும் பெண்ணைத் தள்ளிவிட்டு தான் முந்திக்கொண்டு தப்பிக்க முயலும் சிலர்,

* கடமையா? எனக்கா? கிலோ எவ்வளவு என்று கேட்கும் சிலர்?

* இம் எனும் முன் பயந்து நடு நடுங்கி, பெண்ணின் தலையில் பழியை போட்டுவிட்டு ஜகா வாங்கி ஓடும் சிலர்.

* போன நூற்றாண்டின் கட்டுப் பெட்டியான அபிப்ராயங்களை இன்னமும் அப்படியே அடிபிறழாமல் கடைபிடிக்கும் டைனோஸர் காலத்து பிற்போக்குவாதிகள் பலர்.

* உலகத்தைப் பற்றி எந்த அக்கறையும் இல்லாமல் அடுத்த வேலை சாப்பாடும், தூங்க ஒரு ஓரமும் கிடைத்தால் போதும் என்று ஓசியில் உடம்பை வளர்க்கும் ஒட்டுண்ணிகளாக சிலர்.

* துணைவியிடம் அன்பாய் ஒரு வார்த்தை கூட பேசத் தெரியாத சிடுமூஞ்சிகளாக சிலர்.

* மனைவியை மகிழ்விக்கவே தெரியாத மண்டூகங்களாய் சிலர்.

* கணவனிடம் ஆசையாகப் பேசலாம் என்று இவள் காலையிலிருந்து காத்துக் கொண்டிருக்க, வந்ததும் வராததுமாய் தொலைக்காட்சியே கதி என்று கிடந்து விட்டு, அதிகாரம் செய்ய மட்டும் வாயை திறக்கும், மனைவியின் தேவைகளைப் புரிந்து நடந்து கொள்ளத் தெரியாத மக்குகளாக சிலர்.

* துணைவியை வெறும் ஒரு சமையல்காரி, சலவைத் தொழிலாளி, பிள்ளை பெறும் எந்திரம் என்ற அளவில் மட்டுமே நடத்திவிட்டு, தன் சுகம் மட்டுமே பிரதானம் என்று மனைவியை மனுஷியாகக் கூட மதிக்காத ஜந்துக்களாய் சிலர்.

* பக்கத்தில் மனைவி இருக்கும்போதே, போகிறவள் வருகிறவள் என்று எல்லாப் பெண்களையும், அவ்வளவு என்ன பெண் வடிவத்தில் இருக்கும் பொருட்களையும் பொம்மைகளையும் பார்த்தால் கூட ஓவராக ஜொள்ளு விடும் சபலக் கேசுகளாக சிலர்...

* மனைவியை அசிங்கமாகப் பேசியும், திட்டியும் அடித்தும், உதைத்தும், தான் எவ்வளவு பெரிய ஆண்மகன் என்று காட்டிக்கொள்ள முயலும் அரைகுறை ஆண்களாய் சிலர்.

இவை எல்லாம் சேர்ந்த மோசமான கலவையாய் சிலர் என்று பல ஆண்கள் இப்படி குறை ஆண்களாகவே இருக்கிறார்கள். ஏன் ஆண்கள் எல்லாம் இப்படி இருந்து தொலைக்கிறார்கள்?

பெண்கள் ஆசைப்படுவது போல ஆசையாய், ஹாஸ்யமாய், பாசமாய், கம்பீரமாய், குறும்பாய், துணிச்சலாய் ஆண்கள் ஏன் அதிகம் பேர் இருப்பதில்லை? என்று நீங்கள் பார்க்கும் ஆண்களை எல்லாம் உங்கள் மனதில் கற்பனை செய்து வைத்துள்ள ஆதர்ஷ ஆண்மகனோடு ஒப்பிட்டு, ``சீ, இவன் தேறமாட்டான்'' என்று மட்டம் தட்டி, மீண்டும் மீண்டும் மனம் நொந்து போகாதீர்கள்.

A man is not born, he is made. பிறக்கும் போதே எவனும் பேராண்மை மிக்கவனாய் இருப்பதில்லை. அவனை இப்படி ஓர் ஆண்மகனாய் மாற்றுவது தான் பெண்களின் மிகப் பெரிய சமூகப் பணி. தாயாய், தமக்கையாய், மனைவியாய், மகளாய், மருமகளாய், சகாவாய் இருந்து பெண்கள் எல்லோரும் தொடர்ந்து பதப்படுத்திக் கொண்டே இருந்தால் ஒழிய ஆதர்ஷ ஆண் உருவாவதே இல்லை.

நீங்கள் எந்த பேராண்மைமிக்க மனிதனை வேண்டுமானாலும் உதாரணமாக எடுத்துக்கொள்ளுங்களேன், அவர்கள் எல்லாம் அத்தனை பேராண்மையைப் பெறக் காரணம், அவர்களை அப்படி பதப்படுத்திய பெண்களே. ஆனால் இந்த பேராண்மைமிக்க ஆண்களிடம் ஒரு பெரும் பிரச்னை என்னவென்றால், இந்த மஹா உத்தமனான ஆண்களால் பெண்களுக்கு எப்போதுமே பிரயோஜனம் இருந்ததில்லை.

புத்தரும், மஹாவீரரும், சங்கரரும், விவேகானந்தரும், ரமணரும், முத்துராமலிங்கரும், காமராஜரும், பெரியாரும் மிகவும் மேன்மையான ஆண்கள்தான். ஆனால் அவர்கள் மேன்மைக்குக் காரணமே, அவர்கள் பெண்களை விட சமூக மாற்றமே மேல் என்று வேறு இலக்காக இருந்ததுதான். பெண்களை திரும்பியும் பார்க்காமல் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, கொள்கை, இலட்சியம் என்று தன் இலக்கிலேயே குறியாய் இருந்ததாலேயே இந்த மாதிரி ஆண்களின் மேல் பெண்களுக்கெல்லாம் பெரிய ஈர்ப்பிருந்தது. ஆனால் இவ்வளவு வகீகரம் இருந்தும், மிகச் சிறந்த உதாரண புருஷர்களாய் இருந்தும், இவர்களால் பெண்களின் அகவாழ்க்கைக்கு எந்த உபயோகமும் இல்லை. இதை எல்லாம் கடந்த நிலையை, அடைந்திருந்தார்கள், இந்த பேராண்மைமிக்க மனிதர்கள்.

இவர்களைத் தவிர மற்ற ஆண்கள் எல்லோருமே சாமானியர்கள்தான். அதனால் தான் அவர்களுக்கு பெண் ஒரு முக்கியமான ஈர்ப்பு விசை ஆகிறாள். இப்படி சாமானிய ஆண்களுக்கே பெண்ணின் துணை தேவைப்படுகிறது என்பதால், வேறு வழியில்லாமல் இந்த குறை ஆண்களோடு ஒப்பேற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் பெண்கள் எல்லாம்.

இதுதான் யதார்த்தம் என்பதால், ஆண்களை ஹேண்டில் செய்ய விரும்பும் பெண்கள் கற்றுக் கொள்ள வேண்டிய மிக முக்கியமான இரண்டாம் பாடம், acceptance. அதாவது, நிபந்தனையற்று ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை.

எந்த ஆணும் பெர்ஃபெக்ட் இல்லை. நாம் மஹாத்மா என்று நினைப்பவனும் மஹா கேவலமான வக்கிர கேஸாக இருக்கலாம். அதனால் ஆண்களை வெறுமனே தரப்பரிசோதனை செய்து மட்டம் தட்டுவதை நிறுத்தி விடுங்கள். பேரின்ப தேடலே பெரிது என்று பேராண்மைமிக்கவர்கள் போய்விடுவதால், சாதாரண ஆண்கள் மட்டுமே லௌகீக வாழ்க்கைக்கு மீந்து இருக்கிறார்கள். இந்த ஆண்கள் குறை ஆண்கள்தான் என்று நமக்கு ஏற்கெனவே தெரியுமே. பிறகு இவர்களை சும்மா சொல்லிக்கொண்டிருப்பதில் என்ன லாபம்? இவன் இப்படித் தான். இவனை இப்படியே ஏற்று, வழிக்குக் கொண்டு வருகிறேன், என்று பெண்கள் ஆண்களை உள்ளது உள்ளபடி ஏற்றுக்கொள்ளப் பழகினால் தான், ஆண்களை ஹேண்டில் செய்யும் அடுத்த கட்டத்திற்கு நீங்கள் நகர முடியும்.

அதை விட்டுவிட்டு, குறை கண்டுபிடித்துக்கொண்டே இருந்தால், நேரம் வீணாவதோடு, அரை ஆணை முழு ஆண் ஆக்குவதுதான் ஆட்டமே என்றான பிறகு, ஆண் ஏன் அரையாக இருக்கிறான் என்று எடுத்த எடுப்பிலேயே விதண்டாவாதம் பேசினால், இந்த ஆட்டத்தில் எப்படி முன்னேறுவதாம்?

ஆக, ஆண்களை ஹேண்டில் செய்ய வேண்டுமா, நீங்கள் கற்றுப் பழக வேண்டிய அடுத்த பாடம், அவனை அப்படியே ஏற்றுக்கொண்டு, பிறகு நீங்கள் விரும்பும்படி அவனை மாற்றிக் கொள்ளுங்கள். ஆனால் முக்கியமான மேட்டரே, இந்த அப்படியே ஏற்றுஃபிகேஷன்தான். இது தான் உங்களுக்கான இந்த ஹோம் ஒர்க். உங்களைச் சுற்றியுள்ள உருப்பட்ட, உருப்படாத, ஆண்களைக் கண்டு மன சஞ்சலப்படாமல், அவர்களை அப்படியே ஏற்றுக் கொள்ளும் சகிப்புத் தன்மையைப் பழக்கிக் கொள்ள முயலுங்களேன்.

இதில் நீங்கள் தேர்ந்து விட்டீர்கள் என்றால், ஆண்களை ஹேண்டில் செய்யும் அடுத்த பாடத்தைக் கற்றுக் கொள்ள நீங்கள் ரெடி!

Wednesday, October 22, 2008

அடக்கி வாசித்தல்.

ஆண்களை எப்படி ஹேண்டில் செய்வது என்று நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டுமா? இது காலங்காலமாய் பெண்கள் பயின்று வந்த ஒரு மிகப் பெரிய சாஸ்திரம். ஆனால் ரொம்பவே சீக்ரெட்டான ஒரு சாஸ்திரம்.

எதற்கு இவ்வளவு ஒளிவு மறைவு என்று கூட நீங்கள் யோசிக்கலாம். ஆனால் இந்த ரகசியத் தன்மைக்கு ஒரு வலுவான காரணம் இருக்கிறது. தன்னை ஒரு பெண் ஹேண்டில் செய்யப் போகிறாள் என்று தெரிந்தாலே... அட, ஆண்களை விடுங்கள்... குட்டிக் குட்டி குழந்தைகள் கூட பெரிதாக முரண்டு பிடித்து எப்படியாவது நழுவி தப்பித்துவிட முயலும் போது, இத்தனை வலிய, பெரிய ஆண், அப்படிச் செய்ய மாட்டார்களா? ஆகவே, ஆண்களை சமாளிக்க வேண்டும் என்றால் அதற்குத் தேவையான முதல் அஸ்திரமே இந்த ஒளிவு மறைவுதான்.

காட்டில் வாழும் மிகக் கொடிய விலங்குகளில் ஒன்று சிங்கம். சாதாரணமாக, சிங்கத்தைப் பார்த்தால் மனிதர்கள் ஓடிப் பதுங்கிக் கொள்வார்கள். மற்றபடி சிங்கம் மனிதர்களை மருந்துக்குக் கூட மதிக்காது. முடிந்தால் மிதித்துக் கடித்துக் குதறி தின்றுவிடும். ஆனால் அதே சிங்கத்தை சர்க்கஸில் சேர்த்து அதை ஒரு நெருப்பு வளையத்தினுள் குதிக்க வைக்க அதே மனிதனால் முடிகிறதே. எப்படி?

சாதாரண சிங்கம் நெருப்பைக் கண்டால் ஒதுங்கும். மனிதர்களைக் கண்டால் தாக்கும், இது தான் அதன் இயல்பு. ஆனால் இந்த சர்க்கஸ் சிங்கம் மட்டும் எப்படி மனிதன் சொன்னதைக் கேட்டு நெருப்பு வளையத்தினுள் குதிக்கிறது?

அதுதான் மனிதனின் சாதுர்யம். தன்னை விடப் பல மடங்கு வலிமையும், ஆக்ரோஷமும் கொண்ட ஒரு விலங்கை வெறும் சில உபாயங்களைக் கொண்டு அடக்கி, வழிக்குக் கொண்டு வருவதுதான் மனிதனின் சாமர்த்தியம்.

மனித ஆணும், மனிதப் பெண்ணை விட வலிமையானவன். ஆக்ரோஷம் மிக்கவன், அபாயகரமானவன். ஆனால், அந்த சர்க்கஸ்காரி உபயோகிக்கும் அதே சாதுர்யத்தை சாதாரணப் பெண்களும் பயன்படுத்த பழகிக்கொண்டால், மனித ஆணும், சிங்கத்தைப் போலவே சாந்தமாய் மாறிப்போவான்.

அதெல்லாம் சரி. இந்த சர்க்கஸ்காரி உபயோகிக்கும் அந்த சாதுர்யம்தான் என்ன? எடுத்த எடுப்பில் எந்த சர்க்கஸ் காரியும், ``ஏய் சிங்கமே, உன்னை நான் என்ன செய்கிறேன் பார். உன்னை ஹேண்டில் செய்ய கற்றுக் கொண்டு இதோ தெரிகிறது பார், இந்த நெருப்பு வளையம், அதன் உள்ளே உன்னைக் குதிக்க வைக்கப் போகிறேன்... தெரிந்துகொள்!'' என்று தன் நோக்கத்தை வெட்ட வெளிச்சமாய் போட்டு உடைப்பதே இல்லை. அதற்கு மாறாய் நெருப்பு என்று ஒன்று இருப்பதாகவும், அதை ஒரு வளைய வடிவில் வைத்திருப்பதாகவும் இந்த ஏற்பாட்டிற்கும் தனக்கும் சம்பந்தம் இருப்பதாகவும் அவள் காட்டிக் கொள்வதே இல்லை.

அதற்குப் பதிலாய் சிங்கத்திடம் சாதாரணமாய் பழகுகிறாள். அதன் பராமரிப்பில் கவனம் செலுத்துகிறாள், வேளா வேளைக்கு தன் கையாலேயே உணவு பரிமாறுகிறாள். அதன் பக்கத்திலேயே இருந்து பரிச்சயத்தை ஏற்படுத்திக் கொள்கிறாள். இப்படி ஆரம்பித்து, அப்புறம் சிங்கத்தின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகும் வரை காத்திருந்து பிறகு மெல்ல மெல்ல அதைப் பழக்கி, முதலில் சாதா வளையம், பிறகு சிவப்பு நிற வளையம், அப்புறம் தூரத்தில் கொஞ்சம் நெருப்பு, பிறகு பக்கத்தில் நெருப்பு, பிறகே வளைவில் நெருப்பு என்று மிகவும் நிறுத்தி நிதானமாகத் தானே செய்கிறாள்.

இவ்வளவு செய்யும் போதும் எந்தக் கட்டத்திலுமே தன் நோக்கத்தை அவள் சிங்கத்திடம் தெரிவிப்பதே இல்லை. அதனால்தான் சிங்கமும் தன் கெடுபிடியைத் தளர்த்தி, அவள் மனம் போல நடக்கப் பழகிக்கொள்கிறது.

இதற்கு மாறாக இவள் ஆரம்பத்திலேயே ``வா சிங்கம்... இந்த நெருப்பு வளையத்தினுள் போய் குதித்துவிடு'' என்று மிகவும் ஓப்பனாய் தன் எண்ணத்தை வெளிப்படுத்தி இருந்தால், சிங்கம் அவளை அங்கேயே சிங்கிள் லபக்கில் விழுங்கியிருக்குமே.

அதனால் ஆண்களை ஹேண்டில் செய்யும் அரிய அஸ்திரங்களை கற்றுக்கொள்ள நீங்கள் விரும்பினால் முதலில் நீங்கள் பழக வேண்டிய கலை, உங்கள் உண்மையான நோக்கம் என்ன என்று வெளியே காட்டிக் கொள்ளாத ரகசியம் காக்கும் திறமை.

``அதெல்லாம் முடியாது. என்னால் இப்படி எல்லாம் ரகசியம் காத்துக் கொண்டிருக்க முடியாது. நான் எப்போதுமே வெட்டு ஒன்று துண்டு இரண்டுதான். மனசுல பட்டதை பட்டு பட்டுனு செய்துதான் பழக்கம். இப்படி எல்லாம் ஒளிவு மறைவா என்னால் இயங்க முடியாது,'' என்று நீங்கள் நினைத்தால், வெல் அண்ட் குட், நீங்கள் நீங்களாகவே இருக்கலாம், உங்களை யாரும் எதற்கும் கட்டாயப்படுத்தவில்லை. ஆனால் ஆண்களை எப்படி ஹேண்டில் செய்வது என்ற இந்த கலையை கற்றுக்கொள்ளும் அடிப்படை தகுதி உங்களுக்கு இல்லை, அதனால் நீங்கள் இந்த ஆட்டத்திலிருந்து விலகிவிடுவதே நல்லது.

இல்லை. இந்தக் கலையை நான் கற்றுக்கொள்ளத் தான் விரும்புகிறேன். ஆனால் உள்நோக்கம் மறைத்துப் பழக்கமில்லை. எப்படிச் செய்வது என்று தெரியாது என்று தயங்குகிறீர்கள் என்றால் டோன்ட் ஒர்ரி. இது ரொம்ப சுலபம் தான். உதாரணத்திற்கு ஒரு குழந்தை இருக்கிறது என்று வையுங்களேன். அந்தக் குழந்தைக்கு ஜுரம் என்று மருந்து தர வேண்டியுள்ளதென்றால் அதை எப்படிச் செய்வீர்கள்? ``இந்தா புடி, மருந்தைக் குடி'' என்று நேரடியாகவா சொல்வோம்? அப்படிச் சொன்னால்தான் குழந்தை முழு சவுண்டில் சைரனை ஆரம்பித்துவிட்டு அங்கிருந்து ஜகா வாங்கி விடுமே!

தன்னைத் தானே பராமரித்துக் கொள்ளக் கூடிய பெரிய குழந்தை என்றால் உண்மையைச் சொல்லி குடிக்க வைக்கலாம். மிகவும் சின்னக் குழந்தை என்றால், எதுவுமே பேசாமல் குழந்தையை மடியில் போட்டு, எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் ஏற்கெனவே எடுத்து வைத்திருந்த சங்கு நிறைய மருந்தை டபக் என்று குழந்தை வாயில் ஒரேயடியாக ஊற்றி, உடனே பாலைக் கொடுத்து குழந்தையை அப்படியே சமாதானப்படுத்துகிறவள்தான் சாமர்த்தியமான தாய்.

இப்படி அந்தத் தாய் குழந்தைக்கு தன் நோக்கத்தைத் தெரிவிக்காமல் மடார் என்று காரியத்தைச் செய்து முடிப்பது அந்தக் குழந்தைக்கு நன்மை தானே? அதைப் போலத்தான் இந்த `யுத்தி நம்பர் ஒன்று'ம், நீட்டி முழக்கி, விளக்கி, விவாதித்து முன்னறிவிப்புக் கொடுத்து எல்லாம் ஆண்களை நீங்கள் ஹேண்டில் பண்ண முடியாது. நீங்கள் பாட்டிற்கு இயல்பாக ஆண்களை அணுகுங்கள், உங்கள் உள்நோக்கம் வெளியே தெரியாதபடிக்கு. எப்படியும் ஆண்கள், ``இவள் வெறும் ஒரு பெண் தானே... இவளுக்கு அப்படி என்ன பெரிதாகத் தெரிந்து விடப் போகிறது'' என்று அஸால்ட்டாகத் தான் இருப்பார்கள். அநேக ஆண்களுக்குத் தான் தெரியாதே, எல்லா ஜீவராசிகளையும் போல், மனித வர்க்கத்தில் பெண் தான் ஆணை விட ரொம்ப பொல்லாதவள். என்று...

இந்த ``ஆஃப்டர் ஆல் பெண் தானே'' என்கிற அஜாக்கிரதையை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டால்தான் பெண்களுக்கு அட்வான்டேஜ் என்பதனால், `ஆண்களை ஹேண்டில் செய்யும் இந்தக் கலையின் முதல் பாடம் : `அடக்கி வாசியுங்கள்.' நீங்கள் ஹேண்டில் செய்யப் போகும் ஆணுக்கு கடைசிவரை தெரியவே கூடாது, அதுதான் ஆரம்பத்திலிருந்தே உங்கள் உள்நோக்கம் என்று.

எங்கே இந்த முதல் பாடத்தை வெற்றிகரமாய் கடைப்பிடித்து, ஏதாவது சில ரகசியங்களை பத்திரமாய் காப்பாற்றிக் காட்டுங்கள், பார்ப்போம். `சொல்லக்கூடாதது பெண்ணிடம் ரகசியம்' என்பதை மட்டும் நீங்கள் பொய்ப்பித்துக் காட்டிவிட்டீர்கள் என்றால், நீங்கள் இந்த முதல் டெஸ்டில் பாஸ் என்றும், இனி வரும் அடுத்தடுத்த அஸ்திரங்களை கற்றுக் கொள்ள தகுதியானவர் என்றும் அர்த்தம். பார்த்துவிடலாமே, நீங்கள் பாஸா இல்லையா என்று!

குமுதம் ஸ்நேகிதியிலிருந்து வெட்டி ஒட்டியது

Monday, October 6, 2008

ஆண்களை ஹாண்டில் செய்வது எப்படி, 3

இந்த ஆண்கள் ஏன் வித்தியாசமாகிப் போனார்கள்? அவர்களும் பெண்களைப் போலவே இருந்திருந்தால் உலகில் எந்த ஆண்_பெண் பிரச்னைகளுமே வந்திருக்காதே! என்று நீங்கள் யோசிப்பது நியாயமானதுதான். ஆனால் என்ன செய்வது? இயற்கையின் லாஜிக் வேறாக இருந்ததே.

இயற்கையில் பெண் என்பவள் ரொம்ப பெரிய பொக்கிஷம். ஏன் தெரியுமா? பெண்ணிடம் தான் ஜனத்தொகையைப் பெருக்கும் பெரும் ஆற்றல் இருக்கிறது. ஜனத்தொகையை மட்டுமே பெருக்கிக் கொண்டு இருப்பதா ஒரு பெண்ணின் வேலை? பெண் என்ன பிள்ளை பெறுகிற யந்திரமா? என்று நீங்கள் ஆட்சேபித்தால், வெயிட் வெயிட். நாமெல்லாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நூற்றாண்டில் வேண்டுமானால் மனித ஜனத்தொகை ஓவராய் இருப்பதினால், தாமத திருமணம், கருத்தடைச் சாதனம், பிள்ளை பிறப்பை சுயமாகக் குறைத்துக் கொள்ளும் போக்கு, கருக்கலைப்பு முறைகள், குடும்பக் கட்டுப்பாட்டு திட்டம் என்று நாம் தீவிர ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறோம். ஆனால் மனிதர்கள் தோன்றிய மூன்று மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னிருந்த காலத்தில் மிக மிகக் குறைந்த எண்ணிக்கையில் வாழ்ந்த ஒரு சிறுபான்மை உயிரினம் மனிதர்கள் மட்டுமே. அந்த கால கட்ட ஜீவனத்தில் பிறப்பு விகிதத்தை விட இறப்பு விகிதம் தான் அதிகம் என்பதால், குழந்தைகளைப் பெற்றுத் தரவல்ல பெண் மிகப் பெரிய பொக்கிஷமாகவே கருதப்பட்டாள்.

பெண்கள் பாதுகாப்பாய் சவுக்கியமாய் இல்லை என்றால் ஒட்டுமொத்த உயிரினமே அழிந்து போய்விடுமே என்றுதான், பெண்களைப் பாதுகாக்கவென்றே இயற்கை ஆண்களைப் படைத்தது. உங்களுக்கு ஒன்று தெரியுமா? உலகத்தில் உயிர்கள் முதல் முதலில் தோன்றிய காலத்தில் ஆண் என்ற பாலினமே இருக்கவில்லை! எல்லா உயிர்களுமே ஆரம்பத்தில் பெண்பாலாக மட்டுமே இருந்தன. அவ்வளவு ஏன்? இன்று வரை பூமியில் மிக அதிக எண்ணிக்கையில் வாழும் வைரஸ், பாக்டீரியா, ஆல்கே, அமீபா மாதிரியான நுண்ணுயிர்களில் ஆண் பால் என்ற இனமே இல்லை... எல்லாமே ஒன்லி விமென்! ஏன் என்றால் இந்த உயிர்களுக்கு ஆணின் தேவை இல்லை! எந்தெந்த உயிர்களில் எல்லாம் பிற கிருமிகள் அல்லது வேறு உயிரினம் தாக்கும் ஆபத்து அதிகமாக உள்ளதோ அந்தந்த உயிர்களில் மட்டும் தான் ஆண் என்கிற ஒரு தனி பாலினம் இருக்கிறது.

மனிதர்களிலும் ஆணின் கடமை, பெண்ணைப் பாதுகாப்பதுதான். அதனால் தான் எரியும் விமானம், மூழ்கும் டைடானிக் கப்பல் ஆகிய செயற்கை விபத்துக்கள் ஆகட்டும், சுனாமி, நிலநடுக்கம், புயல் வெள்ளம் என்ற இயற்கைச் சீற்றங்கள் ஆகட்டும்... எங்கு ஆபத்து நேர்ந்தாலும் முதலில் காப்பாற்றப்படுவது பெண்ணினம் தான்.

இந்தக் காலத்தில் பெண்களைப் பாதுகாப்பது அவ்வளவொன்றும் கஷ்டமில்லை. சமுதாயம், சட்டம், போலீஸ், மகளிர் ஆணையம் என்று பல கட்டமைப்புகள் இருப்பதால் பெண்களுக்கு நிறையவே பாதுகாப்பு உள்ளது. ஆனால் மனிதர்கள் தோன்றிய காலத்தில், இந்த ஏற்பாடுகள் இருக்கவில்லை. பிற மிருகம் தாக்கிவிடும் அபாயம் எந்நேரமும் இருந்த அந்த ஆரண்ய காண்ட வாழ்க்கை முறையில் ஒரு பெண்ணைப் பாதுகாக்க வேண்டும் என்றால் சும்மா சாதாரண நபரால் அது முடியாதே. அதுவும் ஆயுதங்கள் எதுவும் கண்டுபிடிக்காத காலத்தில் பெண்ணைக் காப்பாற்ற வேண்டுமென்றால், அதிக பட்ச வீரமும், அதைவிட அதிகமான தேகபலமும் கொண்டவனால் மட்டும்தான் முடியும்.

இந்த அதிகபட்ச வீரமும் தேக பலமும் தானாய் தோன்றிவிடாதே! அதை உருவாக்க டெஸ்டோஸ்டீரான் என்கிற தேகபலம் கூட்டும் ஹார்மோன் தேவைப்படுமே. இன்று ஒலிம்பிக்ஸ் மாதிரியான போட்டியில் கலந்துகொள்ளும் வீரர்கள் ஜெயித்தே ஆகவேண்டும் என்ற வேட்கையில் டெஸ்டோஸ்டீரான் மாதிரியான ஹார்மோன்களை ஊசி, மாத்திரை என்று செயற்கையாக உடம்பில் ஏற்றி, திடகாத்திரமான உடலைப் பெற முயல்கிறார்கள். அந்தக் கால காட்டு வாழ்க்கையில் ஆண் இப்படிச் செய்யவெல்லாம் வாய்ப்பே இல்லை. அவனே சுயமாகப் போராடி, தன் உடம்பை வளைத்து நிஜ டெஸ்டோஸ்டீரானை சுரந்தாக வேண்டும். அப்போதுதான் ஆபத்துகளுடன் மோதி, அயராமல் தன் துணைவியையும், பிள்ளைகளையும் அவன் காப்பாற்ற முடியும்.

ஆண்கள் இப்படி டெஸ்டோஸ்டீரான் உற்பத்தியை அதிகரிக்கும் நிர்பந்தத்திற்கு தள்ளப்பட, பெண்கள் தங்களது பாதுகாப்பு கருதி, அதிக பட்ச டெஸ்டோடீரான் சுரத்தலை வெளிப்படுத்தும் ஆண்களோடு மட்டுமே கூட விரும்பினார்கள். அதற்கும் ஒரு காரணம் இருந்தது. இவள் பாட்டுக்கு ஒரு சோப்ளாங்கிக்கு பாவம் பார்த்து அவனோடு கூடி, பிள்ளை பெற்றாள் என்று வையுங்களேன். ஆபத்து காலத்தில் சோப்ளாங்கி, தைரியமாகப் போய் போராடி, மனைவி மக்களைக் காப்பாற்றிடாமல், பயந்து போய் எல்லாப் பொறுப்பையும் மனைவியின் தலையில் கட்டிவிட்டு எங்கோ ஓடி ஒளிந்துகொண்டால் பிறகு அவளுக்குத் தானே எல்லா கஷ்டமும்? இந்த துர்பாக்கியம் எல்லாம் நேர்ந்துவிடக் கூடாதென்று தான் பெண்கள் எல்லோரும் மிக உஷாராக போதுமான டெஸ்டோஸ்டீரான் சுரத்தலை நிரூபிக்கும் ஆண்களோடு மட்டுமே கூட முயல்கிறார்கள்.

அவதார புருஷன் ராமனாகவே இருந்தாலும் வில்லை வளைத்தால் தான் சீதை என்று கட்டளைவிதித்தது கூட ராமனின் டெஸ்டோஸ்டீரான் அளவைச் சோதிக்கும் ஒரு நேரடி முயற்சியே! ஆக அந்தக் காலப் பெண்கள் எல்லாம் பார்த்துப் பார்த்து அதிக பட்ச டெஸ்டோஸ்டீரான் சுரந்த ஆண்களை மட்டும் ஜலித்து எடுத்து உறவுகொண்டதால், ஆண்வர்க்கம் போகப் போக அதிக அளவு டெஸ்டோஸ்டீரான் கொண்டவர்களாக மாறினார்கள். ஒரு நாள் இரண்டு நாட்களுக்கு அல்ல, முழுவதாய் மூன்று மில்லியன் ஆண்டுகளுக்கு ஆண்கள் இப்படி அதிக டெஸ்டோஸ்டீரான், இன்னும் அதிக டெஸ்டோஸ்டீரான் என்று சுரந்துகொண்டே போனதில், ஆண்கள் அதிக தசைப் புடைப்பு, அதிக ரத்த அணுக்கள், அதிக நுரையீரல் கொள் அளவு, அதிக வலி தாங்கும் தன்மை, அஞ்சாத நெஞ்சம் என்று பல அனுகூலங்களைப் பெற்றார்கள்.

இந்த அதிகபட்ச டெஸ்டோஸ்டீரான் ஆணின் உடம்பை பல விதங்களில் மாற்றி அமைத்ததைப் போலவே அவனது மனதையும் மாற்றியது. அடிப்படை பெண் வடிவ மூளையில் மொழி மையம் பெரிது. கை ஜாடை, முக அசைவு போன்றவற்றை அறியும் மையங்கள் அதிகம். ஆணுக்கோ வேட்டையாடும் திறனை அதிகரிக்கும் ஆற்றல்கள் அதிகம் தேவை. ஓடும் இரையைத் துல்லியமாய் தேடிப் பிடித்து, அதன் வேகம், தன்னை விடவும் எவ்வளவு தூரம் என்பதையும் கணித்துக் குறிதவறாமல் ஆயுதத்தை எறிந்து, வேட்டையில் வெற்றி பெறத் தேவையான இந்த திறமையைத் தான் visuo spatial ஆற்றல் என்போம். அதாவது கண், கை அசைவு, தூரம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து செயல்படும் திறன்.

இந்தத் திறனெல்லாம் மனித இனத்திற்கு ஆரம்பத்திலிருந்தே இருக்கவில்லை. மனிதர்கள் பூச்சி உண்ணும் தாவர பட்சிணி வகையைச் சேர்ந்தவர்கள். பெரும் பனி யுகத்தில் கஷ்ட ஜீவனத்தை வெல்ல வேறு வழியில்லாமல் மாமிச பட்சிணி வாழ்க்கை முறைக்கு மாறியவர்கள். அடிப்படையில் பூச்சி தின்னிகள் என்பதால் வேட்டைக்கு உதவாத ஒரு சாதா மூளைதான் ஆரம்பகால மனிதர்களுக்கு இருந்தது. மனித மரபணுக்கள் துரிதமாக செயல்பட்டு, மனித இனத்தைக் காப்பாற்ற புதிதாய் ஒரு சூப்பர் வேட்டை மூளையை உருவாக்க வேண்டியிருந்தது.

ஆனால் தாவர பட்சிணி மூளையை, மாமிச பட்சிணி மூளை ஆக்குவது அவ்வளவு சுலபமில்லையே! மூளையின் அளவு கொஞ்சம்தான். அதை ரொம்பவும் பெரிதாக்க முடியாது. அப்புறம் பிரசவத்தின்போது சிசுவின் தலை, இடை எலும்பிலேயே மாட்டிக் கொள்ளுமே! தலையும் பெரிதாக வேண்டும், பெண்ணின் மெல்லிடையை விட்டுப் பிரசவித்து வெளியேறத் தோதாகவும் இருக்க வேண்டும் என்றால் அது எப்படி சாத்தியமாகும்? அதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடித்தன மரபணுக்கள். தலையைக் கொஞ்சம் பெரிதாக்கி, இடையைக் கொஞ்சம் அகலமாக்கி, மூளையில் இருந்த அநாவசிய மையங்களைக் காலிசெய்து வெற்றிடங்களை வாழ்க்கைக்குத் தேவையான வித்தைகளை வைத்து நிரப்பின.

அதனால் ஆண்கள் முக்கால்வாசி மொழி மையத்தை இழந்தார்கள். கூடவே கை ஜாடை, முக ஜாடை அறியும் மையங்களும் காலியாகின. எப்படியும் ஒரு ஆணுக்கு இந்தச் செயல்பாடுகள் தேவைப்படவில்லை. ஒரு நல்ல வேட்டுவன் மௌனமகத்தானே இருந்தாக வேண்டும். பேசிக்கொண்டே இருந்தால் மிருகமல்லவா அவனை வேட்டையாடிவிடும்! கை இருக்கிறதே என்று இவன் விஸ்தாரமாய் ஜாடை செய்து நண்பர்களோடு உரையாடினாலோ, அசைவைக் கவனித்ததுமே மிருகங்கள் உஷாராகி ஓடிவிடும். அதோடு, `நான் பாவமில்லையா! என்னை விட்டுடேன்! என்று ஏதாவது மிருகம் பரிதாபமாய் அவனைப் பார்த்தால், `போனா போகட்டும், இன்னிக்கு நாம பட்டினியா கிடந்தாத்தான் என்ன! என்று இவன் பச்சாதாபத்தில் வெறும் கையோடு வீட்டிற்கு வந்தால் போச்சு! அன்றே மனித வரலாறுக்கு முற்றுப்புள்ளி விழுந்திருக்கும்! ஆக, முக ஜாடையை உணரும் மையமும் அவுட்.

இது போக டெஸ்டோஸ்டீரான் இன்னொரு பெரிய மாற்றத்தையும் மனித மூளையில் ஏற்படுத்தியது. அது ஆணை விடாமுயற்சி கொண்டவனாக்கியது... தொடர்ந்து ஒரே விஷயத்தில் குறியாய் இருந்து தன் இலக்கை எட்டும் வரை அயராதிருக்க வைத்தது.

ஆனால் இதிலும் ஒரு சிக்கல்.. அவன் என்னதான் முயன்று தொடர்ந்து குறி வைத்தும், கடைசி நேரத்தில் இரை டிமிக்கி கொடுத்து ஓடிவிட்டால், அந்தத் தோல்வி இவனை `சை!' என்று சலிப்புற செய்யும். இவ்வளவு கஷ்டப்பட்டும் பலனில்லையே என்று சோர்ந்துபோய், தன்னம்பிக்கை இழந்து வேட்டைக்கே ஒரு முழுக்குப் போட்டுவிட்டால் அவன் தோல்வி மனப்பான்மை மனித இனத்தை நிர்மூலமாக்கிவிடும்.

வேட்டையில் வெற்றி பெறாவிட்டாலும் அவனை உற்சாகம் குறையாமலிருக்க வைப்பதுதானே மரபணு ரீதியாகப் பயனளிக்கும். அதனால் டெஸ்டோஸ்டீரான் ஆணின் மூளையிலுள்ள இன்ப மையத்தை மாற்றி அமைத்து, ஒவ்வொரு வேட்டையும் சந்தோஷம். அதன் வெற்றி தோல்வி இரண்டாம் பட்சம் என்ற உணர்வை ஏற்படுத்தியது.

அளவிற்கு மிஞ்சினால் அமுதமே நஞ்சாகும்போது, டெஸ்டோஸ்டீரான் மட்டும் விதிவிலக்கா என்ன? டெஸ்டோஸ்டீரான் சுரப்பு அதிகரிக்க அதிகரிக்க அதன் பக்க விளைவுகள் பல தலை தூக்க ஆரம்பித்தன.

அது ஆண்களை எதிலும் முந்திச் செல்லத் தூண்டியது. காரணம், மற்ற ஆண்களை விட முந்தியிருக்கும் `ஆல்ஃபா ஆணை'த்தானே எல்லா பெண்களும் விரும்புகிறார்கள். அதனால் எடுத்த காரியம் எதுவாக இருந்தாலும், பிற ஆண்களை விட தான் பெரியவன் என்று காட்டிக்கொண்டே ஆக வேண்டும் என்ற உத்வேகமும் ஆண்களுக்கு அதிகமாய் இருந்தது. போகப் போக, இந்த `நான் தான் உசத்தியாக்கும்' என்கிறா போக்கே ஆண்களை ஆதிக்க மனப்பான்மை கொள்ள வைத்தும் விட, உலகிலேயே தான் ஒருவன் தான் சூப்பர், மற்றவை அனைத்தும் மட்டம் என்ற எண்ணம் தலைதூக்க, மற்ற எல்லாவற்றையும்' தன் ஆதிக்கத்திற்குள் கொண்டுவர பெரிதும் போராடினான் ஆண். இதில் ஒரு சிக்கல் என்னவென்றால் இந்த `மற்ற எல்லாவற்றையும் என்ற பட்டியலில் மனிதப் பெண்ணும் அடங்கிப் போய்விட்டாள். அதனால் அவளையும் அடக்கி ஆள்வது தன்னுடைய பிறப்புரிமை என்றே நினைக்க ஆரம்பித்துவிட்டான் ஆண். ஓவர் டெஸ்டோஸ்டீரான் சுரத்தல் அவனை முன்கோபியாய், முரடனாய், மூர்க்கனாய் மாற்றியது. பதவி ஆசை, பெண்ணாசை, போர் வெறி, வன்முறை என்று ஆண் தடம் புரள, இதற்கெல்லாம் பெண்ணும் பலியாக ஆரம்பித்தாள்.

ஆக, ஆணைத் தன்னுடைய ஆயுதமாக பயன்படுத்தவே பெண் அவனுக்குள் அதிகபட்ச டெஸ்டோஸ்டீரானை சுரக்கச் செய்தாள். ஆனால் காலப் போக்கில் இந்த டெஸ்டோஸ்டீரானே ஆண் - பெண் வித்தியாசங்களை ஊதி ஊதிப் பெரிதாக்கி, இன்றைய தேதியில், இந்த இரு பாலினரும் ஒருவருக்கு மற்றவர் புரியாத புதிராகவே போய்விட்டார்கள். ஆனால் உற்றுப் பார்த்தால் தெரியும் ஆணின் இந்த எல்லா வித்தியாசங்களுக்கும் காரணம் ஆண்கள் அல்ல, பெண்களே!

இதெல்லாம் படிக்க சுவாரசியமாய் இருந்தாலும், பெண்ணின் கை மீறிப் போய்க் கொண்டிருக்கும் இந்த ஆண்களை மறுபடியும் பெண்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது எப்படி? சும்மா இருந்த ஆணை பயங்கரவாதியாக்கிவிட்டாளே பெண், இனி அவனை எப்படி ஹேண்டில் செய்து அமைதியை நிலைநாட்டுவாள்?

அதற்கும் ஏகப்பட்ட ஐடியாக்களை கைவசம் வைத்திருக்கிறார்கள் பெண்கள். அவற்றைப் பற்றி எல்லாம் அடுத்த சிநேகிதியில்!

Friday, October 3, 2008

பதின் பருவத்தின் top பத்து பிரச்சனைகள்!

குழந்தைகளாய் இருக்கும் வரை அப்பா அம்மா என்றாலே அடங்கிப்போய் அன்பாய் பழகியவர்கள் எல்லாம் இந்த பதின் பருவத்தை தொட்டு விட்டாலே போதும், புது புது பிரச்சனைகள் பல தலை தூக்கிவிடுகின்றன. இப்படி பலதரப்பட்ட பதின் பருவ பிரச்சனைகள் இருந்தாலும், மிக அதிகமாய் ஆலோசனை மையத்திற்கு வருபவை எவை தெரியுமா?
1. படிப்புல் வீக்”அஞ்ஜாம் கிளாஸ் வரைக்கும் அவ்வளவு சூப்பரா படிச்ச பிள்ளை தான், என்னனே தெரியல, வர வர படிப்புல ரொம்வ வீக்காயிட்டே போய், மார்க்கெல்லாம் சொல்லிக்கிறா மாதிரியே இல்லை” என்ற புகாருடன் வரும் பெற்றோர்களின் எண்ணிக்கை தான் மிக அதிகம். குழந்தையை அழைத்து விசாரித்தால், “எவ்வளவு படிச்சாலும் மறந்து போயிடுது” என்கிறார்கள், அல்லது, “புக்கை திறந்தாலே, பகல் கனவா வருது” என்கிறார்கள். பரிசோதித்து பார்த்தால் அநேக குழந்தைகள் புத்திசாலிகளாகவே இருந்தாலும், வெறுமனே மக் அடித்து, அர்த்தமே புரியாமல் படிக்கும் பாணி தெரியவரும். இந்த “டப்பா அடிக்கும்” பாணி எல்லாம் சின்ன கிளாஸ் சிம்பிள் பாடங்களுக்கு ஓகே. ஆனால் பெரிய கிளாஸ் போக போக, பாடங்களின் ஆழம் அதிகம், புரிந்துக்கொள்ள வேண்டிய மேட்டரின் அகலமும் அதிகம் என்பதால் இந்த மனப்பாட யுத்தி அதற்கு மேல் பிரயோஜனமே படாது.
முழு பாடத்தையும் அப்படியே முறுக்கி பிழிந்து வெறும் முக்கியமான சாரை மட்டும் கரந்தெடுத்து, கரைத்து குடிக்கும் யுத்திகள் பல உள்ளன. நியாயமாய் பாடம் நடத்தும் ஆசிரியர்களே இந்த யுத்திகளையும் சேர்த்து மாணவர்களுக்கு சொல்லித்தந்தால் தான் கற்றவை நிற்கும் அதற்கு தக. ஆனால் என்ன செய்வது, இந்த யுத்திகளை எல்லாம் சொல்லித்தர ஆசிரைய பெருமக்களுக்கு நேரம் இல்லா காரணத்தினால், இதையெல்லாம் தனியாக சொல்லித்தர வேண்டியுள்ளது. இப்படி புரிந்து, படித்து, கிரகித்துக்கொள்ளும் யுத்திகளை தெரிந்துக்கொண்டாலே, அநேக மாணவர்கள் படிப்பில் முன்னேறி விடுகிறார்கள். அப்படியும் கொஞ்சம் முன்னே பின்னே என்று இருக்கும் மாணவர்களுக்கு மூளையை கூராக்கும் சில ஊக்க மாத்திரைகளை கொடுத்து முன்னேற்ற பார்க்கலாம்.
2. ஓவர் டென்ஷன்:அணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் பொதுவாய் எல்லா பதின்பருவக்கார்ர்களை பற்றியும் வரும் அடுத்த புகார், இந்த முன்கோபம். அது வரை சொல் பேச்சை கேட்டு, அமைதியாய் வளைய வந்த பிள்ளைகள், பருவ வயதை தொட்ட உடனே, “எல்லாம் எனக்கு தெரியும், நீங்க ஒண்ணும் சொல்ல வேண்டாம்”. என்று பெற்றோரையே எதிர்த்து பேசிவிடுகிறார்கள். சரி பிள்ளை தான் ஏதோ மனநிலையில் ஏடா கூடமாக பேசுகிறதே, நாமாவது கொஞ்சம் விட்டு கொடுத்து போவோமே என்கிற விவஸ்த்தையில்லாமல் பெற்றோர், “உன்னை எவ்வளவு கஷ்டப்பட்டு, பெத்து வளர்த்து, இவ்வளவி பெரியா ஆளாக்கினேன், என்னையே நீ....” என்று முழம் முழமாய் லெக்சர் அடிக்க ஆரம்பித்து விட, பொருத்து பொருத்து பார்த்து விட்டு, “உங்களை யாரு பெக்க சொன்னா?” என்று பொறித்து தள்ளிவிடுகிறார்கள் பிள்ளைகள். உடனே தாய் மார்கள் எல்லாம் மனமுடந்து போய், இந்த பிள்ளைக்காக நான் என்னவெல்லாம் செய்திருப்பேன், என் அருமை புரியாமன் என்னையே இப்படியெல்லாம் ...” என்று இன்னும் நொந்துப்போகிறார்கள்.
இந்த வயதில் இந்த இளைஞர்களின் ரத்த்தில் எக்கசெக்க ஹார்மோன்கள் பிரவாகமாய் சுரக்கின்றன. அதனால், தொட்டதிற்கெல்லாம் டென்ஷன், எரிச்சல், மூடி அவுட் என்று இள ரத்தம் எப்போதுமே ஒரு சல சலப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கும். எதையும் சகித்துக்கொள்ளும் தன்மை, பொருத்துபோகும் பக்குவம், அடங்கி போகும் லாவகம் எதுவுமே இந்த வயதில் ஏற்படுவதில்லை. இதை புரிந்துக்கொண்டு, பெரிசுகள் நாம் மிக பக்குவமாய், ஹாசியமாய், தோழமையாய் முக்கியமாய், பொறுமையாய் இவர்களை கையாண்டால் தான் ஹார்மோன்களின் ஆக்ரோஷம் தணிந்து அமைதியாவார்கள். இதை விட்டு விட்டு, “முளைச்சி மூணு இலை விடலை, அதுக்குள்ள இவ்வளவு திமிரா, உனக்கே இவ்வளவுனா, எனக்கு எவ்வளவு இருக்கும்” என்று போட்டிபோட்டுக்கொண்டு, அவர்களை விட அதிக முதிர்ச்சியின்மையை பெரிசுகள் வெளிபடுத்தினால், பிரச்சனை பெரிதாகிவிடும். அதனால் சிறியவர்கள் சினம் கொள்ளும் போது இந்த மாதிரி கோபதாபங்களை எப்படி நேர்த்தியாய் சமாளிப்பது என்பதை கற்றுத்தர இதையே ஒரு சந்தர்ப்பமாய் எடுத்துக்கொண்டு, பெரியவர்கள் சாந்தமாய் விஷயத்தை கையாண்டாலே போதும். மனிதர்கள் இயல்பிலேயே மற்றவர்களை பார்த்து காப்பியடித்து தான் பலதும் பற்றுக்கொள்ளும் தன்மை கொண்டவர்கள் என்பதால், முன் மாதிரி சரியாக் இருந்தால், இளைஞர்களும் தங்களை திறித்திக்கொள்வார்கள்,
3. ஓவர் கூச்சம்:”விருந்தினர் வந்தால் ஒரு வணக்கம் சொல்வதில்லை, கடைக்கு போனால், எல்லாரும் பார்க்குறாங்க, நான் இந்த பையை தூக்கீட்டு வந்தா சிரிப்பாங்கனுறது, மத்தவங்க முன்னாடி என்னை பத்தி ஏன் சொன்னேனு எல்லாரும் போன பிறகு திட்டுறது...” இப்படியாக, பதின் பருவ சிறுசுகளின் வெட்க உணர்வை பற்றி நிறைய புகார்கள் வருவதுண்டு. என்ன செய்வது, இந்த வயதில் நேரும் உடல் மாற்றங்கள் இவர்களை பிறர் எதிரில் கூசி போக செய்கிறது. போக போக இந்த கூச்சமெல்லாம் குறைந்து, முதிர்ச்சி வர வர தன்னம்பிக்கையும் தானே அதிகரித்து, “ஆமா, நான் இப்படி தான், எனக்கு என்னை பிடிச்சிருக்கு, வேறு யாருடைய அபிப்ராயமும் எனக்கு முக்கியமில்லை” என்று சுயமதிப்புக்கொள்ளவும் இவர்கள் முடிகிறது. என்ன இந்த அளவு சுவாபிமானம் வர குறைந்தது நான்கைந்து ஆண்டுகள் ஆகின்றன- அதுவரை இந்த வெட்கத்தை பெரிது படுத்தாமல் விட்டாலே, தானாய் தெளிந்து விடுகிறார்கள் இளையவர்கள்.
4. பியர் பிரஷர்.பதின் பருவத்தினருக்கு தங்கள் சமவயதுக்காரர்களின் அபிப்ராயம் மிக முக்கியம் என்று தோன்றுகிறது. இந்த சமவயதுக்காரர்கள் என்ன செய்கிறார்கள், என்ன சொல்கிறார்கள், எப்படி விஷயங்களை அனுகுகிறார்கள் என்பதை எல்லாம் மிக மும்முரமாக நோட்டம் விட்டு, அதை போலவே தானும் இருந்தால் தான் தன்னை “செட்டில் சேர்த்துக்கொள்வார்கள்” என்று அரும்பாடுபட்டு, மந்தையோடு மந்தையாய் கலந்துவிட முயல்கிறார்கள். “உன் ஃபிரெண்டு சொன்னா தான் கேட்பியா? நான் சொன்னா கேட்க மாட்டியா?” என்று பெரிசுகள் என்ன தான் தலை பாடாய் அடித்துக்கொண்டாலும் இளையவர்களின் இந்த பழக்கத்தை மாற்ற முடியாது. காரணம் பெற்றவர்களை விட இந்த மாதிரி சமவயதுக்கார peersசிடமிருந்து அதிக விஷயங்களை கற்றுக்கொள்ளூம் படியாகத் தான் மனித மூளையின் டிசைனே அமைந்திருக்கிறது. இந்த இயற்கை ஏற்பாட்டை மீறி அவர்களால் செயல் படமுடியாது. “அப்படினா, கண்டவங்களோட சேர்ந்து கெட்டு குட்டிசுவரா போயிட்டா?” என்று பெற்றவர்கள் பதைபதைக்கத் தான் செய்வார்கள். இதற்கு ஒரே வழி, உங்கள் குழந்தையின் பியர்களை பரிச்சையபடுத்திக்கொள்ளுங்கள். எந்த மாதிரி நண்பர்களுடன் பழக்கம் என்பதை நேரடியாக க்ண்காணித்தால் தானே, அவர்கள் போக்கு எப்படி என்பதை நீங்கள் சதா கண்காணிக்க முடியும்.
5. வயதிற்கு வருதல்:
பெண்களூக்காவது பரவாயில்லை, புட்டு சுற்றுகிறேன் பேர்வழி என்று ஏரியா பெண்கள் எல்லாம் கூடி, தங்கள் வயதிற்கு வருதல் அனுபவத்தை பற்றி பேசி பகிர்ந்துக்கொள்கிறார்கள், அதனால் பெண்களுக்கு தங்கள் வயதிற்கு வரும் சமாசாரம் பற்றி தெளிவு ஏற்படிகிறது. பாவம், ஆண் குழந்தைகளுக்கு இந்த அதிர்ஷ்டம் இருப்பதில்லை. இவன் வயதிற்கு வந்தால், அம்போ என்று அப்படியே விடபடுகிறான். என்ன ஏது என்று சொல்லித்தர நாதியே இருப்பதில்லை. விளைவு, விந்து வெளியேறும் வயதுக்கு வருதல் அறிகுறியை இவன் ஏதோ பெரிய விபரீதம் என்று எண்ணி கலவரம் கொள்கிறான். இருக்கவே இருக்கிறார்கள் போலி டாக்டர்கள், இந்த சாதரண உடலியக்கத்தை பெரிய வியாதி மாதிரி பில்ட் அப் கொடுத்து இவர்கள் அச்சுறுத்த, “அய் நான் வயதுக்கு வந்துட்டேனே,” என்று எண்ணி பெருமை கொள்ள வேண்டிய வாலிவன், “அய்யோ, எனக்கு வியாதி வந்துவிட்டது” என்று தவறாக எண்ணி கவலை கொள்கிறான்.
”விந்து வெளியேறி விட்டது, அதனால் சாக்க்கிடக்கிறேன்” என்ற வகை புகாருடன் ஆலோசனை பெற வரும் இளைஞர்களின் எண்ணிக்கை நல்ல வேலையாக இப்போதெல்லாம் குறைந்துக்கொண்டு வருகிறது. தமிழ் நாட்டு ஆண் சிங்கங்கள் எல்லாம் அறிவியலை புரிந்துக்கொண்ட அறிவாளிகள் ஆகிவிட்டார்கள் போல. அப்படியே, தப்பித்தவறி, ஒன்றிரண்டு ஆண்கள் இந்த பிரச்சனையோடு வந்தாலும், அவர்களது பயத்தை கிளப்பும் மூட நம்பிக்கைகளை தெளிவு படுத்தி, அநாவசிய பதட்டத்தை தணிக்கும் மருந்துகளை கொடுதாலே போதும், ”இதெல்லாம் ஒரு மேட்டருனு யாராவது கவலைபடுவாங்களா!” என்று மாறிவிடுகிறார்கள் ஆண்கள் எல்லாம்.
6. சுய இன்பம்: என்ன தான் வேற்று கிரகத்தில் கொண்டு போய் வைத்து எவர் சவகாசமும் இல்லாமல் குழந்தையை மஹா பவித்திரமாக வளர்க்க வேண்டும் என்று பெற்றோர்கள் முயன்றாலும் பருவ வயது வந்ததுமே பாலுணர்வும் தலை தூக்கிவிடும். நூறு ஆண்டுகளுக்கு முன் என்றால் இந்த பருவம் வந்த உடனே திருமணம் என்று ஒன்றை நடத்தி, ஒரு கலவியல் துணையை பெற்றோரே ஏற்பாடு பண்ணித் தந்திருப்பார்கள், தாபம் தோன்றும் போதெல்லாம் தாம்பத்தியம் கொள்ள ஏதுவாக இருந்துருக்கும். ஆனால் இந்த நூற்றாண்டிலோ, வயதிற்கு வந்து பல வருடங்கள் கழித்து தான் திருமணம் என்று நிலைப்பாடுகள் மாறிவிட்டன. இதை பற்றி எல்லாம் சட்டையே செய்யாமல் இயற்க்கை இன்னமும் அதே பதிமூன்று – பதினேழு வயதிற்குள் எல்லோரையும் வயதிற்கு வர வைக்க, கூடவே தலையெடுக்கும் உடல் ரீதியான தேவைகளை எப்படி சமாளிப்பது என்று யாருமே சொல்லி தருவதில்லை. தாபம் ஏற்படும் போதெல்லாம் தன்னை தானே சாந்தப்படுத்திக்கொள்ளும் டெக்னிக்கை அநேகமாக எல்லா ஆண்களும் சுயமாகவே தெரிந்துக்கொள்கிறார்கள். ஆனால் இது ஒரு பெரிய குற்றம் என்று சிலருக்கு தோன்றுவதால், கவலை பட ஆரம்பித்துவிடுகிறார்கள். ஆனால் இதில் பெரிய ஆட்சரியம் என்ன தெரியுமா? அமெரிக்கா, ஐரோபா, ஆஸ்திரேலியா, ஸ்காண்டினேவியா மாதிரியான பகுத்தறிவு அதிகம் உள்ள நாடுகளில் எந்த ஆணும் சுயஇன்பத்தை பெரிய தவராகவே நினைப்பதில்லை. பாலில்லாத குறையை போக்க, குழந்தை கையை சுவைப்பது போல, துணையில்லா சமயத்தில் தாபத்தை தணிக்க இது ஒரு சிம்பிள் டெக்னிக், இதில் பெரிதாக ஃபீல் பண்ண என்ன இருக்கிறது என்பது இவர்களது மனப்பான்மை. ஆனால், இந்தியா, ஆப்பிரிக்கா, சீனா ஆகிய நாடுகளில் தான், அதுவும் படிக்காத ஆண்களிடம் தான் சுய இன்பத்தை பற்றின அநாவசிய பயங்களும் குற்ற உண்ர்வும் இருக்கிறது. இதில் பெரிய வேடிக்கை என்ன தெரியுமா? இதே இந்தியாவில் தான் அந்த காலத்தில் ’ஜீவ காருண்யம்’ என்ற பெயரில், பொது இடங்களில் நடுகல்லை நிறுத்திவைக்கும் வழக்கம் ஒரு தர்ம காரியமாய் கருதப்பட்டு, பலரால் பின்பற்ற பட்டது. நடு கல்லை நடுவதில் என்ன பெரிய ஜீவ காருண்யம் என்று யோசிக்க தோன்றூகிறதா? போகிற வருகிற மிருகங்களுக்கு மதம் பிடித்தால், இந்த கல்லில் உராய்து சாந்தபடுத்த உதவுவது, புண்ணியங்களில் சிறந்த புண்ணியமாய் கருதப்பட்ட்து. ஆக, மிருகங்கள் சுய இன்பம் புரிய கூட சாதனங்களை ஏற்பாடு செய்து கொடுத்த கலாச்சாரத்தில், மனிதன் சுய இன்பம் கொள்வதை பற்றி இத்தனை மூட நம்பிக்கைகள் தோன்றியது வேடிக்கை தான்! ஆக, மனிதர்கள் உட்பட, எல்லா ஜீவராசிகளிலும் தகுந்த துணை இல்லாத போது சுய இன்பம் கொள்வது என்பது இயல்பான ஒரு நடவடிக்கையே. என்ன, நடுகல்லே கதி என்று இதே வேலையாய் இருக்காமல், விளையாட்டு, படிப்பு, பாட்டு, கூத்து, கேளி, கும்மாளம் என்று வேறு பல வழிகளிலும் சுகம் காணும் தன்மையை வளர்த்துக்கொண்டால், இன்பம் கொள்ளை கொள்ளையாகுமே!
7. முதல் காதல்:
மூளை சுரக்கும் ஹார்மோன்கள் ஏற்கனவே எதிர் பாலின கவர்ச்சியை தூண்டிவிட, கூடவே உடகங்களும், அதன் ஊக்கத்தால் நண்பர்களும் ”சூப்பரா இருக்கும் செய்து பார்”, என்று காதலை பெரிதும் சிபாரிசு செய்ய, கேட்க வேண்டுமா! காதல் என்கிற போதை இளமனதுகளை ஈர்க்க ஆரம்பித்துவிடுகிறது. இதனால் “எட்டாவது தான் படிக்கிறா, அதுக்குள்ள காதல் என்ன வேண்டி கிடக்குது. வயசுக்கு மீறுன வேலையெல்லாம் செய்யுறாளே” என்று பதறும் தாய்மார்கள் பலர்.
உண்மை என்ன தெரியுமா? பதிமூன்று வயதில் ஒரு பெண் காதல் வயப்படுவதென்பது வயதிற்கு மீறிய செயலே இல்லை. மனிதன் தோன்றிய காலம் முதல் பெண்களுக்கு முதல் காதல் ஏற்படும் வயதே இது தான். முதல் காதல் என்றால், இன்னும் நிறைய முறை வேறு காதல் வருமோ என்கிறீர்களா? ஆமாம். உயிர் உள்ள வரை எதிர் பாலினத்தின் மேல் ஈர்ப்பும் அவ்வப்போது காதலும் ஏற்படும் படியாக தான் இயற்கை மனிதர்களை வடிவமைத்துள்ளது. அதனால் மகள் காதல் கொண்டு விட்டாளே என்று ஓவராய் பதராதீர்கள். அந்த வயதில் முதல் காதல் கொள்வது அவள் உடம்பில் ஹார்மோன்கள் நார்மலாய் ஊருகின்றன, அவள் ஒரு நார்மல் பெண் என்பதற்கான அறிகுறி.
ஆனால் இது அவளுக்கு முதல் அனுபவம் என்பதால் சினிமாவில் வருவது போல காதல் மஹா அழகான, புனிதமான உணர்வு என்றெல்லாம் அவள் தவறான கற்பனையில் மிதக்கக்கூடும். உடனே அத்தை, மாமி என்று யாராவது ஒரு பெண் உறவினரை பிடியுங்கள். அல்லது ஒரு கவின்சிலரை அனுகுங்கள். முதல் காதல் சொதப்பல்களை பற்றி விளையாட்டாக பேசி புரியவைத்தாலே, ’ஓகோ, இது இந்த வயதில் எல்லோருக்கும் ஏற்படுகின்ற ஒரு மிக சாதாரண் உணர்ச்சி தான்’, என்பதை புது இளைஞி புரிந்துக்கொள்வாள். இந்த புரிதலே அவள் முதல் காதலின் புனிதத்துவத்தை குறைத்து விடும் என்பதால், கொஞ்ச நாள் கழித்து இந்த உணர்வு அவளுக்கே போரடிக்க ஆரம்பித்துவிடும். சினிமாவில் சொல்வது போல காதல் அவ்வளவு ஒன்றும் ஸ்வாரசியமான உணர்வு இல்லை என்று புரிந்த்துமே, அதன் போதையிலிருந்து அவள் வெளி வந்துவிடுவாள்.
8. மூட் அவுட்
பதின் பருவத்தினர் பலரும் அடிக்கடி மனநிலை மாற்றங்களுக்கு உள்ளாவதால், திடீர் கோவம், திடீர் அழுகை, திடீர், “என்னை கண்டாலே யாருக்கு பிடிக்கல!” மாதிரியான உணர்ச்சிவெடிப்புக்கள் ஏற்படுகின்றன. மூளையின் நரம்புகள் இந்த வயதில் அதிகமாக வளருவதால் அடிக்கடி சிக்காகி விடுவதாலும், புதிதாய் ரத்ததில் ஓடும் ஹார்மோன்கள் இன்னும் ஒருனிலைபடாததாலும் இந்த வயதுக்காரர்களுக்கு அடிக்கடி இப்படி மூட் அவுட் ஆவது சகஜம். பெண் குழந்தைகள் “என்னை யாருமே புரிஞ்சிக்க மாட்டேன்றாங்க!” என்று புலம்பி அழுவதும், ஆண்கள் “என்னை கவனிக்கிறதே இல்லை” என்றி எரிந்துவிழுவதும் உங்கள் மேல் உள்ள கோபத்தினால் அல்ல, ரசாயண ஸ்ருதிபேதத்தினால். அதனால் சிறுசுகளோடு சரி சம்மாய் கத்தி சண்டையை பெரிதாக்காமல், அந்த நேரத்திற்கு அமைதி காத்து, பிறகு விளக்கம் தந்து புரியவைக்க முயன்றால் தான் குடும்ப நிம்மதியை காப்பாற்ற முடியும்.
9. ஆக்ரோஷம்.
குறிப்பாக நிறைய இளைய ஆண்களை அவர்களது பெற்றோர்கள் இந்த காரணத்திற்காக தான் சிகிச்சைக்கை அழைத்து வருகிறார்கள். “முன்னெல்லாம் அவன் உண்டு அவன் வேலை உண்டுனு குட் பாயா இருந்த பையன் தான். பெரியவங்கன்னா அவ்வளவு மரியாதையா இருந்த பிள்ளை, இப்ப எல்லாம், நீ சொன்னா, நான் கேட்கணூமானு எதிர்த்து பேசுறான். அடிக்க கைய ஓங்குனா, பதிலுக்கு அடிக்க வர்றான். நேத்து ஏதோ திட்டினேனு ரிமோட்டை தூக்கிஎரிஞ்சதுல அது ஒடஞ்சே போச்சு. எங்கிருந்து தான் அவனுக்கு இவ்வளவு ஆத்திரம் வருதோ?”
வேறெங்கும் இல்லை. அதே ஹார்மோன்கள் தான். ஆண் குழந்தை வயதிற்கு வருவதே டெஸ்டோஸ்டீரான் என்ற ஹார்மோனின் சுரத்தலால் தான். இந்த ஹார்மோன் சுரக்க ஆரம்பித்து விட்டால், ஆக்ரோஷம் ததும்ப அரம்பித்துவிடும், உடல் பலம் அதிகரித்து விடும், எதிலுமே வேகம், வீரம், அவசரம் என்கிற போக்கு ஏற்படும். பழக பழக டெஸ்டோஸ்டீரானின் இந்த தன்மையை எப்படி சாமார்தியமாய் கையாள்வது என்பதை இவர்கள் காலப்போக்கில் கற்றுக்கொள்வார்கள் தான் என்றாலும் வயதிற்கு வரும் போதே இந்த உணர்ச்சி மேலாண்மை எதுவும் சாதியமாவதில்லை தானே. அதனால் தோலுக்கு மேல் வளர்ந்த பிள்ளையை ஓவராய் மிரட்டி அவன் “நானும் ஆம்பிளை தான்” என்கிற ஆக்கிரோஷத்தை கிளறாமல் முடிந்த மட்டும் அன்பாய் பேசி, தண்டத்தை எடுக்காமல் வெறும் சாம, தான, பேத முறைகளிலேயே இளம் ஆண்களை கையாள்வது தான் புத்திசாலி தனம்.
10. தீயவை தீய பயத்தலால்.....குழந்தை பருவம் போய் வாலிய வயதை அடைய போகும் எக்களிப்பில், எதை எதையோ பரிட்சை செய்து பார்க்க தோன்றும் இள மனம். புகை, மது, மாது, பிற போதை வஸ்துக்கள் என்று களவும் கற்றுமறக்க முயலும் வயது இது தான். இந்த போதை வஸ்துக்கள் கூட ஒரு வகையில் மனிதர்களை தரம் பிரித்து யார் பிழக்க தோதானவர்கள் என்று சோதித்து பார்க்கும் ஒரு test for survival தான். இத்தனை வகை போதை பொருட்கள் இருந்தும் யார் இதில் எதுவும் மாட்டிக்கொள்ளாமல் தப்பித்து பதின் பருவத்தை தாண்டி வருகிறார்களோ, அவர்களே வாழ்வை ஜெயிக்க லாயக்கான புத்திசாலிகள் ஆகிறார்கள். ஏன் தெரியுமா? பெட்டிக்கடையில் சின்ன சின்ன பாக்கெட்டில் தொங்கும் வாசனைமிக்க பான் ரக பொருளானாலும், ஃபாரின் சரக்கு, ஒஸ்தி சரக்கு, லோக்கல் சரக்கு என இந்த வகை மது பானமானாலும், அவ்வளவு ஏன், சட்டம் போட்டு தடுக்கப்படும் மிக மோசமான போதை பொருட்களானாலும், அவை எல்லாமே அடிப்படையில் வேலை செய்கின்ற விதம் ஒன்று தான். மூளையின் இன்ப மையத்தை தூண்டி, மதி மயக்குகின்றன. அத்தோடு, ஆண்மை/பெண்மை திசுக்களை அழித்து விடுகின்றன. ஆக, போதை வயப்பட்ட மனிதர்கள் இனபெருக்க வாய்ப்பை இழப்பது தான் இயற்கையின் ஏற்பாடு. இந்த விவரங்கள் எல்லாம் சிறுசுகளுக்கு தெரியாதென்பதால் விளையாட்டு தனமாய் போதை பொருட்களை பயன்படுத்த ஆரம்பித்துவிடுகிறார்கள். ஆனால் ஒரு முறை மட்டுமே உபயோகித்தாலும், உடனே தொற்றிக்கொள்ளூம் தன்மை இருப்பதனால் தானே அதை போதை பொருள் என்றே சொல்கிறோம். ஆக சர்வைவலுக்கு ஃபிட் ஆன புத்திசாலிகள் அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில் என்று இந்த பழக்கதுக்கே ஒரு பெரிய கும்பிடு போட்டு ஜகா வாங்கிவிடுவார்கள்.
எவ்வழி பெரிசுகள்...
என்ன இருந்தாலும் பதின் பருவம் என்பது காற்றாற்று வெள்ளம் மாதிரி ஹார்மோன்கள் எந்த பதபடுத்தலும் இன்றி பச்சையாய் ஓடும் வயது. இந்த வெள்ளத்தை எப்படி அனைகட்டி அமோக விளைச்சலுக்கு ஆட்படுத்துவது என்று சொல்லித்தர யாரவது தேவை. அப்பா அம்மா, அண்ணன் அக்கா, ஆசிரியர், மதகுரு ஆகிய பெரிசுகள் எல்லாம் மொக்கை போடுங்கள், பெரிதாய் லெக்சர் அடிப்பார்கள். இப்படி இல்லாமல் தம்முள் ஒருவராய் இருந்து கேலிபேச்சு, சிரிப்பு, கலகலப்புடனே ”சரக்கு வேண்டாம் மச்சி, இனிக்கு கிரவுண்டு பக்கம் போய் கலாய்சிட்டு வரலாம்” என்று வாழ்வியல் வித்தைகளை சுலபமாக சொல்லித்தரும் ஒரு சீனியரின் ஜாலி டிப்ஸ் இருந்தால் இளைஞர்கள் எப்போதுமே சரியான தடத்தில் இருக்க உதவும்.
இளைஞர்களுக்கு விளையாட்டாய் விவரங்களை சொல்லித்தர எப்போதுமே ஒரு மூத்த ஸ்நேகிதர் தயாராக இருப்பது அவசியம். சும்மா இளைஞர்களை குறை சொல்லிக்கொண்டில்லாமல் நம்மை போன்ற பெரிசுகள் எல்லாம் இப்படிப்பட்ட ஜாலியான சீனியர்களாய் மாறினாலே போதும், பதின் பருவ பிரச்சனைகளை தாண்டி பிரமாதமாய் வெளிவந்துவிடுவார்கள் நம் இளைஞர்கள்.


குமுதம் இதழிலிருந்து வெட்டி ஒட்டியது

Monday, September 29, 2008

பெண்களை ஹாண்டில் செய்வது எப்படி?

அன்பார்ந்த ஆண்களே,

இந்த வலை பதிவில் ஆண்களை ஹாண்டில் செய்வது எப்படி என்ற தலைப்பில் வரும் சமாசாரம் எல்லாமே, முழுக்க முழுக்க பெண்களுக்காக எழுத படும் மேட்டர் மட்டுமே. அதை ஆண்கள் படிக்கவே கூடாது:)

கருவில் வசித்த முதல் ஆறு வாரத்திற்கு ஆண்களும் பெண்களாய் தானே இருந்தோம், அதனால் ஒரு வகையில் பார்த்தால் எல்லா ஆண்களும் அடிப்படையில் பெண்களே, அந்த அடிப்படையில் எங்களுக்கும் படிக்க உரிமை உள்ளதாக்கும் என்று நீங்கள் தர்கம் செய்வதாக இருந்தால்....வாட் டு டூ, யூ ஆர் ரைட்....ஆனால் ஒரு நிபந்தனை, இதை படிக்கும் போது உங்களை முழுக்க முழுக்க ஒரு பெண்ணாய் தான் பாவித்துக்கொள்ள வேண்டும், ஆண் மனப்பான்மையை தற்காலீகமாய் ஆஃப் செய்துவிட வேண்டும். அப்படி ஆண்மையை ஆஃப் செய்துவிட்டு பெண் பாலாய் இதை படிக்க முடிந்தால் தாராளமாய் நீங்கள் இதை படிக்கலாம்.

அப்படி செய்ய முடியாதவரா நீங்கள்?

டோண்ட் ஒர்ரி, உங்களுக்காகவே பெண்களை ஹாண்டில் செய்வது எப்படி என்று ஒரு புத்தகத்தை ஏற்கனவே எழுதி வைத்திருக்கிறேன்....ஆளை அசத்தும் 60 கலைகள், நக்கீரன் பதிப்பகம்....அது முழுக்க முழுக்க ஆண்களுக்கான மேட்டர். நீங்கள் இதை படித்து நேரத்தை வீணடிப்பதை விட நேராக அதை படித்து ஆளை அசத்த கற்றுக்கொள்ளலாமே?!

Tuesday, September 23, 2008

சந்தோஷத்தில் பெரிய சந்தோஷம்

சந்தோஷத்தில் பெரிய சந்தோஷம் என்று மனிதர்கள் எதை நினைக்கிறார்கள் தெரியுமா? ஆண்-பெண் இருவருக்கும் இடையே ஏற்படும் காதல் தரும் சந்தோஷத்தைத் தான்!

நம் இந்தியாவில் மட்டுமல்ல... உலகெங்கும் உள்ள எல்லா மனிதர்களும் இப்படித்தான் கருதுகிறார்கள். இந்த சந்தோஷத்தைப் பற்றித்தான் எத்தனை கற்பனை, கனவு, கதை, கவிதை, சினிமா!

ஆசைப் படுகிறார்கள்... சரி... ஆனால் எத்தனை பேருக்கு அது சாத்தியம் ஆகிறது என்று பார்த்தால், மிகச் சில ஜோடிகளே தேறுவார்கள்.

கேட்கவும், கற்பனை செய்யவும், கதைகளில் படிக்கவும், சினிமாக்களில் பார்க்கவும் இலகுவாகத் தோன்றும் இந்த மகிழ்ச்சியான காதல் வாழ்க்கை, நிஜத்தில் அமைவது ரொம்பவே அபூர்வம்தான். காரணம், ஆரம்பத்தில் தித்திக்கும் இந்த ஆண், பெண் உறவில் போகப் போக நிறைய கசப்புணர்ச்சி ஏற்பட்டு விடுகிறது. இதற்கு முக்கியக் காரணமே நம்மூர் பெண்களுக்கு ஆண்களை எப்படிக் கையாள்வது என்றே தெரிவதில்லை. காரணம் நம்மூரில் ஆண்களும் பெண்களும் சிறு வயதிலிருந்தே பேசிப் பழகி, ஒருவரை மற்றவர் எப்படி அணுகுவது என்று தெரிந்து கொள்வதற்கு வாய்ப்பே இருப்பதில்லை.

அதனாலேயே, என்னைப் போன்ற மனநல மருத்துவர்களுக்கு எல்லாம், ஆண் - பெண் உறவுகளைச் செப்பனிடுவதை எங்கள் பெரும் பணியாக ஆக்கிக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இப்படி எங்களை கிளினிக்கில் தனியே வந்து சந்திக்கும் பெண்களுக்கு, `ஆண்களைச் சமாளிப்பது எப்படி' என்று சிலபஸ் போட்டு கற்றுத் தந்தாலும் இதில் ஒரு சின்ன சிக்கலும் உள்ளது. இப்படி பெண்களுக்கு சொல்லித்தரப்படும் சமாச்சாரங்கள் எல்லாமே மிகவும் ரகசியமானவை. வழி வழியாக மூத்த பெண்கள் இளையவர்களுக்கு ஓதித்தரும் சீக்ரெட் அட்வைஸ்!

இந்த ரகசிய ஆலோசனையை பகிரங்கமாக இப்படி ஒரு பத்திக்கையில் எழுதுவது நிறையப் பெண்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்தான். ஆனாலும் இது கொஞ்சம் ஆபத்தான காரியம், யாராவது ஆண் இதைப் படித்து விட்டால், அப்புறம் கதை கந்தலாகிவிடுமே! நல்ல வேளையாக இது பெண்கள் பத்திரிகை என்பதாலும் குறிப்பாக இந்தப் பகுதி `யூத்'க்கானது என்பதாலும் பல ஆண்கள் இதைப் படிக்க பெரிய வாய்ப்பில்லை. ஆனால் ஒருவேளை யாராவது ஓட்டைவாய்ப் பெண் இதைப் படித்துவிட்டு, தன் கணவன், காதலன் என்று பிரியமான ஒருவனிடம் போய் ஒப்பித்து வைத்தால் பிறகு இந்த மேஜிக் வேலை செய்யாமல் போய்விடக்கூடுமே.

அதனால் ஆரம்பத்திலேயே நமக்குள் ஒரு ஒப்பந்தம்... இந்தத் தொடர் பெண்களுக்காக மட்டுமே எழுதப்படுகிறது. இதைப் படிக்கும் நீங்கள் இதில் சொல்லப்படும் தகவலை நல்ல முறையில் தாராளமாக பயன்படுத்திக்கொள்ளலாம், எல்லா அட்வைஸும் இலவசம்! ஆனால் ஒரு நிபந்தனை... இதிலிருந்து ஒரு சின்ன பிட் சமாசாரத்தைக்கூட எந்த ஆணிடமும் பகிந்துகொள்ளகூடாது. மீறிப் பகிர்ந்துகொண்டீர்கள் என்றால்அதனால் ஏற்படும் எல்லா பின்விளைவுகளுக்கும் நீங்களே பொறுப்பு... சம்மதமா?

சம்மதம் என்றால் ஓ.கே. இத்தோடு ஆண்களை ஹாண்டில் செய்யும் ரகசிய சூட்சுமங்களை ஆரம்பிக்கலாம்.

அதைப் பற்றி விரிவாகச் சொல்வதற்கு முன்னால் ஆண் என்றால் என்ன என்று முதலில் புரிந்து கொள்வோமா? ``ப்பூ! இதென்ன பெரிய விஷயம்... ஆண் என்பவன் பெண்ணின் எதிர்பாலினம், அவனுக்கு மீசை உண்டு, பெண்ணுக்கு அது இல்லை'' என்பது மாதிரியான சிம்பிள் சமாச்சாரங்களைத் தாண்டி கொஞ்சம் ஆழ ஆரய்ந்தோம் என்றால் ஆண் என்பவன் உண்மையில் ஒரு மாறுபட்ட பெண்தான் தெரியுமோ?

ஆச்சரியமாக இருக்கிறதா? நம்பமுடியவில்லையா? என்ன செய்வது... இதுதான் உண்மை! ஜனிக்கும்போது எல்லாக் கருக்களுமே பெண்ணாய்த்தான் இருக்கின்றன. முதல் ஆறு வாரத்திற்கு எல்லா மனிதர்களுமே அவரவர் தாயின் கருவில் பெண்ணாகத்தான் சுருண்டு கிடக்கிறார்கள்.

இப்படி சுருண்டுகிடக்கும் கருவின் மரபணு அதாவது குரோமோஸோம்களில் ஒன்று `ஒய்' ரகமாக இருந்தால், அந்த குரோமோசோமில் உள்ள சில ஜீன்கள் அந்தக் கருவின் உடம்பில் டெஸ்டோஸ்டிரோன் என்கிற ஒரு ஹார்மோனை உற்பத்தி செய்கின்றன. இந்த ஹார்மோன் அந்த கருவின் உடம்பு முழுக்க மட மடவென்று பரவி, அது வரை பெண்ணாய் இருந்த அந்த உடலை அப்படியே ஆணாய் மாற்றிவடிவமைக்கிறது.

அதனால்தான் ஆணாக பிறக்கும் குழந்தைகளுக்கும், முலைகள் இருக்கின்றன. ஆண் என்பதால் இந்த மனித பிறவியில் எப்போதுமே பால்சுரக்கப்போவதே இல்லைதானே? பிறகு எதற்கு அவர்களுக்கு அநாவசியமாக இரண்டு முலைகள் என்று யோசித்தீர்களா? பிகாஸ், இந்த ஆண்குழந்தையின் உடம்பு உருவான அந்த ஆரம்ப ஆறு வாரங்களில், அது பெண்ணாய் இருந்ததால், பெண்ணின உறுப்புக்கள் ஏற்கனவே உருவாகிவிட்டன.!

இப்படி பெண் தன்மையாக உருவான பெரும்பாலான உறுப்புக்களையும் டெஸ்டோஸ்டீரொன் படிப்படியாக ஆண்மைப்படுத்துகிறது. தோல், எலும்பு, ரத்த அணுக்கள், சதைத் திசுக்கள் என்று ஆரம்பித்து, இனப்பெருக்க உறுப்புக்கள், மூளை, மனம் ஆகியவற்றையும் இந்த டெஸ்டோஸ்டீரொன் ஆண்மைப்படுத்திவிடுவதால்தான் எட்டாவது வாரத்தில் கரு முழுமையாக ஆணாகிவிடுகிறது.

ஆக ஆரம்பத்தில் பெண்ணாக ஜனித்தாலும், டெஸ்டோஸ்டீரோனின் உபயத்தால் ஆண்மைப்படுத்தப்படும் ஜீவராசிதான் ஆண்.

இப்படியாக ஆண்-பெண் இருவருக்கும் இடையே இருக்கும் பெரும்பாலான உடல் ரீதியான வித்தியாசங்களுக்கு மூலகாரணமே இந்தடெஸ்டோஸ்டீரோன் என்கிற ஒரே ஹார்மோன்தான். அப்ப மனம் என்கிறீர்களா?

ஆண் மனமும் ஆரம்பத்தில் பெண் வடிவாய்தான் இருக்கிறது. பெண்ணின் மூளையில் மொழிக்கென்றே நிறைய பகுதிகள் உள்ளன. இந்தப் பகுதிகளின் உபயத்தால் பெண்களால் மிகச் சரளமாக பேசவும், எழுதவும், படிக்கவும், ஏன் விவாதிக்கவும்கூட முடியும். அதுவும் போக, பெண் மூளையின் கார்பஸ் கலோசம் என்ற தண்டு ரொம்ப அடர்த்தியாய் இருக்கும். இந்த கார்பஸ் கலோசம் மூளையின் வலது, இடது பாகங்களைஅடியிலிருந்து இணைக்கும் ஒரு நரம்பு பாலம் என்பதால் இது மூளையின் ஒரு பக்கத் தகவல்களை மிக வேகமாக மறுபக்கத்திற்கு கொண்டு செலுத்த உதவுகிறது. இந்த அடர்ந்த தண்டின் பலனால் பெண்களால் ஒரே சமயத்தில் பல வேலைகளை மிக லாகவமாகச் செய்ய முடியும்.

அதுவும் போக ஒருவரின் முகத்தைப் பார்த்து உணர்ச்சிகளை யூகிக்கவென்றே சில பகுதிகள் பெண்களின் மூளையில் உண்டு. இதனால்தான் அம்மாக்கள் மிகச் சுலபமாக, `குழந்தை பசிக்கு அழுகிறதா? பூச்சுக்கடிக்கு அழுகிறதா?' `வீட்டுக்கு வந்திருப்பவன் யோக்கியனா, ஃபிராடா' என்று வெறும் முகபாவத்தை வைத்தே யூகிக்க முடிகிறது. ஆனால் ஆண்களால் இதெல்லாம் சுலபமாக முடியாது.

காரணம் ஆறாவது வாரத்திற்குப் பிறகு கருவின் மூளைக்குப் பாயும் டெஸ்டோஸ்டீரோன் அதன் மூளையை மாற்றி வடிவமைத்து விடுகிறது. அதனால், ஆண்மயமான பிறகு, அந்த சிசுவின் மூளையின் மொழி மையங்கள், கார்பஸ் கலோசம், முகத்தைப் பார்த்து உணர்ச்சியை யூகிக்கும் மையம் ஆகியவை எல்லாம் சுருங்கிவிடுகின்றன. அதனால்தான் ஆண்களால் பெண்களைபோல கட கடவென்று பேசவோ, எழுதவோ, படிக்கவோ முடிவதில்லை. அதைப்போலவே ஒரே சமயத்தில் பல வேலைகளை அவர்களால் கையாளவும் முடிவதில்லை. இவள் என்னநினைக்கிறாள் என்று முகம் பார்த்து யூகிக்கவும் அவர்களால் முடிவதில்லை.

இந்த பாழாய்ப்போன டெஸ்டோஸ்டீரோன் ஏன் இப்படி எல்லாம் மாத்தித் தொலைச்சது! ஆண்களும் பெண்களைப் போலவே மூளை வடிவம் கொண்டிருந்தால்தான் என்ன? அதைப் போய் ஏன் சுருக்கணும்? என்று நீங்கள் ஆட்சேபிப்பது புரிகிறது. ஆனால் இந்த டெஸ்டோஸ்டீரோன் இப்படி மூளையை மாற்றி அமைத்ததற்கும் ஒரு மர்ம காரணம் இருந்ததே!

அது பற்றி எல்லாம் அடுத்த சிநேகிதியில்!

Sunday, September 7, 2008

ஆண்களை ஹாண்டில் செய்வது எப்படி?!

ரமாவிற்கு முதல் பிரசவம். ஆண் குழந்தை என்றதுமே எல்லோருக்குமே பளிச் சிரிப்புதான். பிரசவ சேதி சொல்ல வந்த ஆயா கூட ஆண் பிள்ளை என்பதால் கொசுராய் கொஞ்சம் டிப்ஸ் வாங்கிக் கொண்டாள். ஆனால் அந்தப் பிள்ளையைப் பெற்ற தாய் மட்டும் படிப்படியாக சோகமாகிக் கொண்டே போய், திடீரென்று ஒரு நாள் `எனக்கு வாழவே பிடிக்கல'' என்று குமுறி அழ, எல்லோருக்கும் பகீர் என்றானது. அன்பான கணவன், பிக்கல் பிடுங்கல் தராத புகுந்தவீடு, மகளுக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கும் பெற்றோர் எல்லாம் இருந்தும் ஏன் இந்தப் பெண் இப்படி... எத்தனையோ கேள்விகளுடன் ரமாவை மனநல சிகிச்சைக்குக் கொண்டு போனால் பிரசவ கால டிப்ரெஷஜன் என்றார் டாக்டர். ``டிப்ரெஸ், ஆகுற அளவிற்கு என்ன மனக் கஷ்டம்' என்று எல்லோரும் ஆட்சேபிக்க மருத்துவர் ஒரே வார்த்தையாய் சொன்னது, ஆண் குழந்தை பிறந்த தாய்மார்களுக்கு இப்படி வர்றது சகஜம் தான். ஹார்மோன் பிரச்னையினால்தான் இப்படி. போகப் போக சரியாப் போயிடும்?

ஆண் குழந்தையைப் பெற்றெடுப்பதற்கும் தாயின் மனநலத்திற்கும் என்ன சம்பந்தம்? என்று நீங்கள் யோசிக்க ஆரம்பித்துவிட்டால், நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய கதைகள் வேறு சில உள்ளன. உஷாவும் ஒரு ஆண் குழந்தையின் தாய். ஏற்கெனவே ஒரு மகள் உண்டு. மகனுக்கு வயதாக ஆக உஷாவின் டென்ஷன் அதிகமாகிக் கொண்டே போனது. `என் மகளை வளர்க்க நான் இவ்வளவு கஷ்டம் படலப்பா. அவளே தன் வேலைகளைப் பார்த்துப்பா, தானா குளிச்சு ஸ்கூலுக்குக் கிளம்பி, தன் திங்ஸை பத்திரமா எடுத்து வச்சி, ஹோம் ஓர்க் செய்து எனக்கு எந்தத் தொந்தரவும் தந்ததே இல்லை. ஆனா இந்தப் பையன்! இவனை வளர்க்குறதுக்குள்ள என் பிராணனே போயிடும் போலிருக்கே. எல்லாத்துக்கும் அம்மா அம்மாதான். எட்டு வயசாச்சு, இன்னும் நான் தான் எழுப்பி, பல் தேய்ச்சி, குளிப்பாட்டி, சாப்பாடு ஊட்டிவிட்டு, யூனிஃபார்ம் மாட்டி ஸ்கூலில் கொண்டு போய் விடணும். சாயந்திரம் அவனை ஹோம் ஒர்க் செய்ய வெக்குறதுக்குள்ள என் தொண்டையே வத்திப் போயிடுது. சதா விளையாட்டு, வீடியோ கேம்ஸ்னு லூட்டிதான். கொஞ்சம் கூட பொறுப்பே இல்லை. இவனை பெரியவனா வளர்த்து விடுறதுக்குள்ள என் பாடு திண்டாட்டம்தான்' என்று பார்ப்பவர் எல்லோரிடமும் புலம்பித் தள்ளுவாள். அவள் மட்டுமில்லை. அவளிடம் பேசும் அனைத்துத் தாய்மார்களின் ஒட்டுமொத்த கோரஸ் புலம்பலே இதுதான்.

இவர்கள் நிலைதான் இது என்றால் ஒன்பதாவது, பத்தாவது படிக்கும் மாணவர்களின் தாய்க்குலங்கள் படும்பாடு இதைவிட ரொம்பவே பாவம்! வர வர அவனுக்கு கோபம் ஓவரா வருது. கைய நீட்டிப் பேசுற பழக்கம் வேற புதுசா!

முன்னே எல்லாம் பெரியவங்கனு பயபக்தியா இருந்தான் பையன். இப்ப என்னடான்னா `மொக்கை போடாதீங்க!னு மூஞ்சில அடிச்சா மாதிரி சொல்லிடுறான். அடிக்கடி மூட் அவுட் ஆயிடுறான். வீட்டுக்குச் சொந்தக்காரங்க வந்தாக்கூட முகம் கொடுத்துப் பேசறதில்லை. பக்கத்து வீட்டுப் பொண்ணோட ரொம்பப் பேசுறானேன்னு கவலைப்பட்டேன். கடைசியில பார்த்த `ஆண்ட்டி ஆண்ட்டி'னு அந்தப் பொண்ணோட அம்மாகிட்ட அப்படி ஒரு வழிசல்... ஏன்தான் இப்படி ஒரு பிள்ளையை பெத்தோம்னு தோணுதுப்பா!

அம்மாக்களின் அவஸ்தை இது என்றால், ஆண்களால் கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் படும்பாடு இதைவிட பெரிய கூத்து. அன்பா இருக்கான்னு நானும் மயங்கி போயிட்டேன்ப்பா. ஆனா வரவர அவன் குணமே சரியில்ல. நம்மூரு வெயிலுக்கு திக்காக டிரஸ் பண்ணிக்கச் சொல்றான். கொஞ்சம் `மெல்லிய காற்றோட்டமாக டிரஸ் பண்ணிக்கிட்டா யாரு பார்க்க'ன்னு கத்தறான். என் கூடப் பேசும்போதே போற வர்றவளை லுக் விடுற டைப். `என்னை சந்தேகப்படறானே ராஸ்கல்' என்று புலம்பும் பெண்கள் ஒரு பக்கம் என்றால், ``கல்யாணத்துக்கு முன்னாடி இதெல்லாம் வேண்டாம்னு சொன்னா விடமாட்டேன்றான்பா. தொடாம காதலிச்சா அது காதலே இல்லனுறான். இவனை எப்படி ஹாண்டில் பண்ணுறதுனே புரியல்லே!'' என்று புகார் சொல்லும் பெண்களும் இருக்கிறார்கள்.

இதற்கு அடுத்த கட்டமாய்; கல்யாணமான புதுசுல அவ்வளவு ஸ்வீட்டா இருந்தார். நான் கூட ஆஹா இவரை மாதிரி ஒருத்தரை அடைஞ்சது நான் எந்த ஜென்மத்துலயோ பண்ண புண்ணியம்னு எல்லாம் ஓவர் சென்டிமென்டலா உருகி தொலைச்சிட்டேன். போகப் போக ஐயாவோட சாயம் வெளுக்குது! இவருக்கு சுய அறிவுனு ஒண்ணே கிடையாது. அவங்க அம்மா என்ன ஓதி அனுப்பினாலும் அதையே பிடிச்சிக்கிட்டு அழிச்சாட்டியும் பண்ணி உயிரை எடுக்கிறார். காலைலேர்ந்து வீடு, ஆஃபீசுனு மாடா உழைக்கிறேனே. எனக்கு ஒரு நாள் கூட உதவி செய்யுறதில்லை. அட உதவலைனாலும் உபத்திரவம் பண்ணாம இருக்கலாமே. ஊகூம்! சதா ஏய் அதை எடு, இதை எடுன்னு என்னை ஏசிக்கிட்டே இருக்கிறது. எவன் கட்டுன பொண்டாட்டிக்கோ கரிசனம் கொட்டி ஹெல்ப் பண்ண ஓடுவார், கட்டுன பொண்டாட்டிதான் ஒண்டி ஆளா எவ்வளவு அல்லல்பட்டாலும் சட்டையே பண்ணுறதில்ல! ஏன்தான் இந்த ஆம்பிளைங்க இப்படி இருக்காங்களோ!'' என்று கணவர்களைப் பற்றி குறைபடும் பெண்கள் ஏராளமானோர். அநேகமாய் எல்லோர் வீட்டிலும் `இந்த மனுஷனைக் கட்டிக்கிட்டு நான்பட்ட பாட்டைப் பத்தி சொன்னா ஒரு சினிமா படமே எடுக்கலாம். என்னை கொஞ்சமா படுத்தினார்' என்று புகார் சொல்லும் பாட்டிகள் உள்ளார்கள். அதையும் தவிர என்னை மாதிரி மருத்துவர்களைச் சந்திக்கும்போது வேறொரு பிரச்னையையும் பகிர்ந்துகொள்கிறார்கள். ``அந்த மனுஷனுக்கு 70 வயசு ஆகுது. இன்னும் அடங்கமாட்டேன்றாரேம்மா. பேரன், பேத்தி எடுத்தாச்சு. எனக்கென்ன இளமை ஊஞ்சலா ஆடுது? ரொம்ப தொந்தரவு பண்ணுறாரும்மா'' என்று நொந்து கொள்கிறார்கள் மூத்த சுமங்கலிகள்.

இதுதவிர இடி மன்னர்கள், பெண்கள் என்றாலே முகத்தைப் பார்த்துப் பேசத் தெரியாத பால்குடி மாறாத பராக்கிரமசாலிகள், உடன் வேலைபார்க்கும் பெண்களைச் சீண்டுபவர்கள் என்று தங்கள் வாழ்நாளின் பெரும்பகுதியை ஆண்களைச் சமாளிக்கவே செலவிடும் பெண்களுக்கு `இந்த ஆண்களை ஹாண்டில் பண்ணுவது எப்படி?' என்கிற சாஸ்திரம் மட்டும் கிடைத்தால் எவ்வளவு உபயோகமாக இருக்கும்?

இந்த முக்கியமான சாஸ்திரத்தைக் கற்றுத்தர நாங்கள் ரெடி! கற்றுக்கொள்ள நீங்கள் ரெடி என்றால், அடுத்த இதழில் இருந்து உங்களுக்கே உங்களுக்கென்று ஆரம்பமாகிறது ஆண்களை இயக்கும் அரிய சாஸ்திரம்!

பி கு: குமுதம் ஸ்நேகிதியிலிருந்து வெட்டி ஒட்டியது

Tuesday, July 8, 2008

தசாவதாரம், ஒரு பின் குறிப்பு...

படம் வந்து இத்தனை நாளாச்சே, போய் தான் பார்ப்பமே என்று நாகப்பட்டிணம் பாண்டியன் தியேட்டரில் நைட் ஷோவிற்கு சகாக்களுடன் போனேன். படத்தை பற்றி மஹா கேவலமான விமர்சனங்களை ஏற்கனவே படித்துவிட்டதால், சொதப்பல்களை தாங்கிக்கொள்ளும் பக்குவம் வந்துவிட்டதோ என்னவோ, படம் மிக நன்றாகவே இருப்பதாக தோன்றியது. இரண்டு நாள் தூங்காது வேலை செய்த களைப்புக்கூட தெரியாமல் எல்லோரும் கண்கொட்டாமல் திரையை உன்னிப்பாய் பார்த்துக்கொண்டு இருந்தோம்.

இந்த படத்தை பற்றின ஒரு சின்ன பின் குறிப்பு உள்ளது. இந்த படத்திற்கான story discussion நடந்துக்கொண்டிருந்த காலத்தில், ஒரு துணை இயக்குனர், “கமல் சார் பத்து கெரக்டர்ல நடிக்கிறா மாதிரி படம் மேடம், நான் ஒரு கதை பண்ணியிருக்கேன், நல்லா இருக்கானு சொல்லுங்க” என்றார். கதைகள் கேட்பது தான் என் தொழில் ஆயிற்றே! கேட்டு வைத்தேன். ரொம்ப சுமாராய், பத்து கெட் அப்பில் கமல் தோன்றுவதை தவிற வேறு எந்த சரக்கும் இல்லாத ஒரு insipid கதையை அவர் சொல்ல, நான் பெரிய ஆர்வம் காட்டாமல், “கதை ஓகே தான், ஆனாலும்....” என்று இழுக்க, “உங்க கிட்ட வேறு ஏதாவது கதை இருந்தா சொல்லுங்க மேடம்” என்று அவர் தொணக்க, நானும் Dan Brown எழுதின Angels and Demons கதையை தழுவி தமிழாக்கம் செய்து, antimatterருக்கு பதில் ஒரு பயோவெப்பனை செருகி, மதம், மனித மனம் + பத்து கமல்களை சேர்த்தால் நன்றாக இருக்குமே என்று சொல்லி, புத்தகத்தை கடன் எல்லாம் கொடுத்து அனுப்பினேன். அதன் பிறகு என்ன ஆனது அன்று யாம் அறியோம் பராபரமே என்று நான் பாட்டிற்கு தேமே என்று என் வேலையில் மூழ்கிக்கிடந்து, வேலை மூம்முரத்தின் சைக்கிள் கேப்பில் நைட் ஷோவிற்கு போனால்....சாட் சாத் அதே Angels and Demons, அத்தனை அழகாக தமிழாக்கப்பட்டு, இந்திய contextடில் கச்சிதமாக பொருத்தப்பட்டிருந்ததை கண்டு, சும்மா சொல்ல கூடாதுப்பா, கலக்கிவிட்டார் கமல்! என்று அசந்து போனேன் நான்.

angels and demonsசின் theme கொஞ்டமும் சிதறாமல், மதம், மனிதனேயம், விஞ்ஞானம், இயற்கை, ஆன்மீகம் வர்ஸஸ் நாத்தீகம் சர்ச்சை என்று எல்லா ingredientsசையும் அழகாய் கலந்து, வேட்டிகன் போப்பாண்டவர்கள் தேர்வு பிரச்சனைக்கு பதிலாக சைவர்கள்-வைணவர்களுக்கு இடையில் ஏற்ப்பட்ட துவேஷம் பற்றின வரலாற்றை சேர்த்து, கூடவே சுனாமியையும் கிலைமாக்ஸில் பயன்படுத்திக்கொண்டது கமலின் கதைசொல்லும் கெட்டிக்காரத்தனத்திற்கு இன்னொரு எ.கா.

நேபோலியன் குலோதுங்கர் கெட அப்பில் அசத்தலாய் இருந்தார். வில்லன் கேரெக்ரட் வெரி குட்டாய் இருந்தது. ஆனால் கமலின் பெரிய கண்கள் இந்த பத்து கேரக்டர்களை உருவாக்க பெரிய தடையாய் இருந்தன போலும்! பிராஸ்தெடிக் முகங்கள் கொஞ்சம் நெருடலாக இருந்தன, கொஞ்சம் மெல்லிதாக இருந்திருந்தால் முகம் உப்பிக்கொண்டது போல் இருந்திருக்காதோ? குணா கமலின் கருப்பு நிறம் இயல்பாக இருந்தது, ஆனால் பூவராகன் கமல் சொரியாஸிஸ் வந்தவர் போல, கொஞ்சம் கலரும் textureரும் விகாரமாகவே இருந்தார். ஜப்பானிய கமல் முகம் ரொம்ப அகலம், உயரக்கமல் கைகள் சைஸ் மேட்ச் ஆகவில்லை, பாட்டி கமல் முகம் ஹாலோவீன் முக மூடி மாதிரி பயமுருத்தலாய் இருந்தது. ஆனால் பாட்டிகமலின் ஒடுங்னின சைஸ் தத்ரூபமாய் இருந்தது!புஷ் கமல் புருவம் இன்னொரு சொதப்பல்! ஆனால் எல்லாவற்றையும் தாண்டி தோற்றகுறைகளை தன் body language + voice modulationனை கொண்டு சரிகட்டிவிட்டார் கமல்.

சிரேஸி மோஹனின் பிராமினிக்கல் யூமர் ரொம்பவே போரடிக்க ஆரம்பித்துவிட்டது, என்ன ஒரே ஆறுதல் கதா நாயகியின் பெயர் ஜானகி இல்லை! என்ன, இத்தனை வட்டார வழக்குகளை போட்டு பிழந்துக்கட்டியதில், பல இடங்களில் வசனமே புரியவில்லை. போதாதகுறைக்கு ஓவர் dense ஆங்கிலத்தில் தலைவர் தன் புலமையை பிய்த்து உதர, கொஞ்சம் என்னை மாதிரி மக்குகள் மேல் கருனை காட்டி, சிம்பிலாய் மொழியை கையாண்டிருக்கக்கூடாதா என்று தோன்றியது. அதுவும் அண்ணன் பாட்டுக்கு chaos theory, ebola hybrid, intelligent design, tectonic plate, Na Cl என்றெல்லாம் கிரேக்கமும், லத்தினும் பேச....அவர் நிறைய ஓம்ஒர்க் செய்திருக்கிறார் என்று புரிகிறது. ஆனால் படம் பார்க்கும் என்னை போன்ற பாமரர்கள் ஸ்கூல் ஓம் ஒர்க்கையே டிமிக்கி கொடுத்து பழகியவர்கள், படம் பார்த்து பொழிது போக்கலாம் என்று தியேட்டர் போனால், கையில் ஒரு ஆங்கில-தமிழ் அகராதி இல்லாமல் வசனமே புரியாது என்றால், வாட் an அநியாயம்! ஆனால் புரிந்த வசனங்கள் முழுக்க ரொம்பவே சுவையாக இருந்தன. போகிற போக்கில் பெரிய பெரிய யோசிக்கவைக்கும் கருத்துக்களை அநாயாசமாக தூவிவிட்டுபோகிறார் மனிதர். எல்லாமே புரிந்திருந்தால் இன்னும் எவ்வளவோ என்ஜாய் பண்ணியிருக்கலாம்.

ஆர்ட் டைரெக்ஷம் அமர்க்களமாய் இருந்தது, சுனாமி காட்சிகள் ஒரே ஒரு கார் மூழ்கல் இடத்தை தவிர செம சூப்பராய், தத்ரூபமாய் இருந்தன!

கனவு டூயட், என்ற பெயரில் இடைசெருகிய பாடல்கள் இல்லாதது படத்தை
உலகத்தரமாய் ஆக்கியது. இசை, பின்புல ஓசை இரண்டுமே பொருத்தமாய் இருந்தன.

criticism comes easier than craftsmanship தான், ஆனால் தன் பலங்கள் மற்றும் பலவீனங்களை கமல் மாதிரியான ஒரு dedicated artist புரிந்துக்கொண்டால் அவர் படைப்புக்கள் இன்னும் சூப்பராய் இருக்குமே. அதனால் அவர் கூடவே இருக்கும் சகாக்கள், எல்லாவற்றுக்கும் உம் கொட்டி ஓகே பண்ணாமல் கொஞ்சம் சரியான feedback கொடுத்தால் பெரும்பாலான கண்ணை உருத்தும் தவறுகளை தவிர்த்திருக்கலாம்!

ஆனால் ஒன்று, தசாவதாரம் மாதிரியான புராதானமான கான்செப்டை ஏஞ்சல்ஸ் ஆண்ல் டெமன்ஸ் மாதிரியான புதிய தீமோடு கலந்து ஜனரஞ்சகமான ஒரு ரீமிக்ஸை கொடுத்து கலக்கிவிட்டார் கமல், hats off to his ingenuity!

Saturday, May 31, 2008

முதல் பெண்ணியவாதி

இன்றைய பெண்கள் ரொம்பவே கொடுத்து வைத்தவர்கள், நல்ல வாய்ப்புக்கள், வசதிகள், உரிமைகள், சமூக அந்தஸ்து என்று ஓரளவுக்கு மேன்மையாகவே இருக்கிறது அவர்கள் வாழ்க்கை தரம். ஆனால் இந்த வளம் எல்லாம் ஆகாயத்திலிருந்து தானாய் வந்து குதித்துவிடவில்லை. எத்தனையோ மனிதர்களின் தொடர் போராட்டம் மற்றும் பிரச்சாரத்தின் விளைவாய் தான் இன்றைய பெண்கள் கொஞசமேனும் தன்மானத்தோடு இருக்கமுடிகிறது. இப்படி பெண்களுக்காக போராடியவர்களில் பல பேர் பெண்கள், இவர்கள் தங்களுக்காக தாங்களே குரல் கொடுத்துக்கொண்டவர்கள். ஆனால் தனக்காக என்று இல்லாமல், தான் ஒரு ஆணாக இருந்தபோதும் மிகதீவிரமாக பெண்களின் உரிமைக்காக் போராடிய ஒருவர் இருக்கிறார். அவர் தான் திரு ராமசாமி.

ஆனால் ராமசாமி என்றால் யார் என்று இன்று யாருக்கும் தெரிவதில்லை....சாதாரண மனிதர்களை தான் இயற்பெயரால் அழைப்போம். செயற்க்கரிய செய்த பெரும் மனிதர்களை பிரத்தியேக சிறப்பு பெயரால் தானே அழப்போம். இப்படி சிறப்பு பெயர் பயன்படுத்தியே பழகிவிட்டால் காலப்போக்கில் அன்னாரின் இயற்பெயரே மறந்துபோய், சிறப்புபெயரே நிரந்திரமாகி விடுகிறது. திருவாளர் ராமசாமியும் அப்படிப்பட்ட மஹான் தான். இயற்பெயரே மறந்துபோகும் அளவிற்கு பிரசித்தமான அவரது சிறப்பு பெயர் தான் தந்தை பெரியார். யோசித்து பார்த்தால், புத்தர், கிரிஸ்து, நபி, மஹாத்மா என்ற வரிசையில் தனக்கென்று ஒரு நிரந்தர சிறப்பு பெயர் பெற்றவர் பட்டியலில் தந்தை பெரியாரும் ஒருவர். மற்ற நால்வரை விட பெரியார் வித்தியாசமானவர், அவர்கள் எல்லாம் கடவுளின் பெயரால் பணியாற்றியவர்கள், பெரியாரோ கடவுளே இல்லை என்று பகிரங்கமாய் பிரச்சாரம் செய்த்தற்காக பிரசித்திபெற்றவர். ஆனால், இந்த பெரியார் என்ற மாமனிதனின் பாடல் பெறாத இன்னொரு முகம் ஒன்று உண்டு. இவர் தான் இந்தியாவின் முதலும், மிக மும்முரமுமான பெண்ணியவாதி.

இன்று ஆணுக்கு பெண் சம்ம் என்பது எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு சமூக கருத்து. இன்றைய பெண் ஆணுக்கு அடிமை இல்லை, அவளுக்குஆணை போலவே எல்லா சுத்ந்திரமும் உண்டு தான், இந்த பெண் விடுத்லை எல்லாம் சென்ற நூற்றாண்டில் பெரியார் முன் நட்த்திய பெரும் போராட்ட்த்தின் நேரடி விளைவு தான். கடந்த காலத்தின் கேவலங்களை ஒரு முறை நினைவு கூர்ந்தால்....அந்த காலத்தில் பெண்கள் பூப்பெய்வதற்கு முன்பே பாலிய விவாகம் செய்ய பட்டுவிடுவார்கள். இந்த குட்டி மாட்டுப்பெண்ணின் குட்டிக்கணவன், பாம்பு கடித்தோ, காலரா தாக்கியோ, வேறு எப்படியோ அல்பாஅயிசில் மாண்டுபோனான் என்றால், இந்த குட்டி விதவைக்கு எல்லா சம்பிரதாயங்களையும் செய்வித்து, அவளை அமங்களி ஆக்கி முடிந்தால் உடன் கட்டை ஏற்றி, கணவனின் சிதையில் தள்ளிவிடுவார்கள். அப்படி இல்லை என்றால், அந்த குட்டிப்பெண் தன் மித ஜீவனத்தை முழு பிரம்மச்சரியத்தில் கழித்திட வேண்டியது தான். இந்த குட்டி பெண்ணுக்கு மறு வாழ்வு, அடுத்த திருமணம் என்ற பேச்சுக்கே இடமில்லை. பெண்களின் உரிமை என்ற ஒன்றே அபச்சாரமான சொல்லாகத்தான் கருதப்பட்ட்து.

அமங்களியான் பெணின் கதி தான் இவ்வள்வு மோசம் என்று பார்த்தால், சுமங்களியாக இருந்த பெண்ளின் நிலையும் மட்டமாகவே இருந்த்து. அந்த காலத்து பெண்களுக்கு எத்தனையோ தடைகள் இருந்தன. அவர்கள் தனியே வெளியே செல்லக்கூடாது, கல்விகற்க்கூடாது, வேலைக்கு போக முடியாது, சுயமாய் சம்பாதிக்க முடியாது, சொத்துரிமை கிடையாது, சுயசம்பாதியத்திற்கு வழி இல்லை, சுயமாய் வாழ்க்கைதுணையை தெர்ந்தெடுக்கும் உரிமையும் கிடையாது. ஆக அவளுக்கு என்று எந்த சுதந்திரமும் கிடையாது. அவள் ஒரு தனி பிரஜையாகவே கருதப்படவில்லை. அவளின் அடையாளம் அப்பா, அண்ணன், கணவன், மகன், என்று ஒரு ஆணின் அடையாளதோடே எப்போதும் பிணைக்கப்பட்டிருந்த்து...காரண்ம், பெண்கள் எல்லாம் பலவீனமானவர்கள், அதனால் அவர்களுக்கு ஒரு ஆணின் பாதுகாப்பு எப்போதுமே அவசியம் என்கிற நம்பிக்கை இருந்து வந்தது.

அந்த காலத்து ஆண்களும் பெண்களை பற்றி பெரிதும் யோசிக்கவே இல்லை. உண்மையை சொல்லப்போனால், பெண்கள் இப்படி இழி நிலையில் இருப்பது தான் நம் கலாச்சார பாரம்பரியம் என்று பெருமைப்பட்டுக்கொண்டார்கள். பாலியவிவாகம் தான் சரி, அப்போது தான் பெணின் கற்பு 100% தூய்மையாய் இருக்கும் என்று பாலகங்காதர திலகரை போன்ற தேசதலைவர்களும் நினைத்தார்கள்.

ஆனால் பெரியார் ரொம்பவே வித்தியமான மனிதர், மதமெனும் மாயவலையில் மாட்டிக்கொள்ளாத சுயசிந்தனையாளர் அவர். புதிதாய் யோசிக்க தெரிந்த புரட்சியாளர் என்பதனால், ஜாதி, மதம், நிறம், பாலினம், போன்ற மாயைகளை எல்லாம் தாண்டி முதிர்ந்த பகுத்தறிவு சிந்தனை கொண்ட ஞானி அவர். என்னதான் வைணவ சடங்குகள் வழிந்த குடும்பத்தை சேர்ந்த்தவராய் இருந்தாலும், வாய் கிழிய சர்வம் பிரம்ம மயம் என்று அத்வைதத்த்துவம் பேசிவிட்டு, அதே வாயால் ஜாதியின் பெயரால் பாரபட்சம் பேசும் பட்சோந்தித்தனத்தை சிறு வயதிலேயே சகித்துக்கொள்ள முடியாதவர் பெரியார்.

ஒரு சராசரி மனிதன் ஆகாயத்தில் பறக்கும் கலனை கற்பனை கூட செய்யமுடியாத காலத்திலேயே ஹெலிகாப்டரை கண்டுபிடித்த லியோனார்டோ ட வின்சியை போல, பெரியாரும், தம் காலத்தை மிஞ்சும் யோசிக்கும் தீர்க்கத்சிந்தனையாளராக இருதார். ஒரு சமூகவிஞ்ஞானியாய், தம் சம்காலத்தவர் சிந்தித்துக்கூட பார்க்க் முடியாத பல புதுமையான வாழ்க்கை முறைகளை முன்வைத்தார். பெண் இயற்கையிலேயே ஆணின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவள் தான் என்று எல்லோரும் நம்பிக்கொண்டிருந்த காலத்திலேயே, பெண் எல்லா விதத்திலும் ஆணுக்கு சரி நிகர் சமானம் என்று முதல் முதலில் பெண்ணியம் பேசியவ்ரே தந்தை பெரியார் தான். இந்த மகளிர் சமத்துவத்திற்காக் பல நூதன போராடங்களை மேற்கொண்டு, சமுக அமைப்புகளை எதிர்த்து தாக்கினார்.

அவர் காலத்தில் பெண் என்றால், அவள் உடல், அழகு, பிள்ளை பெறும் தன்மை, பணிவு, சமையல் திறன், கற்பு, ஆகியவையே போற்றுதலுக்கு உகந்தவை என கருதப்பட்டன. பெரியார் இந்த பட்டியலில் இருந்த எல்லாவற்றையும் சாடினார்.

ஆணுக்கு பெண் சம்ம் என்ற பின் பெண் மட்டும் தன் உடலை அழகுப்படுத்தி காட்டி ஆணின் அங்கீகாரத்திற்கு காத்திருக்க வேண்டியதில்லையே. எப்படி ஆண்கள் ஒரு காலத்தில் தாங்க்ள் அணிந்திருந்த கடுக்கன், குண்டலம், ஆகிய்வற்றை கழற்றிவிட்டு, குடுமிகளை வெட்டிக்கொண்டு, திலகம் அணிவதை நிறுத்திக்கொண்டு, இதற்காக், செலவிட்ட காலத்தை உருப்படியாக உபயோகிக்கிறார்களோ, அது போலவே பெண்களும் ஒப்பனைக்காக் செலவிடும் நேரத்தை கொஞசம் பிரயோஜனமாக பயன்படுத்தினால் மேல்; உடை, ஒப்பனை, ஜடை, அலங்காரம் போன்ற வெட்டி வேளைகளில் செலவிடும் நேரத்தை தங்கள் அறிவை மேம்படுத்த பயன்படுத்தினால் தான் பெண்கள் முன்னேற முடியும் என்றார் பெரியார். அதனால், ஆண்கள் அணிகளை துறந்ததை போலவே பெண்களும் செய்ய வேண்டும், முழம் முழமாய், புடவையை சுற்றிக்கொண்டு தலைப்பு சரியாக இருக்கிறதா, கொசுவம் சரியாக இருக்கிறதா என்று சரி பார்ப்பதிலேயே நேரத்தை வீணடிப்பதை விட, பெண்கள் எல்லாம், ஆண்களை போல, மேலய நாட்டுப்பெண்களை போல, பேண்ட். சட்டை அணிந்துகொண்டு, முடியை வசதியாக கிராப்பு வெட்டிக்கொண்டு, பொட்டு வைக்கும் வெத்து வழக்கத்தை விடுத்து நிம்மதியாக இருக்கலாமே என்று ஐடியா சொன்னார் பெரியார்.

பெரியார் பல வெளி நாடுகளுக்கெல்லாம் போய், அங்குள்ள மனிதர்கள் வாழும் வித்த்தை பரிசீலனை செய்து பார்த்து, எது முன்னேற்றத்திற்கு உகந்த்து என்று சீர்தூக்கிப்பார்த்தவர். வளர்ந்த நாடுகளை சேர்ந்த பெண்கள் குட்டி முடியும், இலகு உடைகளையும் அணிவதனால், சவுகரியமாக உணர்வதை கவனித்த பெரியார், தன் துணைவி நாகம்மையையும் அவ்வாறே உடை அணிய சிபாரிசு செய்தார். 1930களிலேயே! பழையன கழித்து, பிரயோஜனமான புதுமைகளை ஸ்வீகரித்துக்கொள்வதில் ஆர்வமுள்ள முற்போக்கு சிந்தனையுள்ளவர் பெரியார்.

இது போலவே பிள்ளைபேறு பற்றியும், கீழ்படிதலை பற்றியும் பெரியார் மாறுபட்ட கருதுக்களை கொண்டிருந்தார். அவர் பெண்களை வெறும் குட்டிபோடும் யந்திரங்களாக பார்க்கவில்லை, அவர்க்ளை அறிவாளிகளாக பார்க்கவிரும்பினார். அதனால், ஆண்களை போலவே பெண்களூம் நன்றாக படிக்கவேண்டும் என்று ஊக்குவித்தார். இது பற்றி ‘பெண் ஏன் அடிமையானாள்?’ என்கிற் அவரது புத்தகத்தில், பெண்ணின் அறியாமை தான் அவளை அடிமைபடுத்துகிறது, ஆனால் அறிவு அவளை சுதந்திரப்படுத்தும், அதனால் பெண்களை கல்வி பெற்று, பகுத்தறிவோடு வாழ்வேண்டும் என்றார். பெண் என்பவள் அடக்க ஒடுக்கமாய் இருக்க வேண்டியவள் என்கிற போனதலைமுறை எதிர்பார்ப்பை எல்லாம் ஏளனம் செய்தார் பெரியார். தன் நம்பிக்கை இல்லாத கோழைதான் பெண்ணை அடக்கி தன் வீரத்தை காட்டிக்கொள்ள முயல்வான், மற்றபடி நிஜமான வீர ஆண்மகன், பெண்களிடம் கரிசனத்தோடு தான் நடந்துக்கொள்வான் என்றார்.

பெண்கள் சமயல் அறையிலேயே முடங்கிக்கிடப்பதை பற்றியும் பெரியாரிக்கு எதிர்ப்பு இருந்த்து. பெண்கள் அடுப்பூதிக்கொண்டு, சதா சமயலே கதி என்று இருப்பதினால் தான் அவர்க்ளது அறிவை உபயோகமாக பயன்படுத்த முடியாமல் போகிறது. அப்படி இல்லாமல், உணவுக்காக என்று தனி மையங்கள் அமைத்து, அங்கிருந்தே எல்லோருக்கும் உண்வு வழங்க ஏற்பாடு செய்துவிட்டால், சமையல் எனும் செக்கிலிருந்து விடுபட்டு, பெண்கள் தங்கள் அறிவை வளர்த்துக்கொள்ள வாய்ப்பு கிடைக்குமே என்று யோசனை தந்தார் தந்தை பெரியார்.

தமிழ் பெண்களின் உச்ச்க்கட்ட உண்ர்வான கற்பை பற்றியும் பெரியார் தெளிவான கருத்துக்களை கொண்டிருந்தார். கற்பு நெறி என்பதெல்லாம், பெண்களை காலாகாலத்திற்கும் ஆணின் அடிமைகளாக்கும் பெரிய சதி. இந்த குறிகிய வட்ட்த்தை விட்டு பெண்கள் வெளியேறி சுயமரியாதையுடன் வாழவேண்டும் என்றார் பெரியார். இதற்காக சுயமரியாதை திருமணங்களை தோற்றுவித்தார். சாதாரண திருமணங்களில், பெண் வெறும் ஒரு பொருள் மாதிரி தகப்பனால் கன்னிகாதானம் செய்து தரப்பட்டு, கணவனிடம் ஒப்படைக்கபடுவாள். ஆணுக்கு பெண் சமம் என்ற நிலை வந்த பிறகு, பெண்னண தொரந்து ஏன் ஒரு பொருளாகவே நட்த்தவேண்டும்? தனக்கு பிடித்த துணைவனை தானே தேர்ந்தெடுக்கும் உரிமை அவளுக்கு இருக்க வேண்டுமே. அத்தோடு, அவளை தானமாக தருவதெல்லாம், பெண்ணை அவமான்ப்படுத்தும் செயல் என்பதால், ஆணும் பெண்ணும் சரி நிகராய் சம உரிமையுடன் ஒருவரை மற்றவர் இல்வாழ்க்கை துணையாய் ஒப்பந்தம் செய்துக்கொள்ளும் ஒரு அவுரவமான கண்ணியமான, நவீன திருமணத்தை அறிமுகப்படுத்தினார் பெரியார். இந்த முறையில் ஆணும் பெண்ணும் தங்கள் சுய அவுரவத்தை பாதுகாத்துக்கொள்ள முடிந்ததால், இது சுயமரியாதை திருமணம் என்று பிரபளமானது.

ஒன்றும் புரியாத, எப்படியும் பின் பற்றாத வேதங்களை எல்லாம் ஓதிக்கொண்டிருக்காமல், சுயமரியாதை முறையில் சமகாலமொழியில், எல்லோருக்கும் புரியும் விதத்தில் ஒப்பந்தம் செய்துக்கொண்டு இல்வாழ்க்கையில் இணைந்தார்கள் பலர். இன்று வரை தமிழ் படங்கள் எல்லாம் தாலி செண்டிமெண்டை பற்றி ஆஹா ஓஹோ என்று பிதற்றிக்கொண்டிருக்க, அன்றே பெரியார், கால் நடைகளுக்கு தான் ஓடிவிடக்கூடாதென்று ஒரு மூக்கனாங்கயிரு கட்டுவார்கள், பெண் என்ன விளங்கா, அவளுக்கு எதற்கு ஒரு கழுத்து கயிரு என்றார். அப்படியே கயிர் கட்டித்தான் ஆகவேண்டும் என்றால், ஆணும் பெணும் சம்ம் ஆகிவிட்ட காரண்த்தினால், பெண்ணுக்கு ஆண் தாலி கட்டுவதை போல, ஆணுக்கும் பெண் தாலி கட்டலாம், அல்லது, இருவருமே, தாலி கட்டும் அபத்த சடங்கை கைவிடலாம், என்றார். தாலி இன்றி, வேத மந்திரங்கள் இன்றி, திருமணம் செய்தால் அமங்களம் ஆகிவிடுமோ என்று பயந்தவர்கெல்லாம் சீதையையும், தமயந்தியையும், பாஞ்சாலியையும் உதாரணமாய் காட்டினார் பெரியார்.....இந்த பெண்கள் எல்லாம் சாஸ்திர ஸ்ம்பிரதாயப்படி மணம் முடித்தவர்கள் தாம், ஆனால் அதனால் அவர்கள் திருமணம் செழித்துவிடவில்லையே!. இந்த சுயமரியாதை திருமண்ங்கள் சட்ட படி செல்லுபடியாகுமா என்ற சிக்கலும் இருந்த்து. ஆனால் அறிஞர் அண்ணா தமிழகமுதல் அமைச்சரானதும் முதல் வேளையாக இந்த சுயமரியாதை திருமணத்தை சட்டபூர்வமாக்கிவிட்ட்தால், பெரியாரின் இந்த நவீன திருமணம் மிக பிரபலம் ஆனது. அறிவாளிகள் மத்தியில் இந்த திருமணம் அமோக வரவேற்பை பெற ஒரு புது சமுக புரட்சியை ஏற்படுத்தியது.

இத்தகைய சுயமரியாதை திருமணத்திற்கு பிறகும், ஒரு பெண்ணுக்கு தன் கண்வனை பிடிக்கவில்லை என்றால், வெறுமனே கல்லானாலும் கணவன் என்ற வெத்து செண்டிமெண்ட் பார்த்து தன் வாழ்வை வீண்டித்துக்கொள்ளாமல், அந்த விவாகத்தை ரத்து செய்து கொள்ளும் உரிமை பெண்களுக்கு இருக்கவேண்டும் என்று பெரிதும் போராடினார் பெரியார். அந்த காலத்தில் பெண்களுக்கு விவாகரத்து கோரும் உரிமையோ, மறுமணம் புரியும் உரிமையோ இல்லை. இதை எதிர்த்து பெரியார் பல காலம் பிரச்saரம் செய்து, அந்த உரிமைகளையும் பெண்களுக்காக பெற்றுக்கொடுத்தார்.

அதுவும் தவிற கணவன், மனைவி என்ற சொற்களை பெரிதும் சாடினார் பெரியார். இருவரும் சரிசம்ம் என்ற பின், பெண்ணை மட்டும் மனையோடு கிடப்பவள் என்று அர்த்தப்படிகிற சொல்லால் அழைபதை அவர் விரும்பவில்லை. அதனால் தம்பதியினர் இருவருக்கும் பொதுவான விழிசொல்லாய், துணைவர், இணைவர் என்ற சம நிலை அர்த்தப்படுகிற பத்ங்களை பயன்படுத்த ஊக்குவித்தார். எதே போல எல்லா துறைகளிலும் மகளிர் அயராது உழைத்தார் பெரியார்..., சம உரிமை, சம வாய்ப்பு, சம கல்வி, சம ஊதியம், சம சொத்த்துரிமை என்ப்வை மட்டும் இன்றி, விபச்சார ஒழிப்பு, தேவதாசி முறை ஒழிப்பு, பெண்களின் துஷ்பிரயோக ஒழிப்பு என்று பல பல சமுதாய மாறுதல்களை ஏற்படுத்தினார். அவரது சிந்தனை தெளியும், தர்கத் திறனும், எல்லோரது கண்களையும் திற்ந்து மனதையும் விசாலமாக்க, படித்தவர்கள், புத்திசாலிகள் மத்த்தியில் பெருத்த வரவேற்பை பெற்றார் பெரியார். அவரது கருத்துக்களை பல மேதாவிகள் பின்பற்ற ஆரம்பிக்க, படி படியாக, அதுவே நாகரீகத்தின் உச்ச்க்கட்ட வெளிபாடானது. பெண்களை கண்ணியமாய் நடத்துவதே நாகரீமானது.

பெரியாரின் நிழலில் பெண்கள் எல்லாம் புது தெம்பும் தெளிவும் பெற்று, தங்கள் சுயமரியாதையை உணர்ந்துக்கொண்டு விழிப்புற்றார்கள். பெரியாரும் பெண்களை ஊக்குவிக்கும் விதம்மாய், இந்தியாவிலேயே முதல் முறையாய், பெண்களின் மா நாடுகளை கூட்டினார். இப்படி 1936 ஆம் ஆண்டு அவர் கூட்டிய மா நாட்டில் தான், பெண்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து, தங்களின் முன்னேற்றத்திற்காக் பெரிதும் பாடுப்பட்ட அவருக்குத்து ‘பெரியார்’ என்ற சிறப்பு பெயரைச்சூட்டினர். அன்று முதல் திரு ஈ வே ராமசாமியாக இருந்தவர் தந்தை பெரியாராக மாறினார். இதே மனிதர் தான் ஜாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு, ஹிந்தி எதிர்ப்பு, கடவுள் நிராகரிப்பு என்று பல பல சமூக சீர்திருத்தங்களை செய்திருந்தார்.....ஆனால், மகளிர் நலனுக்காக அவர் ஆற்றிய் சேவை தான், வெறும் ராம்சாமியாக இருந்தவரை தந்தை பெரியார் என்கிற மாம்னிதன் ஆக்கியது.

பெரியாரும் தான் இந்த பெரயருக்கு மிக பொருத்தமானவர் என்பதை நிறுபவித்தார். அவர் தோற்றுவித்த திராவிடர் கழகம் என்கிற சமூக நல அமைப்பை தன் துணைவி திருமதி மணியம்மையின் விட்டுச்சென்றார். அது வரை எந்த தலைவரும் தன் நிறுவனத்தின் பொருப்பை பெண்களிடம் ஒப்படைத்தாக சரித்திரமே இல்லை....ஒரு வேளை பெண்களால் பெரிய வகிக்கமுடியுமோ என்று மற்றவர்கள் சன்தேகப்பட்டார்களோ என்னவோ? ஆனால் பெரியாருக்கு பெண்ணின் திறன் மீது எந்த சந்தேகமும் இருக்கவில்லை.

அவர் நம்பிக்கையை காப்பாற்றி, பெரியாரின் பெண்ணிய கருத்துக்களை அமல்படுத்தும் விதமாகவே, இந்தியாவின் முதல் முற்றிலும் பெண்களுக்கான பொறியியல் கல்லூரி தஞ்சை அருகே உள்ள வள்ளம் எனும் ஊரில் கிட்ட்தட்ட இருவது ஆண்டுகளுக்கு முன்பு துவக்கப்பட்ட்து. இந்த கல்லூரியில் படிக்கும் பெண்களுக்கெல்லாம் சீருடையே பேண்ட், சட்டை தான். யோசித்து பாருங்களேன், இன்று வரை தமிழ் கலாசாரத்தில் பெயரால், பெண்கள் கால்லூரிகளுக்கு பேண்ட் சட்டை போட்டுக்கொண்டே வரக்கூடாது என்று மெத்தப்படித்த பல்கலைகழக துணைவேந்தர்கள் எல்லாம் கரார் ஒடுக்குமுறை செய்வதை பார்த்தால் உடனே புரிகிறது, திரு ஈ வே ரா, உண்மையிலேயே தன் காலத்தை மிஞ்சிய மஹா முற்போக்குசிந்தனையாளர் தான். இந்த பெரிய மனிதருக்கு இன்றைய எல்லா பெண்களும் நன்றி சொல்லக்கடமை பட்டுள்ளோம், இன்று நாம் இந்த உயரதில் இருக்க காரணமே அவர் தான். பெண்களை அடக்குமுறை படுத்த முயலும் சாமான்ய ஆண்களுக்கு மத்தியில் பெண்களின் மேம்பாட்டிற்காக் போராடினாரே, அவர் தான் பெரியார். எப்பேற்பட்ட பெரியார்!