Thursday, December 31, 2009

Tuesday, December 15, 2009

Monday, December 7, 2009

ஆண்களை ஹாண்டில் செய்ய: அத்தியாயம் 27

என்ன ஸ்நேகிதி, போன இதழை படித்து விட்டு, படிப்பு அவ்வளவு முக்கியம் இல்லைனு சொல்லுறாங்களே, அப்படினா ஆம்பிளையோட அறிவை எப்படி தான் எடை போடுறதாம், என்று யோசிக்கிறீர்களா? நீங்களே பார்த்திருப்பீர்களே, மெத்த படித்திருப்பார்கள் ஆனால் சுத்த பேக்காக இருப்பார்கள், எதுவுமே படித்திருக்க மாட்டார்கள் ஆனால் ஊரையே ஏலம் போட்டு விற்றே விடுவார்கள். ஆக படிப்பு என்பது எந்த மனிதனின் அறிவையும் அளவிட்டு விடாது.

அப்ப அறிவை எப்படி தான் அளவிடுவது என்று தானே கேட்கிறீர்கள். அறிவுக்கு சில அறிகுறிகள் உண்டு:


1. அறிவுள்ளவன் சுயமாக யோசிப்பான். உதாரணத்திற்கு இந்த மாப்பிள்ளை எடுத்து கொள்வோமே. அவன் புது மனைவி அவனிடம் போய், ”நாம் ஒரு குக்கர் வாங்கலாமே, தினமும் உலை வெச்சு சாதம் வடிக்கிறதுனா கேஸ் எவ்வளவு வேஸ்டாகுது. கஞ்சு தண்ணீயில சத்தெல்லாமும் வேற வீணா போகுது, குக்கர் வாங்கினா, ஒரே நேரத்துல, சாதம், காய், பருப்புனு நிமிஷத்துல சமச்சிடலாம், சத்தும் வீணாகாது, கேஸ் செலவும் மிச்சம்” என்று அபிப்ராயம் சொல்ல, அந்த பையன் உடனே, “அடடா, என் பொண்டாட்டிக்கு என்னே பொருப்புணர்ச்சி! என்ன ஒரு எரிபொருள் சிக்கனம்,” என்று உச்சி குளிர்ந்து போய் வெகுவாய் பாராட்டுவான் என்று நீங்கள் எதிர்பார்த்தால் அது தான் இல்லை. பையன் மிக மும்முரமாய் அடுத்து உதிர்த்த பொன் மொழி என்ன தெரியுமா? “என் அம்மாவை கேட்டியா? அவங்க என்ன சொன்னாங்க?”

“கேட்டேனே, அவங்க என்ன இருந்தாலும் வடிச்ச சாதம் மாதிரி வர்றாதுனு சொல்லுறாங்க. ஆப்டரால் ஒரு குக்கர் வாங்குற விஷயம், இதை நாமலே பேசி முடிவு பண்ணிக்கலாமே, இதுக்கு எதுக்கு அத்தைய இழுக்கணும்?” என்று மனைவி அலுத்துக்கொள்ள மாப்பிள்ளை, “என் அம்மாவுக்கு தெரியாதது உனக்கு தெரியுமா? என்ன படித்துவிட்ட திமிரா?” என்று கோபிக்க, குக்கர் வாங்கலாமா வேண்டாமா என்று பேச்சு அப்படியே திசைமாறி போய், அவன் அம்மாவை மனைவி எந்த அளவிற்கு மதிக்க வேண்டும் என்கிற லெக்சரில் போய் முடிய, அவன் மனைவி, ”ஆஹா என்ன ஒரு அம்மா செண்டிமெண்ட்” என்று உருகியா விடுவாள்? போயும் போயும் ஒரு குக்கர் மேட்டர், இதில கூட சுயமா யோசிச்சு ஒரு முடிவு எடுக்க முடியலையே?” என்று மனதிற்குள் நினைத்தாளோ இல்லையோ, உடனே அவள் மனதில் அவனுக்கான மதிப்பெண், பங்கு சந்தை மாதிரி படாறென சரிந்தே போனது.
ஆக இந்த சுய புத்தி தான் அறிவின் முதல் அடையாளம்.

2. அறிவுள்ளவன் பிறர் கருத்துக்களை காது கொடுத்து கேட்டுக்கொள்வான். பிறர் சொல்வதில் எது உண்மை எது இட்டு கட்டிய கதை, என்று மிக துள்ளியமாக பகுத்தறிந்து விடுவான். இந்த டிஸ்கிரீஷன், discretion, எனப்படும் பகுத்தறிவு தான் அறிவின் அடுத்த முக்கியமான அறிகுறி. நீங்களே பார்த்திருப்பீர்களே, உலக விஷயம் தெரியாத வெகுளிகள் யார் எதை சொன்னாலும் அப்படியே நம்பிவிடுவார்கள். எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருளில் மெய் பொருள் காணும் அறிவே அவர்களுக்கு இருப்பதில்லை. பல ஆண்கள் இப்படி இருப்பதுண்டு. அதுவும் குறிப்பாக, தன் தாய், தமக்கை என்கிற தாய்குலங்கள் எதை சொன்னாலும், அது தப்பா சரியா என்று கொஞ்சம் கூட யோசித்துப்பார்க்காமல் சாவி கொடுத்த பொம்மை மாதிரி அப்படியே பாயும் தன்மை பல ஆண்களுக்கு இருப்பதை நீங்களே பார்த்திருப்பீர்கள்.

உதாரணத்திற்கு: அந்த கணவன் எந்த கடை அரிசி? என்று கேட்கும் அளவிற்கு அப்படி ஒரு குண்டு. அவன் மனைவியின் பிரதான குறிக்கோளே எப்படியாவது அவனை டயெட்டிங் இருக்க வைத்து, கனிசமான எடையை குறைத்து மற்ற நார்மல் மனிதர்களை போல அவனையும் ஆக்கிவிடவேண்டும் என்பது தான். அதற்காக எண்ணெய் பலகாரம் என்றாலே “ஓவர் மை டெட் பாடி” என்று மிக தீவீரமாய் அவனை பாதுகாத்துவந்தாள் மனைவி.

இதை பற்றி கேள்வி பட்ட அவன் வீட்டு தாய் குலம், “அவள் யாரடா உன்னை இதை சாப்பிடு, அதை சாப்பிடாதேனு சொல்ல? வாய்க்கு ருசியா ஒரு பூரி, பேப்பர் ரோஸ்ட், போண்டானு செய்து தரலைன்னா அப்புறம் உனக்கெதுக்கு ஒரு பொண்டாட்டி….நேத்து வந்தவ, அவளுக்கு என்ன தெரியும் உன் உடம்பை பற்றி? என் பையன் சரியா சாப்பிடாம இப்படி துரும்பா இளச்சி போயிட்டானே….” என்று உடனே மடமடவென லிட்டர் லிட்டராய் எண்ணெயை ஊற்றி, எதை எல்லாம் அவன் சாப்பிடவே கூடாது என்று மனைவி பாதுகாத்தாலோ, அதை எல்லாம் ஒரே நாளில் வரிந்துகட்டிக்கொண்டு செய்து போட, அறிவுள்ளவன் என்ன செய்வான்?

மனைவி உடலிளைத்து ஆரோகியமாக இருக்க தானே இந்த பாடு படுகிறாள், தாய்குலமே என்றாலும் அவர் செய்து தருவதை சாப்பிட்டால், பரலோகத்திற்கு போகும் பயனசீட்டு துரிதமாய் கிடைத்து விடுமே என்று லைட்டாகவாவது பகுத்தறிந்து யோசித்து இருப்பானே. ஆனால் பூரியும், போண்டாவும் கண்னை மறைக்க, “என் அம்மாவுக்கு என் மேல எவ்வளவு ஆசை, இந்த வயசிலும் கஷ்டப்பட்டு எனக்காக ஆசை ஆசையாய் இத்தனையும் செய்து தருகிறார்களே, நீயும் இருக்கியே ராட்ஷசி, எண்ணை பலகாரமே என் கண்ணில் காட்டாமல்!” என்று உடனே சோறு கண்ட இடமே சொர்கம் என்று சாய்ந்து விட்டான்.


யார் எதற்க்காக என்ன பேசுகிறார்கள், என்ன செய்கிறார்கள், அவர்களின் உள்நோக்கம் என்ன? யார் சொல்வது நியாயம்? யார் சொல்லில் அதிக நன்மை என்று எல்லாம் லேயர் லேயராய் யோசிக்க நிறைய அறிவு வேண்டும், பல ஆண்களுக்கு இந்த street smartness எல்லாம் போதுமான அளவில் இருப்பதில்லை. ரொம்ப காலம் அடிபட்ட பிறகு ரொம்ப லேட்டாய் தான் உணருவார்கள், தாயும் பிள்ளையுமே ஆனாலும் வாயும் வயிறும் வேறு என்று. ஆனால் உலக அறிவு அதிகம் இருக்கும் ஆண்கள் சீக்கிரமே தெரிந்துக்கொள்கிறார்கள், that that man, that that life என்று, அதனால் எந்த கொம்பன் வந்து சொன்னாலும் உடனே குருட்டுத்தனமாய் நம்பாமல் தங்கள் பகுத்தறிவை பயன் படுத்தி, பாகுபடுத்தி பார்த்து, தனக்கு சரி என்று தோன்றுவதை மட்டும் செய்து ஜெயிக்கிறார்கள்


3. அறிவின் அடுத்த வெளி பாடு open mindedness, திறந்தமனப்பான்மை - அதாவது புதிய விஷயங்களை தெரிந்துக்கொள்வதில் ஆர்வம், அப்படி தெரிந்துக்கொண்ட புது விஷயம் உபயோகமானதாய் இருந்தால் அதை உடனே ஸ்வீகரித்துக்கொள்ளும் இலகுத்தன்மை. சில பேருக்கு புது விஷயம் என்றாலே ரொம்ப அலர்ஜி, எது எது எப்படி எப்படி இருக்கிறதோ, அது அது அப்படி அப்படியே இருந்தாலே ஷேமம் என்று நினைப்பார்கள். புது மனிதர்கள், புதிய தகவல்கள், புது தொழில் நுட்பம், புதிய உணவு, புதிய கலாச்சார மாற்றம் என்றால் அவர்களால் அதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. ”அந்த காலத்துல” என்று எப்போதுமே பழம் பெருமை பேசிக்கொண்டு, தங்களை நிகழ் காலத்திற்கு கொண்டுவராமல் அப்படியே தேங்கி நின்றுக்கொள்வார்கள். இப்படிப்பட்ட பிற்போக்கான மனிதர்கள் தானும் முன்னேற மாட்டார்கள், பிறரையும் முன்னேற விடமாட்டார்கள். ஆனால் காலம் இவர்களுக்காக காத்திருக்குமா என்ன? அது பாட்டிற்கு தன் வேகத்தில் போய் கொண்டே இருக்கும். காலத்திற்கேற்ப தங்கள் கருத்துக்களை புதுபித்துக்கொண்டே வரும் மனிதர்கள் இந்த கால ஓட்டத்தில் முன்னேறி போய் கொண்டே இருப்பார்கள். பின் தங்கிப்போனவர்கள் இருந்த சுவடியே இல்லாமல் காணாமல் போவார்கள். இதை தான் எவல்யூஷன் என்பார்கள். இயற்க்கைக்கு தான் ஈவு, இரக்கம், கருணை, தயை இதுவுமே கிடையாதே. எல்லாமே survival of the fittest தானே. ஃபிட் என்றால் காலத்திற்கேற்ப மாறிக்கொண்டே போக வேண்டும், இல்லாவிட்டால் முன்பு பூமியில் வாழ்ந்து மறைந்த டைனாசோர்கள் மாதிரி மாறாமல் நின்றவர்கள் மாய்ந்துவிடுவார்களே.

அதனால் தான் அறிவாளி ஆண்கள் எப்போதுமே தங்களை மீண்டும் மீண்டும் புதுபித்துக்கொண்டே இருப்பார்கள். Life long learning என்று வாழ்நாள் முழுக்க லேட்டஸ்ட் விஷயம் எல்லாவற்றிலுமே அத்துபடியாக இருப்பார்கள். அப்படி இல்லாமல், “என் பரம்பரையில் இப்படி தான். என் அம்மாவுக்கு இது தான் பிடிக்கும், என் மதநூல் இப்படி தான் சொல்லுது…” என்றூ குருட்டுத்தனமாய் பழைசையே கட்டுக்கொண்டு அழும் ஆண், பெண்களை முன்னேறவே விடமாட்டான். “ஆறு மணியாச்சுனா பெண்கள் வீட்டு வாசற்படியை தாண்டக்கூடாது, பொம்பளைனா அடக்க ஒடுக்கமாத்தான் இருக்கணும்….எட்டு கஜ புடவை தான் நம் பாரம்பரியம்,” என்று க்ரேதாயுதக்கதைகளை சொல்லியே கழுத்தறுப்பான்.

4. உலகில் உள்ள மிக புத்திசாலிதனமான ஜீவராசிகள் எவை தெரியுமா? குரங்கு, யானை, நாய், டால்ஃபின், மனிதர்கள்….இந்த எல்லா ஜீவராசிக்கும் உள்ள ஒரு பொதுவான குணம் என்ன தெரியுமா? இவை தான் ரொம்ப அதிக விளையாட்டுத்தனமும், ஹாசிய உணர்வும் கொண்ட ஜீவராசிகள். இவற்றுக்கு தான் நகைசுவை உணர்வு அதிகம். ஆக அறிவுக்கும், விளையாட்டு தனமான நகைசுவை உணர்வுக்கும் நேரடி தொடர்பு உண்டு.
நீங்களே கவனித்திருப்பீர்களே, அறிவாளி ஆண்களுக்கு தான் எக்கசெக்க நகைசுவை உணர்வு இருக்கும். கொஞ்சம் அறிவு மக்கர் என்றாலும் அவர்களுக்கு ஹாசிய உணர்வும் குறைந்திருக்கும். அதுவும் போக, அறிவாளி ஆண்களுக்கு சின்ன சின்ன விஷயங்களிலும் ரசனை இருக்கும், சிறு சிறு சில்மிஷங்கள், ஸ்வாரசியமான குறும்புகள் என்று எப்போதுமே துடிப்போடு இருப்பார்கள். அவர்களை வம்புக்கு இழுத்தாலும் கூட அதையும் வேடிக்கையாய் கையாண்டு சுலபமாய் சமாளிப்பார்கள்.

5. அறிவாளி ஆணின் அடுத்த அடையாளம் அவனுக்கு பரந்த மனப்பாண்மை இருக்கும். நீங்களே பார்த்திருப்பீர்கள், வெளி நாட்டில் பிறந்து வளர்ந்தாலும், “எங்க ஜாதி தான் உலகத்திலேயே உசத்தி” என்று அடம் பிடிக்கும் டொட்டல் பட்டுகாட்டு மனப்பான்மை வாய்ந்த ஆண்களும் இருக்கிறார்கள், எங்கேயோ ஏதோ பூங்குன்றத்தில் பிறந்துவிட்டு, “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று விசாலமாய் யோசிக்கும் லோக்கல் ஆசாமிகளும் இருக்கிறார்கள். அறிவுள்ளவன் தன் சிற்றூரின் விளிம்பை விட்டு வெளியே கூட எட்டிபார்த்திராதவனாய் இருந்தாலும், அவன் அறிவு பறந்து விரிந்தே இருக்கும். அதுவே அறிவு குறைவானவன், எத்தனை ஃபாரின் டிரிப் அடித்தாலும், கிணற்று தவளையாகவே இருந்து விடுவான்.

ஆக ஸ்நேகிதிகாள், கவனமாய் உங்கள் ஆணை பாருங்கள். படிப்பு என்பது இப்போதெல்லாம் பணம் கொடுத்து வாங்கி விடும் பித்தலாட்டம் ஆகிவருகிறது. ஆக வெறும் கல்வி தகுதியை மட்டும் வைத்து ஒருவனை அறிவாளியா இல்லையா என்று நிர்நயித்துவிட முடியாது.



சுய சிந்தனை, பகுத்தறிவு, திறந்த மனப்பான்மை, நகைசுவை உணர்வு, பரந்த மனப்பான்மை, மாதிரியான அறிவின் அறிகுறிகள் தென்படுகின்றனவா என்பதை ஆராய்ந்து பாருங்கள். இந்த 5 குணங்களும் குறைந்த பட்சம் நாறப்து சதவிகிதமாவது இருந்தால் பையன் பாஸ். இல்லாவிட்டால் ஊகூம், ஃபெயில் தான். இவை அத்தனையும் அறுவது சதவிகிதத்திற்கு மேலேயே தென்பட்டால் வாவ் பையன் ஃபர்ஸ்ட் கிளாஸ்! இனி அவனிடம் அடுத்து என்ன அம்சங்களை அலசலாம் என்பதை அடுத்த ஸ்நேகிதியில் பார்க்கலாம்.

Saturday, November 21, 2009

Thursday, November 19, 2009

Tuesday, November 17, 2009

ஆண்களை ஹாண்டில் செய்ய: அத்தியாயம் 26

ஆண்களைத் தேர்ந்தெடுக்கும்போது பெண்கள் செய்யும் இன்னொரு மஹா பெரிய தப்பு என்ன தெரியுமா? `மாப்பிள்ளை என்ன படிச்சிருக்கார்?' என்று படிப்பிற்கு மட்டுமே பெரிய முக்கியத்துவம் தருவதுதான்.


இது என்ன பெரிய அநியாயமா இருக்கே! மாப்பிள்ளை படிச்சவரா இருக்கணும்னு நினைக்கிறதெல்லாம்கூட ஒரு தப்பா? பையன் படிச்சிருந்தாதானே நிறைய சம்பாதிக்க முடியும்? உயர் பதவி வகிக்க முடியும்? என்று நீங்கள் ஆட்சேபிப்பது எல்லாம் சரிதான். ஆனால் நீங்களே ஒரு விஷயத்தை கவனித்திருப்பீர்களே. வெறும் படிப்பிற்கும் ஒருவர் வாழ்வில் அடையும் வெற்றிக்கும் எந்த நேரடியான சம்பந்தமும் இல்லை. பிழைக்கத் தெரிந்தவன் படிக்காவிட்டாலும் வெற்றி பெற்றே தீருவான். பிழைக்கத் தெரியாதவன் என்ன படித்தாலும் தேறவே மாட்டான்.

உதாரணத்திற்கு இரண்டு ஆண்களை எடுத்துக் கொள்வோமே. முதலாம் ஆண் நிறைய படித்தவர். ஒரு என்ஜினியரிங் டிகிரி, ஒரு மருத்துவ டிகிரி, அதற்கு மேல் ஒரு ஸ்பெஷலிஸ்ட் டிகிரி. அதுவும் போதாதென்று நிர்வாகத்துறையிலும் ஒரு கொசுறு டிகிரி. இத்தனையும் ஒரே ஆண் படித்திருக்கிறான் என்றால் அவன் எப்பேர்ப்பட்ட அறிவுக் களஞ்சியமாக இருப்பான். இத்தனை சரஸ்வதி கடாட்சம் கொட்டும் இந்த அறிவுக் கொழுந்தை கட்டக் கொடுத்து வெச்சிருக்கணுமே என்று தானே எல்லோரும் நினைப்பார்கள். ரொம்பத் தங்கமான பையன். எப்போதுமே புக்கும் கையுமாதான் இருப்பான்' என்று அவன் உறவினர்கள் எல்லாம் அவனுக்கு தரச் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்கள் என்றால் பாருங்களேன்.

இவ்வளவு படிப்பறிவுள்ள இந்தப் பையனுக்குத் திருமணம் முடிவானது. `நாங்க எல்லாம் ரொம்ப ஆச்சாரமான குடும்பம் தமிழ் கலாச்சாரம்னா எங்களுக்கு உயிர். எங்க வீட்டையே கோயில் மாதிரி வெச்சிருப்போம். அவ்வளவு பக்திமான்கள். இந்து முறைப்படி சாஸ்திரம் சம்பிரதாயம் எல்லாம் சரியா பார்த்து முறைப்படி கிராண்டா கல்யாணம் பண்ணித் தரணும். ஒரு சடங்கு கொறஞ்சாலும் நாங்க ஏத்துக்கமாட்டோம்'' என்று மாப்பிள்ளை வீட்டார், அக்கு வேறு ஆணி வேறாக சடங்குகளை பட்டியல் போட்டார்கள்.

ஆஹா என்ன ஒரு கலாச்சார பாரம்பரியம் மிக்க குடும்பம் என்று எல்லோரும் மனமார பாராட்டி மாப்பிள்ளை வீட்டார் கேட்டபடியே கிராண்டாக எல்லா ஏற்பாட்டையுமே செய்தார்கள். முகூர்த்த நேரமும் வந்தது. அட்சதையும் கையுமாக எல்லோரும் ஆசி கூற காத்திருக்க, ஐயர் எல்லோரும் தொட்டு ஆசிர்வதித்த தாலியை தேங்காயின் மேலே வைத்து மாப்பிள்ளையிடம் நீட்டினார். மும்முரமாய் மந்திரம் ஓதியபடியே. மாப்பிள்ளைப் பையன் தாலியை எடுக்காமல் பார்க்க `முகூர்த்த நேரமாச்சு தாலிய எடுத்து கட்டுங்க' என்று தாம்பாளத்தை மாப்பிள்ளையின் கையடியில் நீட்டினார். மாப்பிள்ளை இடது கையால் தாலிக் கயிற்றின் ஒரு முனையை மட்டும் தூக்கி எடுக்க, மறுமுனை படக்கென சரிய அதை உடனே மணப்பெண் லபக்கென்று பிடித்து நிறுத்த ஐயர் அவசரமாக தாலிக் கயிற்றை தானே எடுத்து மாப்பிள்ளையின் கையில் திணித்து `கட்டுங்க' என்று கெட்டிமேளத்திற்கு சிக்னல் கொடுத்துவிட்டு, `மாங்கல்யம் தந்துனானே நாம் மமஜீவன ஹேதுனாம்ஞ்' பாட ஆரம்பிக்க பீ பீ டும் டும் சத்தம் கேட்டதும் கூடி இருந்தவர்கள் எல்லாம் உடனே அட்சதையைத் தூவி வாழ்த்தி முடித்தார்கள்.

போட்டோகிராஃபர் தாலி கட்டும் சீனை டைட் குளோஸப்பில் புகை மட்டும் எடுக்கலாம் என்று படக் படக் என கேமிராவை அழுத்தித்தள்ளினார். அப்போதுதான் எல்லோரும் கவனித்தார்கள். மாப்பிள்ளை இன்னமும் தாலியைக் கட்டவே இல்லை என்று. `என்ன ஆச்சு?' என்று எல்லோரும் வியக்கத் தாலி கயிற்றை பத்திரமாக இரண்டு கைகளிலும் கெட்டியாக பிடித்துக் கொண்டு மாப்பிள்ளை அட்சதை வந்து தன் மேல் விழாபடி பெண்ணைவிட அதிக அடக்கமாய் தலை குனிந்து கொண்டிருந்தார். ``என்ன இது தாலி கட்டி முடிங்கோ... முகூர்த்தம் முடியப் போகுது' என்று ஐயர் எரிச்சல் பட்டுவிட்டு மீண்டும் ஒருமுறை கெட்டிமேளத்திற்கு சிக்னல் கொடுத்து `மாங்கல்யம் தந்துனானே' சொல்ல, இம்முறையும் மாப்பிள்ளை தாலிக் கயிற்றைப் பிடித்துக் கொண்டு சும்மாவே வேடிக்கை பார்க்க, பதறிப்போன பெண்ணின் அக்கா, `தாலிய கட்டுங்க சீக்கிரம்' என்று மாப்பிள்ளையின் கையை பெண்ணின் கழுத்தைச் சுற்றி கொண்டு வர அப்போதும் மாப்பிள்ளை முடிச்சுப் போடாமல் விழிக்க, கடைசியில் அக்காளே தங்கைக்குத் தாலியைக் கட்டி முடிக்க வேண்டியதாயிற்று. இந்த கண்கொள்ளா காட்சியை டைட் குளோஸப்பில் பார்த்துக் கொண்டிருந்த கேமராக்காரர்களும் தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த பந்து மித்திரர்களும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். `என்னதிது பெரிசா தமிழ் கலாச்சாரம் சாஸ்திரம் சம்பிரதாயம்னு எல்லாம் வாய் கிழிய பேசினாங்க. இந்த மாப்பிள்ளைக்கு தாலி கூட கட்டத் தெரியலையே. சரியான சின்ன தம்பி கேசா இல்ல இருக்கான்? இதை கல்யாணம் பண்ணிக்கிட்டு இந்தப் பொண்ணு என்ன பாடு படபோகுதோ?'

அவர்கள் சொன்னதைப் போலவே அவன் மனைவி நிறைய பாடுகள் படத்தான் செய்தாள். நிறைய படித்திருந்தானே தவிர அந்தப் பையனுக்கு யாரிடம் எப்படி நடந்து கொள்வது என்ற அடிப்படை அறிவு கூட இருக்கவில்லை. மனைவியை விட்டுட்டு தான் மட்டும் போய் தனியாகவே கல்யாண விருந்து சாப்பாட்டை மொக்குவதென்ன, எதற்கெடுத்தாலும் `அம்மா அம்மா' என்று அவர் முந்தானையைப் பிடித்துக் கொண்டே அலைவதென்ன, தன்னுடைய சொந்த உறவினரிடம் கூட முகம் கொடுத்துப் பேசாமல் ஏதாவது ஒரு புத்தகத்தினுள் தலைமறைவானதென்ன, பெரியவர்கள் சிறியவர்கள் என்று மட்டு மரியாதையே தெரியாமல் மாமனாரையே படு ஜோராய் சொல்லி அழைப்பதென்ன. `என்னதிது. படிச்சவன்னு சொன்னீங்களே, கொஞ்சம்கூட பண்பே இல்லாம இருக்கானே இந்தப் பையன்' என்று எல்லோரும் வியந்து போனார்கள்.

எல்லோரையும் விடுங்கள். இந்தப் படிப்பு கேஸை மணந்த பெண்ணின் கதியோ பெரிய கேலிக் கூத்தாகிப் போனது. இவள் அவன் முகத்தைப் பார்த்து பேசினால் போச்சு. `எதற்கு என் முகத்தையே பார்க்கிறாய்' என்று கோபித்துக் கொண்டு அவள் பார்வை வளைவை விட்டு விலகிவிடுவானாம். இதுவே இந்த லட்சணம் என்றால், தாம்பத்திய வாழ்க்கையைப் பற்றி சொல்ல வேண்டுமா? சரி. தம்பதி சமேதராய் கோயில் குளம் என்று சுற்றி வந்தாலாவது பையனுக்கு கொஞ்சம் மன்மத அருள் கிடைக்காதா என்று இருவரையும் கோயிலுக்கு அனுப்பினார்கள். `பூ வாங்கலாமா?' என்று மனைவி கேட்க மாப்பிள்ளை விறுவிறுவென்று போய் சாமிக்கு சாத்தும் மாலையை வாங்கி வர, மனைவி ரொம்பவே நொந்து போய் ஏமாற்றம் தாளாமல் அம்மன் சன்னதியின் முன்னால் நின்று, `கடவுளே இப்படி ஒரு இடியட்டா எனக்கு புருஷனா அமையணும்னு' என்று வாய் விட்டு புலம்பித் தீர்க்க இது வேறு பையன் காதில் விழுந்து தொலைக்க, கேட்க வேண்டுமா? `என்னைப் பார்த்தா இடியட்டுன்னு சொன்ன? என் படிப்பென்ன. என் பதவி என்ன, என் வீட்டை வந்து பார். என் காரை வந்து பார். என் கால் தூசி பெற மாட்டாய் நீ. உங்கப்பனை வந்து என் கால் செருப்பை லிக் பண்ணைச் சொல்லு' என்று உலகில் பெண்களைத் திட்ட என்னென்ன கெட்ட வார்த்தைகள் உண்டோ அவை அத்தனையும் சொல்லி பையன் மனைவியை அர்ச்சனை செய்ய, `அட கண்றாவியே' இவன் எத்தனை பட்டம் வாங்கி என்ன பிரயோஜனம்? வாயைத் திறந்தால் சரியான சாக்கடை' என்று அப்போதே மனமுடைந்து போனாள் மனைவி. சரி ஏதோ தெரியாம பேசுகிறான். போகப் போக புரிந்துகொள்வான். திருந்திவிடுவான் என்று அந்தப் பெண் எவ்வளவு பொறுத்துப் போயும், பையன் என்னவோ அறுரம் மாதிரி அறிவு இருந்தாலும், மக்கள் பண்பே இல்லாத மரக்கட்டை மாதிரிதான் தொடர்ந்து இருந்தான். இதனாலேயே உடன் வேலை செய்பவர்கள், வாடிக்கையாளர்கள் என்று எல்லோருமே அவனை, ``சரியான முசுடு'' என்று ஒதுக்கித்தள்ள அந்த கோபத்தையும் மூட்டை கட்டிக் கொண்டு வீட்டிற்கு வந்து மனைவியைப் போட்டு வறுத்தெடுத்தான். இவன் இம்சை தாங்காமல் திருமணமான சில மாதங்களிலேயே அவன் மனைவி விவாகரத்துக் கோர, இத்தனை பட்டங்கள் வாங்கிய அந்தப் பையனின் மணவாழ்க்கை நூலறுந்த பட்டமாய் தொலைந்தேபோனது.

இனி அடுத்த பையனின் கதையைப் பார்ப்போம். அவனுக்கு நிறைய கேள்வி ஞானமும் உயர்ந்த சிந்தனையும் இருந்தாலும் அதென்னவோ தெரியவில்லை. கல்லூரிப் பாடம் என்றால் அப்படி ஒரு அலுப்பு. அதனால் ஏதோ கொஞ்சம் ஒப்பேற்றி பரீட்சையை செகண்ட் கிளாஸில் தேறி முடித்தான். `இந்தக் காலத்துல பொண்ணுங்க எல்லாம் ரொம்ப நிறைய படிக்கிதுங்க. நீ அட் லீஸ்ட் ஒரு பிஜீ முடிச்சாதான் கவுரவமா இருக்கும்' என்று வீட்டில் எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் அவனுக்கு பாடப் புத்தகம் என்றாலே செம்ம போர் அடித்தது. கூகுலிலும் விக்கிமீடியாவிலும் ஊரில் உள்ள அத்தனை விஷயங்களைப் பற்றி குடைந்து குடைந்து ஆர்வமாய் படிப்பான். யாராவது புதுத் தகவல் சுவாரசியமான சமாசாரம் பற்றி பேசினால் ஆசையாய் கேட்டுக்கொள்வான். ஆனால் பாடப் புத்தகம் என்றால் மட்டும் அலர்ஜி. அதனால் இளங்கலை படிப்பை முடித்ததும் சட்டுபுட்டு என்று ஒரு வேலையில் சேர்ந்து அதையே சாக்காகச் சொல்லி, படிப்பை நைஸாக தள்ளிப் போட்டு அப்படியே நிரந்தரமாக ஏற்றம் கட்டிவிட்டான். படிக்கத்தான் அவனுக்கு சோம்பேறித்தனமே தவிர வேலையில் பையன் படுசுட்டி என்பதால் மடமடவென வேலையில் உயர்வு பெற்று ஐந்தே வருடத்தில் மேல் நிலைக்கு வந்தான். கம்பெனியிலேயே அவன் திறமையைப் பார்த்து, மேற்கொண்டு ஏதேதோ டிரெயினிங்குக்கு அனுப்பினார்கள். எதிலுமே பாடம், பரீட்சை என்பதே இல்லை வெறுமனே பார்த்து புரிந்து கொண்டு செய்து காட்டும் தேர்வுகள் என்பதால் பையன் எல்லாவற்றையும் சரியாகச் செய்து தேறி அதிக வருமானம் ஈட்டும் அந்தஸ்துக்கு உயர்ந்தான்.

இப்படி வேலையில் பிஸியாக இருந்த நேரம் போக உடன் வேலை செய்த சகாக்களிடம் ஆண் - பெண் என்கிற பாரபட்சம் பார்க்காமல் நிறைய கதை அடித்து, பேசி, `பையன் ரொம்ப நல்லா பேசுறான். ரொம்ப நல்ல டைப்' என்று பெயர் வாங்கினான். உறவினர்கள் வீட்டில் கல்யாணம். இழவு என்றால் மூத்த மகனாய் லட்சணமாய் தன் குடும்பப் பிரதிநிதியாய் போய் தலையைக் காட்டுவதோடு நில்லாமல் எல்லோரிடமும் நிறைவாக பேசிவிட்டு வருவான்.

திருமண வயது வந்த போது இவனுக்கு பெண் பார்த்தார்கள். சொல்லி வைத்தாற் போல எல்லா பெண்களும் இவனை விட அதிகம் படித்திருந்தார்கள். ஆனால் இவன் குணம், ஆபீசில் இவனுக்கு இருந்த நல்ல பெயர், உறவினர் இவனைப் பற்றி கொடுத்த நற்சான்றிதழ் இவைகளை முக்கிய பரிந்துரைகளாக கருதி ஒரு புத்திசாலிப் பெண் அவனை திருமணத்திற்குத் தேர்ந்தெடுக்க, ஒரு சுப முகூர்த்த சுப தினத்தில் இருவருக்கும் திருமணம் நல்லபடியாக நடந்தேறியது. படிப்பே கதி என்றில்லாமல் பல பேரின் திருமணத்தை நேரிலும், சினிமாவிலும் பார்த்த பழக்கத்தில் மாப்பிள்ளைப் பையன் தானே தன் மனைவிக்கு லட்சணமாய் தாலிகட்டி தம்பதி சமேதராய் அவளுடன் உட்கார்ந்து திருமண விருந்தை சிரிப்பும் கேலியுமாக சாப்பிட்டு, அவள் குடும்பத்தினருடன் சுமுகமாய்ப் பேசி, மனைவியை ஃபஸ்ட் நைட் ஹனிமூன், மல்லிப்பூ, சினிமா, பீச், தலை தீபாவளி, பொங்கல், வளைகாப்பு, சீமந்தம் என்று அசத்தினான்.

அவள் அவனை விட அதிகம் படித்தவள்தான். ஆனால் அவனுக்குத்தான் வாழ்வியல் வித்தைகள் அதிகம் தெரிந்திருந்தன. அவன் நினைத்தால் எப்போது வேண்டுமானாலும் படிக்கலாம். எத்தனையோ தொலைதூர கல்வி மையங்கள் வேலை செய்தபடியே படிக்க ஏதுவாக இருக்கின்றனவே. தனக்கு வேண்டிய தகவல்களை தன் ஆர்வத்திற்காக அவன் தொடர்ந்து கற்றுக் கொண்டே இருந்தாலும் சும்மா பட்டம் பெறுவதற்காக படிக்க அவனுக்கு விருப்பமில்லை. வெறும் படிப்பு என்கிற அணிகலனை விட வேறு பல நற்குணங்கள் அவனுக்கு இருந்ததால் அவன் மனைவியைப் பொறுத்தவரை அவன்தான் இந்த உலகிலேயே மிகச் சிறந்த ஹீரோ. அவள் பட்டப்படிப்பைவிட அவன் மனதின் பட்டத்து ராணி என்ற ஸ்தானமே அவளுக்குப் பெரிய சந்தோஷத்தைத் தர... இருவரும் இன்னமும் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள்.

இப்போது சொல்லுங்கள். வெறும் படிப்பை மட்டும் வைத்து ஒரு ஆணைத் தேர்ந்தெடுப்பது புத்திசாலித் தனமாகுமா? அநேக சந்தர்ப்பங்களில் ஆண் ஆதிகம் படித்திருந்தால் அவன் வெறும் ஏட்டுச் சுரைக்காயாகத்தான் இருக்கிறான். அதிகம் படித்த ஆண்களைவிட அதிகம் படிக்காத ஆண்களே பெரிய சாதனைகளைப் புரிகிறார்கள் அதற்குப் பின்னால் ஒரு முக்கியமான உளநல உண்மை ஒன்று உண்டு. நாம் ஏற்கெனவே இந்த ஆண்களை ஹேண்டில் செய்வது எப்படியென்று ஆரம்பத்தில் சொன்னதுதான். பெண் மூளையில் மொழிக்கான மையம் மிகப் பெரிய சைஸில் இருக்கிறது. ஆண்களுக்கோ இந்த மையம் ரொம்பவே சின்னதாக இருக்கிறது. இதற்கான பரிணாம காரணம் பெண்கள் பல காலம் குகையில் தங்கி குழந்தைகளைப் பராமரித்தார்கள். ஆண்கள் பல மில்லியன் ஆண்டு காலமாய் அமைதியாகப் போய் வேட்டையாடி வந்தார்கள். அதனால்தான் இந்த மொழிவள மையத்தின் சைஸ் வித்தியாசம் எல்லாம்.

 இது இப்படி இருக்க நம்மூர் கல்வித் திட்டத்தைப் பாருங்கள். படிப்பது எழுதுவது ஒப்பிப்பது ஓதுவது பரீட்சை எழுதுவது என்று எல்லாமே மொழியின் அடிப்படையில்தான் இருக்கிறது. இதெல்லாம் பெரிய சைஸ் மொழிவள மையம் இருக்கிற பெண்களுக்கு சாதகமாக இருப்பதால்தான் எல்லா வகுப்புகளிலும் பெண் குழந்தைகள் சமர்த்தாக படித்து, அதிக மதிப்பெண்கள் வாங்குகிறார்கள். ஆனால் பாவம் ஆண்கள். அவர்களது இத்துனூண்டு மொழி வள மையத்தை வைத்துக் கொண்டு அவர்களால் எபபடி இத்தனை மொழிசார் பணிகளில் பிரகாசிக்க முடியும்? ஆண் குழந்தையிடம் விஷயத்தை செயல்முறையாக விளக்கி, `எங்கே எப்படி என்று சொல் பார்க்கலாம். நீ செய்து காட்டு பார்க்கலாம்' என்று கை வேலை வழியாக பரிசோதித்துப் பார்த்தால் பெண்களைவிட அவர்களே அதிக மதிப்பெண் பெறுவார்கள். துரதிர்ஷ்டவசமாக நமது பாடத்திட்டம் எல்லாம் பெண்களுக்கே சாதகமாக இருந்து ஆண்களுக்கு பெரும் இம்சையாக இருப்பதனால்தான் ஆண்களால் படிப்பில் பெரிதாக சாதிக்க முடிவதில்லை. ஆனால் என்னதான் பெண்கள் பள்ளியிலோ கல்லூரியிலோ அதிக மதிப்பெண் வாங்கினாலும் நடைமுறை வாழ்வில் ஆண்களே அதிகம் வெற்றி பெறுகிறார்கள். காரணம், வெளி உலகம் எனும் இந்தப் பரந்துவிரிந்த பட்டறையில் எழுதிக் காட்டினால் எல்லாம் மார்க் இல்லை. செய்து காட்டினால்தான் சாதிக்கவே முடியும் என்பதால் என்னதான் பரீட்சையில் கோட்டைவிட்டாலும் நிஜ வாழ்வில் ஆண்களே அதிகம் ஜெயித்து சாதிக்கிறார்கள்.

அதெல்லாம் இல்லையே. நிறைய ஆண் குழந்தைகள் பாடத்திலும் நிறைய மதிப்பெண் வாங்கத்தானே செய்கிறார்கள் என்று நீங்கள் ஆட்சேபித்தால் யூ ஆர் ரைட். இப்படியும் சில ஆண்கள் உண்டுதான். வெகு சில ஆண்கள் அதிக பட்ச அறிவுக்கூர்மை கொண்டிருந்தால் ரொம்பவே முயன்று இந்த மொழி சார் சமாசாரங்களிலும் சாதிக்கிறார்கள். இன்னும் சில ஆண்களை அதிக பட்ச அம்மா கோண்டாக இருந்தால், பெண்புத்தி தொத்திக் கொள்ள படிப்பில் ஜெயிக்கிறார்கள். இதையும் தாண்டி சமூகத்தோடு பழக கூச்சப்படும் பையன்கள். பிறரிடமிருந்து தப்பிக்க புத்தகங்களுக்குள் ஒளிந்து கொள்கிறார்கள். இப்படி பள்ளிப் பாடநூலைத் தவிர வேறு பேச்சுத்துணையே இல்லாத இது மாதிரி பிள்ளைகள் நிறைய மதிப்பெண்கள் வாங்கினாலும் முதல் கதையில் வந்த மக்கு மாப்பிள்ளையைப் போல வாழ்வியல் நுணுக்கங்களை கோட்டைவிட்ட வெறும் ஏட்டுச் சுரைக்காய்களாகி விடுகிறார்கள்.

ஆதலினால் சிநேகிதிகளே, ஆண்கள் அதிகம் படிக்காவிட்டால், அதை அவர்களுக்குப் பாதகமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். பள்ளிப் படிப்பு என்பது ஒரே ஒரு வகை ஞானம் மட்டுமே. பள்ளி, கல்லூரி எல்லாம் ஏதோ சமீப காலமாய் ஏற்பட்டவைதான். இந்த குறுகிய வட்டத்தை விட்டுவிட்டு விசாலமாக அவனை அளவிடுங்கள். காலாகாலமாய் பெண்கள் ஆண்களின் அறிவை அளவிட பயன்படுத்திய கேள்விகள் என்ன தெரியுமா? இவனுக்கு உலக விஷயம் தெரிகிறதா? பொது அறிவு இருக்கிறதா? பிழைக்கத் தெரிகிறதா? இவை எல்லாவற்றையும் விட மக்கட்பண்பு இருக்கிறதா? புது விஷயங்களை ஏற்றுக் கொண்டு தன்னை மென்மேலும் வளர்த்துக் கொள்ளும் ஊக்கம் இருக்கிறதா? மனைவி, மக்கள், குழந்தை, குடும்பம் என்கிற அமைப்பை கட்டிக் காப்பாற்றும் சாமர்த்தியம் இருக்கிறதா? உலகோடு ஒத்துவாழும் வித்தைகள் தெரிகிறதா? இவை எல்லாம் இருந்தால் அவன் படிக்கவே இல்லை என்றாலும் அவன் ஒரு மேதைதான். அவனை கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள். இவை இதுவுமே இல்லை. ஆனால் பெயருக்குப் பின்னால் வரிசையாய் நிறைய பட்டங்கள் மட்டுமே இருக்கின்றன என்றால், ச்சு. பையன் சுத்த வேஸ்ட். ஏதாவது பல்கலைக்கழகத்திற்கு அவனை தானமாய் கொடுத்துவிடுங்கள்.

Wednesday, November 4, 2009

ஆண்களை ஹாண்டில் செய்ய: அத்தியாயம் 25

என்ன சிநேகிதிகளே சென்ற இதழில் சொன்னதை வைத்து நியாய தர்மங்களுக்கு கட்டுபட்டு நடக்கும் இண்டெகிரிட்டியுள்ள நல்லவனாய் தேர்ந்தெடுக்கப் பழகிக்கொண்டீர்களா?


பல பேர் நினைக்கிறார்கள், நல்லவன் என்றால், சிகரெட் பிடிக்கக்கூடாது. மதுவை தொட்டே பார்த்திருக்கக்கூடாது பெண்கள் என்றாலே தெய்வம் என்று மட்டும்ட நினைத்து கையெடுத்து கும்பிடுபவனாக இருக்க வேண்டும். படிப்பு, வேலை, வீடு, ஆபீஸ் என்று மட்டுமே இருக்க வேண்டும். இப்படிப்பட்ட உத்தம புருஷனை கட்டிக்கொண்டால் தான் வாழ்க்கை இனிமையாய் இருக்கும் என்று பலர் நம்புகிறார்கள்.

இப்படிப்பட்ட ஒரு உத்தமபுத்திரனை எனக்கு தெரியும். அவனுக்கு சிகரெட் பிடிக்கத் தெரியாது மதுவென்றால் ‘‘உவாக்’’ சொல்லும் அளவுக்கு அப்படி ஒரு அருவெறுப்பு. வெளிநாட்டில் வாழ்ந்ததாலும் வாழ்நாள் முழுக்க சுத்த சைவமாக இருக்கும் மஹா கொள்கை வீரன். நாள் தவறாமல் சாமி கும்பிடுவான். இதை எல்லாவற்றையும் விட பெரிய ஹைலைட், அவன் பெண்களை நிமிர்ந்துக்கூட பார்க்க மாட்டான். அவன் எதிரில் ஒரு அப்சரஸே வந்து நின்றாலும் கொஞ்சம் கூட சலனப்படாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று எப்போதும் புத்தகமும் கையுமாக இருக்கும் அறிவுக் களஞ்சியம். படிப்பில் இத்தனை மும்முரம் காட்டியதால் அவன் தொழிலில் வெற்றியடைந்தான். வசதியாக வாழ்ந்தான். அவன் அம்மாவுக்கு அவனை நினைத்தால் அவ்வளவு பெருமை ‘‘என் பையனைப் போல ஒரு நல்லவன் இந்த அண்ட சராசரத்திலேயே இல்லை. இவனைக்கட்டிக்க கொடுத்து வெச்சிருக்கணுமே’’ என்று எல்லோரிடமும் அலட்டிக்கொள்வார்.

கொடுத்து வைத்தாளோ இல்லையோ இந்தப் பையன் அவன் பெற்றோர் பார்த்து பார்த்து சலித்து எடுத்துக்கொடுத்த பெண்ணையே திருமணம் செய்துக்கொண்டான். திருமணத்திற்கு முன்னால் அந்த பெண்ணிடம் பேசுவது, அவளை வெளியே கூட்டிப்போவது, அப்படி இப்படி ஜொள்விட்டு ஈஷிக்கொள்வது என்பது மாதிரியான ‘‘அசிங்கங்கள்’’ எதையுமே செய்ய அவனுக்குப் பிடிக்கவில்லை. ‘‘எங்கம்மா என்னை அப்படி எல்லாம் வளர்க்கலையாக்கும்’’ என்று அவன் பாட்டிற்கு தன் தொழிலிலேயே மும்முரமாய் இருந்தான். திருமண நாள் அன்று வரை தன் எதிர்கால மனைவியைப் பார்க்கவோ, பேசவோ அவன் முயற்சி செய்யவே இல்லை.

திருமணமும் இனிதே நடந்தேறியது. முதல் இரவு முடிந்தது. அதன் பிறகு இரண்டாம் மூன்றாம் இரவுகளும் தாண்டிப் போயின. வாரம், மாசம், வருஷம் என்று காலம் ஓடிக்கொண்டே போனது. ஆனால் அவன் மனைவி மட்டும் கண்ணகியை விட சிறந்த கற்புக்கரசியாக இருந்தாள். கண்ணகியை கோவலனாவது தொட்டிருந்தான். ஆனால் இவளை அவள் கணவன் கூட தொட்டிருக்கவில்லை. அந்த அளவுக்கு புனிதமான ஆத்மா அவள் புருஷன்! அவன் கையில் ஒரு புத்தகத்தைக் கொடுத்தால், இரண்டே மணி நேரத்தில் படித்து முடித்து விடுவானாம். ஆனால் அவன் மனைவியை மட்டும் வருடக்கணக்கில் திறக்காத புத்தகமாய் அப்படியே புதிது போலவே வைத்திருந்தான். ஏன் தெரியுமா?

அவன் அவ்வளவு நல்லவன்! ஒரு பெண்ணிடம் எப்படிப் பேச வேண்டும். அவளிடம் எப்படிப் பழக வேண்டும். அவளோடு எப்படி உறவு கொள்ளவேண்டும் என்பது மாதிரியான எந்தத் ‘‘தப்பு தண்டாவும்’’ செய்யத் தெரியாத அக்மார்க் கற்புக்கரசன் அவன், அட, இந்த கலிகாலத்துல இவ்வளவு நல்லவனா என்று யாரும் அவனைப் பாராட்டவே இல்லை.‘‘இப்படியும் ஒருத்தன் இருப்பானா? இவன் எல்லாம் ஒரு ஆம்பிளையா, இவன் மூஞ்சுக்கு கல்யாணம் ஒரு கேடா?....’’ என்று எல்லோரும் அவனைப் பரிகாசம் தான் செய்தார்கள்.

இத்தனைக்கும் அவன் ரொம்பப் படித்தவன் தான், பணக்காரன் தான்...எந்த விதமான கெட்ட பழக்கமுமே இல்லாத, சுத்த சைவமான நல்லப்பையன் தான். ஆனால் ‘‘சீ பாவம்’’ என்று அவனுக்காக இரக்கப்பட அவன் மனைவி ஒருத்தியை தவிர ஒட்டு மொத்த உலகமுமே அவனை ஒரு கோமாளியாகத்தான் பார்த்தது. யூ நோ வொய்.

‘‘எனக்கு எந்தத் தப்புமே செய்ய தெரியாது. நான் அவ்வளவு உத்தமனாக்கும்.’’ என்று இருக்கும் ஆண்களை இந்த உலகம் மதிப்பதே இல்லை... எல்லா விதமான ஜித்து வேலைகளையும் தெரிந்துக்கொண்டு, பிறகு என் தகுதிக்கு இது இது ஓக்கே. இது நாட் ஓக்கே என்று தனக்கென்று ஒரு தரத்தை தக்க வைத்து கொள்பவனையே சிறந்த ஆண் என்று நாம் அனைவரும் கருதுகிறோம்.

அதிலும் குறிப்பாக ஆண்-பெண் உறவு என்று வரும் போது, பெண்ணிடம் செக்ஸியாக நடந்துகொள்ள கூடத்தெரியாதவனை நிஜமான ஆண் என்று யாரும் மதிப்பதே இல்லை. அண்ணன்-தங்கை உறவிற்கும், காதலன்-காதலி அல்லது கணவன்-மனைவி உறவிற்கும் இருக்கும் முக்கியமான வித்தியாசமே இது தானே. அதனால் தானே, செக்ஸே இல்லாத திருமணத்தை சட்டம் கூட ஏற்றுக்கொள்வதில்லை.

அதனால் சிநேகிதிகளே, உங்களுக்கு ரூட் விடும் ஆண் நல்லவனா என்று பார்ப்பதை விட்டு விடுங்கள். ஓவர் நல்லவன் என்று தன்னை காட்டிக்கொள்ள முயலும் ஆண்கள் அநேக சந்தர்ப்பங்களில் ‘தில்’ இல்லாத கோழைகளாக தான் இருக்கிறார்கள். இந்த மாதிரி ஓவர் நல்லவர்களை கட்டிக்கொண்டு இளமையையும், நேரத்தையும் வீணடிக்க முடியுமா என்ன? நூறு சதவிகிதம் தூய்மையான தங்கத்தை வைத்து எதுவுமே செய்ய முடியாது. அதற்காக டோட்டல் தகரத்தைப் பார்த்து தேர்ந்தெடுக்க முடியுமா என்ன?

‘‘சந்தர்ப்பமே கிடைக்கவில்லை. எப்படி என்ஜாய் செய்வது என்றே தெரியவில்லை. அதனால் நான் ராமனாகிப் போனேன்.’’ என்று இருக்கும் ஆண் நல்லவன் அல்ல. அவன், இயலாமையில் தவிக்கும் கையாலாகாதவன். நல்லவனை தேர்ந்தெடுக்கிறேன் பேர்வழி என்று இது மாதிரி ஒரு ஞானப்பழமாக பார்த்து தேர்ந்தெடுத்து விடாதீர்கள். அப்புறம் இல்வாழ்க்கையே இம்சையாகி விடும். இந்த மாதிரி too good but fit for nothing ரக ஆண்களை நண்பர்களாக தூரத்திலிருந்து பார்த்து, ‘‘அட, இப்படிக் கூட ஆம்பிளைங்க இருக்காங்களா?’’ என்று அதிசயிக்கலாம். ஆனால் குடும்பம் நடத்தவெல்லாம் முடியாது.

அதற்காக, ‘‘சந்தர்ப்பம் கிடைத்ததோ இல்லையோ, அதற்கெல்லாம் காத்திராமல் நானே சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக்கொண்டு இதே திருப்பணியாய் திரிகிறேன்’’ என்று சதா சர்வ காலமும், ‘தீனி, தம்மு, சரக்கு, ஃபிகர்’, என்றே அலையும் அற்ப கேசாக இருந்தாலும் அவனை மனிதனாக கூட மதிக்க நமக்கு மனசு வராது! அதனால சிநேகிதிகளே, ஓவர் நல்லவனாய் இருந்து உயிரை வாங்கும் வெத்து கேசுகளையும், வாழ்க்கையை வெறும் அற்ப சிற்றின்பத்திலேயே செலவிட்டு வீணடிக்கும் குப்பை கேசுகளையும் ஓரம் கட்டுங்கள்.

இந்த இரண்டு எக்ஸ்டிரீம்களுக்கு இடையில் இருக்கும். ‘‘எனக்கு சிகரெட் பிடிக்கத் தெரியும். மது அருந்தத் தெரியும். பெண்களை கொண்டாடத் தெரியும். ஆனால் அதே வேலையாக இருப்பதில்லை. அந்தந்த வயசுல அதை அதை பரிசோதனை செய்து பார்த்தாச்சு. இப்ப அதை எல்லாம் தாண்டி வந்துட்டேன்’’ என்று களவும், கற்று மறக்கவும் தெரிந்த ஆணாய் தேர்ந்தெடுக்க முயலுங்கள். சந்தர்ப்பம் கிடைத்தும் அனுபவிக்க ஆசை இருந்தும், அதை அடக்கி ஆள பழகுகிறவனே கண்ணியமான ஆண். அவனைத் தான் நிஜ ஹீரோ என்று எல்லோரும் கொண்டாடுவோம்.

இப்படிப்பட்ட நிஜ ஹீரோ ஒருவனை எப்படி கண்டு பிடிப்பதாம் என்று தானே கேட்குறீர்கள்? சிம்பிள். உங்களை முற்றுகை இடும் ஆண்களை கவனமாகப் பாருங்கள். நல்லவன், கெட்டவன் என்கிற ஒரே அளவுகோலை வைத்து அவனை எடை போடுவதை நிறுத்துங்கள். நல்லவனை வைத்துக் கொண்டு நாமென்ன சாமியார் மடமா நடத்தப் போகிறோம்? சம்சாரவாழ்விற்கு ஒத்து வருவானா மாட்டானா என்கிற கண்ணோட்டத்தோடு மட்டும் அவனை அளவிடுங்கள். ஆல் தி பெஸ்ட்!

Thursday, October 29, 2009

Thursday, October 22, 2009

ஆண்களை ஹாண்டில் செய்ய: அத்தியாயம் 24

என்ன சிநேகிதிகளே, ஆண்களின் பொறுப்பு விகிதத்தை கணக்கிட பழகிவிட்டீர்களா? ஆண்களிடம்இருந்தே ஆக வேண்டிய அடுத்த முக்கியமான குணநலன் என்ன என்று பார்க்க தயாரா? அந்த குணநலனை பற்றி சொல்வதற்கு முன்னால் உங்களுக்கு இரண்டு ஆண்களை பற்றின குட்டி கதைகளை சொல்லிவிடுகிறேன்.

ஆண் 1: மெத்த படித்த மேதவிலாசி. அவன் அம்மா அவனுக்கு பெண் தேடும்போது ‘என் பையனை மாதிரி புருஷன் கிடைக்க எந்த பொண்ணு கொடுத்து வைத்திருக்கிறாளோ, என் மகன் ஆஹா ஓஹோ’ என்றெல்லாம் செமையாய் அளந்து விட சரி இத்தனை பால் வடியும்முகத்துடன் இவ்வளவு வயசான பெண்மணி சொல்வது உண்மையாகத்தான் இருக்கும் போல என்று எல்லோருமே நம்பி விட்டார்கள். பையன் அமெரிக்காவில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். ரொம்ப நல்லவன், வல்லவன், எந்த கெட்ட பழக்கமும் இல்லாத அப்புராணி என்று எல்லோருமே அவனை பற்றி சிறப்பாகவே சொல்லிக்கொண்டு வர, அந்த பெண்ணும் ‘இப்படிப்பட்ட நல்ல குணம் படைத்த ஆணுக்காக எதையும் விட்டு தருவது தகும்’ என்றே நம்பி, நல்ல வருமானம் தந்த தன் வேலையை ராஜினாமா செய்து விட்டு, முழு நேரமும் உட்கார்ந்து திருமண வாழ்க்கையை பற்றி கலர் கலராய் கனவுகள் காண ஆரம்பித்தாள்.

திருமணமும் ஒரு வழியாக நடந்து முடிந்தது. அது வரை இந்த பூனையும் பால் குடிக்குமா என்று எதுவுமே பேசாமல் அப்பாவி மாதிரி முகத்தை வைத்துக்கொண்டிருந்த மாமியார் மேடம். திருமணமான அடுத்த நிமிடமே அப்படியே மாயமாய் உருமாறினார். சூர்பனகை, மந்தரை, சகுனி ஆகிய முப்பெரும் சதிகாரர்களின் ஒருங்கிணைந்த உருவமாய் மாறி, புது மனைவியுடன் ஃபோட்டோவுக்கு போஸ் கொடுத்துக்கொண்டிருந்த தன் மகனை அழைத்துக்கொண்டு போயே போய் விட்டாள். மாப்பிள்ளை சாரும் அம்மா கூப்பிட்டவுடன் என்ன ஏது என்று கேட்காமல் அவள் வளர்த்த விசுவாசமான நாய் மாதிரி வாலை ஆட்டிக்கொண்டு அப்படியே போய் விட, அவன் மனைவி பேக்கு மாதிரி விழித்துக்கொண்டு அங்கேயே நின்றாள்.

‘‘என் பையனுக்கு கார் வாங்கித்தரலை, சீர் செனத்தி போதுமானதா இல்லை. கல்யாண சாப்பாடு எதிர்பார்த்த மாதிரி இல்லை. பொண்ணுக்கு போட்ட வைரநெக்லெஸ்ல கல் சின்னதா இருக்கு. சீர் முறுக்கு நமத்து போச்சு, பாத்திரம் பண்டமெல்லாம் பத்தலை. கல்யாண பொண்ணுக்கு பக்கத்துல அவளை விட அழகா சிகப்பா நின்னுக்கிட்டு இருந்த சொந்தகார பொண்ணை ஏன் எனக்கு கட்டித்தரலைனு என் பையன் கேட்டான்...’’ என்று மாமியார் மேடம் தன் அதிருப்திகளை அடுக்கிக்கொண்டே போய்,

‘‘சே, தப்பு பண்ணிட்டேண்டா கண்ணா, அவசரப்பட்டு அப்பா பார்த்த இந்த பொண்ணை உனக்கு கட்டி வெச்சிட்டேனே. இவளை எனக்கு பிடிக்கவே இல்லை’’ என்று திருமணமான அன்றே தன் மகனின் காதில் சங்கு ஊதிவிட்டாள்.

இந்த அம்மாள் பாட்டுக்கு எடுத்த எடுப்பிலேயே இப்படி அபஸ்வரமாய் ஷெனாய் வாசிக்க, எல்லா உறவுக்காரர்களும் ஒன்று சேர்ந்து அவளுக்கு புத்தி சொல்லி, ஒரு வழியாக புது பெண்ணை மாப்பிள்ளையுடன் அனுப்பி வைத்தார்கள். இந்தியாவில் இருக்கும் வரை இந்த உறவினர் அறிவுரை எல்லாம் ஒர்க் அவுட் ஆனது. ஆனால் அமெரிக்க சென்றவுடன் தட்டிக்கேட்க யாருமே இல்லாத தைரியத்தில் மாமியார் மேடத்தின் ஆதிக்கம் மிதமிஞ்ச ஆரம்பித்தது. மருமகள் தன் கணவனுக்காக ஆசையாய் எதையாவது சமைத்து வைத்தால், ‘இதை எல்லாம் மனுஷன் சாப்பிடுவானா? இவ்வளவு கடுகு போட்டிருக்கியே. ‘என்று எல்லாவற்றையும் அப்படியே குப்பையில் கொட்டிவிட்டு, தான் செய்த உணவை மட்டும் தன் மகனுக்கு பரிமாறுவாள். இப்படியே சதா சர்வ காலமும் மருமகளை மட்டம் தட்டி, அவளை அழவைத்துக்கொண்டே இருப்பாள்.

சரி மாமியார் கேரக்டர்னா இப்படி தானே இருக்கும். இதுக்கெல்லாம் அந்த புருஷன் கேரக்டர் என்ன செய்தது என்று தானே கேட்கிறீர்கள்? புருஷன் கேரக்டரே இல்லாமல் அம்மாவை திருப்தி படுத்த மனைவியை புறக்கணிக்க ஆரம்பித்தான். அவனுக்காக, சொந்த ஊர், உற்றார் உறவினர், வேலை வெட்டி என்று எல்லாவற்றையும் விட்டு விட்டு அவனை மட்டுமே நம்பி வந்திருந்த மனைவியை எதிரி மாதிரி நடத்த ஆரம்பித்தான்.

அவன் அம்மாவும் எப்போதுமே ‘உன்னை நான் எவ்வளவு கஷ்டப்பட்டு, பெத்து, வளர்த்து, வயித்தை கட்டி வாயை கட்டி படிக்க வெச்சு, பெரிய மனிஷன் ஆக்கி இருக்கேன். இப்ப புது பொண்டாட்டி வந்தவுடனே அம்மாவை மறந்துடாதேடா. ஒண்ணு தெரிஞ்சிக்கோ, உனக்கு எத்தனை பொண்டாட்டி வேண்ணா கிடைக்கலாம். ஆனா உனக்கு அம்மானா அது நான் ஒருத்தி மட்டும் தான்...’’ என்று தாய் பாசம் சொட்ட சொட்ட எக்கச்சக்கமாய் டயலாக் அடிக்க பையனும் அம்மா செண்டிமெண்டில் அப்படியே உறுகி போனான்.

நீங்கள் கூட கேட்கலாம். இதென்ன அபத்தமான வசனம். இவன் அம்மா மட்டும் தான் அவனை கஷ்டப்பட்டு பெற்று போட்டு, வளர்த்து ஆளாக்கினாளா? அவன் மனைவி மட்டும் என்ன ஆகாயத்தில் இருந்து அப்படியே ரெடிமேட்டாக குதித்து விட்டாளா? அவளையும் தானே அவள் அம்மா ஆசையாய் பெற்று அரும்பாடுபட்டு வளர்த்திருப்பார். யாரோ பெற்ற பெண்ணை இப்படி இம்சிப்பது எப்படி நியாயம் ஆகும் என்று?..... சராசரி அறிவுள்ள எவருக்கும் இந்த லாஜிக் புரியும். ஆனால் இந்த பையன் தான் மெத்த படித்த மேதவிலாசியாயிற்றே. அதனால் இந்த மாதிரி சிம்பிள் லாஜிக் எல்லாம் அவனுக்கு புரியவே இல்லை. அவனுக்கு தெரிந்ததெல்லாம். ‘இந்த பெண் வரும் வரை வீடே நிம்மதியாக இருந்தது? இவள் வந்த பிறகு என் அம்மா எப்போது:ம ஏதாவது குறை கூறி ஒப்பாரி வைத்துக்கொண்டே இருக்கிறாள். அப்படியானால் இதற்கு ஒரே தீர்வு, இந்த பெண்ணை எடுத்த இடத்திலேயே திரும்ப வைத்து விட வேண்டியது தான்’’ என்பது தான்.

அதனால் இந்த ஆடவர் குல திலகம் ‘உன் தம்பி கல்யாணத்துக்கு போயிட்டு வாயேன், நீ ரொம்ப ஹோம்சிக்கா இருக்கே’ என்று டிக்கெட் வாங்கி கொடுத்து, மனைவியை அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு பேக் அப் செய்து விட்டு, எதுவுமே தெரியாத அப்புராணி மாதிரி அப்படியே நிசப்தமாகி போனான். எங்கே சொந்தக்காரர்கள் ஏதாவது கேட்டு தொந்தரவு செய்வார்களோ என்று தன்னுடைய எல்லா தொலைபேசி எண்களையும் மாற்றி வைத்துக்கொண்டான்.

இனி இரண்டாம் ஆணின் கதையை பார்ப்போமே. இவன் சரியான அறுந்த வாலு. சின்ன வயதில் இருந்து ஒரு குட்டி தெரு நாயை ஆசையாய் வளர்த்து வந்தான். அந்த நாய் தான் அவனுடைய முழு நேர விளையாட்டு துணை. பகுதி நேர பேச்சுத்துணை. இரண்டு பேருமாக சேர்ந்து அந்த ஏரியாவின் சந்து பொந்து விடாமல் ஊரையே அந்த சுற்று சுற்றி ஆராய்ந்திருந்தார்கள். இப்படி அந்த நாயுடன் ஆசையாய் உறவாடிய நேரம் போக, அந்த பையன் எப்படியோ பரிட்சைகளில் ஒப்பேற்றியதில் அவனுக்கு ஓரளவுக்கு உருப்படியான மதிப்பெண்களும் கிடைத்தன. கல்லூரியில் சீட்டும் கிடைத்தது. ஆனால் ஒரே சிக்கல், கல்லூரி வெளி மாநிலத்தில் இருந்தது. வெளி ஊருக்கு போய் படிக்கணுமா என்ற பயத்தை விட, அய், அம்மா அப்பாவோட பிக்கல் பிடுங்கல் இல்லாம ஜாலியா இருக்கலாம் என்ற சுதந்திரமே அவனை பெரிதும் ஈர்க்க, ஆர்வமாய் கல்லூரிக்கு போக தயாரானான். ‘‘ஜிம்மிய பத்திரமா பார்த்துக்கோங்க’’ என்று எல்லோரிடமும் சொல்லி வைத்து விட்டு, இவன் பாட்டிற்கு ஹாயாய் கல்லூரிக்கு போய் இல்லாத கொட்டமெல்லாம் அடித்து என்ஜாய் செய்தான்.

இதற்கிடையில் ஜிம்மி அவனை பிரிந்த ஏக்கத்தில் வாடி, இளைத்து,நோய் வாய் பட ஆரம்பித்தது. ஜிம்மியை வெளியில் கூட்டி போக யாருமில்லை. அவன்இருந்தவரை ஜிம்மிக்கு பிடிக்குமே என்று தினமும் இளநீர் வாங்கி நீரை அ வன் குடித்து விட்டு, தேங்காயை கோரி அதற்கு கொடுத்துஅது சாப்பிடுவதை பார்த்து ரசித்து சிரிப்பான். அவன் இல்லாமல் அதற்கு வேளாவேளைக்கு சாப்பாடு வைக்க கூட யாருக்கும் நியாபகமே இருப்பதில்லை.

ஒரு விடுமுறையின் போது ஊருக்கு வந்த பையன், ஜிம்மி படும் பாட்டை பார்த்து கவலை பட்டான். ‘‘ஏன் யாரும் ஜிம்மிய கவனிக்கிறதே இல்லை?’’ என்று தன் அம்மாவிடம் சண்டை போட்டான். ‘‘எனக்கு ஆயிரம் வேலைடா, உன் நாயை பார்த்துக்கலாம் என்னால முடியாது...’’ என்று அம்மா கோபித்துக்கொள்ள, ‘‘எத்தனை தடவை சொல்லுறது நாய்னு சொல்லாதீங்க. ஜிம்மீனு சொல்லுங்க....’’ என்று கத்தியவன். அப்போதே ஒரு முடிவிற்கு வந்தான். ‘‘சரி, உங்களால பார்த்துக்க முடியலை இல்லை. ஜிம்மிய நானே கூட்டிட்டு போறேன்!’’

அவன் வீராப்பாய் சொன்னானே ஒழிய ஜிம்மிய உடன் அழைத்து போவதில் நிறைய சிக்கல்கள் இருந்தன 1) ஜிம்மிக்கு வயதாகி விட்டால் அதனால் முன்பு போல ஓடியாட முடியவில்லை. ரயில் பயணத்தை எல்லாம் அதனால் தாங்கிக்கொள்ள முடியுமோ முடியாதோ 2) ஜிம்மிக்கு கண் பார்வை மங்கிவிட்டதால் அதனால் புது இடங்களில் சமாளிக்க முடியுமோ, முடியாதோ 3) கல்லூரி விடுதியில் மனிதர்களை தவிர வேறு ஜீவராசிகள் வசிக்கக்கூடாது என்பது விதி. அதனால் நிச்சயம் ஜிம்மியை உள்ளே அனுமதிக்கவே மாட்டார்கள்.

ஆனால் ஜிம்மியை விட மனசு வராமல், எந்த பிரச்சனைனாலும் பார்த்துக்கலாம் என்கிற குருட்டு நம்பிக்கையில் அதனை தூக்கிக்கொண்டு ஹாஸ்டலுக்கு போனான் பையன். எடுத்த எடுப்பிலேயே வார்டன் சொல்லி விட்டார். ‘டாக்ஸ் நாட் அலவுட்.’’ ‘‘சார், ஜிம்மிக்கு வேற யாருமே இல்லை. என்னை மட்டுமே நம்பி இருக்கிற உயிரை நான் எப்படி கை விடுகிறது? ப்ளீஸ் சார். இவனால எந்த பிரச்சனையும் வராம நான் பார்த்துக்குறேன். தயவு செய்து....’’ என்று பையன் ரொம்ப கெஞ்சி கேட்டதில் வார்டன் விதியை தளர்த்தி ஜிம்மியை ஹாஸ்டலில் தங்க அனுமதித்தார்.

ஆனால் சீக்காளி ஆகிவிட்ட ஜிம்மியை பராமரிக்க நேரம் பிடித்தது. அதனால் பையன் தினமும் கிளாசுக்கு தாமதமாக போனான். விரிவுரையாளனி திட்டி தீர்ந்தார். ‘‘தினமும் இப்படி லேட்டர் வர்றியே, உனக்கு வெட்கமாவே இல்லையா?’’

அவனுக்கு வெட்கமாகவே இல்லை. எவ்வளவு நேரமானாலும் ஜிம்மிக்கு அதன் வயதான காலத்தில் தான் செய்ய வேண்டிய கடமைகளை அவன் செய்துக்கொண்டே இருந்தான். அதன் கடைசி மூச்சு வரை.

இப்போது சொல்லுங்கள். இந்த இரண்டு ஆண்களில் யாருக்கு அதிக மதிப்பெண் தருவீர்கள்? தன்னையே நம்பி வந்த மனைவியை ஏமாற்றி நாடுகடத்திவிட்டு, எதுவுமே நடக்காதது மாதிரி கப் சிப் என்று இருந்துவிட்ட அந்த மேதவிலாதிக்கா? நாய் தான் என்றாலும், தன்னை நம்பி இருக்கும் உயிராயிற்றே என்று எதிர்ப்புக்களை மீறி தன் கடமையை செய்து முடித்த அந்த அறுந்த வாலு பையனுக்கா?

நிச்சயம் அறுந்த வாலு பையன் தான் அறுதி பெரும்பாண்மையில் ஜெயிப்பான். ஏன் தெரியுமா? அவனிடம் தான் integrity அதாவது தார்மீகம் என்கிற உயர்ந்த பண்பு இருக்கிறது.

பணம், புகழ், பெயர், ஆட்பலம், அறிவு மாதிரியான எத்தனை வளங்கள் இருந்தாலுமே, வெறும் இந்த வளங்களுக்காக நாம் யாரையும் மதித்து விடுவதில்லை. இவை எல்லாமும் இருந்தும் அதர்மமாய் செயல்படும் மனிதர்களை நம்மால் மதிக்கவே முடிவதில்லை. காரணம், தர்மம் என்பது அத்தனை முக்கியமான மனித பண்பு.

இந்த பண்பு இருக்கிறவனாக பார்த்து நீங்கள் தேர்ந்தெடுத்தால் தான் அவன் உறவில் உண்மையாக இருப்பான். இல்லை என்றால் முதல் கதையில் வந்த மேதவிலாதி மாதிரி மனைவியை முதுகில் குத்தும் துரோகியாகி விடுவான்.

அதெல்லாம் சரி, ஆணுக்கு இண்டெகிரிட்டி இருக்கிறதா இல்லையா என்பதை எப்படி முன்கூட்டியே தெரிந்துக்கொள்வது? அதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், ஒன்றே ஒன்று தான், கண்களையும், காதுகளை நன்றாக திறந்து வைத்துக்கொள்ளுங்கள். அவன் என்ன பேசுகிறான். செய்கிறான். எப்படி நடந்துக்கொள்கிறான் என்று கவனியுங்கள். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு தானே பதம். அவன் ஒட்டு மொத்த தார்மீக பொறுப்புணர்ச்சியை அவனுடைய சின்ன சின்ன நடவடிக்கைகளில் இருந்தே கண்டுபிடித்து விடலாம். உதாரணத்திற்கு முதல் கதையில் வந்த மேதவிலாசி. அவன் வீட்டில் இருக்கும் திரை சீலை, மேசை நாற்காலி, கட்டில், பீரோ, அவ்வளவு ஏன் அவன் தோட்டத்தில் இருக்கும் பூச்செடிகளில் கூட வாங்கிய விலை பட்டியலை அப்படியே விட்டு வைத்திருப்பானாம். ஏன் என்று கேட்டால், பிடிக்கலன்னா எப்ப வேண்ணா திருப்பி கொடுத்துட அப்ப தான் வசதி’’ என்பானாம். இப்படி எந்த கடைக்கு போனாலும் பொருளை வாங்கி வந்து ஒரு முறை உபயோகபடுத்தி பார்த்துவிட்டு, அதிலேயே திருப்தியாகி, அத்தோடு அப்பொருளை ரிடர்ன் செய்வது தான் தலைவரின் ஆஸ்தான பொழுதுபோக்கே. இவ்வளவு சொர்ப்ப இண்டகிரிட்டி இருப்பவன், அவன் மனைவியையும்இதே மாதிரி, வாங்கி பார்த்துவிட்டு, உடனே ரிடர்ன் செய்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை தானே!

ஆதலினால் சிநேகிதிகளே, சின்ன சின்ன விஷயத்தில் சின்னத்தனமாய் நடந்துக்கொள்வது. சில்லறை தனமாய் பேசுவது. பொதுவான தர்ம நியாயங்களுக்கு புறம்பாக நடந்துக்கொள்வது, கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாமல் தன் சுயநலத்திற்காக பிறரை காயப்படுத்தி, பலியிடுவது மாதிரியான ஈனத்தனங்கள் செய்கிறவனா? கவனித்த மாத்திரமே அவனை அப்படியே சுழற்றிவிடுங்கள்.

அதெல்லாம் முடியாது. அவன் திருந்திடுவான். நான் திருத்திக்காட்டுறேன். ஒரு பொம்பளை நினைச்சா முடியாத காரியமா? என்று அநாவசிய வீராப்பில், இந்த மாதிரி அற்ப கேசுகளுக்கு வாழ்க்கை தர மட்டும் நினைத்து விடாதீர்கள். காரணம் இந்த மாதிரி ஈயம் பித்தளை பேரிச்சம் பழம் கேசுகள் மனித வர்கத்திற்கே பெரிய இழுக்கு. அவனை சட்டமோ, மனநல மருத்துவமோ பார்த்துக்கொள்ளும். இவனை மாதிரியான antisocial சட்டவிரோதிகளை வைத்து மல்லுக்கட்டுவது உங்கள் வேலையே இல்லை.

‘‘என்னை நம்பி வந்தவளை கடைசி வரைக்கும் கண் கலங்காமல் காப்பாற்றுகிறவன் தான் நிஜ ஆண்’’, என்று தெரிந்தவனாய், தர்ம நியாயங்களுக்கு கட்டுப்பட்ட தார்மீக பொறுப்புணர்ச்சி கொண்டவனாக பார்த்து தேர்ந்தெடுத்தோமா? ஜாலியாய் வாழ்வை ஜமாய்த்தோமா என்று இருங்கள்! இதை செய்வதுதான் உங்களுக்கான இந்த வார ஹோம் வொர்க். உங்களை சுற்றி இருக்கும் ஆண்களின் தார்மீக உணர்வை ஸ்கோர் செய்து பாருங்கள். தொட்டதிற்கெல்லாம் அய்யோ பாவம் என்று உருகும் ஓவர் செண்டிமெண்டல் கேஸுகளையும், ‘‘பாவமா, அப்படினா கிலோ எவ்வளவு?’’ என்று கேட்கும் கல்நெஞ்சக்கார கேஸுகளையும், புடைத்தெடுத்து விட்டு, சூழலுக்கு பொருத்தமான அளவில் தர்மத்தை கடைபிடிக்கும் தலைவனாக பார்த்து தேர்ந்தெடுங்கள். வாழ்க்கை நிம்மதியாக இருக்கும்.

இன்னும் இன்னும் ஆண்களிடம் பார்த்து தேர்ந்தெடுக்க வேண்டிய பண்புகள் பலவற்றை பற்றி எல்லாம், அடுத்த சிநேகிதியில்.....

Monday, October 12, 2009

ஆண்களை ஹாண்டில் செய்ய: அத்தியாயம் 23

வீரமுள்ள ஆணை தேர்ந்தெடுத்து விட்டீர்களா, சரி அடுத்த கட்டமாய் அந்த ஆசாமியிடம் சரி பார்க்க வேண்டிய குணநலன், அவனுடைய பொறுப்புணர்ச்சி.

பொறுப்புணர்ச்சி என்ன அப்படி ஒரு முக்கியமான மேட்டரா, அது இல்லாவிட்டால் தான் என்ன, எத்தனையோ பெண்களுக்கே கூட தான் பொறுப்புணர்ச்சியே இல்லை, அதனால் என்ன? என்று நீங்கள் நினைக்கக்கூடும். ஆனால் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், அர்தநாரியாக இருந்தாலும், உயிருள்ள ஒவ்வொரு ஜீவராசிக்கும் லைட்டாகயாவது பொறுப்புணர்ச்சி இருந்தால் தான் அது உயிர் வாழவே முடியும். காலையில் எழுந்து இயற்கை கடன்களை முடித்து, வயிற்றை நிரப்பிக்கொள்ள தோதான இடமாக தேடிபோய், பொறுப்பாய் மேய்து முடித்து விட்டு மாலையில் இருப்பிடம் திரும்பிவிடுவது என்று தானே ஆடு மாடுகள் கூட இயங்குகின்றன. இப்படி தன் வாழ்வாதாரத்திற்கு தானே உழைத்துக்கொள்ளும் self preservation சுயபராமறிப்பு நடவடிக்கைக்கு கூட பொறுப்புணர்ச்சி ரொம்ப அவசியம் ஆயிற்றே.

சரி, கால்நடை லாஜிகிலிருந்து மனிதர்கள் பக்கம் திரும்புவோம். பாலின வித்தியாசங்களை ஓரம்கட்டிவிட்டு பார்த்தால் மனிதர்களும் உயிரினங்கள் தான், அவர்களுக்கு சுயபராமறிப்பு நடவடிக்கைகள் பல உண்டு. இதை தவிற ஆடு மாடு மாதிரி மனிதர்கள் போய் எங்கும் நுனிபுல் மட்டும் மேய்ந்துவிட்டு வயிறு நிறப்புக்கொள்ள முடியாது. படிப்பு, அறிவு முன்னேற்றம், வேலை, தொழில், வருமானம், ரிலாக்ஸ் பண்ண நல்ல பொழுது போக்குகள், நல்ல நண்பர்கள் என்று பல விதமாய் பிழைக்கும் திறனை அதிகரித்துக்கொண்டால் தான் வயிறும், மனசும் நிறையும். இந்த எல்லா நடவடிக்கையிலும் ஈடுபட எக்கசெக்க பொறுப்புணர்ச்சி வேண்டுமே. இப்படி பொதுவாகவே மனிதர்கள், எப்பாலாக இருந்தாலும் பொறுப்பால் மட்டும் தான் சொல்லிக்கொள்கிற அளவிற்காவது தங்களை முன்னேற்றிக்கொள்ள முடியும்.

இதையும் தாண்டி சமுதாய ரீதியாக பார்த்தால், பெண்களை விட ஆண்களே அதிக முக்கியத்துவம் வாய்ந்த வேலைகளில் இருக்கிறார்கள். அது கேஸ் சிலிண்டரை வீடுகளுக்கு கொண்டு போய் விண்ணீயோகம் செய்யும் வேலையானாலும் சரி, அடைத்த சாக்கடைகளை சுத்தம் செய்யும் வேலையானாலும் சரி, ஊர் நிற்வாகம் ஆனாலும் சரி, பங்கு சந்தையானாலும் சரி, தேச பரிபாலனமாலும் சரி, எங்கெல்லாம் குறித்த நேரத்திற்குள் மட மடவென வேலையை முடிக்க வேண்டிய நிர்பந்தம் இருக்கிறதோ, அங்கெல்லாம் அந்த வேலையை ஆண்களே செய்கிறார்கள். ஏன் இந்த வேலைகளை பெண்கள் செய்தால் ஆகாதா? என்று குறுக்கு கேள்வி கேட்க உங்களுக்கு தோன்றினால், உங்களுக்கான கொசுறு தகவல், நிச்சயம் இந்த எல்லா குறித்த-நேரத்திற்குள்-முடிக்க-வேண்டிய time bound வேலைகளை பெண்களாலும் செய்ய முடியும் தான். ஆனால் பெண்களுக்கு குடும்பம், குட்டி, வீட்டு நிற்வாகம் என்று எத்தனையோ பிக்கல் பிடுங்கள்கள் இருப்பதினால் அவர்கள் நேரத்தை அவர்களாலேயே தீர்மாணிக்க முடியாது. அவசரமாய் மீட்டிங்கிற்கு கிளம்பும் போது குழந்தைக்கு வாந்தி ஜூரம் என்றால் அம்மா மீட்டிங்கை நினைப்பாளா, குழந்தையின் உடல்நிலையை கவனிப்பாளா? அப்படியே மீட்டிங் தான் முக்கியம் என்று இந்த தாய் நினைத்து காரியசிரத்தையாய் வேலைக்கு போனாலும், “இவள் எல்லாம் ஒரு தாயா, குழந்தையை விட வேலை அவளுக்கு முக்கியமாக போய் விட்டதா?” என்று தானே இருக்கும் பப்ளிக் ஒபீனியம். அப்படியே ஏதோ நிர்பந்ததினால் இந்த தாய் வேலையே முக்கியம் என்று போனாலும், அவள் மனசு அதில் லயிக்காதே. ஆக பெண், அதுவும் தாய் என்று ஆகிவிட்டால் அவளுடைய முக்கியமான சமூக பணி, அடுத்த தலைமுறையை கண்ணும் கருத்துமாக வளர்ப்பது தான். மிச்சம் மீதி இருக்கும் உதிரி சமூக வேலைகளை இதனாலே ஆண்கள் வேலை என்று அவர்கள் தலையில் கட்டிவிட வேண்டி உள்ளது.

மற்றபடி, பெண்கள் டெலிவரி செய்தால் கேஸ் சிலிண்டர் போக வேண்டிய இடத்திற்கு போய் தான் சேரும், சாக்கடை சுத்தம் ஆக தான் செய்யும், ஊர் நிர்வாகம் முதல் நாட்டு நிர்வாகம் வரை சகலமும் பெண்களால் செய்ய முடியும். ஆனால் இப்படி எல்லா வேலைகளையும் பெண்களே ”எங்களாலும் முடியும்” என்று இழுத்து போட்டு செய்து விட்டால், அப்புறம் ஆண்கள் என்ன தான் செய்வார்கள்? வசதியா போச்சு என்று தூக்கம், சீட்டு கட்டு, மதுவகைகள், வெட்டி அரட்டை என்று ஜாலியாக திரிவார்கள். “பொறுப்பா, அப்படினா, கிலோ எவ்வளவு?” என்று உங்களையே கேட்பார்கள்! அதனால் தான் முதிர்ந்த கலாச்சாரங்கள் அனைத்துமே, “பொறுப்போடு செயல் படுபவன் தான் ஆதர்ஸ ஆண்” என்று ஆண்களை இன்னும் இன்னும் பொறுப்பாய் செயல் பட ஊக்கு விக்கின்றன.

இதெல்லாம் பொது வாழ்விற்கு பொருந்தும் விளக்கங்கள். நம்ம மேட்டருக்கு வருவோம்….ஆண் பெண் உறவென்று வரும் போது, அதில் ஆண் பொறுப்புள்ளவனாய் இருப்பது ரொம்பவே முக்கியம். காரணம் பெண் ஒன்றும் பொழுது போக்கிற்க்காக எந்த ஆணோடும் உறவு வைத்துக்கொள்வதில்லை. உறவு முதிர்ந்ததும் திருமணம், குழந்தை, குட்டி என்று தன் இயற்பியல் பணிகளை biological dutiesசை செய்தாக வேண்டும் என்பதில் பெரும்பாலான பெண்கள் மிக தெளிவாகவே இருக்கிறார்கள். இந்த பயலாஜிகல் கடமைகளை செய்ய இவளுக்கு ஒரு பொறுப்பான துணைவன் கிடைக்காவிட்டால் இவள் பாடு ரொம்பவே திண்டாட்டமாக போய் விடுமே!



“குழந்தைக்களுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டணும், கரண்ட் பில் கட்டணூம், சொந்தகாரங்க கல்யாணத்திற்கு போகனும்…” என்று குடும்ப தலைவனுக்கு என்று எத்தனையோ பொறுப்புகள் உண்டே. இந்த வேலைகளை எல்லாம் மறந்து விட்டு, டீவி, ஃபோன் அரட்டை, இண்டர்நெட் அழகிகள், கழிப்பறை தவம் என்று நேரத்தை அநியாயத்திற்கு விரயம் செய்துவிட்டு, “இப்ப செய்யபோறீங்களா இல்லையா?” என்று மனைவி, கடைசி அஸ்திரமாய், வேலை நிறுத்தம் செய்து, அம்மா வீட்டுக்கு போறேன் என்று வெளி நடப்பு செய்யும் அந்த தருணத்தில், “சும்ம நை நைங்காதே, செய்துக்கிட்டு தானே இருக்கேன்” என்று கடைசி நேர கர்ம வீர்ராய், ஏதாவது ஒப்பேற்றிவிட்டு, தன் குட்டு வெளியே தெரியாமல் இருக்க, அதே ஓவர் பந்தா, உதார், மிரட்டல், உருட்டல் என்று திமிரும் ஆணுக்கு வாழ்கைபடுபவளின் கதியை யோசித்துபாருங்களேன். என் துணைவு, என் குழந்தைகள், என் குடும்பம், என் சமூகம், என் கடமை, என்கிற பொறுப்பே இல்லாத உதவாக்கரை ஆணோடு இனைந்துவிட்டால் ஆண் செய்ய வேண்டிய வேலை, பெண் செய்ய வேண்டிய வேலை என்று இரண்டு சுமைகளையுமே இந்த ஒருத்தி மட்டுமே தனியே சுமக்க நேரிடுமே.



இதுவும் போக ஆண் பெண் உறவில் நிறைய கொடுக்கல் வாங்கள் உண்டு. பொருளாக இல்லாவிட்டாலும், நேரம், உணர்ச்சி, பாசம், அன்பு, அக்கறை என்று பல உசத்தியான விஷயங்களை இருவரும் பரிமாறிக்கொள்கிறார்கள். தன் வீடு, தன் குடும்பம், தான் பழக்கபட்ட உணவு, உடை, வசதிகள் என்று எத்தனையோ எத்தனை விஷயங்களை விட்டு கொடுத்து தான் பெண் தன் துணைவனின் வீட்டிற்கு குடி பெயர்கிறாள். இப்படி தன் சுயத்தையே விட்டு கொடுத்து, தன் ஒருவனை நம்பி மட்டுமே ஒரு பெண் வருகிறாள் என்றால் அவளை அந்த ஆண் எவ்வளவு பொறுப்பாக கவனித்து கொள்ள வேண்டும்? இவனை நம்பி இவள் பிள்ளைகள் வேறு பெற்றுக்கொண்டு விட்டால், அவன் தகப்பனாய் தன் பிள்ளைகளை அவயத்தில் முந்தியிருக்க எவ்வளவோ பாடுபட்டு உழைத்தாக வேண்டுமே? அதற்கு எவ்வளவு பொறுப்பாய் இவன் செயல் பட்டாக வேண்டும்! இந்த அளவுக்கான பொறூப்புணர்ச்சி எல்லாம் திடுதிப்பென்று ஒரு நாளில் ஏற்படாதே. அவன் இயல்பிலேயே பொறுப்பானவனாய் இருந்தால் மட்டும் தானே இது சாத்தியம்?



இந்த வம்பே வரக்கூடாதென்றால் ஆரம்பத்திலேயே உங்களுக்கு பெட்டிஷன் போடும் ஆண் பொறுப்பாக இருக்கிறானா என்று கவனியுங்கள். இதை போய் எப்படி கண்டுபிடிப்பது என்கிறீர்களா? சிம்பிள்!

1. காலையில் எழுந்து பல் துலக்கிவிட்டு எக்சர்சைஸ் செய்வேன், வாக்கிங் போவேன், பேப்பர் படிப்பேன், செய்தி கேட்பேன், அப்புறம் கிளம்பி வேலைக்கு போவேன்….என்பது மாதிரியான ரொடீன்கள் ஏதாவது வைத்திருக்கிறானா என்று பாருங்கள். அதெல்லாம் எதுவுமே இல்லை. சோம்பிகிடந்து விட்டு, இஷடப்பட்ட நேரத்தில் எழுந்து, எந்தவித குறிக்கோளுமே இல்லாமல் சுற்றி வந்துவிட்டு, கோயில் காளை மாதிரி அவன் வெட்டியாக பொழுதை போக்கினால், ஊகூம், பையன் தேரமாட்டான்!

2. வேலையில் அவன் எவ்வளவு ஆர்வமாக இருக்கிறான் என்று கவனியுங்கள். இன்று இதை இதை எல்லாம் செய்ய போகிறேன், என் வேலையில் எனக்கு இத்தனை ஸ்வாரசியம் என்றூ இருப்பவன் என்றால் ஓகே. சும்மா பெயருக்காக வேலைக்கு போய் விட்டு, அரட்டை, ஊர் நியாயம், வெட்டி பேச்சு என்று வெறூமனே பெஞ்சை தேய்த்துவிட்டு வரும் கேஸ் என்றால் சீ, சீ, நாட் ஓகே. இதையும் தாண்டி சில ஒட்டுண்ணிகள் இருக்கும், ரொம்ப சாமர்த்தியமாய் பேசி, எந்த வேலையும் செய்யாமல் மற்றவர்களை டபாய்த்தே உயிர் வாழும் இந்த மாதிரி அட்டைரக ஆசாமியாக இருந்தால், வேடிக்கையாக பேசி சிரிக்கவேண்டுமானால் அவன் லாயக்கி. ஆனால் இந்த மாதிரி மற்றவரை ஏமாற்றி பிழைக்கும் manipulative மனிதர்களோடு காலம் முழுக்க சேர்ந்து வாழ்வது என்பது முடியாத காரியமாயிற்றே.

3. வேலையில் accountableலாக, பிறர் கேள்வியே கேட்காவிட்டாலும், நியாயமான முறையில் நடந்துக்கொள்கிறானா என்று பாருங்கள். சிலர் யாரும் பார்க்காவிட்டால் ஓ பி அடித்து விட்டு, கண்காணிக்க ஆள் இருந்தால் மட்டும் யோசிய சிகாமணிகள் மாதிரி வேலையில் மும்முரம் காட்டுவாரகள். இந்த மாதிரி பொறுப்பை தட்டிக்கழிக்கும் ஆசாமி எப்படி குடும்பத்திற்கு ஒத்து வருவான்? எப்போதுமே, “நீ செய்கிறாயா இல்லையா என்று நான் கண்காணித்துக்கொண்டே இருப்பேன்?” என்று மனைவியால் இருக்க முடியாதே. அதனால் யார் பார்த்தாலும், பார்க்காவிட்டாலும், தன் வேலையில் நியாயமாக நடந்து கொள்கிற பொறுப்புள்ள ஆசாமி தானா என்று கவனியுங்கள்.

4. புற வாழ்க்கை போக அக வாழ்விலும் ஒரு ஆண் பொறுப்பாய் இருக்க வேண்டுமே. பிறந்த நாள், திருமண நாள், மாதிரியான முக்கியமான தேதிகள், இத்தனை மணிக்கு ஃபொன் செய்வேன், வந்து விடுவேன், அழைத்து போவேன் என்று கொடுக்கும் வார்த்தைகள், இவற்றில் எல்லாம் குட் பாயாக நடந்துக்கொள்கிறானா என்று கவனியுங்கள். நியாயமான காரணத்தினால் மறந்துவிட்டான், தாமதமாகி விட்டது என்றால் பரவாயில்லை, ஆனால் இதை எல்லாம் நினைவில் வைத்துக்கொண்டு சரியாக செய்ய வேண்டும் என்ற பொறுப்புணர்ச்சியே இல்லாத ஞானசூனியம் என்றால் கதையே கந்தலாகி விடுமே!

5. தன் குடும்பம், இதை தானே பராமறிக்க வேண்டும் என்கிற எண்ணம் அவனுக்கு இருக்கிறதா என்றும் கவனியுங்கள். அம்மாவுக்கு உடம்பு சரியில்லை, அதனால் நான் தான் இன்று காலை சமைத்தேன் அல்லது உணவை வெளியில் இருந்து வாங்கி வந்தேன், என்று சொல்பவன் ரொம்பவே குட் பாய். இப்படி பட்ட பையன் தான் நாளை மனைவி குழந்தைகளின் நலனிலும் அக்கறையாக இருப்பான். அதை விட்டு விட்டு, “யார் எக்கேடு கெட்டாலும், எனக்கு செய்ய வேண்டியவதை முதலில் செய்துவிட்டு போங்கள்” என்று இடம், பொருள், ஏவல் புரியாமல் தன்னை பற்றி மட்டுமே கவலைபடும் சுயநல கேஸ் என்றால், ஊகூம், நாட் அட் ஆல் ஓகே.

6. இதையும் தாண்டி பொது விஷயங்களில் அவன் எவ்வளவு பொறுப்புள்ளவனாக இருக்கிறான் என்றும் கவனியுங்கள். தெரு முனை கிடைத்தால் சிறு நீரடித்து அபிஷேகம் செய்வது, பொது இடங்களில் எச்சில் துப்புவது, தான் பயன் படுத்திய பிளாஸ்டிக், பேப்பர், ரப்பர் மாதிரியான மக்கா குப்பைகளை அப்படியே போட்டுவிட்டு போவது, தண்ணீர் குழாய், திறந்த கதவுகள், லைட், ஃபேன் மாதிரியான உபகரணங்களை உபயோதித்து முடித்ததும், அதை நிறுத்தவோ, மூடவோ நினைக்காமல் அப்படியே விட்டு விட்டு போவது. ஈர துண்டு, திறந்த குப்பிகள், பேனா, கத்தி, என்று எடுத்த பொருளை தன் உரிய இடத்தில் வைக்காமல் அப்படியே போவது, ராமன் ஆண்டால் என்ன ராவணன் ஆண்டால் என்ன என்று தேர்தலின் போதும் ஓட்டு சாவடி பக்கம் போகாமல் தொலைகாட்சி முன்னால் ஸ்தம்பித்து கிடப்பது….என்பது மாதிரியான சமூக பொறூப்புணர்ச்சியற்ற தன்மைகளை வெளிபடுத்தும் ஆணாக இருந்தால், அவன் திசைக்கே ஒரு பெரிய கும்பிடு போட்டு ஏறக்கட்டுங்கள் அவனை. சமூக அக்கறையற்ற இவனை மாதிரி அக்றிணையோடு கூடுவதை விட நீங்கள் கன்னியாஸ்திரியாகவே போய்விடலாம்.

ஆக தான், என்கிற சுயம், தன்னுடைய வேலை, குடும்பம், உற்றார் உறவினர் என்கிற அகம், தன் ஊர், உலகம், தன் சுற்றுசூழல் என்கிற புறம் என்கிற இந்த மூன்று உலகிலும் அவன் பொறுப்பானவனாக இருந்தால் ஓகே, அவனோடு உறவு கொள்வதில் அர்த்தமுள்ளது. இந்த மூன்று உலகில் எதுலுமே பொறுப்பில்லாமல் சுற்றும் கேஸ் என்றால் அவன் குடும்ப/சமூக வாழ்விற்கு ஏற்றவனே இல்லை என்பதால் அவனை அப்படியே விட்டு விடுவது பெட்டர்.

இதற்கு நேர்மாறாக சில ஆண்கள் இருக்கிறார்கள். நான்கு நாட்களுக்கு முன்பே, எல்லாவற்றையும் எடுத்து வைத்து தயாராக விரும்பி, இப்படி செய்யாதே, இதை இதை இப்படி இப்படி தான் செய்ய வேண்டும் என்று எக்கசக்கத்துக்கு விதிமுறைகளை வைத்து, ஓவர் பொறூப்பாய் எல்லோரையும் உயிரை வாங்கும் இந்த மாதிரி அளவிற்கதிகமான ஆர்வகோளாறு கேசுகள் படுத்தும் இம்சை ரொம்பவே தாங்க முடியாதது. அதனால் பொறுப்புணர்ச்சியுள்ள ஆணாக தேடுகிறேன் பேர்வழி என்று இந்த மாதிரி திராபை கேஸுகளை தப்பித்தவறியும் தேர்ந்தெடுத்து விடாதீர்கள்! ரூல்ஸ் பேசியே பிராணனை வாங்கி விடுவார்கள்!

ஆக ஸ்நேகிதிகாள், உங்களுக்கு ரூட் விடும் ஆணின் பொறுப்பு உணர்ச்சி விகிதத்தை கவனியுங்கள். ஓரளவிற்கு பொறுப்பாய், இருக்கும் ஜாலி டைப் ஆசாமி என்றால் வெரி குட். பொறுப்பே இல்லாத பொடிமட்டை கேஸுகளும், ஓவர் பொறூப்பாய் உயிரை வாங்கும் சின்சியர் சிகாமணிகளும் சும்மா விளையாட்டாய் பேசி, சிரிக்க மட்டும் தான் லாயக்கி, வாழ்க்கைதுணையாய் இருக்கும் வாய்ப்பை எல்லாம் இவர்களுக்கு தரமுடியாது என்பதால், உங்களுக்கான இந்த வார ஓம் ஒர்க். உங்களை சுற்றி இருக்கும் ஆண்களின் பொறுப்பு விகிதத்தை கணக்கிடுங்கள் பார்ப்போம்.

Friday, October 2, 2009






Sunday, September 13, 2009

Thursday, September 10, 2009

ஆண்களை ஹாண்டில் செய்ய: அத்தியாயம் 22

உங்களை முற்றுகை இடும் ஆண், பெண்களிடம் கண்ணியமாக நடக்க தெரிந்த ஜெண்டில்மேனா, அல்லது, மகளிர் மட்டும் இருக்கையில் முந்திக்கொண்டு அமரும் காட்டுமிராண்டியா; தித்திக்க தித்திக்க பேசி கவிழ்த்துவிடும் காசாநோவா ரகமா, அல்லது அளவாய் பேசி, இன்னும் கொஞ்சம் பேச மாட்டானா என்று ஏங்க வைக்கும் ரகமா; சொன்ன சொல்லை காப்பாற்றும் கற்புக்கரசனா; அல்லது வாய்ப்பந்தல் போட்டு நம்ப வைத்து கழுத்தறுக்கும் நயவஞ்சகனா; வேலை வெட்டி என்று இருக்கும் ஹீரோவா; வெட்டியாய் திரியும் ஸீரோவா; என்று கடந்த பல வாரங்களாக பல விஷயங்களை அனலைஸ் செய்திருப்பீர்கள்... அதன் தொடர்ச்சியாக இந்த வாரம், ஆணிடம் கட்டாயம் இருந்தே ஆக வேண்டிய ஒரு மஹா முக்கியமான குணத்தைப் பற்றி பார்ப்போம்.

அதென்ன அவ்வளவு மஹா முக்கியமான மேட்டர், என்கிறீர்களா? அது தான் துணிவு. பெண்களுக்கும் துணிவு உண்டு தானே, அப்புறம் இந்த குணம் ஆணிடம் இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன? என்று நீங்கள் கூட ஆட்சேபிக்கலாம்.

ஆனால், என்ன தான் வீரம் என்பது பெண்மைக்கும் பொதுவான விஷயமாக இருந்தாலும், ஆண்கள் வீரமாக இருப்பது தான் அவர்களுக்கு அழகு என்பதே சமூகக் கருத்தாக இருந்திருக்கிறது.

இந்த சமூகம் ஏன் இப்படிப்பட்ட கருத்துக்களை வைத்துக்கொண்டிருக்கிறது? என்கிறீர்களா? அது ஒரு பெரிய கதை. உங்களுக்காக ரொம்பச் சுருக்கமாய் சொல்ல முயற்சிக்கிறேன்... மனிதர்கள் தோன்றிய புதிதில், பெண்கள் தான் வேட்டைக்கெல்லாம் போய்க் கொண்டிருந்தார்கள். இது பெரிய அதிசயமெல்லாம் இல்லை. இயற்கையில் எல்லா ஜீவராசியிலுமே பெண் தான் ஆணைக் காட்டிலும் பெட்டர் ஹண்டர். சிங்கமாகட்டும், புலியாகட்டும், கொசுவாகட்டும், பேனாகட்டும், சகலவிதமான ஜீவராசியிலும் பெண் தான் ஆணைக் காட்டிலும் அதிக வீரியத்துடன் வேட்டை ஆடும். காரணம் பெண் தனக்கு மட்டும் வேட்டை ஆடுவதில்லை, தன் பிள்ளைகளுக்கும் சேர்த்தல்லவா வேட்டை ஆடுகிறாள். அதனால் இயற்கை, பெண்களுக்கு கூடுதல் வேட்டுவத்திறனை கொடுத்தருளியது இதனாலேயே... ஆண் விலங்கைவிட, சட்டென அசைவுகளை உணரும் விதமாக விழித்திரையும், வாசனைகளை கபால் என கிரகித்துக்கொள்ளும் நாசிநரம்புகளும், நுணுக்கமான ஒலிகளைக் கூட உடனே உணரும் செவிநரம்புகளும், அவ்வளவு ஏன்... விதம் விதமான சுவைகளை உணரும் நாக்கும், தொடுகையில் பல சமிக்ஞைகளை உணரும் சருமமும் பெண் விலங்கிற்கே உண்டு. இதனால் தான் மனிதர்களிலும் பெண்தான் இந்த ஐந்து புலன்களையும் அதிகமாக உபயோகிக்கிறாள்.

இப்படி இவள் புலன்கள் எல்லாமே செம்ம ஷார்ப்பாய் இருப்பதினாலேயே, பெண் ஆணைவிட தேர்ந்த வேட்டுவச்சியாக இருந்தாள். நிறைய மாமிசம் கொன்று தின்று, ஆதிமனித பெண்கள் ஸ்பஷ்டமாய் வளர, இதன் பக்க விளைவாய் இவர்கள் சுமந்த மனித குட்டிகளும் நன்றாக புஷ்டியாக வளர்ந்தன. இப்படி புஷ்டியாய், பெரிய சைஸாகிவிட்ட மனித குட்டிகளை பெற்றெடுக்கவே,இயற்கை தன் பரிணாம வளர்ச்சி முறைப்படி மனுஷியின் இடுப்பை அகலமாய் விரியச் செய்தது. இடுப்பெலும்பு இப்படி விரிந்ததால் அதனோடு கூடியிருந்த தொடை எலும்பு புரண்டு போனது.

இப்படி தொடை எலும்பு புரண்டு போனதால் மனிதப் பெண்களால் முன்பைப் போல லாவகமாய் ஓடவோ, நடக்கவோ, மரம் ஏறவோ முடியாமல் போனது. அதுவும் போக, பெரிய பாப்பாவை பெற்று சோர்ந்து போனவளால் என்னத்தை பெரிதாய் வேட்டை ஆடிவிட முடியும்? அதனால் காலப் போக்கில் மனிதப் பெண்கள் நேரடியாக வேட்டைக்குப் போவதை நிறுத்திக்கொண்டார்கள். தனக்காக திறமையாக வேட்டையாடும் ஆணாகப் பார்த்து தேர்ந்தெடுத்து,அவனை கொண்டு தன் ஜீவனத்தை நடத்தும், Second Hand Survival முறைக்கு மாறினார்கள் மனிதப் பெண்கள் எல்லாம்.

இது சரியான போங்கா இருக்கே? இந்த பெண்கள் எப்படி ஆண்களின் உழைப்பின் மீது இப்படி ஓசிச் சவாரி செய்யலாம், இது ஞாயமே இல்லை, என்று நீங்கள் கூட வாதிடலாம்..... ஆனால் இன்னொரு விஷயமும் இதில் முக்கியமாக கவனிக்க வேண்டும்... பிள்ளைப்பேறு சமாசாரத்தில், ஆணின் பங்கு மிக சொற்பமே. சில மில்லி ஸ்பெர்ம், சில விநாடிகள், சில அசைவுகள், அவ்வளவு தான். இந்த குறைந்த முதலீட்டிலேயே அவன் குலத்தைத் தழைக்க செய்துவிட முடியும். ஆனால் அதே பிள்ளைப் பேற்றில் பெண்ணின் முதலீடோ, ரொம்பவே அதிகம். ஒரு கருமுட்டை, ஒரு கருப்பை, பல லிட்டர் ரத்தம், பல விதமான ஹார்மோன்கள், பத்து மாத சிரமம், அதன் பிறகு பிராணனே போகும் படியான ஒரு பிரசவம், அதன் பிறகும், தொடர்ந்து பாலூட்டல், பிள்ளைப் பராமரிப்பு, என்று ஒரே ஒரு குழந்தையை வளர்க்க ஒரு பெண் தன் ஒட்டுமொத்த வாழ்க்கையையுமே செலவிட வேண்டியுள்ளது.

இப்படி பிள்ளைப் பேற்றில் பெண்ணின் பங்களிப்பு மிக அதிகம் என்பதாலேயே, ஒருவேளை பெண்கள் நொந்து போய், குழந்தையைப் புறக்கணித்து விட்டாலோ, அல்லது வேறு ஆணுடன் அடுத்த கட்ட உறவுக்கு மாறினாலோ, இந்த முதல் ஆணின் குலம் தழைக்காமல் போய்விடுமே. இப்படி தன் வித்து பிழைக்காமல் போய்விடும் ஆபத்து ஏற்பட்டுவிடக்கூடாது என்று தான் பொறுப்புள்ள அப்பாக்கள் எல்லாம், பிள்ளைப் பராமரிப்பில் தங்கள் பங்களிப்பை இன்னும் அதிகமாகச் செய்ய முற்படுகிறார்கள்.

இது தான் இயற்கையின் ஏற்பாடு என்றால் பெண், தன் வாழ்க்கையையும் பிள்ளைகளின் வாழ்க்கையையும் சுமுகமாக ஆபத்தின்றி கழிய வேண்டுமானால் அவள் எந்த மாதிரியான ஆணைத் தேர்ந்தெடுத்தால் காரியம் கைகூடும்? சதா சுறுசுறுப்பு, வேட்கை, வேகம், வீரம், வீரியம், துணிவு என்றே இருக்கும், எதற்கும் தயங்காத அசகாய சூரனை தேர்ந்தெடுத்தால் அவளுக்கு நன்மையா? அல்லது எப்போதுமே சோம்பித்திரியும், ஆபத்து என்றாலே அஞ்சி ஒளியும் சோப்லாங்கியை தேர்ந்தெடுத்தால் அவளுக்கு நல்லதா?

ஆபத்துனா எனக்கு அல்வா மாதிரி என்று அஞ்சாமல் களமிறங்கும் ஆசாமி தான் நிச்சயம் அவளுக்கு நன்மை செய்வான். இப்படி ஒரு வீரனைத் தேர்ந்தெடுத்தால்தானே, வேட்டை, உணவு ஆகியவை மட்டும் இன்றி, எதிரியின் தாக்குதல், விலங்கு அச்சுறுத்தல், இயற்கை சேதம் என்று எந்த வித ஆபத்து நேர்ந்தாலும் இந்தப் பெண்ணுக்கும் அவள் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு கிடைக்கும்?அதனால் தான் காலம் காலமாக பெண்கள் வீரம் ஒழுகும் ஆண்களைக் கண்டாலே உடனே காதலால் கசிந்துருகிப் போய் விடுகிறார்கள்.

இப்படி வீரம் நிறைந்த ஆண்களைக் கண்டாலே, பெண்களின் உடம்பில் எக்கச்சக்க ஹார்மோன்கள் பெருக்கெடுத்து ஓடுகின்றன. அதேபோல, இப்படி தன்னைக் காதலுடன் பார்க்கும் பெண்ணின் பக்கம் வந்தாலே நிஜ ஆண்களின் உடம்பிலும், ஏகத்திற்கு வீர ஹார்மோன்கள் பீறிட்டு ஓடுவதால், கண்ணின் கடைப்பார்வையை பெண்கள் காட்டிவிட்டால், மண்ணில் குமரருக்கு மாமலையும் ஓர் கடுகாம் என்கிற நிலை தான்!

அதற்காக, எங்கே ஆபத்து? என்று சதா வேண்டாத வம்பை எல்லாம் விலைகொடுத்து வாங்கும் அசட்டு வீரம் கொண்ட அல்டாப்பு பேர்வழியை இந்தப் பெண் தேர்ந்தெடுத்தால், இவன் நிச்சயம் அல்ப ஆயுசிலேயே போய்ச் சேர்ந்து விடுவானே! அதனால், ஜாக்கிரதையாய் யோசித்து, அவசியமானபோது மட்டும் தன் முழு வீரத்தையும் காட்டி காரியத்தை ஜெயிக்கும், Calculated Risk எடுக்க தெரிந்த விவேகமான வீரனாய் பார்த்து தேர்ந்தெடுப்பதுதான் என்றைக்குமே Safe.

பல சமயத்தில் பெண்கள், போனாப் போகுது, இவனை விட்டா வேற எவனும் கிடைக்கலைன்னா? என்ற பயத்திலோ, போகப் போக சரியா போயிடும் என்ற நப்பாசையிலோ, அதெல்லாம் நான் திருத்தி சரியாக்கிடுவேன் என்கிற ஓவர் கான்ஃபிடன்ஸிலேயோ, வீரம் குறைவாக இருக்கும் ஆண்களுக்கு வாழ்க்கைப் பட்டு போகிறார்கள். ஆனால் போகப் போக அவன் சுபாவமே இவர்களுக்கு பெரிய சுமையாகிப் போக, போயும் போயும் உன்னை மாதிரி ஒரு பயந்தாங்கொள்ளியை கட்டித் தொலைச்சேனே... என்று சதா பாவம் அந்த ஆசாமியைப் போட்டு வார்த்தைகளாலேயே விரை நீக்கம் செய்துவிடுகிறார்கள். இதனால் இந்த தம்பதியினருக்கு மட்டும் அல்ல, குழந்தைகளுக்கும் கூட நிம்மதியே போய் விடும் சூழல் வரலாம். அதனால் சிநேகிதிகளே, ஆரம்பத்திலேயே உஷாராய் இருங்கள். வீரமுள்ள ஆணாய்ப் பார்த்து தேர்ந்தெடுங்கள். அப்படி ஒரு ஆண் கிடைக்காவிட்டால் இட்ஸ் ஓ.கே... கிடைக்கும் வரை ஜாலியாய் லேடி பாச்சுலர் லைஃப்பை என்ஜாய் பண்ணுங்க.

ஆகையால் சிநேகிதிகளே... உங்களுக்கு பெட்டிஷன் போடும் ஆணின் வீரம் + விவேகம் ஸ்கோரை கவனியுங்கள். ஓரளவிற்கு வீரமும், நிறைய விவேகமும் இருக்கிற ஆணாய் இருந்தால், ஓகே, ப்ரோசீட்!

Saturday, August 8, 2009

ஆண்களை ஹாண்டில் செய்ய: அத்தியாயம் 21

பொழுதை எப்படி செலவழிக்கிறான் என்பதை வைத்து ஆணை எப்படி தர நிர்ணயம் செய்வது என்பது பற்றி சென்ற ஸ்நேகிதியில் பார்த்தோம். இம்முறை நேரத்தை தவிர மீதமுள்ள வளங்களை அவன் எப்படி செலவழிக்கிறான் என்பதை பற்றி தெரிந்துக்கொள்ளலாமா?
நம் கலாச்சாரத்தில் பல காலத்திற்கு ஆணுக்கு மட்டும் தான் ஆஸ்தி, ஆண் மட்டும் தான் வெளி வேலைக்கு போய் பணம் சம்பாதிக்கலாம் என்கிற ஒரு நிலைப்பாடு இருந்துவந்ததால், ஆணிடம் தான் பணம் புழங்கியது. பெண் அவனை சார்ந்தே வாழ வேண்டிய நிலை இருந்தது. இன்று நிலைமை ரொம்பவே மாறி இருந்தாலும், இன்றும் பல பிற்போக்கான ஆண்கள், மனைவியின் வருமானத்தையும் வாங்கி அதையும் தன் கட்டுபாட்டிலேயே வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

நம்மூர் பெண்களும், சம்பாதிக்கும் காசையெல்லாம் கணவன் கையில் கொடுத்து வைப்பது தான் “தமிழ் கலாச்சாரம்” என்று கண்டதுக்கெல்லாம் கலாச்சாரத்தோடு கனெக்ஷன் கொடுத்து குழம்பி போகிறார்கள். இது இப்படி இருக்க, இன்றும் பல குடும்பங்களில் பணம் என்பது கணவன் கையிலேயே புழங்கும் சமாசாரமாகத்தான் இருக்கிறது. தன்னுடைய சின்ன சின்ன தேவைகளுக்கு கூட மனைவி, கணவனின் கையை எதிர்பார்க்கும் நிலையில் தான் இருக்கிறாள்.

இப்படி பெரும்பாலான பெண்கள் பொருளாதார விஷயத்தில் சார்பு நிலை ஜீவராசிகளாகவே வாழும் போது, இவர்கள் எப்படி பட்ட ஆணை தேர்ந்தெடுத்தால் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும்? உதாரணத்திற்கு இரண்டு நிஜ வாழ்க்கை சம்பவங்களை சொல்கிறேனே.
முதல் ஆசாமி பெரிய மில்லியனர். அவரின் ஒரு கை அசைவிற்கே பல ஆயிரம் சம்பாதிக்கும் ஒரு செழிப்பான வேலையில் இருந்தார். அவருக்கு திருமணம் ஆனது. மனைவியுடம் முதன் முதலில் ஹோடலுக்கு போனார்.

மனைவியும் தன்னை மணந்த கனவன் என்பதனாலேயே அவன் ஒரு பெரிய ஹீரோ என்றே நினைத்து விட்டாள். அதனால் தன் ஹீரோ தன்னிடம் மிக கனிவாக, என்ன சாப்பிடுகிறாய் என்றெல்லாம் கேட்டு, உபசரித்து, அன்பு பாராட்டுவான் என்று நினைத்தால், தலைவர் அவளிடம் எதுவுமே பேசாமல் ஒரு பிட்சாவை வாங்கி இரண்டாக கிழித்து அவளுக்கு கால் வாசி வைத்து விட்டு, தான் முக்கால் வாசியை மென்று விழுங்க ஆரம்பித்தார். மனைவி தன் பேரதிர்சியை விழுங்கிவிட்டு பிட்சாவை கொறித்து முடித்தாள். அந்த கடையில் ஒரு பிட்சா வாங்கினால் ஒரு லோட்டா நிறைய கோலா இலவசம். அதனால் ஆளுக்கு பாதி கோலா குடித்தார்கள். அவ்வளவு தான், மணவாழ்க்கையின் முதல் வெளி சாப்பாடு இப்படியே இனிதே முடிய, மனைவி, மனமுடைந்து போய் அலுப்புடன் வெளியே நடக்க, பக்கத்து கடையில் ஐஸ்கிரீம் விற்றுக்கொண்டிருந்தார்கள். அதை கூட கவனிக்கும் நிலையில் தலைவி இல்லை. ஆனால் தலைவன், “ஐஸ்கிரீம் சாப்பிடுறியா?” என்று கேட்க, “அப்பாடா, இப்போதாவது எனக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியதே, பரவாயில்லையே என் கணவன் அவ்வளவு மோசமில்லைப்பா” என்று மனைவி நிம்மதி பெருமூச்சுடன், “ஒகே” சொல்லி எல்லா பல்லையும் காட்டி தலையாட்ட, கணவன் சுருசுருப்பாய் ஐஸ்கிரீம் கடைக்கு நடந்தான்.

போன வேகத்திலேயே திரும்பியும் வந்தான். வெறும் கையுடன். “என்னாச்சு, ஐஸ்கிரீம்?” என்று மனைவி புரியாமல் விழிக்க, கணவன் படு கவலையாய் சொன்னான், “ரொமப் காஸ்ட்லியா இருக்கு, நூறு ரூபாயாம்” நூறு ரூபாய் எல்லாம் ஒரு காஸ்டிலியா, இது கூட செலவழிக்க முடியலை, நீ என்ன பெரிய மில்லியனர்? உன் மூஞ்சிக்கெல்லாம் கல்யாணம் ஒரு கேடா! என்று எல்லாம் மனதில் பட்டதை கேட்கவா முடியும். புது கல்யாண பெண், “அட அல்பமே” என்று மனதிற்குள் ஏசிவிட்டு மௌனமாக இருந்துவிட்டாள். பிறகு தான் போக போக தெரிந்துக்கொண்டாள், அவன் பெரிய மில்லியனராக இருந்தாலும் எச்சை கையால் காக்காய் கூட ஓட்டாத வடிகட்டிய கஞ்சபிஸினாரி என்று.

இப்படி பணவிஷயத்தில் கருமியாக இருந்தால், சரி போனால் போகிறது, பணமா பெரிது, அன்பு தான் முக்கியம் என்று மனதை தேற்றிக்கொள்ளலாம். ஆனால் பணத்தில் எத்தனை அற்பமாக இருந்தானோ, அதே போலத்தான் அவன் தன் அன்பை வெளிகாட்டுவதிலும்….மிக மிக சிக்கனமாய், ஒரு வாரத்திற்கு நாலு முத்தம் கொடுத்தான் என்றால் அதுவே அதிகப்படி! அதுவும் அவள் நச்சரித்தால் தான், இல்லை என்றால் தன் பக்கத்தில் ரத்தமும் சதையுமாய் ஒரு பெண் படுத்திருப்பதே தெரியாமல் நன்றாக குரட்டை விட்டு தூங்கினான்…..என்றால், இப்படி பட்ட ஆணுக்கு எத்தனை மார்க் போடலாம்?

அடுத்த கதாநாயகன் மில்லியனர் எல்லாம் இல்லை. அவன் ஒரு சாதாரண வேலையில் சாதாரண சம்பளத்தில் இருந்த ஒரு சாதாரணன். அவனுக்கு ஒரு கேர்ள் ஃபிரெண்ட். அவளை இவனுக்கு ரொம்பவே பிடிக்கும். அவளுடன் மணிக்கணக்கில் பேசினால் தான் அவனுக்கு தூக்கமே வரும். அவளை பார்த்துக்கொண்டே இருந்தால் அவனுக்கு பசி கூட எடுக்காது. அவளுக்காக செலவு செய்ய அவனிடம் அவ்வளவு பணம் கொட்டிகிடக்கவில்ல. என்றாலும் தாஜ் மகால் கட்டமுடியாவிட்டாலும் காதலில் தானும் ஒரு ஷா ஜெகான் என்று நினைக்கும் சுபாவம் அவனுக்கு. அவனால் அவளுக்கு விலை உயர்ந்த பரிசு பொருட்களை வாங்கித்தர முடியாவிட்டாலும், அழகான பொருட்களை பார்க்கும் போதெல்லாம் அவளை தான் நினைத்துக்கொண்டான். அவளை வெளியே அழைத்து சென்ற போதெல்லாம், கணக்கு பார்க்காமல் பணம் செலவழிக்க தயாராக இருந்தான். அவன் இப்படி தாராளமாய் செலவழிக்க முன் வருவதை பார்த்து, இவளே, “இவ்வளவு செலவா, வேண்டாம்!” என்று ஆட்சேபிக்கலானாள். ஆனால் அவனால் அவளிடம் சிக்கனம் பார்க்க முடியவில்லை.

இப்படி பணத்தில் எந்த அளவு தாராளம் காட்டினானோ, அதே அளவிற்கு கணக்கு பார்க்காமல் தான் தன் அன்பையும் கொட்டி காட்டினான். அவளை தொடாமல் அவனால் இருக்க முடியாது. கற்பனையிலாவது அவளை கட்டிபிடித்துக்கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டால் தான் அவனுக்கு தூக்கமே வரும். இப்படி பணம், அன்பு, உடம்பு என்று தன்னிடம் இருந்த வளங்களை எல்லாம் அவளுக்காகவே செலவழிக்க அவன் விரும்பினான். அவளை இப்படி எல்லாம் மகிழ்வித்து பார்ப்பதில் அவனுக்கு அவ்வளவு சந்தோஷம்….இப்போது சொல்லுங்கள், இந்த ஆணுக்கு எவ்வளவு மார்க் போடலாம்?

நிச்சயம் ஐஸ்கிரீம் வாங்கி தர கணக்கு பார்த்த மில்லியனரை விட, கணக்கே பார்க்காமல் அன்பை கொட்டிய இந்த இரண்டாவது ஆசாமிக்கு தானே மார்க் அதிகமிருக்கும். காரணம் கணக்கு பார்த்து ஈடுபட்டால் அது காதல் இல்லை, இப்படி அன்பு காட்டவே கணக்கு பார்க்கும் ஆணை துணையாய் அடைவதை விட மோசமான துற்பாக்கியம் வேறு எதுவும் இருக்க முடியாது.

ஆகையால் ஸ்நேகிதிகாள், உங்கள் பட்டியலில் இருக்கும் ஆண்களின் குணாதிசயத்தை கவனியுங்கள். எதற்கெடுத்தாலும் கணக்கு பார்க்கிற கஞ்சபிசினாரி அவன் என்றால், காலத்திற்கும் அவனோடு வாக்கு வாதம் செய்தே போரடித்து போகும் உங்கள் வாழ்க்கை. இந்த மாதிரி கருமிகள் பணத்தால் மட்டுமின்றி பாசத்தாலும் பட்டினி போட்டு விடுவார்கள் என்பதால் இந்த ரக அற்ப கேஸுகள் நாட் ஓகே அட் ஆல்.

அதற்காக, ஓவர் ஊதாடித்தனத்துடன் இருக்கிறதோ, இல்லையோ, கடன் வாங்கியாவது கொட்டி கவிழ்க்கிறேன் என்றிருக்கும், பணத்தின் அருமை தெரியாத கேஸாக இருந்தான் என்றால், காலத்திற்கும், கடன் காரர்களுக்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டி வரும். அதனால் அந்த மாதிரியான ஊதாரி மன்னர்களும் நாட் ஓகே.

பணம் முக்கியம் தான், ஓரளவுக்கு சிக்கனமாய் இருக்க தெரிந்தவன் தான். ஆனால் நீங்கள் அவன் வாழ்வில் முக்கியமான ஒரு அங்கம், அவன் சாம்பிராஜியத்தின் மஹாராணி நீங்கள் ஒருத்தி மட்டும் தான் என்பதனால், உங்களுக்கு சிறந்ததை மட்டுமே செய்கிறான், அதற்க்காக தன் உடல், பொருள், ஆவி, தன் அன்பு, பாசம், நேரம் என்று எல்லாவற்றையும் தாராளமாக செலவழிக்கிறான் என்றால், இவன் ரொம்ப ரொம்ப ஓகே!

அதனால் ஸ்நேகிதிகாள், உங்களுக்கான இந்த வார ஓம் ஒர்க் இது தான், உங்களுக்கு முற்றிகை இடும் ஆண் கஞ்சனா, ஊதாடியா, அல்லது உங்களுக்காக தன்னையும் தன் வளங்களையும் தாராளமாக செலவழிக்க விரும்பும் காதல் நாயகனா என்பதை சரிபாருங்கள்…..ஆண்களை அளந்து பார்க்க இன்னும் வேறு என்னென்ன தர பரிசோதனைகள் உண்டு என்பதை அடுத்த ஸ்நேகிதியில் பார்ப்போம்.

Thursday, July 23, 2009

ஆண்களை ஹாண்டில் செய்ய: அத்தியாயம் 20

ஆண்கள் செய்யும் வேலையை வைத்து அவர்களை தரபரிசோதனை செய்து பார்க்கும் சமாசாரத்தை பற்றி போன இதழில் பேசினோம். வெறும் வேலையை மட்டும் ஒழுங்காக செய்தால் போதாதே. எனக்கு தெரிந்த ஒரு ஆசாமி, வேலையில் ஓர் வடிகட்டிய கரும வீரர், பொழுது விடுவதற்கு முன் வெள்ளென எழுந்துக்கொள்வார். காலைகடன்களை எல்லாம் கடகடவென்று முடித்து விட்டு, காரை எடுத்துக்கொண்டு வேலைக்கு போனார் என்றால், மாலையில் தான் வீட்டிற்கு வருவார்.

அங்கு தான் பிரச்சனையே, வீட்டுக்கு வந்தவுடன் மனிதர் சோபாவில் படுத்தார் என்றால், அப்படியே படுத்த படுக்கையாய் இருந்தபடி லைட்டாய் கொஞ்சம் தொலைகாட்சியை பார்த்து வைப்பார். அதன் பிறகு இரவு உணவிற்கு தான் எழுந்திருப்பாரே. உணவிற்கு பிறகு அப்படியே போய் கட்டிலில் விழுந்தார் என்றால் அப்புறம் அடுத்த நாள் காலையில் வேலைக்கு கிளம்ப தான் எழுந்திருப்பார். இப்படி all work and no play என்று இந்த ஆசாமி இருந்திட, மனைவி பொறுத்து பொறுத்து பார்த்து, “எங்கையாவது வெளிய போகலாம், சும்மா கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருக்கலாம், ரெண்டு பேரும் சேர்ந்து ஏதாவது விளையாடலாம்….’ என்று எவ்வளவோ பேசி, கெஞ்சி, மன்றாடி, போராடி, சண்டை எல்லாம் போட்டு பார்த்தார். எதுவுமே சரிபட்டு வரவில்லை. கடைசி வரை தலைவர் வெறும் ஒரு நடமாடும் வேலை செய்யும் யந்திரமாக மட்டுமே இருந்திட, நொந்து போன மனைவி வேறு வழியாக போக ஆரம்பித்துவிட்டார்.

இந்த வம்பும், வலியும் வந்து சேரக்கூடாதென்றால் பெண்கள் எல்லோருமே ஆரம்பத்திலேயே மிக உஷாராய், ”இவன் வேலை வேலை என்று மட்டும் இயங்கும் யந்திரபடிவமா, இல்லை, உபறி நேரத்தை உயிர் துடிப்புடன் உற்சாகமாக செலவிட தெரிந்த ஸ்வாரஸ்ய துணையா?” என்று கண்டுபிடிக்க தெரிந்திருப்பது ரொம்பவே முக்கியம்.

இதை எப்படி கண்டு பிடிப்பது என்கிறீர்களா? ரொம்ப சிம்பிள். அந்த ஆசாமி தனக்கு கிடைக்கும் உபறி அவகாசத்தை எல்லாம் எப்படி பயன் படுத்துகிறார் என்று கவனியுங்கள். ஃபிரீ டைம் கிடச்சா போதும், நல்லா குரட்டை விட்டு தூங்கிக்கிட்டே இருப்பேன் என்று எவனாவது சொன்னால், உஷார்! ரொம்ப வேலை பளு, அதனால் ஃப்ரீ டைம் கிடச்சா தூங்குவேன், ஆன, அப்புறம் ஏஞ்சி ஏதாவது பொழுது போக்கில் ஈடுபடுவேன் என்றால் ஓகே. பொழுது போக்கே கிடையாது, வெறும் கும்பகர்ணத்தனம் தான் என்றால், இது பகுதி நேர சோம்போறி, என்றல்லவா அர்த்தம். இவன் இப்படி தேருவான்!

சோம்பேறி எல்லாம் இல்லை, சுருசுருப்பு சிகாமணி தான் என்றால், அப்படி சுருசுருப்பாய் என்ன செய்கிறான் இந்த சிகாமணி என்று பாருங்கள்…. லீவ் நாளிலே, ஷாப்பிங் மாலுக்கு போய், பொண்ணூங்களை எல்லாம் சைட் அடிப்பேன், என்றால், ஊகூம், நாட் ஓக்கே. ஏன் சைட் அடிச்சா அவ்வளவு தப்பா? என்று நீங்கள் கூட ஆட்சேபிக்கலாம். போகிற வழியில் வேலையோடு வேலையாய் வருகிற போகிற எதிர் பாலினத்தை வேடிகக்கை பார்த்து ரசிக்கும் சைட் அடிச்சிஃபிகேஷன் என்றால் ஓகே, அது இயற்க்கையாகவே அமையும் ஒரு உந்துதல். Basic instinct என்பதனால் அதில் தவறொன்றூம் இல்லை. ஆனால் இதையே ஒரு திருப்பணியாக எடுத்துக்கொண்டு, சோமவாரம் தோரும், பெண்கள் கூட்டம் அதிகம் புலங்கும் பிரகாரங்களாக பார்த்து, நேர்த்திக்கடன் மாதிரி இவன் 108 சுற்று சுற்றுவதையே மிக முக்கியம் என்று கருதுகிறான் என்றால், இவனை எல்லாம் எப்படி விளையாட்டில் சேர்த்துக்கொள்வது?

லீவ் கிடைச்சால் போதும் ஜாலியா உட்கார்ந்து கம்ப்யூட்டர் கேம் ஆடுவேன், சாப்பாடு, தூக்கம் எதுவுமே வேண்டாம், விடிய விடிய கம்ப்யூட்டரும் கையுமா இருப்பேன் என்று சொல்லுகிற ஆசாமிகளும் சரியான மொக்கை போர் பசங்கள் தான். இவன் பாட்டுக்கு கம்ப்யூட்டரே கதி என்று இருந்து பழகிவிட்டான் என்று வையுங்கள்….அப்புறம் நீங்கள் என்ன தான் பேரழகியாய் பக்கத்தில் இருந்தாலும், “சும்மா இரு, இந்த கேம்மை முடிக்கணும்” என்று தான் அவன் மனம் தடம்புரளும். அப்புறம் சொல்ல வேண்டுமா, அவன் உங்களை விட கம்யூட்டருக்கு அதிக முக்கியத்துவம் தருவது உங்களை எந்த பாடு படுத்தும் என்பதை சொல்லவே வேண்டாமே!

இன்னும் சில வகை ஆண்கள் இருக்கிறார்கள். நேரம் கிடைத்தால், இல்லை கிடைக்காவிட்டாலும் இதற்காக வேலை மெனக்கெட்டு நேரம் ஒதுக்கி, அடிக்கடி ஏதாவது பார்னோகிராஃப் எனப்படும் செக்ஸ் படம் பார்த்துக்கொண்டிருப்பார்கள். இந்த வகை ஆண்களிடம் என்ன பெரிய பிரச்சனை என்றால், இப்படிப்பட்ட படங்களை பார்க்கும் அநேக ஆண்களுக்கு பார்ப்பது மட்டுமே பேரானந்தம் என்பதால் காரியத்தில் சுத்த சைபராக இருப்பார்கள். வேறு சில ஆண்களோ, இப்படி கண்ட குப்பையையும் பார்த்து விட்டு மனைவி/காதலியும் அதே மாதிரி இருக்க, இயங்க வேண்டும் என்று எதிர்பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். பணத்திற்காக பாலியல் காட்சியில் நடிப்பவள் நாடக தோரணையில் செய்வதை எல்லாம், குடும்ப தலைவி செய்வாளா? மாட்டாள் தானே. உடனே, இந்த மக்கு, தன் எதிர்ப்பார்ப்பே அபத்தம் என்று உணராமல், ஏதோ தன் துணைவியிடம் தான் எல்லா தப்புமே என்பது மாதிரி பேசி வைக்கும். அதனால் பார்னோகிராஃபை மட்டுமே தன் ஒரே பொழுது போக்காய் வைத்திருக்கும் இந்த வகை ஆண்கள் ஏறக்கட்டுவது எப்போதுமே பாதுகாப்பு.

மற்ற சில ஆண்கள் இருக்கிறார்கள், சும்மா லைட்டா எப்போதாவது கொஞ்சம் பாப்கார்ன் மாதிரி பார்ன் படங்கள் பார்த்து தங்கள் அறிவை அகலமாக்கி வைத்திருப்பார்கள். மற்றபடி இதே கதி என்று விழுந்து கிடக்க மாட்டார்கள். இப்படிப்பட்ட தெளிவான ஆண் என்றால் சரிபட்டு வருவான்.

இன்னும் சில ஆண்கள் ஃபிரீ டைம் கிடைத்தாலே தண்ணீ தொட்டி தேடும் கண்ணுக்குட்டிகளாய் சரக்கு உள்ள இடமாய் பார்த்து போய் சேர்ந்து விடுவார்கள். இப்படி ரெகுலராய், மது அருந்தும் ஆண் என்றால் மிக அதிக பட்ச எச்சரிக்கை உணர்வு தேவை. காரணம் மது போதைக்கு பழகிய ஆண்களை மறுபடியும் நல்வழி படுத்துவது ரொம்பவே கஷ்டம். அதுவும் தவிர இந்த மது பழக்கமே அவர்களுக்கு பலதரப்பட்ட உடல் மற்றூம் மனநல குறைபாடுகளை ஏற்படுத்திவிடும் என்பதால் இந்த பழக்கத்திற்கு அடிமையான ஆண்கள் குடும்ப வாழ்விற்கு ரொம்ப ஒன்றும் ஒத்துவர மாட்டார்கள். இப்படி மொடாகுடியன் இல்லை, சும்மா சாஸ்திரத்திற்காக மீட்டிங்கில் லைட்டாய் ஒன்றிரண்டு பெக் மட்டும் தான் என்றால், சரி தான் களவும் கற்று மறக்கவும் தெரிந்த மனிதன் என்று அவனுக்கு ஒரு பெரிய ஓகே போடலாம்.

இந்த மது போதை தவிர, பான் வகையறாக்கள், ரேஸ், ரீட், பெட், என்று இதையே பிரதான பொழுது போக்காய் கொண்ட ஆண்களும் தேரமாட்டார்கள். இதை எல்லாம் விட இன்னொரு பெரிய போதை மதம். இந்த போதைக்கு அடிமையாகி, சதா, கோயில், குலம், விரதம், ஹோமம் என்று சுற்றிக்கொண்டிருக்கும் ஆண்கள் என்றால் போயே போச்சு. எதற்கெடுத்தாலும், சாமி கண்ணை குத்தும் என்று தானும் பயந்து, நம்மையும் ஜாலியாய் இருக்க விடமாட்டார்கள் இந்த மாதிரி ஆண்கள். இவர்கள் எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், அளவிற்கு அதிகமான இறைபக்திகூட இல்வாழ்க்கைக்கு ஆபத்து தான் என்பதால் ஃபிரீ டைம் கிடச்சா அம்மாயோட கோயிலுக்கு போவேன் என்கிற இந்த வகை ஆண்கள் தான் இருப்பதிலேயே தேராத கேசுகள். ”சும்மா, பொழுது போக்கிற்காக போனேன், அம்மா கூப்பிட்டாங்களேனு துணையா போனேன், நேர்ந்திருந்தாங்களாம் அதனால் போனேன், கோயிலுக்கு போனா அமைதியா இருக்கும், மனசுக்கு இதமா இருக்கு, ஸ்தல வரலாறு பிடிக்கும் அதனால போனேன் என்று இயல்பான அளவில் ஞாயமான முறையில் பக்தி செலுத்தும் ஆண் என்றால் ஓகே. ஆனால் மதவெறி, கண்மூடித்தனமான பக்தி, மூடநம்பிக்கை என்று தெரிந்து குருட்டுத்தனமாக பின்பற்றும் விஸ்வாசம்…இவை எல்லாம் பின் தங்கிய மனதையே குறிக்கின்றன, இப்படி பின் தங்கிய மனிதனுடன் கூட்டு சேர்ந்தால் உங்கள் எதிர்காலம் என்னாவது? அதனால் பக்தி என்கிற இந்த விஷயத்தில் உங்கள் தலைவர் ஆரோகியமான மனநிலையில் இருக்கிறாரா என்று சரிபார்த்துக்கொள்வது ரொம்பவே முக்கியம்.
ஆக வெறும் தூக்கம், வெட்டி அரட்டை, ஓவர் சைட் அடிச்சிஃபிகேஷன், டூ மச் கம்ப்யூட்டர், பார்ன், போதை, பக்தி, என்று இருக்கும் ஆண்களை ஓரம் கட்டுங்கள். அப்ப எந்த மாதிரி ஆணுக்கு தான் ஓ கே சொல்வது என்கிறீர்களா?

ஃபிரீ டைம் கிடைத்தால், தன் ரசனையை வளர்த்துக்கொள்ள உருப்படியான புத்தகம், சினிமா, கதை, கவிதை, கலை, உரையாடல், விளையாட்டு என்று பலதரப்பட்ட பொழுதுபோக்குகளினால் இருந்த இடத்தில் இருந்துக்கொண்டே தன் அறிவை விஸ்தரித்துக்கொள்ளும் ஆண்கள் என்றால் எப்போதுமே ஓகே.

ஒரே இடமாக என்று இல்லாமல், ஊர் சுற்றிபார்க்கிறேன் என்று பையை மாட்டிக்கொண்டு தன் உலகத்தை ஆராய முற்படும் ஆணாய் இருந்தால் டபுள் ஓகே.

தான் ஆராய்ந்து, அனுபவித்து, யோசித்து, தெரிந்துக்கொண்ட விஷயங்களை பிறரிடம் பகிர்ந்துக்கொள்ள விரும்பி, தனக்கென்று ஒரு உறவினர்/நண்பர் வட்டம், அவர்களோடு, பேச்சு, சிரிப்பு, விளையாட்டு என்று பிறருடன் சுமூகமாக பழகும் ஆண்கள் என்றால் வெரி மச் ஓகே.

சுயமுனைப்பினால் தான் தெரிந்துக்கொண்ட விஷயங்களை தனக்கு தெரிந்தவர்களுடன் மட்டும் பகிர்ந்துக்கொள்வதோடு நிறுத்திக்கொள்ளாமல், தனக்கு தெரிந்த விஷயத்தினால் இந்த உலகிற்கு பிரயோஜனமாய் இருக்க வேண்டும் என்று பிறருக்காக தன் பொழுதை செலவழித்து சின்ன சின்னதாகவாவது சில சமூக மாற்றங்கள் கொண்டு வர முயன்றால் அவன் ரொம்பவே ஒகே.

எந்த சமுதாயமாய் இருந்தாலும், அதில் எவ்வழி ஆடவரோ, அவ்வழி தான் பெண்டிர், எவ்வழி பெண்டிரோ, அவ்வழி தான் அடுத்த தலைமுறையே. அதனால் தான் காலா காலமாக சரியான ஆடவனாக பார்த்து தேர்ந்தெடுக்கும் பெரும் பொறுப்பு பெண்களுக்கு இருந்து வருகிறது. அதனால் ஸ்நேகிதிகாள், அவன் சரியான துணையா என்று பார்த்து தேர்வு செய்யுங்கள். தேர்வான பிறகு அவனை எப்படி எல்லாம் கையாள வேண்டும் என்பது பற்றி அப்புறம் பார்ப்போம்!