Sunday, December 26, 2010

எலும்பில்லா ஆண்

என்ன தான் ஆண்கள் குறி நீளத்தை வைத்து தங்கள் மதிப்பை அளவிட ஆரம்பித்து, இதை வைத்து தமக்குள் நேரடியாகவும் மறைமுகமாகவும் போட்டி இட்டுக்கொண்டாலும், பெண்கள் மிக தெளிவாகவே இருந்தார்கள். வெறும் நீளத்தை வைத்து சுகத்தை ஏற்படுத்திவிட முடியாதென்பது தான் பெண்களுக்கு தெரியுமே! அதுமட்டுமல்ல, ஆடை இல்லாத காலத்தில் அமலில் இருந்த ஒரு தேர்வு வரையறையை ஆடைகள் அணியும் காலத்தில் எப்படி பின் பற்றுவது? ஆடை இருக்கும் சவுகரியத்தில் போலியான விளம்பரயுத்திகளில் பெரும்பாலான ஆண்கள் ஈடுபட ஆரம்பித்துவிட்ட பிறகு, இன்னமும் அதே தேர்வு கோட்பாட்டை வைத்து ஆண்களை தரம் பிரிப்பது முட்டாள்தனகாகாதோ?


அதனால் ஆண்கள் பாட்டிற்கு ஒரு பக்கம் ஆண்குறி அளவு குறித்த போட்டிகளில் தங்கள் நேரத்தை வீணடித்து ஏமாற்று, தந்திரத்தில் எல்லாம் ஈடுபட ஆரம்பிக்க, பெண்கள் சத்தமே இல்லாமல் தங்கள் தேர்வு வரையறையை மாற்றினார்கள்: நீளம் அகலம் எல்லாம் இருக்கட்டும், ”நீடித்த சுகத்தை தரமுடியுமா?” என்று வெளிதோற்றத்தை விட்டு விட்டு, செயல்பாட்டு திறனுக்கு முக்கியத்துவம் தர ஆரம்பித்தார்கள் பெண்கள்.

அதனால் என்ன தான் பிரமாதமான அண்குறி சின்னத்தை அணிந்தவனாக இருந்தாலும், அவன் செயல்பாட்டில் சொப்லாங்கியாக இருந்தால், அவனை மரபணு சங்கலி ஆட்டத்திலிருந்து கழட்டிவிட்டார்கள் பெண்கள். ஆண்களினால் சுயமாய் தங்கள் மரபணுக்களை பரப்பிக்கொள்ள முடியாதே, எப்படியும் பெண்ணுடல் தேவை படுமே. அந்த உடம்பை தர பெண் என்ன நிபந்தனை விதித்தாலும், அந்த நிபந்தனைக்கு ஏற்றாற்ப்போல தன்னை மாற்றிக்கொண்டே ஆகவேண்டும். அல்லது மாற்றிக்கொண்டு விட்டதாக ஒரு பாவ்லாவாவது செய்தாக வேண்டும். இல்லை என்றால் மரபணு போட்டியில் அவனால் பங்கேற்கவே முடியாதே. இது தான் ஆணின் நிலை என்பதால், பெண்களின் இந்த கறாரான ”நீடித்த சுகம்” என்கிற தேர்வு விதியை அனுசரித்து ஆணின் மரபணுக்கள் மீண்டும் மாற ஆரம்பிக்க, இதனால் அவன் உடம்பில் ஒரு முக்கியமான மாற்றம் ஏற்பட்டது.

பொதுவாய் ஆண் விலங்குகள் அனைத்திற்கும், ஆண்குறியினுள் பாக்குலம் (Bacculum) என்கிற ஒரு எலும்பு இருப்பதுண்டு. இந்த எலும்பு தான் விரைப்பு தன்மையை நீட்டிக்க உதவுகிறது. சிம்பான்சீ மாதிரியான நம் நெருங்கிய உறவுக்கார வானரங்களுக்கும் இந்த பாக்குலம் இருக்கிறது. ஆனால் மனித ஆண்களுக்கு மட்டும் இந்த பாக்குலம் என்கிற எலும்பு இருப்பதில்லை. ஏன் தெரியுமா? எலும்பின் உபயத்தால் விரைப்பு ஏற்படுவதை விட, எலும்பே இல்லாத போதும் நீட்டித்த விரைப்புடன் இருப்பது தான் நிஜ வீரியத்தின் வெளிபாடு….அதனால் மனித பெண்கள் எல்லோரும் எலும்பில்லாத ஆண்களுடன் கூடி அவர்களின் தரத்தை வித்தியாசபடுத்த ஆரம்பிக்க, காலப்போக்கில் மனித ஆண் தன் பாக்குலத்தை இழந்தான், அது இல்லாமலேயே விரைப்புறும் தன்மையை பெற்றான்.

பாக்குலம் இருப்பதில் ஆண் விலங்குகளுக்கு ஒரு மிக பெரிய சவுகரியம் இருந்தது. உதாரணத்திற்கு நாயை எடுத்துக்கொள்ளுங்கள். ஆண் நாய் பெண்ணுடன் புணர்ந்த பிறகும், கிட்ட தட்ட அரை மணி நேரத்திற்கு அப்பெண்ணை விடாமல் பற்றிக்கொண்டே இருக்கும். காரணம் இந்த பாக்குலம் பெண் பாகத்தில் பூட்டிக்கிடப்பதால், அந்த ஆண் நினைத்தாலும் விடுபட முடியாது. வேறு வழி இல்லாமல் பெண்ணும் கிட்ட தட்ட அரைமணி நேரத்திற்கு அவனோடு ஒட்டிக்கொண்டே தான் இருந்தாக வேண்டும். இது தெரியாமல் பல பேர் புணர்ந்த நிலையில் இருக்கும் ஆண்களை கல்லால் அடித்து பிரிக்க பார்பப்துண்டு! ஆனால் இந்த ஆண் நாய் இப்படி அரைமணி நேரத்திற்கு பற்றிக்கொண்டே இருப்பதில் ஒரு முக்கியமான மரபணுவியல் காரணம் உண்டு. பெண் நாய்க்கு ஒரே சமயத்தில் ஏழெட்டு கருமுட்டைகள் உற்பத்தி ஆகும். ஒரு ஆணுடன் சேர்ந்த பிறகு உடனே அது இன்னொரு ஆணுடன் புணர்ந்து விட்டால், அந்த இரண்டாவது ஆணின் விந்தணுக்கள் சில கருமுட்டைகளோடு கலந்துவிட முடியும். இன்னொருத்தனின் மரபணுக்கள் பரவிவிட்டால், தன் சந்ததியினருக்கு போட்டி ஆகிவிடுமே என்று தான், கிட்ட தட்ட அரைமணி நேரம் பெண்ணை பிடித்துக்கொண்டே இருக்கிறது ஆண். இந்த அவகாசத்திற்குள் எல்லா கருமுட்டைகளையும் தன் விந்தணுக்களே அபகரித்துவிடும் என்பது தான் ஆணின் கணக்கு.

மற்ற விலங்குகளுக்கு இவ்வளவு அனுகூலமாய் இருக்கும் ஒரு முக்கியமான எலும்பு இந்த பாக்குலம். ஆனால் மனித பெண் மிக குறிப்பாய் பாக்குலமே இல்லாத ஆண்களாய் பார்த்து பல தலைமுறைகளாக தேர்ந்தெடுத்ததில், கடைசியில் மனித ஆண் பாக்குலம் இல்லாதவனாகி போய்விட்டான். இதில் பெண்களுக்கு ஒரு மிக பெரிய அனுகூலம் இருந்தது. வெறும் எலும்பின் உபயத்தால் விரைப்புறும் ஆணின் நிஜ வீரியத்தை நிர்ணயிப்பது சிரமம். ஆனால் எலும்பே இல்லாமல் வெறும் தன் உதிரத்தை மட்டும், புவி ஈர்ப்பு சக்தியை எதிர்த்து உயர்த்தி நிறுத்தி, இந்த சாதனையை தொடர்ந்து சில நிமிடங்கள் செய்து, பெண்ணை குஷி படுத்துகிறான் என்றால் அது அல்லவா நிஜ வல்லமை. உடல் நோய்களோ, மனநோய்களோ இருப்பவனால் இந்த சாதனையை செய்ய முடியாதே. வேறு எந்த தந்திரத்தாலும் இந்த சாதனையை செய்து காட்ட முடியாதே.

ஆக ஆணின் நிஜ உடல்/உள்ள ஆரோகியத்தையும் அவை வெளிபடுத்தும் மரபணு வீரியத்தையும் தரபரிசோதனை செய்ய இதுவே ஒரு மிக சிறந்த வழியாகிவிட, இதில் பெண்களை ஏமாற்றுவது என்பது முடியாத காரியமானது. பெண்கள் இப்படி கறாராக மரபணுக்களை தேர்ந்தெடுப்பது தான் ஒட்டு மொத்த சமுதாயத்திற்குமே நல்லது என்பதால் தான் இன்று வரை உலகெங்கும் இருக்கும் எல்லா மதங்களும், மதம் சாராத சட்டங்களுமே கூட, விரைப்புறும் தன்மை இல்லாத ஆண்களை நிஜ அண் என்று கருதுவதில்லை. அதனால் இப்படி பட்ட ஆணோடு திருமணம் நடந்தாலும், அத்திருமணத்தை ஒரு நிஜ திருமணமாய் இவை அங்கீகரிப்பதில்லை.

இதை விட ஆண்களுக்கு பெரிய சவாலாக அமைந்தது என்ன தெரியுமா? ஆண் பெண் இருவருக்கும் இருக்கும் கலவியல் செயல்பாட்டில் இருக்கும் வேறுபாடுகள்.

மனித ஆணால் ஒரு கலவி அனுபவத்தில் ஒரே ஒரு தரம் தான் உச்ச சுகத்தை அடைய முடியும். ஆனால் மனித பெண்ணோ, ஒரே கலவி சேர்க்கையின் போது பல முறை உச்ச சுகத்தை உணரவல்லவள். அது மட்டும் அல்ல, கலவி கொண்ட பிறகு ஆண் அயர்ந்து விடுவது தான் அவனுக்கு இயல்பு, ஆனால் பெண் கொட்ட கொட்ட விழித்துக்கொண்டிருப்பாள். இவன் தூங்கிவிட்ட பிறகு இவள் பாட்டிற்கு அடுத்த சுகத்தை தேடி போய்விட்டால் என்னாவது? மனித ஆணுக்கு தான் பாக்குலமே இல்லையே, இவன் விந்தணுக்கள் எல்லாம் நீந்தியோடி அவள் கருமுட்டையை சென்று கலக்கும் வரை, அவளை அரைமணி நேரத்திற்கு அப்படியே பிடித்து பூட்டிவைக்க அவனால் முடியாதே!

ஆக பாக்குலம் இல்லாமல் போனது, பெண்ணுக்கு சாதகமான சூழலையும், ஆணுக்கு அவஸ்த்தையையும் ஏற்படுத்திவிட, ஆணின் மரபணுக்கள் சும்மா இருக்குமா என்ன? பாக்குலம் இல்லாமலேயே பெண்ணை தன் வசப்படுத்த புது புது யுத்திகளை உருவாக்கின ஆணின மரபணுக்கள். அதனால் மூன்றாவது முறையை மீண்டும் ஒரு முறை ஆணின் உடல் அமைப்பு மாற ஆரம்பித்தது.

அடுத்த இதழில் அது பற்றி.

Thursday, December 23, 2010

ஆண்குறி சின்னங்கள்

மனித பெண்கள் தமக்கு அதிக சுகத்தை தரும் ஆண்களை மட்டும் தேர்ந்தெடுத்த காலத்தில், ஆண்களுக்குள் எக்க செக்க போட்டி தலைதுக்க ஆரம்பித்தது. ”அதிக சுகத்தை தர வல்லவன் நான்” என்பதை விளம்பரப்படுத்த வேண்டிய நிர்பந்தம் ஆண்களுக்கு ஏற்பட, இதற்குண்டான கருவியின் வளர்ச்சி விகிதத்தில் மாற்றம் ஏற்பட ஆரம்பித்தது.


நீளமான தந்தத்தை கொண்ட கடாவை மட்டுமே தேர்ந்தெடுத்து பெண்யானைகள் கூடும், இதனலேயே ஆண் யானைகளுக்குள், தந்தத்தின் அளவை வைத்து ஒரு போட்டி நடைபெறுகிறது. அதே போலத்தான் மயில். மிக நீளமான தோகையை கொண்ட சேவல் மயிலோடு தான் பெண் மயில் சேர விரும்பும்….இதனால் சேவல் மயில்களுக்குள்,

“யாருக்கு நீண்ட தோகை?” என்கிற போட்டி நடக்கிறது. மிகவும் இனிமையாக பாடத்தெரிந்த ஆண் குயிலோடு தான் பெண் கூடும், இதனால் குயில் ஆண்களுக்குள் பாட்டு திறமையில் போட்டி நடப்பது உண்டு……….இப்படி உலகில் எல்லா ஜீவராசியிலும் பெண்ணை கவர ஆண் சில பாகங்களையோ, திறமைகளையோ விளம்பரமாய் வெளிபடுத்துவைதை போலவே, மனித ஆண்களும் தங்கள் இனபெருக்க உறுப்பை ஒரு “வீரிய விளம்பரமாய்” வெளிபடுத்த ஆரம்பித்தார்கள்

இதனால் மனித ஆணின உறுப்பின் நீளம் அதிகரிக்க ஆரம்பித்தது. இன்றுள்ள வானர இனங்களிலேயே மனித அணின் உறுப்பு தான் மிகவும் நீளமாக இருப்பதாக கணக்கிடபட்டுள்ளது. இத்தனைக்கும் மனித பெண்ணின் ஜனன குழாய் என்னவோ எல்லோருக்குமே அதே பத்து செண்டிமீட்டர் தான், இதனுள் சென்றடைய அதே பத்து செண்டிமீட்டர் நீளமுள்ள கருவி இருந்தாலே போதும், ஆனால் போட்டி என்று வந்து விட்டால், வளர்ச்சி விகிதம் மாறித்தானே போகும். இதனால் மனித ஆணின உறுப்பு நீளத்தில் பல வேறுபாடுகள் ஏற்பட, இத்தனை வேறுபாடுகள் இருப்பதால் ஆண்களுக்குள் இது குறித்த ஒரு போட்டி மனப்பாண்மை உண்டானது.

ஆடைகளே இல்லாத அந்த காலத்தில், மிக சுலபமாய் தூரத்தில் இருந்தே ஒரு ஆணின் அளவுகளை கணக்கிட்டு, அவனை தரம் பிரித்திருக்க முடியும். பெண்கள் இதை எல்லாம் சட்டை செய்கிறார்களோ, இல்லையோ. ஆனால் ஆண்கள் மத்தியில் யாரும் சொல்லித் தராமலேயே இந்த ஒப்பீடு ஆரம்ப காலம் துவங்கி இன்று வரை நடந்துக்கொண்டே தான் இருக்கிறது. தன் நீளத்தை நினைத்து கவலைபடும் ஆண்கள் இன்றும் நிறைய பேர் இருக்கிறார்கள். இன்றும் பெரும்பாலான ஆண்களின் சுயமதிப்பீடே அவர்களின் இந்த அளவை பொருத்து தான் இருக்கிறது. இதனால் சில ஆண்களுக்கு இது குறித்த தாழ்வு மனப்பாண்மையே ஏற்படுவதும் உண்டு. ”அளவை அதிகரிக்க ஒரு மாயஜால வைத்தியம்” என்று யாராவது போலி டாக்டர் பொய்யாக, ஒரு பிட் நோட்டீஸ் ஆடித்து ஒட்டினாலும் உடனே அதை நம்பி, இதற்காக பணத்தையும் நேரத்தையும் செல்விட தயாராக இருக்கிறார்கள்.

ஆடை இல்லாத அந்த காலத்தில் பெண்களும், அவர்களை விட அதிக மும்முரமாய் ஆண்களும், வெறும் பார்வையை வைத்தே எதிரில் இருக்கும் ஆணை மிக துல்லியமாய் அளவிட முடிந்தது, அதனால் அதில் போலித்தனங்கள் இருந்திருக்க வாய்பில்லை. ஆனால் ஆடை அணியும் கலாச்சார மாற்றம் ஏற்பட்ட உடனே, “யாருக்கு தெரிய போகுது, பேராண்மை மிக்கவனாகத்தான் காட்டிக்கொள்வோமே” என்ற போக்கு தலை தூக்க ஆரம்பித்தது. அவரவர் ஊரில் இவ்வடிவில் ஏதாவது வஸ்து தென்பட்டால் போதும், உடனே ஆண்கள் எல்லாம் அதை தேடிப்பிடித்து, எடுத்து, வந்து மிக சரியாக தங்கள் இடுப்பில் செருகி வைத்துக்கொள்ள ஆரம்பித்தார்கள். ஆரம்பத்தில் குச்சி, காய், கொம்பு, மரவுறி மாதிரியான phallic symbolsசை அணிய ஆரம்பித்த ஆண்கள், வேட்டையில் இன்னும் தேர்ச்சி பெற ஆரம்பித்ததும், பிற மிருகங்களின் பல், தந்தம், தோகை, நகம், உலர்ந்த உடல் பாகம் என்று பலதையும் அணிய ஆரம்பித்தார்கள். இந்த சின்னம் அணியும் போக்கிலும் போட்டிகள் தலைதூக்க, அதிக சமூக அந்தஸ்து இருப்பதாக காட்டிக்கொள்ள முயல்பவன் இருப்பதிலேயே மிக நீளமான இந்த phallic symbolலை அணிய யத்தனித்தான். உலோகம் கண்டுபிடிக்கபிட்ட பிறகோ, கத்தி, வாள், அரிவாள், அதற்கு அப்புறம் வந்த காலத்தில் துப்பாக்கி, ரைஃபில், பிஸ்டல், என்று இந்த சின்னங்களை இடுப்பில் மாட்டிக்கொண்டார்கள் ஆண்கள்.

இந்த சின்னங்களை எல்லாம் கண்டு பெண்கள் உண்மையிலேயே மயங்கி போனார்களா என்பது கேள்விக்குறி தான், ஆனால் மிக வலிமையான சின்னங்களை அணிந்த ஆண்களை கண்டு பிற ஆண்கள் அடங்கிபோனதென்னவோ உண்மை தான். ஆனால் கலாச்சாரம் வளர வளர, இப்படி பகிரங்கமாய் விளம்பரபடுத்துவது அநாகரீகம் என்கிற கருத்து வலுபெற்றது. அதனால் நார்மலான ஆண்கள் இப்படி அப்பட்டமாய் வெளிபடுத்துவதில்லை. ஆனால் மனநலம் குன்றிய நிலையில் பல ஆண்கள் இதில் அப்பட்டமாய் ஈடுபடுவதை பார்க்கலாம். இவர்களை தவிற மற்ற ஆண்கள் எல்லோரும், மிக நாசூக்காக தங்கள் திறமைகளை கொண்டு தங்கள் பேராண்மையை வெளிபடுத்த முயல்வதையும் மனித வரலாறு முழுக்க காணலாம். கற்களை செதுக்கும் ஆற்றலை பெற்றதுமே ஆண், மிக பெரிய ஆணின உறுப்பு வடிவங்களை செதுக்கி வைத்தான்…………இன்றும் இது போன்ற பல புராதன ஒபிலிஸ்க் சிற்பக்கற்களை எகிப்து, ரோமாபுரி, கிரேக்கம் மாதிரியான நாடுகளில் பார்க்கலாம்.

இதன் பிறகு பெருமதங்கள் தோன்ற ஆரம்பிக்க, சமன துறவிகள், நிர்வாண கோலமாய் இருப்பதையே ஒரு மகத்தான் ஆண்மீக முக்திநிலை என கருதினார்கள். அதனால் ஆணின் நிர்வாணம் மீண்டும் அவன் பேராற்றலை பறைசாற்றுவதாக கருதப்படலானது. கிட்ட தட்ட 700 ஆண்டுகளுக்கு பிறகு, உலகின் வேறு மூலைகளில் கிறுத்துவ பெருமதம் பரவ ஆரம்பித்தது. சமணம், நிர்வாணத்தை மேம்பட்ட ஒரு சாதனையாக கருதிய காலம் போய், ஆடை இல்லாத நிலையை “மஹாபாவம்” என்று கருதும் மனநிலைக்கு மனிதர்கள் மாறி இருந்தார்கள். அதனால் கிறுத்துவ தேவாலயங்கள் நிர்வாணத்தை தடை செய்தன. ஆனாலும் மனித ஆணின் ஆரம்பகால குணம் மாறி இருக்கவில்லை………..விவிலியக் கதைகள், தேவாலய வடிவமைப்பு, சிற்பம், ஓவியம் ஆகியவற்றில் ஆணின சின்னங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் வெளிபட ஆரம்பித்தன.

அதற்குள் இந்தியாவிலும் சமய மாற்றம் ஏற்பட்டிருந்தது, சமணம் தோற்று, சைவம் ஓங்க ஆரம்பித்தது. சமணத்தில் முழு ஆணின் நிர்வாணம் வணக்கத்திற்குரியதாய் போற்ற பட்டிருந்தது. சைவத்திலோ இது இன்னும் நுணுக்கமாகி, ஆண் உடலில் மற்ற பாகங்களை நீக்கிவிட்டு, வெறும் அவனுடைய இனக்குறியை மட்டும் வழிபாட்டிற்கு உரியதாக கருதும் மனநிலை உருவாகியது. லிங்க வழிபாடு பரபலமாக, தன் வீரியத்தையும் ஆற்றலையும் செல்வாக்கையும் காட்டிக்கொள்ள முயன்ற ராஜ ராஜ சோழன் மாதிரியான அரசர்கள், இருப்பதிலேயே மிக பெரிய அளவு ஆணினச் சின்ன லிங்கத்தை ஸ்தாபித்து, தங்கள் பேராண்மையை வெளிபடுத்த முயன்றார்கள். இன்றும் பல நாடுகள் தங்கள் பேரந்தஸ்த்தை காட்டிக்கொள்ள, மிக பெரிய கோபுறம், என்று மெனக்கெட்டு ஆணினக்குறி வடிவில் கட்டுவதை பார்க்கிறோமே. அவ்வளவு ஏன், இன்று, ”வல்லரச நாடாக்கும்” என்று தன் பராக்கிரமத்தை காட்டிக்கொள்ளும் அரசுகள் உருவாக்கும் ராக்கெட், அணுஆயுதம் மாதிரியான வஸ்துக்கள் எல்லாம் மிக வெளிப்படையாகவே ஆணினச்சின்ன வடிவமைப்பில் இருப்பதை காணலாம்.

இப்படி எல்லாம் ஆணினச்சின்னங்களை விஸ்தாரமாய் விளம்பரபடுத்தினால் மற்ற ஆண்கள் பயந்து போட்டியில் இருந்து விலகிக்கொள்வார்கள்; பெண்கள் சுலபமாய் மயங்கி மடியில் விழுவார்கள் என்று ஆண்கள் கணக்கிட, பெண்களோ, இதற்கு ஒரு படி மேலே போய் யோசிக்க ஆரம்பித்தார்கள்

Friday, December 17, 2010

பெண்வழி சமுதாயமும், ஆண்குறி போட்டியும்

பெண்கள் காலத்திற்கேர்ப்ப வரையறைகளை மாற்றி கலவியல் தேர்வு செய்தார்கள், இதை அணுசரித்து கெட்டிக்கார ஆண்களும் தங்கள் தன்மையை மாற்றிக்கொண்டே வந்தார்கள். இப்படி மாறி வந்த ஆண்களின் மரபணுக்கள் பரவின, மாறாத ஆண்களின் சுடவே மறைந்து போனது. இதெல்லாம் கேட்க நன்றாகத்தான் இருக்கிறது, ஆனால் இதற்கெல்லாம் ஆதாரம்? என்கிறீர்களா? அதில் தான் ஸ்வாரஸ்யமே இருக்கிறது………..

குரங்கில் இருந்து மனிதர்கள் தோன்றிய அந்த ஆரம்ப காலத்தில், பெண்கள் வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டிந்தார்கள். பெண்கள் வேட்டைக்கு போனார்களா? அது ஆண்களின் வேலையல்லவா என்று ஆட்சரியப்படாதீர்கள்? எல்லா விலங்குகளிலும் ஆணை விட பெண் தான் அதிக வேட்டுவ தன்மை கொண்டிருக்கும். கொசுவை எடுத்துக்கொள்ளுங்கள், ஆண் அனோஃபிலீஸ் அப்புராணி, கடிக்காது, ஆனால் பெண் துரத்தி துரத்தி நம்மை கடித்து மலேரியாவை பரப்பும். காரணம், பெண்ணுக்கு தான் தன் குட்டிகளை கட்டிக்காக்க வேண்டிய கடமை இருக்கிறது. இதனாலேயே இயற்கை பெண்களுக்கு அதிக மோப்பத்திறன், அதிக பார்வை கூர்மை, அதிக சுவை உணர்வு, அதிக கூரான செவித்திறன், அவ்வளவு ஏன் துரித கதியின் ஸ்பரிசத்தை உணரும் தன்மை ஆகியவற்றை தகவமைத்திருக்கிறது. இந்த புலன் நுணுக்கத்தினாலேயே ஆணை விட பெண் அதிக திறம்பட வேட்டையாடவல்லதாகிறது.

மனிதர்களிலும் இந்த பொது விதி இயங்கியதால், ஆதி கால மானுட பெண்களும் வேட்டையில் சிறந்து விளங்கினார்கள். மக்கள் எல்லோருமே நாடோடிகளாய் இறை தேடி அலைந்தார்கள். இப்படி அலைந்த மானுட கூட்டங்களை பெண் தலைவிகளே வழி நடத்தி சென்றார்கள். ஆக பெண்கள் ஆண்களை எதற்குமே நம்பி வாழாத காலமது.

இப்படி ஒரு காலம் இருந்ததா? இதற்கு என்ன ஆதாரம்? என்கிறீர்களா?

ஆதாரம் ஒன்று: காங்கோ நதிக்கரையோரமாய் இன்றும் வாழ்ந்து வருகிறது பொனோபோ என்கிற வானர இனம். இந்த பொனோபோக்கள் அச்சு அசல் அப்படியே மனிதர்களை போலவே நடந்துக்கொள்பவை. இவை தமக்குள் பேசிக்கொள்கின்றன. பயிற்றுவித்தால் செய்கை மொழியில் மனிதர்களுடனும் சம்பாஷிக்கின்றன. இவற்றுக்கு சிரிப்பு, அழுகை, வேடிக்கை, விளையாட்டு எல்லாமே உண்டு. இவை எல்லாவற்றையும் விட விசேஷம்: இவை கலவி கொள்ளும் விதம் அப்படியே மனிதர்களை போலவே இருக்கிறது.

மனிதர்களை போலவே என்றால் என்ன அர்த்தமாம்? மிருக கலவிக்கு மனித கலவிக்கும் பல முக்கியமான வித்தியாசங்கள் உண்டு. எல்லா மிருகங்களும் முகமே பாராமல், முன்னுக்கு பின் தான் கூடி புணரும். அதுவும் இனபெருக்க காலத்தில் மட்டும். எந்த வித சுகமுமே உணராமல், வெறுமனே குட்டி போட மட்டும் நடக்கும் ஒரு உப்பு சப்பில்லாத சம்பிரதாயமாய். ஆனால் முகம் பார்த்து, இன்னாருடன் புணருகிறோம் என்று அறிந்து, பருவகாலம் மட்டுமல்லாமல், தனக்கு பிடிக்கும் போதெல்லாம் ஆசைக்காக புணரும் தன்மை, இந்த உலகில் இரண்டே ஜீவராசிகளுக்கு தான் உண்டு. ஒன்று மானுடம், இன்னொன்று பொனோப்போ. நடத்தையிலும், மரபுகளிலும், இத்தனை ஒற்றுமை இருக்கிறதென்றால், மரபணுக்களில்? என்று பரிசோதனை செய்து பார்த்தால், ஆட்சர்யம் ஆனால் உண்மை…..பொனோப்போக்களின் மரபணு புரதங்கள் கிட்ட தட்ட 98% மனிதர்களை போலவே இருப்பதை கணக்கிட்டார்கள் விஞ்ஞானிகள். மரபணு நெருக்கத்தில் பார்த்தால் மனிதர்களும் பொனோப்போக்களும் சகோதர இனங்கள். இவற்றுக்குள் இனகலப்பு செய்தால், குழந்தைகள் பிறக்க கூட வாய்ப்பிருக்கிறதென்றால் பாருங்களேன்.

ஆனால் இதை எல்லாம் விட மிக பெரிய ஆட்சர்யம் என்ன தெரியுமா? இந்த பொனோப்போக்கள் இன்றும் தாய் வழி சமூக அமைப்பில் தான் வாழ்கின்றன. இவை மட்டும் அல்ல, நமக்கு அடுத்து நெருங்கிய சகோதர இனமான சிம்பான்ஸீகளும் தாய்வழி சமூக அமைப்பில் தான் வாழ்கின்றன. அப்படியானால் மனிதர்களும் ஆரம்ப காலத்தில் தாய் வழி சமூக முறையை கடைபிடித்திருப்பார்கள் என்று தானே அர்த்தம்.

ஆதாரம் இரண்டு: இன்றும் மனிதர்களுக்கு அம்மா செண்டிமெண்ட் தான் பலமாக இருக்கிறது. அப்பா செண்டிமெண்ட் அத்தனை பலமானதாய் இருப்பதில்லை.

ஆ 3: தொல்காப்பியம் மாதிரியான பண்டைய இலக்கண நூல்களும் மனிதர்கள் ஆரம்ப காலத்தில் தாய் வழி சமூகமாய் தான் வாழ்ந்தார்கள் என்கிறது.

ஆ 4: தொண்மையான எல்லா கலாச்சாரங்களிலும் ஆரம்பகாலத்தில் தாய் தெய்வங்களே இருந்துள்ளன…..இவற்றுக்கு நிகரான தந்தை தெய்வங்கள் இருந்ததில்லை…..உதாரணத்திற்கு தமிழர்களின் ஆரம்ப கால தெய்வமான கொற்றவை. இவள் வன தெய்வமாகவும், வேட்டுவ தெய்வமாகவும் வழங்கப்பட்டாள். சிலப்பதிகார காலம் வரை இவள் தான் பிரதான கடவுளாக இருந்திருக்கிறாள். அதன் பிறகு இவள் வனகாலியாக மாறி, வேலனுக்கு தாயாகி, அப்புறம் சிவனின் மனைவியாகி போனதெல்லாம் காலப்போக்கில் ஏற்பட்ட பரிணாமம்.

அதெல்லாம் சரி, நம்ம சங்கதிக்கு வருவோம். கொற்றவை காலத்து பெண் ஒருத்தியை உதாரணமாய் எடுத்துக்கொள்வோம். இவள் வேட்டைக்கு தானே போய்க்கொள்வாள். பெண் வழி சமூகமாய் வாழ்ந்ததால் இவள் பாதுகாப்பிற்கு எந்த பிரச்சனையும் இல்லை. இவளுக்கு சொத்துக்கள் எதுவும் கிடையாது. ஆக எதற்க்காகவும் ஓர் ஆணை அண்டிப்பிழைக்க வேண்டிய நிர்பந்தத்தில் இவள் இல்லை. இப்படி வாழும் இந்த பெண் எதற்க்காக ஒரு ஆணை நாடுவாள்?

சிம்பிள்…..அந்த ஆணினால் அவளுக்கு ஏற்படும் கலவியல் கிளர்ச்சிக்காக மட்டுமே. அந்த காலத்தில் தனி சொத்து என்கிற சமாசாரமே இல்லை, அதனால் கற்பு என்கிற நம்பிக்கையே ஏற்பட்டிருக்கவில்லை. அதனால் பெண்கள் தமக்கு பிடித்த ஆண்கள் பலரோடு கூடி மகிழ்ந்துக்கொண்டிருந்தார்கள். இப்படி ஒரு பெண் பல புருஷர்களோடு கூடிக்கொள்ளும் இந்த முறையை தான் பாலிஆண்டரி, polyandry என்போம்.

இப்படி பாலிஆண்டிரி புரியும் போது, பல ஆண்களோடு கூடி, தனக்கு அதிக சுகத்தை தருகிறவன் யார் என்பதை கண்டுகொள்ள வாய்ப்பு பெண்களுக்கு இருந்ததால், அவளை மகிழ்விக்க தெரிந்தவனையே அவள் மீண்டும் மீண்டும் நாடி கூடினாள். இதனால் பெண்களை மகிழ்விக்க தெரிந்தவனின் மரபணுக்கள் மட்டுமே பரவின. மகிழ்விக்க தெரியாதவர்கள் மரபணு ஆட்டத்திலிருந்த நீக்க பட்டன. ஆனால் ஒரு கூட்டத்தில் பல ஆண்களுக்கு பெண்ணை மகிழ்விக்க தெரிந்திருந்தால், இவர்களுக்குள் போட்டி ஏற்படுவது இயல்பு தானே. அதனால் ஒருவரை அடுத்தவர் மிஞ்சிட ஆண்கள் முயல், இதனால் காலப்போக்கில் மனித ஆண்களின் உடலில் பல மாற்றங்கள் ஏற்பட்டன.

அவற்றை பற்றி எல்லாம் அடுத்த உயிர் மொழியில்

Friday, December 10, 2010

கலவியல் தேர்வு

Sexual selection, கலவியல் தேர்வு என்கிற முறையில் தான் ஆண்களை எல்லாம் சலித்து, புடைத்து, தரம் பிரித்து, சிறந்த மரபணுக்களை மட்டுமே தேர்ந்தெடுத்து, அடுத்த தலைமுறைக்கு பாக் அப் செய்கிறார்கள் பெண்கள்.


இதை பெண்கள் தான் செய்ய வேண்டுமா, ஏன் ஆண்கள் செய்தால் ஆகாதா? என்றால், சபாஷ் சரியான கேள்வி தான். இதற்கு உண்டான பதிலுமே ரொம்ப விவகாரமானது தான்.

• ஆண் பெண் இருவருமே கலவியல் பங்கேற்பில் ஈடுபட்டாலும், இதில் பெண்ணின் பங்கு தான் அதிகம். கலவியல் செல்கள், என்பவை இரண்டு பாலினருக்குமே பொது, இரண்டிலுமே 23 குரோமோசோம்கள் தான் இருக்கின்றன, என்றாலும், இவற்றின் எண்ணிக்கையிலும், வடிவமைப்பிலும் எக்கசெக்க வித்தியாசங்கள் உள்ளன.

ஒரு ஆண் ஒரு நாளைக்கு கிட்ட தட்ட எண்பது முதல் நூறூ மில்லியன் வரை விந்தணுக்களை உற்பத்தி செய்கிறான். அவன் வயதிற்கு வந்த அந்த கணம் முதல் அவன் வாழ்நாள் முழுவதுமே இப்படி மில்லியன் கணக்கில் விந்தணுக்களை உற்பத்தி செய்யவல்லவன் ஆண்.

ஆனால் பெண், ஒரு மாதத்திற்கு ஒரே ஒரு கருமுட்டையை தான் உற்பத்தி செய்கிறாள். அதுவும் வயதிற்கு வந்த பிறகு ஆரம்பித்து, மெனோபாஸ் ஆகும் வரை. கூட்டி கழித்து பார்த்தால் கிட்ட தட்ட 30 – 35 ஆண்டுகளுக்கு மட்டும். வருடத்திற்கு 12 கருமுட்டைகள், என்றால் தன் வாழ்நாள் முழுவதுமே சேர்த்து ஒரு பெண் உற்பத்தி செய்வது, மொத்தமே நானூற்று சொச்ச கருமுட்டைகள் தான்!

கருமுட்டையின் சைஸ்சையும் விந்தணுவின் சைஸையும் ஒப்பிட்டு பார்த்தால், விந்தணு ஒரு சின்ன புள்ளி மாதிரியும் கருமுட்டை அதை விட ஆயிரம் மடங்கு பெரிதாய், ஒரு உலக உருண்டை மாதிரியும் இருப்பதை நாம் காணலாம். காரணம், வந்தணுவில் வெறும் 23 குரோமோசோம்களும், அவற்றை நீந்த வைக்க ஒரு வாலும், அந்த வாலுக்கு நீந்து சக்தியை தர ஒரு குட்டி எஞ்சினும் தான் உள்ளன. கருமுட்டையிலும் அதே 23 குரோமோசோம்கள் என்றாலும், அந்த குரோமோசோம்களை சுற்றி, நிறைய கொழுப்பும், புரதமும் சக்தி கொடுக்க திரண்டு இருக்கும். காரணம் கருமுட்டை என்பது ஒரு சக்தி பிளம்பு. கருவுக்கு போஷாக்களிக்க வேண்டிய அளவு எரிபொருளும், ஆற்றலும், அதில் நிறைந்திருக்கிறது.

Gene economics, மரபணு பொருளாதாரத்தின் அடிப்படையில் பார்த்தால், ஆணின் விந்தணுவை தயாரிக்க அதிக செலவு ஆவதில்லை, அதனால் ஒரே நாளில் பல மில்லியன்களை உற்பத்திசெய்து தள்ள முடியும். ஆனால் பெண்ணின் கருமுட்டையோ, ரொம்பவே costlyயான ஒரு படைப்பு, அதனால் தான் அது மாதத்திற்கு ஒன்று என்று தயாராகிறது. அதனால் எரிபொருளை இருப்பை வைத்து மதிப்பிட்டால், விந்தணு மலிவானதகவும், கருமுட்டை விலை உயர்வானதாகவும் ஆகிவிடுகிறது.

• ஆணின் விந்தணுக்களுக்கு செய்கூலி மிக குறைவு. அதனால் அது விரையம் ஆனாலும் பெரிய நஷ்டம் ஏற்பட்டுவிட போவதில்லை. அதனால் தான் ஆண் மிருகங்கள், பெண்ணின் சாயலில் இருக்கும் பிற வஸ்துக்களை கண்டாலும், உடனே விந்தணுக்களை வெளியேற்றி விடுகின்றன. அதனால் அம்மிருகத்திற்கு எந்த பெரிய இழப்பும் இல்லை. ஆனால் பெண் தயாரிப்பதே மாதத்திற்கு ஒரே ஒரு கருமுட்டை என்பதினால், அதை விரையம் செய்யும் பேச்சுக்கே இடமில்லை. அதனால் பெண் தன் காஸ்ட்லியான முதலீட்டை மிகுந்த எச்சரிக்கையுடனே அணுகுகிறது

• தன் மரபணுக்களை பரப்பிக்கொள்ள ஆண் அதிகம் மெனக்கெட வேண்டி இருப்பதில்லை. ஒரு தகுந்த பெண்ணை தேடி பிடித்து, அவளை இசைய வைத்து, உடல் பாகங்களை பொருத்தி, விந்தணுக்களை முதலீடு செய்துவிட்டால் போதும் - சில நிமிட அசைவுகள், சில துளி விந்தணுக்கள் - இந்த சொர்ப்ப முதலீட்டிலேயே அவன் மரபணுக்கள் எளிதாக பரவிவிடும். அதன் பிறகு அந்த பெண் இருக்கும் திசை பக்கமே இவன் வரவில்லை என்றாலும், இவன் மரபணுக்கள் மிக ஷேமமாய் பரவித்தான் இருக்கும்.

ஆனால் பெண் தன் மரபணுக்களை பரப்பிக்கொள்வது இத்தனை சுலபமல்ல. இவள் மாதம் முழுக்க முயன்று, எத்தனையோ கிலோ ஜூல் எரிபொருளை கொட்டி குவித்து, ஒரே ஒரு கருமுட்டையை உருவாக்குகிறாள். அந்த கருமுட்டையை விந்தணுக்களோடு கலந்து கருவை தன் உடம்பிலேயே உருவாக்குகிறாள். இந்த கருவை மாதக்கணக்கில் தன் உடலில் தக்க வைத்து, போஷாக்களித்து, பிரசவத்தின் பெரும் துயர்களை எல்லாம் அனுபவித்து, குட்டியை ஈன்றும் புறம் தந்து அதற்கு பாலூட்டி, பத்திரப்படுத்தி, வாழ்வியல் வித்தைகள் சொல்லி தந்து……….ஆக பெண் தன் ஒட்டு மொத்த உடலையும் வாழ்வையும் பணயம் வைத்தாலே ஒழிய, அவளுடைய மரபணுக்கள் செம்மையாக பரவாது.

ஆக இனபெருக்க ஆட்டத்தில் ஆணின் முதலீடு மிக சொர்ப்பமே. ஆனால் பெண் செய்யும் முதலீடு மிக மிக அதிகம். இவ்வளவு அதிகமான முதலீட்டை எல்லாம் சும்மா ஏதோ ஒரு சோப்லாங்கியின் மரபணுக்களை பரப்பித்தர செலவழித்தால் அதை விட முட்டாள் தனம் வேறு என்ன இருக்க முடியும்? இதே சிரமங்களை ஏதோ ஒரு சூப்பர் மேனின் மரபணுக்களை பெற்று தர மேற்கொண்டால் அதில் இருக்கும் அர்த்தமே அலாதி தானே!

அதனால் தான் ஆண்களை எடைபோட்டு, இவன் தேருவானா, மாட்டானா? இவன் மரபணுக்கள் தேருமா? தேராதா? என்று மிக துல்லியமாக கணக்கிடும் ஆற்றலை இயற்க்கை பெண்களுக்கு பிறவியிலேயே படைத்திருக்கிறது. எல்லா ஜீவராசியிலும் பெண்பால் மிக மிக கறாராகத்தான் துணையை தேர்வு செய்கிறது.

மனிதர்களிலும் பெண்கள் எப்போதுமே மிக கணக்காய் தான் துணை தேர்வு, mate selectionனில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் வாழும் காலம், பருவம், சூழல் எல்லாவற்றையும் சரி பார்த்து, எந்த மரப்பணுக்கள் இருந்தால் தன் குட்டி சுலபமாக பிழைக்க முடியும் என்பதை உணர்ந்து, அம்மரபணுக்களை சுமக்கும் ஆண்களாக தேர்வு செய்து புணர்கிறார்கள்.

இந்த செக்‌ஷுவல் செலக்‌ஷனை பெண்கள் செய்யும் விதமே ரொம்பவே ஸ்வாரசியமானது. மனித வரலாற்றின் வெவ்வேறு காலநிலைகளில் வெவ்வேறு தேர்வு வரையறைகளை வைத்து ஆண்களை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் பெண்கள். இப்படி மாறிக்கொண்டே வரும் அவள் ரசனையை புரிந்துக்கொண்ட புத்திசாலிமனித ஆணும் காலத்திற்கு ஏற்ப தன்னை தானே மாற்றிக்கொண்டே வந்திருக்கிறான். அதனால் தான் மானுடம் மற்ற எல்லா ஜீவராசிகளையும் முந்தி வந்திருக்கிறது. மாறாமல் பின் தங்கி போன மக்கு ஆண்களையும் அவர்களது மரபணுக்களையும் பெண்கள் வடிகட்டிக்கொண்டே வந்திருக்கிறார்கள். இப்படி ஆணும் பெண்ணுமாய் மனிதர்கள் ஆடிய இந்த மரபணு ஆட்டங்களை பற்றி எல்லாம் அடுத்த இதழில்………

Monday, December 6, 2010

ஆல்ஃபா ஆண்கள்

தொல்காப்பியர் ஏன் அப்படி எழுதினார்? அடிமையாக இருப்பவன் பாட்டுக்கு தலைவனாக அதாவது ஹூரோவாக இருக்க முடியாது என்று ஒரு விதியை அவர் முன் வைக்க காரணம் என்ன? சிம்பிள்….சுய சிந்தனாசக்தியும், சுதந்திரமும் இல்லாதவன், ஏவல் செய்ய மட்டுமே லாயக்கியாவன். இப்படி பட்டவனை ஆண்களும் மதிக்க மாட்டார்கள், பெண்களும் காதலானாகவோ, கணவனாகவோ ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.


ஏன் பெண்கள் அவர்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்களாம் என்கிறீர்களா? உலகில் உள்ள எல்லா பெண்பாலின உயிரினங்களுக்கும் ஒரு பொது சுபாவம் உண்டு – அவை எல்லாமே தலைமை குணங்களை கொண்ட உயர் அந்தஸ்து ஆல்ஃபா ஆண்களை தான் இனபெருக்கத்திற்க்காக தேர்வு செய்கின்றன. தன் வாழ்வை சுயமாய் நிர்ணயிக்க முடியாத அடிமை நிலையில் இருக்கும் ஒமேகா ஆண்களை பெண்கள் ஒரு பொருட்டாக கருதுவதே இல்லை.

இந்த பெண்களுக்கு ஏன் இந்த ஓரவஞ்சனை? ஆல்ஃபாவாக இருந்தால் என்ன, ஒமேகாவாக இருந்தால் என்ன, எல்லோரும் ஒரே இனம் தானே, எல்லோருக்கும் சம உரிமை தரலாமே? என்று நீங்கள் ஆட்சேபித்தால், இதில் ஒரு பெரிய மரபணுவியல் சூட்சமம் இருக்கிறதே!

சமூககூட்டங்களால் வாழும், யானை, குரங்கு, ஓனாய், மானுடம், மாதிரியான விலங்குகளில் என்ன தான் நாம் எல்லோரும் ஒரே இனம், எல்லோரும் ஒரே தரம் என்று சமத்துவம் எல்லாம் பேசினாலும், இவற்றுக்குள் ஒரு சமூக அடுக்கு நிலை, social hierarchy இருக்க தான் செய்கிறது. அதிக பவர் இருக்கும், பேரஸ்ந்தஸ்து பெருந்தகை ஆல்ஃபா என்கிற தலைமை பதவியை வகிக்கும். அதற்கு அடுத்த அந்தஸ்தில் இருக்கும் பீட்டா, காமா, டெல்டா வகையராக்கள், உபதலைவர், மந்திரி, செயலாளர், மாதிரியான நிலைகளை நிரப்பும். இந்த எல்லா நிலைகளுக்கும் கீழே மிக குறைவான சமூக அந்தஸ்தில் இருக்கும் ஒமேகா ஏவலுக்கு கட்டுப்பட்டு இருக்கும்.

எப்படி புரட்டி போட்டாலும், கம்யூனிஸம், சோஷியலிசம் பேசினாலும், எல்லா மனிதர்ளும் சம நிலை வகித்தாலும், இந்த பவர் அணிவரிசை பின்புலத்தில் இயங்கிக்கொண்டே தான் இருக்கும். இப்படி இயங்கும் இந்த தரவரிசையில், ஒரு பெண், எந்த ஆணை தேர்ந்தெடுத்தால் அவள் குழந்தைகளுக்கு நல்லது? ஆல்ஃபா ஆணை தேர்ந்தெடுத்தால் தானே அவனுடைய உச்ச கட்ட அந்தஸ்து, அவனுக்கு கிடைக்ககூடிய ஏராளமான வளங்கள் ஆகியவற்றை கொண்டு அவள் பிள்ளைகளை ஷேமமாக வளர்த்து ஆளாக்க முடியும். அப்படியும் ஒரு வேலை இந்த ஆல்ஃபா ஆண் எப்போதாவது தோற்று போனாலும், முன்பு அவன் ஒரு ஆல்ஃபாவாக இருந்ததை வைத்து, காலத்தை ஓட்டலாம். எதுவுமே இல்லாவிட்டாலும், அவனுடைய மரபணுக்கள் ஆல்ஃபா தனம் ததும்புபவை என்பதால், அவனுக்கு பிறந்த குழந்தைகள் பிற்காலத்தில் தாமும் ஆல்ஃபா ஆகிவிடலாமே.

ஆனால் ஒமேகா? அவனுடைய மரபணுக்களை உள்வாங்கிக்கொள்வதால் அவள் குழந்தைகளுக்கு பெரிய ஆதயமே இல்லையே….இதனால் தான் சமூக அடுக்கு அமைப்பில் வாழும் எல்லா உயிரின பெண்களுமே ஆல்ஃபா என்றால் உடனே இசைந்துவிடுகின்றன. ஒமேகா என்றால் ஒரங்கட்டி விடுகின்றன.

தன் எதிரில் இருக்கும் ஆண் ஒரு ஆல்ஃபாவா இல்லையா என்று கண்டுபிடிக்கும் திறமை பெண்களுக்கு இயல்பிலேயே அமைந்திருக்கிறது. பிரச்சனை வரும் போது பயப்படாமல், அசகாயசூரனாய் எதிர்த்து போராடி ஜெயிக்கிறானா? தன்னை விட வறியவர் என்றால் உடனே தன் பலத்தை கொண்டு ரட்ஷிக்க முன்வருகிறானா? யார் என்ன சொன்னாலும், உடனே கேட்டுக்கொண்டு ஏவல் செய்யாமல் தானே சுயமாய் யோசித்து கெட்டிக்காரதனமாய் செயல் படுகிறானா? அவனுக்கு மேல் தலைவர்கள் யாருமே இல்லை, அவன் தான் எல்லோருக்கும் மேல், என்பதை நிருபவிக்கிறானா? அவ்வளவு தான், பெண்கள் உடனே அவன் பக்கம் சாய்ந்துவிடுவார்கள். அது புத்தர் ஆகட்டும், ஏசு ஆகட்டும், காந்தியாகட்டும், பெரியாராகட்டும். ஏன், ஆல்ஃபா மாதிரி நடிக்க தெரிந்த எம் ஜி ஆர் ஆகட்டும், ரஜினிகாந்த் ஆகட்டும். உடனே பெண்கள் எல்லாம் கொத்து கொத்தாய் இவர்களை கண்டு மயங்கி போய்விடுகிறர்கள்.

இதுவே, சாஸ்திர சம்பிரதாயப்படி திருமணம் செய்துக்கொண்ட அவளுடைய சொந்த கணவன், ஆல்ஃபாவாக இல்லை, அட ஏதோ ஒரு பீட்டா, காமா, டெல்டாவாக இருந்தால் கூட அவள் பொருத்துக்கொள்வாள், ஆனால் அவனே ஒரு ஒமேகாவாக இருப்பதை அவள் கண்டுபிடித்துவிட்டாள் என்று வையுங்கள்……அவ்வளவு தான், பெரும்பாளான சந்தர்ப்பங்களில் பெண்கள் இந்த ஆண்களை புறக்கணித்துவிட்டு, வேறு ஆண்களை வேட்டையாடிக்கொள்ள கிளம்பிவிடுகிறார்கள். என்ன தான் தாலி செண்டிமெண்ட், கற்பு செண்டிமெண்ட், தமிழ் கலாச்சாரம் என்று நாம் மேம்போக்காய் பல தடுப்புக்களை முன்நிறூத்தினாலும், இயற்க்கையின் உந்துதல்களை இவற்றால் தடுக்கவே முடிவதில்லை.

அந்த காலத்திலாவது பெண்களின் இந்த வேட்டுவ இயல்பை மதம், சாஸ்திரம், சம்பிரதாயம், சமூக மரபு, குல வழக்கம், கிராமத்து கட்டுபாடு என்று பல விதங்களில் கட்டுபடுத்த முடிந்தது. இத்தனை கட்டுபாடுகளை மீறியும் பல பெண்கள் அப்போதும் படி தாண்டிக்கொண்டே தான் இருந்தார்கள். ஆனால் இன்று உலகமே ஒரு சின்ன உருண்டையாகிக்கொண்டிருக்கும் இந்த globalization யுகத்தில், சுயகட்டுபாடு ஒன்றை தவிற பெண்களை கட்டுபடுத்த வேறு எந்த சக்தியுமே இல்லாத இந்த காலத்தில், ஒரு ஆண் தன் மானத்தையும் மரபணுக்களையும் காப்பாற்றிக்கொள்ள வேண்டுமானால் அவன் ஆல்ஃபா தனங்களை காட்டிக்கொள்கிறானோ இல்லையோ, கட்டாயமாக ஒமேகா அறிகுறிகளை தவிர்த்தே ஆகவேண்டிய சூழலில் இருக்கிறான்.

எல்லா மனிதர்களுக்குமே உடம்பு ஒன்று தான். அதனால் அதில் ஆல்ஃபா – ஒமேகா வித்தியாசங்கள் அதிகம் இருப்பதில்லை. ஆனால் இந்த மனம் இருக்கிறதே, இது தான் எல்லோருக்கும் வெவ்வேறு விதமாகத்தான் வேலை செய்கிறது. இந்த மனசும் பிறக்கும் போது எல்லோருக்கும் ஒரே விதமாகத்தானே இருந்தது, பிறகெப்படி வெவ்வேறாக மாறியது என்கிறீர்களா? இப்படி மாறும் தன்மை கொண்டிருப்பது தானே இந்த மனதின் பலமும் பலவீனமும்! பிறக்கும் போது எல்லோருக்குமே எந்த எல்லைகளுமே இல்லாத விசாலமான மனசு தான் என்றாலும், வளர வளர, நம் குடும்பங்களும், சமுதாயமும், பல விதமான நம்பிக்கைகளை வைத்து நம் மனதை கட்டிப்போட்டுவிடுவதுண்டு. அம்மா செண்டிமெண்ட், அப்பா செண்டிமெண்ட், சகோதர செண்டிமெண்ட், என்று குடும்பம் நம் மனதை குறுக செய்வது போலவே, எஜமானர் விஸ்வாசம், அலுவலக பற்று, என்று நம் வேலை நம்மை அடிமை படுத்துவது போலவே, மதபற்று, ஜாதி பற்று, மொழி பற்று, தேச பற்று, என்று பல மாயைகளால் சமூதாயம் நம் மனதை முடக்கிவிடுகிறது. இந்த எல்லா மாயைகளும் முக்கியம் என்று நம்பிக்கொண்டு, இவற்றுக்காக நாமும் மெனக்கெட ஆரம்பித்துவிடுகிறோம். நம் நம்பிக்கையே நம் மனதை அடிமை படுத்திவிடுவதால், நம்மையும் அறியாமல் ஒமேகா மனநிலைக்கு தள்ள படுகிறோம். கண்மூடித்தனமான விஸ்வாசத்தில் வாழ்வை தொலைக்கிறோம்.

ஆனால் இயற்கை மட்டும் மிக தெளிவாக இயங்கிக்கொண்டே இருக்கிறது. யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் நம்பிவிட்டு போங்கள், ஆனால் கடைசியில் எப்போதும், only the fittest shall survive. எப்படியும் இருக்கும் எல்லோரது மரபணுக்களும் பரவிவிட்டால் இந்த பூமி தாங்காதே, சிலரது மரபணுக்களை வடிகட்டி ஒதுக்கிதள்ளியே ஆக வேண்டும். வேட்டையின் போது வறிய உயிர்களை வடிகட்டும் வேலையை ஆணும் செய்யலாம். ஆனால் கலவி வழியாக வடிகட்டும் வேலையை பெண்ணால் மட்டும் தானே செய்ய முடியும். அதனால் தான் இந்த sexual selection, கலவியல் தேர்வில், பெண்கள் பாகுபாடோடு நடந்துக்கொள்கிறார்கள். அம்மாவுக்காக, அக்காவுக்காக, அலுவலகத்திற்க்காக, தாய்நாட்டிற்க்காக, தாய் மொழிக்காக, யாரோ ஒரு தலைவனுக்காக, எதோ ஒரு போதைக்காக, என்று அடிமையாகி போகும் ஆண்களை எல்லாம் ஓரம்கட்டிவிட்டு, தனக்காகவும் தன் மக்களுக்காகவும் தன்னை அற்பணிக்கும் ஆல்ஃபா ஆண்களை மட்டுமே தேர்வு செய்து அவன் மரபணுக்களை பரப்பித்தருகிறார்கள் பெண்கள். இது தான் இயற்கையின் அமைப்பு என்றால் ஒரு புத்திசாலி ஆண் என்ன செய்ய வேண்டும்?

Saturday, December 4, 2010

அதிகார அம்மாக்களும் அடிமை ஆண்களும்

மகனுக்கு திருமணமே செய்யாமல் நாற்பது வயது தாண்டிய பிறகும் அவனை அப்படியே ஊருகாய் போட்டுவைத்த அம்மா. திருமணம் செய்து வைத்துவிட்டு, முதலிரவின் போது “நெஞ்சு வலிக்கிதே” என்று மயங்கி விழுந்த அம்மாக்கள். முதலிரவு தாண்டி, தேன் நிலவுக்கு மகனை தனியாக அனுப்ப முடியாது என்று தானும் உடன் போன தாய்கள். தப்பித்தவறி மகன் தனியாக மனைவியுடம் தேன் நிலவுக்கு போனாலும் நிமிடத்திற்கு ஒரு முறை ஃபோன் செய்து அவனை பற்றிக்கொண்டே இருந்த தாய்மார்கள்……


இவற்றையும் தாண்டி, மகனுக்கும் மருமகளுக்கும் கலவுறவு ஏற்பட்டுவிட்டால் மகன் எங்கே சொக்கிப்போய் அதற்கு மேல் அம்மாவை கண்டுக்கொள்ள மாட்டானோ என்று மகனை இரவு வேளைகளில், ஏதாவது காரணம் சொல்லி தன் பக்கத்திலே வைத்துக்கொண்டு தாமதமாக தனி அறைக்கு அனுப்பும் தாய்மார்கள், மகனின் படுக்கை அறை வாசலிலேயே படுத்துக்கிடக்கும் தாய்மார்கள். மகன் மனைவியோடு தனியாக இருக்கிறானே, என்கிற இங்கீதம் கூட இல்லாமல் கதவை கூட தட்டாமல் நேரே உள்ளே வந்து நிற்கும் தாய்மார்கள். மனைவி உடனிருந்தால் தானே இந்த வம்பெல்லாம் என்று ஏதாவது காரணம் சொல்லி புது மணப்பெண்ணை பிறந்த வீட்டிற்கே பேக் அப் செய்யும் தாய்கள்.

குழந்தை குட்டி என்று ஆகிவிட்டால் என்னை மொத்தமாக மறந்துவிடுவானோ என்று மிக சரியாக மருமகளின் மாதவிடாய் தேதிகளை கணக்கிட்டு முக்கியமான அந்த நாட்களில் மட்டும் ஏதாவது முட்டுக்கட்டை போட்டு வைக்கும் தாய்மார்கள். குழந்தை பிறந்துவிட்டாலும் தன் மகள் வழி பேரன் பேத்திகளுக்கு அதிக முக்கியத்துவம் தந்து, மகன் வழி பேரன் பேத்திகளை வித்தியாச படுத்தி நடத்தும் தாய்கள். தன் வாழ்நாள் முழுக்க, மருமகளை மட்டம் தட்டுவதை மட்டுமே தன் முழு நேர பொழுது போக்காய் கொண்ட மாமியார்கள்……….என்று பலவகை தாய்குலங்களை நாம் அன்றாடம் பார்க்கிறோம். கிட்ட தட்ட எல்லா வீடுகளில் இது மாதிரி ஏதாவது ஒரு சோகக்கதை இருக்க தான் செய்கிறது.

சரி, அம்மாவுக்கு தான் இன்செக்யூரிட்டி. இந்திய பாரம்பரியம் பெண்களுக்கு எந்த பவரையுமே தராததால் மகனை தன் வசப்படுத்தி, அவன் மூலமாய் தன் காரியங்களை சாதித்துக்கொள்கிறாள்…..ஆனால் பையனுக்கு பகுதறிவு வேண்டாமோ? எங்கெல்லாம் அம்மாக்கள் பையனை வைத்து பரமபதம் ஆடுகிறார்களோ, அங்கெல்லாம் தோற்றூ போகிறவர்கள் சாட்சாத் அந்த பையன்களே தான்.

உதாரணத்திற்கு ஒமரை எடுத்துக்கொள்வோம். ரொம்பவும் ஆசைபட்டு தன் உறவுக்கார பெண்ணை திருமணம் செய்துக்கொண்டான் ஒமர். அவன் மனைவி பேரழகி, பணக்கார வீட்டு பெண், இவன் மேல் பைத்தியமாக கிடந்தவள். இவனுக்கும் அவளை ரொம்பவே பிடிக்கும். இருவரும் ரொம்பவே மகிழ்ச்சியாக வாழ்ந்திருக்கலாம். ஆனால் ஒமர் வேலைக்கு போன பிறகு அவன் அம்மா தினமும் அவனுக்கு ஃபோன் செய்து, “உன் பொண்டாட்டி என்னை மதிக்கிறதே இல்லை. மதியானமே சப்பாத்தி சுட்டு ஹாட் பேக்கில வைக்காதே, அவன் ராத்திரி வந்த பிறகு சுடா சுட்டுக்கலாம்னு சொன்னா, என் பேச்சை கேட்காம நான் மதியானம் கொஞ்ச கண் அசந்த நேரத்துல எல்லா சப்பாத்தியும் சுட்டு வெச்சிட்டா, இது தான் நீ கட்டுன பொண்டாட்டி என்னை மதிக்கிற லட்சணம்…..” என்று அழுது வைக்க, ஒமருக்கு உடனே கோபம் பொசுக்கென்று தலைக்கேறும்.

கணவன் வீட்டிற்கு வரும் போது சப்பாத்தி சுட்டுக்கொண்டு நேரத்தை வீண்டிக்க வேண்டாமே, எல்லா வேலைகளையும் முதலிலேயே முடித்துக்கொண்டால் அவனுடன் அதிக நேரம் செலவிடலாமே என்பது நர்கீஸீன் திட்டம். அவள் மாலை அழகாக ஒப்பனை செய்துக்கொண்டு, அவனுக்காக ஆசையாய் காத்துக்கொண்டிருக்க, வந்ததும் வராததுமாய் அவளை உதாசீனப்படுத்தினான் ஒமர். என்ன காரணம் என்று சொல்லாமல் அவன் நெற்றிக்கண்ணை திறந்து, “அப்படி என்ன சோம்பேறித்தனம்……என்ன வளர்த்து வெச்சிருக்காங்க உன் வீட்டுல..” என்று சரமாறியாக அர்ச்சனை செய்ய, இதனால் ஏற்பட்ட மனகசப்பினால் அன்றிரவு இருவரும் கட்டிலின் கோடிகளில் படித்துக்கொண்டு இருக்க, இப்படியாக சப்பாத்தி மாதிரி சின்ன விஷயங்கள் அவர்கள் திருமண வாழ்க்கையை சலிப்பிற்குள்ளாக்கின.

இதற்கிடையில் ஒமருக்கு ஒரு குழந்தையும் பிறந்துவிட, நர்கீஸ், இனியாவது அவன் தன்னை புரிந்துக்கொண்டு பிரியமாக இருக்க மாட்டானா என்று ஆசைபட, ஒமர் தொடர்ந்து தன் அம்மா, அக்கா, சித்தி, மாமி என்று எல்லோர் பேச்சையும் கேட்டுக்கொண்டு மனைவியை சதா குறை சொல்லிக்கொண்டே இருக்க, நொந்து போனாள் மனைவி. ஒரு சண்டையில் இவன் தன் வசமிழந்து அவளை போட்டு அடித்தும் விட, அவள் தகப்பானார் விஷயம் கேள்வி பட்டு ஓடிவந்தார். ”இந்த காட்டுமிராண்டியோடு என் மகளை இனி நான் விடவே மாட்டேன்”, என்று கூடவே அழைத்துக்கொண்டு போய்விட்டார்.

“அவளா தானே போனா, அவங்க அப்பன் பெரிய பணக்காரன்ற திமிர்ல தானே போனா, அவளா திரும்ப வரட்டும், நீ அவளுக்கு ஃபோன் கூட பண்ணாதேடா” என்று தாய்குலம் ஓதி வைக்க, ஒமரும் அடிபிரளாமல் அப்படியே இருந்தான். நாட்கள் வாரங்களாக, வாரங்கள் மாதங்களாகி, கடைசியில் இரண்டு வருடங்கள் முடிந்தும் விட்டன.

“வீட்டுல ஒரு நாய் வளர்த்தா கூட அது சாப்பிட்டுச்சா, நல்லா இருக்கானு கவலை படுவோம். கட்டுன பொண்டாட்டியும், பெத்த பிள்ளையும் எப்படி இருக்காங்கனு ஒரு ஃபோன் கூட பண்ணிக்கேட்காத இவனெல்லாம் ஒரு மனிஷனா, அவனை மறந்திடு” என்று நர்கீஸுக்கு எல்லோரும் அறிவுறை கூறினார்கள். அவள் படித்த பெண், அதனால் ”சும்மா வீட்டில் உட்கார்ந்துக்கொண்டு கவலை படுவதற்கு ஏதாவது வேலைக்காவது போகட்டுமே”, என்று அப்பா அவளுக்கு ஒர் பிஸ்னஸ் ஏற்படுத்தித்தர, பல பேரை தினமும் சந்திக்கும் சந்தர்ப்பம் பெற்றாள் நர்கீஸ். அப்படி அவள் சந்தித்த நபர்களில், ரியாஸ் என்கிறவனுக்கு அவள் மேல் ஆசை, காதல், இரக்கம் எல்லாம் ஏற்பட்டுவிட, அவன் அவளை திருமணம் செய்துக்கொள்ள விரும்பி, அவள் பெற்றோரிடம் விண்ணப்பிக்க, ஆரம்பத்தில் ஆட்சேபித்த நர்கீஸும் போக போக இணங்க ஆரம்பிக்க, இருவருக்கும் திருமணம் முடிவானது.

உறவினர் மூலமாய் தான் ஒமருக்கு தெரியவந்தது. நர்கீஸ் அவனை தலாக் செய்துவிட்டு, ரியாஸை திருமணம் செய்துக்கொள்ள போகிறாள் என்று. அவள் தன்னை விட்டு நிரந்திரமாக போயே போய்விட போகிறாள் என்றதும் தான் அவனுக்கு தன் இழப்பின் தீவிரம் புரிய ஆரம்பித்தது. நர்கீஸோடு அவன் சந்தோஷமாய் இருந்த நாட்கள் நினைவிற்கு வர, தன் மனைவியை இன்னொருத்தன் தொட போகிறானே என்கிற தவிப்பும், என் மகளை அவன் ஏதாவது செய்துவிடுவானோ என்கிற பயமுமே அவன் தூக்கத்தை கெடுத்துவிட்டன.

வீட்டில் இது பற்றி பேச்சு தலை தூக்கியபோது, “பொம்பளை அவளுக்கே இன்னொரு புருஷன் கிடைக்கும் போது, என் பையனுக்கு நான் இன்னொரு நிக்ஹா பண்ணி வெக்க மாட்டேனா?” என்று ஆரம்பித்தாள் அவன் அம்மா. “ஆமா முதல் பொண்டாட்டியோட ரொம்ப வாழ விட்டுட்டே, இன்னொரு பொண்ணு வந்து இந்த வீட்டுல கஷ்டப்படணுமா?” என்று அப்போது மட்டும் திருவாய் மலர்ந்தார் ஒமரின் அப்பா. “நான் ஒருத்தன் உன் கிட்ட மாட்டிக்கிட்டு கஷ்டப்படுறது போதாதுன்னு, இப்ப என் பையன் வாழ்க்கையையும் கெடுத்துட்டியே!” அப்போது தான் ஒமருக்கு சட்டென பொறி தட்டியது. அது வரை அம்மாவை மீறி எதுவும் சிந்தித்தும் பார்த்திராத ஒமருக்கு அப்போது தான் அம்மா என்கிற உறவை மறந்து ஒரு தனி மனுஷியாக அவளை எடை போட முடிந்தது. இவனுக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே யாருடனும் ஒத்து போகாமல் எப்போதுமே இன்செக்யூராய் அம்மா இருந்தது லேசு பாசாய் அப்போது தான் அவன் நினைவிற்கு வந்தது. தங்கை தன் கணவனுடன் தங்க வந்தால், தன் படுக்கை அறையை அம்மா காலி செய்து தந்ததும், இவன் தன் மாமியார் வீட்டிற்கு போனால் மட்டும், “அங்கெல்லாம் போய் ராத்தங்காதேடா, அப்புறம் நம்மல மதிக்க மாட்டாங்க” என்று தடுத்ததும், இன்னும் இது போன்ற பல சம்பவங்களும் நினைவிற்கு வந்தன…..

அதற்குள் நர்கீஸ் ஜம்மாத்தில் சொல்லி விவாகரத்து வாங்கி ரியாஸை நிக்ஹா செய்துக்கொண்டாள். அடுத்த ஆண்டு அவளுக்கு ஓர் ஆண் குழந்தையும் அதற்கு அடுத்த ஆண்டு இன்னொரு பெண் குழந்தையும் பிறந்தன….அப்போதும் ஒமருக்கு இன்னொரு நிக்ஹா செய்து முடிக்கவில்லை அவன் அம்மா. தன் அறையின் தனிமையில் தன் இழப்பை நினைத்து ஒமர் எவ்வளவோ வருந்தினான். ஆனால் அவன் அம்மா, “அந்த ராட்ஷசிகிட்டேந்து என் பையனை காப்பாத்தீட்டேன்” என்று எல்லோரிடமும் பெருமை பட்டுக்கொண்டாள்.

ஆக, எப்போதெல்லாம் ஆண்கள் தங்கள் அம்மாக்களுக்கு அடிமைகளாக இருக்கிறார்களோ, அப்போதெல்லாம் அவர்கள் தங்கள் மரபணு அபிவிருத்தியில் தோற்றுத்தான் போகிறார்கள். அதனால் தானோ என்னவோ, தொல்காப்பியர் கூட அடிமையாகவோ, காவலனாகவோ, இருப்பனை ஒரு பாட்டிற்கு கூட தலைவனாக வைக்க கூடாது என்கிற விதியை வகுத்தார். பாட்டிற்கே தலைவனாக இருக்க லாயக்கி அற்ற அடிமை, எப்படி ஒருத்தியின் வாழ்க்கைக்கு தலைவனாக இருக்க முடியும்?

Monday, November 29, 2010

அறுபடாத தொப்புள் கொடிகள்

ஆக அம்மாக்கள் தங்களுக்கு அதிக பாதுகாப்பு தரும் ஆண் குழந்தையை (சில வீடுகளில் பெண் குழந்தையையும்) அன்பெனும் அங்குசத்தை பயன்படுத்தி தனக்கு அடிமையாக்கிக்கொள்கிறார்கள். வலிமையான, புத்திசாலித்தனமான யானையை அடக்கி, பழக்கி, வெறும் ஒரு தேங்காய் மூடிக்காக கோயில் வாசலில் பிச்சை எடுக்க வைக்கிறார்களே, கிட்ட தட்ட அதே போல, தன் பிழைப்பிற்காக தன் மகனை பயன் படுத்திக்கொள்கிறார்கள் சில தாய்மார்கள். செய்தால் செய்துவிட்டு போகட்டுமே, அதனால் யாருக்கு என்ன நஷ்டமாம் என்கிறீர்களா?


சரி, இந்த கதையை கேளூங்கள், ஜெயம் ஒரு சராசரி இந்திய தாய். வறுமையில் பிறந்து, சதா உறவினரோடு தன்னை ஒப்பிட்டு, எப்படியாவது சாதித்து எல்லோர் மதிப்பு, மரியாதையையும் சம்பாதித்துக்கொண்டே ஆகவேண்டும் என்கிற வெறியோடு வளர்ந்தவள். டாக்டர் மாப்பிள்ளையை கல்யாணம் செய்துக்கொண்டு ஜம்பமாய் வாழலாம் என்பது தான் அவள் இள வயது கனவு. அவள் துரதுஷ்டம், எந்த டாக்டரும் அவளை திரும்பியும் பார்க்கவில்லை, அதனால் ஒரு ரயில்வே குமாஸ்த்தாவுக்கு அவளை மணமுடித்தார்கள். அவள் எதிர்பார்த்த ஆடம்பர வாழ்க்கை அமையவில்லை, ஏதோ ஒரு குக்கிராமத்தில் கூட்டு குடித்தன வாழ்க்கை தான் அமைந்தது. அவள் கணவனின் சொர்ப்ப மாத வருமானத்தை கவர் பிரிக்காமல் அப்படியே மாமனாரிடம் கொடுத்து விடவேண்டும், ஒரு ரூபாய் குறைந்தாலும், அப்படியே முகத்தில் விட்டெறிந்துவிட்டு கோபமாய் போய்விடுவார் மாமனார். இப்படிப்பட்ட நிலையில் இவள் எங்கிருந்து தன் வாழ்க்கை தரத்தை உயர்த்திக்கொள்வதாம். அதனால் தன் தனிப்பட்ட தேவைகளுக்கு தன் பெற்றோரையும், சகோதரர்களையும் எதிர்ப்பார்க்க ஆரம்பித்தாள் ஜெயம். எப்படியாவது ஒரு நாள் பெரிய பணக்காரி ஆகியே தீருவது என்கிற வைராக்கியம் இதனாலேயே அதிகரித்தது.

இவள் கவனமெல்லாம் பணம், நகை, சொத்து, வீடு, கார் என்றே இருக்க, கணவனை இவள் ஒரு சம்பாதிக்கும் யந்திரமாக நடத்த ஆரம்பித்தாள். ஆனால் அவள் கணவனோ சல்லாப பிரியன். மனைவியோ சதா பூஜை, விரதம் என்கிருந்த பரமபக்தை. இந்த இருவருக்கும் ரசனைகள் ஒத்து போகாததால், கணவன் தன் சக ஊழியைகளிடம் நைஸாக பேசியே தன் தேவைகளை தீர்த்துக்கொள்ள ஆரம்பிக்க, விஷயம் விபரீதமானது. வேறொரு பெண்ணோடு மனிதருக்கு காதல் ஏற்பட்டு, அவள் கர்பமாகியும் விட்டாள். விஷயம் தெரிந்த போது ஜெயத்திற்கு உலகமே திடீரென்று தலைகீழாய் புரண்டது. அதுவரை பணம் மட்டுமே பிரதானம் என்று இருந்தவள் இப்படி தடம் தவறும் கணவனை எப்படியாவது தன் வசப்படுத்த வேண்டுமே என்கிற இக்கட்டுக்கு ஆளானாள். பெரியவர்கள் தலையிட்டு இருவரையும் அரும்பாடுபட்டு சேர்ந்து வைத்தார்கள். ஆனால் ஏற்கனவே காமத்தில் பெரிய ஈடுபாடே இல்லாமல் இருந்த ஜெயத்திற்கு அதற்கு மேல் கணவனின் மேல் நம்பிக்கையும் இல்லாமல் போக, அவர்களுடைய இல்வாழ்க்கை பிள்ளைகளை வளர்க்க மட்டுமே அதற்கு மேல் பயன்பட்டது.

கணவனை நம்பி இனி பயனே இல்லை என்று புரிந்துக்கொண்ட ஜெயம், தன் ஒட்டுமொத்த கவனத்தையும் தன் இரண்டு மகன்களின் மேல் குவித்தாள். டாக்டருக்கு மனைவியாகத்தான் முடியவில்லை, தாயாக ஆகியே தீருவது என்று தீவிரமாய் இருந்தாள். மகன்களிடம் தன் பரிதாபக்கதையை சொல்லி அழுது, “அம்மா இவ்வளவு கஷ்டப்பட்டு இந்த மனிஷனோட வாழுறதே உங்களுக்காக தான்….” என்று சொல்லிகாட்டியே வளர்த்ததால், பையன்கள் இருவருக்கும் அம்மாவின் மேல் அதிக பாதுகாப்பு உணர்வும், அப்பாவின் மேல் அருவெறுப்பும் ஏற்பட ஆரம்பித்தது. எப்படியாவது அம்மாவை சந்தோஷப்படுத்தி பார்க்க வேண்டும் என்று, இருவருமே வேறு எந்த சிதறலுக்குமே இடம் தராமல் படிப்பிலேயே விழுந்து கிடந்து மெடிகல் காலேஜ் சேர்ந்தார்கள். வீட்டில் பணப்பற்றாக்குறை ஏற்பட்டுவிட, அம்மா வேலைக்கு போய் மகன்கள் இருவரையும் படிக்க வைக்க உதவினாள். ஒருவழியாக இரண்டு மகன்களுமே டாக்டர்கள் ஆனார்கள். அதற்கு மேல் தாக்குபிடிக்க முடியாமல் ஜெயம் வேலையை விட்டாள். மகன்களின் சாம்பாத்தியம் பெருக ஆரம்பித்தது. மகன்களின் முயற்ச்சியால் அது வரை வாழ்ந்த சின்ன வீட்டை விட்டு, ஒரு ஆடம்பர பங்களாவுக்கு மாறினார்கள். அதற்குள் கணவரும் ரிடையராகிவிட, ஜெயம் முழுக்க முழுக்க தன் மகன்களின் வருமானத்தை நம்பியே வாழ வேண்டிய நிலை.

முதல் மகனுக்கு 35 வயது தாண்டிய பிறகும், “சரியான பொண்ணே அமையலைடா…” என்று சொல்லிக்கொண்டே இருந்தாள் ஜெயம். அம்மா நமக்கு நல்லது தான் செய்வார்கள் என்று ஆணீத்தரமாக நம்பிய மகன் # 1க்கு காலமாக ஆக லேசாய் சந்தேகம் தலை தூக்கியது. அதெப்படி இத்தனை கோடி பெண்கள் இருக்கும் இந்தியாவில் இவனுக்கு மட்டும் ஒருத்தி கிடைக்காமல் இருப்பாள்? கடைசியில் பையன் ஒரு பெண்ணை பார்த்து ரொம்பவும் பிடித்து போனதாய் சொல்ல, “அந்த பொண்ணோட அப்பாவுக்கு ஏற்கனவே கல்யாணமாயிடுச்சாம், போயும் போயும் கூத்தியாளுக்கு பிறந்தவளையா உனக்கு கட்டிவைப்பேன்?” என்று அதற்கும் ஒரு வெடி வைத்தாள் அம்மா. “இனி மேல் முடியாது, எனக்கு வயதாகிறது. இவளை கட்டி வைக்காவிட்டால், என் ஹாஸ்பிட்டலில் ஒரு விதவை நர்ஸுக்கு வாழ்க்கை தந்துவிடுவேன்” என்று மகன் மிரட்டல் விடுக்க, வேறு வழி இல்லாமல் முதல் மகனுக்கு திருமணம் செய்து வைத்தாள் ஜெயம்.

ஆனால் மருமகளை கண்டால் அவளுக்கு என்னமோ பிடிக்கவில்லை. “மாமியார்னு ஒரு மரியாதை வேண்டாம், அதென்ன சரிசமமா சோபாவுல உட்கார்ந்துகிட்டு, தரையில உட்கார்ந்து பேசு….” என்று மருமகளையும், அவள் அம்மா அப்பாவையும் எல்லா சமயத்திலும் ஜெயம் அவமானப்படுத்திக்கொண்டே இருக்க, மிரண்ட போய் அந்த பெண் கணவனிடம் போய் முறையிட்டாள், மகன் சொன்னான், “எங்கம்மா எனக்கு தெய்வம். குடும்பத்துக்காக எவ்வளவோ கஷ்டபட்டு எங்களை படிக்க வெச்சவங்க, ….அவங்கள பத்தி ஏதாவது பேசினே…….இதோ இது தான் கதவு, வெளியே போயுடு”

எது நியாயம் என்று யோசிக்க கூட முடியாத கண்மூடித்தனமான அம்மாசெண்டிமெண்டில் சிக்கிக்கொண்டவனை வைத்து என்ன பேசுவது? என்னவோ இந்த உலகில் இவன் மட்டும் தான் அதிசயமான ஒரு டாக்டர் என்பது மாதிரி இவன் அர்த்த ராத்திரியில் குடை பிடித்து, அராஜகம் செய்ய, பிறந்த வீட்டிற்கு அவமானம் வரக்கூடாதே என்றூ அவன் மனைவி பொருத்துக்கொண்டே போனாள். குழந்தைகள் பிறந்தார்கள். அதன் பிறகு இவளுக்கும் கொஞ்சம் அந்தஸ்து உயர்ந்தது. இனிமேல் அவளை “வெளியே போ” என்று சொல்ல முடியாதே! தனக்கென்று ஒரு குடும்பமென்றான பிறகு முதல் மகனால் அதற்கு மேல் தன் அம்மாவுக்கு செல்வழிக்க முடியவில்லை.

முதல் மகன், தான், தன் குடும்பம் என்று திசைதிரும்பிவிட, ஜெயம் தன் இரண்டாம் மகனையே சார்ந்துவாழ ஆரம்பித்தாள். வருமானமே இல்லாத அவளுடைய எல்லா செலவுகளையும் இரண்டாவது மகனே கவனித்துக்கொள்ள, கணவனை வெறும் ஒரு காரோட்டி என்கிற லெவலுக்கு பயன்படுத்திக்கொள்ள ஆரம்பித்தாள் ஜெயம்.

இது இப்படி இருக்க, ஜெயம் தன் இரண்டாவது மகனுக்கும் திருமணத்தை தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தாள். அவன் எதிரில் தக்‌ஷிணாமூர்த்திக்கு கொண்டைகடலை மாலை சாற்றி வேண்டிக்கொள்வாள், ஆனால் “அந்த பொண்ணுக்கு இது நொட்டை இது நொள்ளை” என்று தள்ளிப்போட்டுக்கொண்டே போனாள். எப்படியும் பெற்ற தாய் தனக்கு தீங்கா செய்துவிட போகிறாள் என்கிற நம்பிக்கையில் இருந்தான் மகன். எத்தனையோ பெண்களை பார்த்து என்னனவோ ஆசைகள் தோன்றியபோதும், அம்மாவுக்கு நல்ல பிள்ளையா இருக்கணும், அப்பா மாதிரி ஆகிடகூடாது என்று அவன் தன் புலன்களை எல்லாம் அடக்கி, படிப்பு, வேலை, உழைப்பு என்றே இருந்தான். அவன் உழைப்பு வீண் போகவில்லை. வசதியான வீடு, சொகுசான கார், தேவைக்கு அதிகமாய் பணம் என்று அவன் அம்மாவின் ஆசைகளை எல்லாம் நிறைவேற்றினான். “என் மகனை கட்டிக்க கொடுத்து வெச்சிருக்கணும்” என்றூ பெருமைபட்டுக்கொண்டாள் ஜெயம். ஆனால் அதற்குள் பையனுக்கு நாற்பது வயது தாண்டிவிட்டது. இன்னும் ஒரு நல்ல பெண்ணை அவளால் கண்டே பிடிக்க முடியவில்லை!

மகன் காத்துக்கொண்டே இருக்க, அவன் காசில் பெண் பார்க்க போகிறேன் என்று எல்லா ஊர்களுக்கும் போய்விட்டு வெறூம் கையோடு தான் திரும்பிவந்தாள் தாய். இப்போது சொல்லுங்கள்: இந்த ஆட்டத்தில் ஜெயித்தது யார்? தோற்றது யார்?

Thursday, November 25, 2010

உயிர் மொழி: 10

அப்படி என்ன ரகசிய அஸ்திரங்களை மிக பகிரங்கமாய் பயன்படுத்தி ஆண் குழந்தைகளை அடக்கி ஆள்கிறார்கள் பெண்கள் என்று யோசித்தீர்களா? கண்டு பிடித்தீர்களா?


அஸ்திரம் 1: பிரசவிக்கும் அவள் தன்மை. பிரசவம் என்பது எல்லா உயிரனத்து பெண்பாலுக்கும் இயல்பு தான் என்றாலும் சில மனித தாய்மார்கள் மட்டும் இது பற்றி பெரிதாக அலட்டிக்கொள்வது உண்டு. “பத்து மாசம் சுமந்து பெற்ற தாயடா” என்று இவள் ஆரம்பித்தாளே போதும், சப்தநாடியும் அடங்கி மகன் உடனே சரண்டர் ஆகிவிடுவான். பெண் குழந்தையிடம் இந்த பாட்சா பளிக்காது, காரணம், அவளும் பின் ஒரு நாள் இதே மாதிரி பிரசவிக்க தானே போகிறாள். அதனால் அம்மாவால் இந்த விஷயத்தில் மகளை டாமினேட் செய்ய முடியாது. ஆனால் ஆண் குழந்தைக்கு இது என்றுமே முடியாத ஒரு பெரும் சாதனை தானே. அதனால் தாய்மை என்றால் அவனுக்கு பிரமிப்பு, மிரட்சி, பயம், மரியாதை, எல்லாம். அதனால் அம்மா, “உன்னை கஷ்டப்பட்டு பெத்தேனே……..” என்று வசனத்தை ஆரம்பித்தாலே போதும், கர்ணனை மாதிரி சிறந்த வீரன் கூட உடனே கரைந்து உருகிவிடுவான். அதன் பிறகு சுயமாய் யோசிக்கும் தன்மையை இழந்தே விடுவான், “எனக்கு இந்த பிறவியை தந்த தாய்க்கு என்ன செய்தாலும் தகும்” என்கிற தியாகிமனப்பண்மைக்கு மாறிவிடுவான். கொஞ்சம் துடுக்கான பையன் என்றால், “யானை 22 மாதம் சுமக்கிறது, பத்து மாதத்தை பெரிதாய் பேசுகிறீர்களே,” என்றோ, “நானா பெக்க சொன்னேன்?” என்றோ கேட்டு அம்மாவின் வாயை அடைத்து விடுவான். ஆனால் பெரும்பாலான ஆண்களுக்கு அம்மா செண்டிமெண்ட் அதிகம் என்பதால் அதை மீறி இப்படி எல்லாம் அறிவியல் பூர்வமாய் அவர்களால் யோசிக்க முடிவதில்லை.

அ 2: பிறப்பது ஆண் குழந்தையா பெண் குழந்தையா என்று நிர்ணயிப்பது அப்பாவின் விந்தணுவின் நீந்துவரும் குரோமோசோம்கள் தான். அப்பாவின் விந்தணுக்களில் பாதி X வகை குரோமோசோம்கள், பாதி Y வகை குரோமோசோம்கள். அம்மாவின் கருமுட்டையில் இருப்பதெல்லாமே X வகை குரோமோசோம்கள் தான். அப்பாவின் X அம்மாவின் X சோடு சேர்ந்தால் XX என்றாகி, பெண் குழந்தை பிறக்கும், அப்பாவின் Y அம்மாவின் X சோடு சேர்ந்தால் XY என்றாகி, ஆண் குழந்தை பிறக்கும். ஆக பிள்ளை ஆணா பெண்ணா என்று முடிவு செய்வதே அப்பா தான். ஆனால் ஆண் குழந்தையை பெற்றெடுப்பது என்னவோ அவளே சுயமாய் செய்த மிக பெரிய சாதனை என்கிற மாதிரி தான் சில பெண்கள் நடந்துக்கொள்கிறார்கள். இதனால் தங்கள் ஆண் குழந்தையை ஒரு அந்தஸ்து அறிகுறி, status symbol என்கிற மாதிரியே நடத்துகிறார்கள். அதிக விலையுள்ள பொருளை பொத்தி பாதுகாத்து, தான் மட்டும் வைத்து விளையாடி மகிழ்வது போல, தங்கள் மகனை யாருடனும் பகிர்ந்துக்கொள்ள விரும்பாமல், தான் மட்டும் சொந்தம் கொண்டாடி, over possessiveவாக, overproctectiveவாக இருக்கிறார்கள். மகனை எங்கும் அனுப்பாமல், யாருடனும் பழகவிடாமல் எப்போதும் தன் கண்காணிப்பிலேயே வளர்த்தும் விடுகிறார்கள். இப்படி பிரசவத்திற்கு பிறகும் தொப்புள் கொடியை கெட்டியாக பிடித்துக்கொண்டிருந்தால், பையன் எப்படி தான் வளர்வான்? கொடி சுற்றிய பிள்ளை மாதிரி, இந்த சிக்கலிலேயே மாட்டி அவன் முதிர்ச்சி அடையாமல் போய்விடத்தானே வாய்ப்பு அதிகம்! இப்படி ஒரு இன்செக்யூர் அம்மா, தன் மகனை கெட்டியாக பிடித்துக்கொண்டு, அவனை வளரவிடாமல் தடுப்பதை தான் persistent umbilical cord syndrome என்கிறோம்.

அ 3: பிள்ளைகளுக்கு கதைகள் சொல்லி வளர்ப்பதும் அம்மாவின் பணிகளில் ஒன்று. இதை மிக சாதுர்யமாக பயன்படுத்தி, தனக்கு சாதகமான கதைகளை சொல்லி, பையனின் மனதில் தனக்கு ஒரு மைய பகுதியை அபகரித்துக்கொள்கிறார்கள் சில பெண்கள். உதாரணம் புத்லிபாய். குட்டி மோகன் தாஸுக்கு அவர் சொன்ன கதை என்ன தெரியுமா? கண்ணில்லாத பெற்றோரை கூடையில் வைத்து ஊர் ஊராய் சுற்றிய ஷ்ரவணின் கதை. ஷ்ரவண் பெற்றோர் மேல் வைத்த பாசத்திற்கு ஒரு பளிச்சிடும் உதாரணமாய் இருக்கலாம். ஆனால் இதனால் அவன் மரபணுக்கள் பரவவில்லையே. ஆக ஷ்ரவண் ஒரு genetic loser. இவன் கதையை போய் தன் மகனுக்கு சொல்லித்தருவாளா ஒரு தாய்? சொல்லித்தந்துக்கொண்டே தான் இருக்கிறார்கள், நம் கண் எதிரிலேயே, ஆனால் அது குழந்தைக்கு உபயோகமான கதை இல்லை என்றும், அது தாய் தன்னை பாதுகாத்துக்கொள்ள செய்யும் ஒரு long term யுத்தி என்றும் நமக்கு தான் புரிவதில்லை.

அ 4: பிள்ளைகளுக்கு வாழ்வியல் திறமைகளை சொல்லிதருவது தாயின் கடமை. ஆனால் எத்தனை வீடுகளில் ஆண் குழந்தைகளையும் பெண் குழந்தைகளையும் ஒரே மாதிரி வளர்க்கிறார்கள்? ஆண் என்பதினாலேயே, அவனுக்கு அதிக முக்கியத்துவம், சலுகைகள், சொகுசுகள், சில வேலைகளில் இருந்து விலக்கு என்று ஓரவஞ்சனையாக வளர்க்கும் அம்மாக்கள் தான் நம் ஊரில் ஏராளம். கூடவே, “ஆம்பிளை சிங்கத்தை பெற்றேன்…..” என்ற பெருமையை வேறு அம்மா அடித்துக்கொண்டால் கேட்க வேண்டுமா? மகன் என்னவோ தான் ஒரு தேவமைந்தன் என்கிற ரேஞ்சுக்கு தான் தன்னை பற்றி உயர்வாக நினைத்துக்கொள்கிறான். அப்புறம் வெளிஉலகில் போய் அடிபட்டு, மிதிப்படும் போது தான் அவனுக்கு தெரியவே செய்யும், இந்த மிதப்பு எல்லாம் அம்மா ஏற்றிவிட்ட வெறும் மாயை என்று! அதுசரி, அது ஏன் ஆண் குழந்தைகளை மட்டும் அம்மாக்கள் இப்படி விழுந்து விழுந்து மிகையாய் கவனித்துக்கொள்கிறார்கள்? சில வீடுகளில் முப்பது நாற்பது வயதானாலும் மகனுக்கு தாய் தானே உடம்புக்கு எண்ணெய் தேய்த்துவிட்டு குளிபாட்டுவதுண்டு, தன் கையாலேயே அவனுக்கு சாப்பாடு ஊட்டிவிடுவதுண்டு. இதெல்லாம் கொஞ்சம் ஓவர் என்று உங்களுக்கு தோன்றுகிறதா? ஆனால் இவ்வளவு மெனகெட்டு இந்த அம்மா இவ்வளவு செய்ய காரணம் என்ன தெரியுமா? மனிதர்கள் குரங்கு இனத்தை சேர்ந்தவர்கள் என்பதால், அவற்றின் வாழ்க்கை விதிகள் பலது நமக்கும் அப்படியே பொருந்தும். காட்டில் வாழும் குரங்கு கூட்டங்களில் பெண்களும், குட்டிகளும், டாமினெண்ட் ஆண் குரங்கை, தொட்டு, தடவீ, பேன் பார்த்து, groom செய்துக்கொண்டே இருக்கும். இப்படி குரூம் செய்யும் குரங்குகளை அந்த ஆண் பாதுகாக்கும். ஆக அதிக குரூமிங் = அதிக பாதுகாப்பு. இதே விதியை தான் பெண்கள் தங்கள் இஷ்ட ஆண்களிடம் பயன் படுத்துகிறார்கள். இவள் தன் பாதுகாப்பை அதிகரித்துக்கொள்ள என்னை இப்படி எல்லாம் தாஜா செய்கிறாள் என்று புரிந்துக்கொள்ளும் விவஸ்த்தை எல்லாம் பல ஆண்களுக்கு இருப்பதில்லை என்பதால், “அய், என்னை என்னமா கவனித்துக்கொள்கிறாள், இவளுக்கு என் மேல் எவ்வளவு ஆசை, இவளுக்கு நான் என்ன கைமாறு செய்ய போகிறோனோ…” என்று குறியே தவறாமல் மிக சரியாக வலையில் விழுந்து விடுகிறார்கள்.

அ 5: பெரும்பாலான தாய்மார்கள் ஆண்களுக்கு சமையல், சலவை, வீட்டு துப்புறவு பணிகள் மாதிரியான வேலைகளை சொல்லி தருவதே இல்லை. கேட்டால், இது எல்லாம் பெண்களின் வேலை என்று சொல்லி விடுவார்கள். பிரசவிப்பது ஒன்றை தவிற பெண்கள் மட்டும் செய்யும் வேலை என்று ஒன்று கிடையவே கிடையாதே. ஆனால் அம்மாக்கள் இப்படி ஒரு அப்பட்டமான பொயை ஏன் சொல்கிறார்கள்? இந்த வேலைகளை எல்லாம் அவனே சுயமாக செய்து பழகிவிட்டால் பிறகு அம்மாவின் தயவு அவனுக்கு தேவை படாதே. அப்புறம் எப்படி இந்த அம்மா, அவன் வாழ்வின் முக்கியமான நபர் என்கிற அதிகார அந்தஸ்த்தை பெற முடியும்?! அதனால், ஆண் குழந்தைகளுக்கு சுயபராமறிப்பு, சம்மந்தமான சூட்சமங்களை சொல்லியே தராமல் அவர்களை நிரந்திரமாக தன்னையே நம்பி வாழ வேண்டியவர் ஆக்கிவிடுகிறார்கள் சில தாய்மார்கள்

அ 6: குழந்தைக்கு என்று ஒரு சுயமான வாழ்வு உண்டு, அதற்கென்று விருப்பு வெறுப்புகள் இருக்கும். அதை அனுசரித்து பெற்றோர் நடந்து கொள்ள வேண்டும் என்பது தான் சர்வதேச சிறுவர் உரிமை. ஆனால் சில தாய்மார்கள் குழந்தையின் வாழ்வை அப்படியே அபகரித்து, அக்குழந்தையின் மூலமாய் தாங்கள் வாழ்கிறார்கள். தனக்கு கிடைக்காத, அமையாத விஷயங்களை எல்லாம் குழந்தையை வைத்து சாதித்துவிட முயல்கிறார்கள். “என்னால் தான் முடியலை, நீயாவது செய், அதை பார்த்து நான் பெருமை பட்டுக்கொள்கிறேன்” என்று சொல்லியே குழந்தைக்கென்று ஒரு தனிப்பட்ட வாழ்வே இல்லாமல் செய்துவிடுகிறார்கள். இதை வேறு எந்த நபரோ, ஏன் அரசாங்கமோ செய்தால் கூட, மனித உரிமை மீறல் என்று உடனே கண்டிக்க நமக்கு தோன்றும், ஆனால் பெற்ற தாய் என்றூ வரும் போது, “அவளுக்கு இல்லாத உரிமையா?” என்றூ விட்டேற்றியாக இருந்துவிடுகிறோம்.

மிக கவனமாக யோசித்தீர்கள் என்றால் உங்களுக்கே புரியும். பெற்று, பாலூட்டி, பாதுகாத்து, கதைகள் சொல்லி, திறமைகளை வளர்த்து, அவனுக்கு என்று ஒரு வாழ்வை அமைத்து கொள்ள வழிகாட்டுவது தான் ஒரு தாயின் கடமை. ஆனால் இந்த ஒவ்வொரு பணியையுமே தனக்கு சாதகமாய் இருக்கும் படியே மாற்றி செய்து, அன்பெனும் ஆயுதத்தை பயன்படுத்தியே மகனை தனக்கு மட்டுமே விஸ்வாசமாய் இருக்கும் அடிமையாக்கிவிடுகிறார்கள் தாய்மார்கள். இப்படி தாங்கள் அடிமையாக்கபட்டது தெரியாமல், “எங்கம்மா மாதிரி வருமா?” என்று கண்மூடித்தனமாய் நம்பிக்கொண்டே இருக்கிறார்கள் ஆண்கள்.

Tuesday, November 16, 2010

உயிர் மொழி: 9

ஆண் பெண்ணை அடிமை படித்திய கதை நம் எல்லோருக்கும் அத்துபடி, அதனால் அதில் விளக்கம் சொல்ல அதிகம் இல்லை. ஆனால் பெண் ஆணை பதிலுக்கு அடிமை படுத்திய கதை ரொம்பவே ஸ்வாரசியமானது. லேசில் வெளியே தெரியாத ரகசிய யுத்திகள் பல இதில் பயண் படுத்துப்படுகின்றன. அவற்றை பற்றி எல்லாம் சொல்வதற்கு முன்னால் மார்கெரெட் மேலரை உங்களுக்கு அறிமுக படுத்தியே ஆகவேண்டும்


மார்கெரெட் மேலர் ஹங்கேரியில் பிறந்து பிறகு அமேரிக்காவில் பணியாற்றிய ஒரு மனநலமருத்துவர். அவர் குழந்தைகளின் சமூக வளர்ச்சி பற்றி நிறைய ஆராய்ச்சிகள் செய்தவர். தாய் சேய் உறவில் பல நிலைகள் இருப்பதை அவர் கவனித்தார்

முதல் நிலை: பிறந்த குழந்தைக்கு புற உலகம் புரியாது, அது பெரும்பாலான நேரத்தை தூக்கத்திலேயே செலவிடுகிறது. ஆனால் மூன்று மாதம் தாண்டிய பின் அதற்கு தன் தாயை மிக நன்றாக தெரியும். ஆனால் தாய் என்பவள் வேறு, நான் என்பது வேறு என்பது குழந்தைக்கு தெரியாது. ”நான் என்றால் அது நானும் என் அம்மாவும்” என்கிற அளவில் தான் அந்த குழந்தையின் செயல்பாடு இருக்கும். அம்மா தன்னுடன் இருந்தால் தான் தன்னால் இயங்கவே முடியும் என்று நினைப்பதால் வெளியாட்கள், அம்மா இல்லாத தனிமை என்றால் குழந்தை உடனே பயந்து அழும். அம்மா பக்கத்து அறையில் இருந்தாலும், தன் கண் எதிரே இருந்தால் தான் அவள் தன்னுடன் இருப்பதாய் அர்த்தம் என்று எப்போதுமே தாயின் நேரடி பாதுகாப்பை நாடிக்கொண்டே இருக்கும்.

இரண்டாம் நிலை: ஆனால் இதே குழந்தை இன்னும் கொஞ்சம் வளர்ந்தால், பள்ளிக்கூடம், பக்கத்து வீடு, உறவினர்கள், நண்பர்கள் என்று வெளி உலக மனிதர்கள் பலரை அது சந்திக்கும். ஆக அம்மாவை தவிறவும் இந்த உலகில் பல மனிதர்கள் இருக்கிறார்கள், அவர்களும் என்னை பாதுகாப்பவரகள் தான் என்பதை குழந்தை உணரும். அதே சமயம் குழந்தையின் மூளையும் லேசாய் முதிர்வதால், அம்மா என் பார்வை வளைவில் இப்போது இல்லை என்றாலும் என் வட்டாரத்தில் எங்கேயோ இருக்க தான் செய்கிறாள், தேவையானபோது அவள் பாதுகாப்பிற்குள் தஞ்சம் புகுந்துக்கொள்ளலாம் என்கிற நம்பிக்கை குழந்தைக்கு வரும். இப்படி தாயை கண்ணால் பார்க்க முடியாவிட்டாலும், அவளை மனதில் ஒரு பிம்பமாய் உருவகப்படுத்தி, அவள் எப்போதும் என்னுடனே தான் நிரந்திரமாக இருக்கிறாள், அதனால் அவளை தேடிக்கொண்டே இருக்க வேண்டாம், என்கிற முதிர்ந்த நிலைக்கு குழந்தை வந்துவிடுகிறது. இதை ஆப்ஜெக்ட் கான்ஸ்டென்சி object constancy என்பார் மேலர்.

மூன்றாம் நிலை: குழந்தை மேலும் அதிகமாய் வளர்ந்து அதன் மூளை இன்னும் கொஞ்சம் முதிரும் போது, அதற்கு, ”நான் என்பது வேறு என் அம்மா என்பது வேறு”, என்பது புரிந்து போகும். தன்னை ஒரு தனி உயிரினமாய் கருதி, தனக்கென்று தனி அபிப்ராயம், தனக்கென்று தனி நம்பிக்கைகள், தனக்கென்று பிரத்தியேகமாக ஒரு வாழ்க்கை என்றெல்லாம் குழந்தை யோசிக்க ஆரம்பிக்கும். அதனால் அது தாய் தந்தையோடு முரண்படும். இப்படி தாயிடம் இருந்து பிரிந்து, தனக்கென்று ஒரு தனி சுயஅடையாளத்தை குழந்தை ஏற்படுத்திக்கொள்வதை தான் Separation-Individuation என்பார் மேலர். இப்படி பிரிந்து, தனித்துவமாவது தான் எல்லா ஜீவராசி குட்டிகளுக்கும் இயல்பு. இந்த நிலையை அடைந்தால் தான் குட்டி எங்கு சென்றாலும், பிழைத்துக்கொள்ளும் பக்குவத்தை பெறும்.

மார்கெரெட் மேலர் சொன்ன இந்த சங்கதி எல்லா உயிர்களுக்கும் பொது. பருவ வயதை அடையும் போதே எல்லா குட்டிகளும், “எனக்கென்றூ ஒரு தனி பிரதேசத்தை கண்டுபிடித்து என் தனி ராஜியத்தை அமைத்துக்கொண்டு இனி என் மரபணுக்களை பரப்பும் வேலையை பார்க்கிறேன்” என்கிற அனுகுமுறைக்கு மாறிவிடுகின்றன. இதே காலத்தில் எதிர்பாலின ஈர்ப்பும் மிக அதிகமாகிவிடுவதால், துணை தேடி, இனம் சேரும் உந்ததலும் தலை தூக்கிவிடுகின்றன.

இதெல்லாம் இயற்க்கையின் அமைப்பு. காலாகாலமாய் மனிதர்களும் இதற்கு உட்பட்டார்கள். அவ்வளவு ஏன் இன்றூம் கூட பெண்கள் அதிக சுதந்திரமாய் இருக்கும் மேற்கத்திய நாடுகளில் இந்த முறையே பின் படுத்த படுகிறது. ஆனால் எங்கெல்லாம் பெண்கள் இன்னும் அடிமைகளாக, இன்செக்யூராக இருக்கிறார்களோ, அங்கெல்லாம், தம் பிழைப்பை அதிகரித்துக்கொள்ள, பெண்கள் இந்த விதியை அப்படியே மாற்றிவிடுகிறார்கள். தனக்கு அதிக பாதுகாப்பு தரும் குழந்தையை, எந்த வயதிலும் பிரிய விடாமல் தன்னுடனேயே தக்க வைத்துக்கொள்கிறார்கள்.

அம்மா இப்படி செய்தால் அவள் குழந்தைக்கு எங்கே போச்ச்சாம் அறிவு?….ஆடி, மாடு, புலி, சிங்கம், அவ்வளவு ஏன், எலி, அணில் மாதிரியான ஐந்தறிவு ஜீவன்கள் கூட சரியான பருவத்தில் தனித்துவமாகி, சுயமாக இயங்கும் போது, ஆறு அறிவு இருப்பதாக அலட்டிக்கொள்ளும் மனிதர்கள் இப்படி இன்னும் “அம்மாவும் நானும் ஒண்ணு” என்று முதிராத நிலையிலேயே நிற்கும் மாயம் என்ன? விஷயம் இது தான்: மனித தாய் மட்டும் தன் குழந்தையின் மனதை முழுமையாக வளரவிடுவதில்லை. தனக்கு சேவை செய்ய ஒரு பணியாள், ஏவல் புரிய ஒரு தொண்டன், ஆபத்துகளில் இருந்து பாதுக்காக்க ஒரு ஆயுதம், சம்பாதித்து தர ஒரு ஊழியன், பெருமை பட்டுக்கொள்ள ஒரு பொக்கிஷம், முதுமை காலத்திற்கு ஒரு காப்பீட்டு திட்டம்…….என்கிற அளவில் இயங்க மட்டும் தன் மகனை பழக்கிவைக்கிறாள். மற்றபடி தாயிடமிருந்து பிரிந்து தனித்துவமாகி, என்கிற சமிஞ்சை லேசுபாசாக தென்பட்டாலும், உடனே தன் அனைத்து அஸ்திரங்களையும் பயன் படுத்தி அதை எப்படியாவது தடுத்துவிடுகிறாள். சர்கஸ் சிங்கம் வெறுமனே ஒரு விசிலுக்கு கட்டுபட்டு நெருப்பு வளையத்தினுள் குதித்து வெளியே வருவது மட்டும் தான் தன் வாழ்வின் ஒரே இலக்கு என்கிற அளவிற்கு பழக்க படுத்துவது போல!

எல்லா அம்மாக்களுக்கு அப்படி இல்லை! எல்லாம் மகன்களும் அப்படி இல்லை என்று உங்களுக்கு ஆட்சேபிக்க தோன்றினால், நல்ல வேளையாக அது உண்மை தான். எல்லா அம்மாக்களும் இப்படி சுயநலமாக இருப்பதில்லை. எல்லா மகன்களும் இப்படி முட்டாளாக இருப்பதில்லை. ஆனால் துரதுஷ்டவசமாக இன்றும் இந்திய திருமணங்கள் பல முறிய பெரும் காரணமாக இருப்பது இப்படி பட்ட அப்நார்மல் அம்மாக்களும், முதிராத அவர்களது மகன்களும் தான். இயற்க்கைக்கு விரோதமான இப்படி பட்ட அதிசய அம்மா-மகன் உறவுகள் எப்படி உருவாகின்றன என்பதை அலசாமல் விடுவது ஆபத்து தானே!

அதுசரி, இந்த அம்மாக்களிடம் அப்படி என்ன அஸ்திரங்கள் இருக்கின்றன? இப்படி மகன்களை விசித்திரமாக பழக்கிவைக்க அவள் என்னென்ன யுத்திகளை பயன்படுத்துகிறாள்? பெண்கள் பயன்படுத்தும் அஸ்திரங்கள் எல்லாமே மனம் சம்பந்தபட்டவை, அதனால் அவை கண்ணுக்கு தெரிவதே இல்லை. இயற்க்கையாகவே அமைந்த சில அமசங்களை இவள் அஸ்திரங்களாக மாற்றி பயன் படுத்துவதால், அவை அஸ்திரங்கள் என்பதே நமக்கு ரொம்ப நேரத்திற்கு புரிவதே இல்லை. இப்படி பெண்கள் பயன்படுத்தும் இந்த improvised weapons என்னென்ன என்று தெரிந்துக்கொள்ளுங்க காத்திருங்கள், அடுத்த இதழில்…………

Monday, November 1, 2010

உயிர் மொழி: 8

மரபணு போட்டியில் ஜெயிக்க ஆண், “பெண்ணடிமைத்தனம்” என்கிற காயை நகர்த்தி, பெண்களை எல்லாம் நிராயுதபாணி ஆக்கினான். இதனால் பெண் ஆண்களை தரத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து, கலவி கொண்டு, உயரக மரபணுக்களை மட்டும் பரப்பிய காலம் மலையேறி போனது. கல்வி, அறிவு, சொத்து, வருமானம், தனி நபர் சுதந்திரம், சுயமரியாதை, தனக்கென ஓர் அடையாளம் என்று எதுவுமே இல்லாமல் வெறும் ஒரு பிரசவ யந்திரமாய் பெண்கள் மாறிவிட, இந்த யந்திரங்களை அபகரித்து, அவற்றினுள் தம் மரபணுக்களை விதைத்து, மானாவாரி சாகுபடி செய்ய ஆரம்பித்தார்கள் ஆண்கள். இப்படி இவர்கள் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்க, பெண்கள் மட்டும் சும்மா இருந்துவிடுவார்களா?


பெண் தான் பிறவி வேட்டுவச்சி ஆயிற்றே! ஆண் நகர்த்திய அதே காயை அவனுக்கு எதிராய் நகர்த்தி அவனுக்கே தெரியாமல் அவனை மீண்டும் தனக்கு அடிமையாக்கிக்கொண்டாள் பெண்…..எப்படி என்கிறீர்களா?

யுத்தி 1: அவள் உடம்பின் மீது ஆணுக்கு இருந்த மோகம் தான் அவளுக்கு தெரியுமே. அதனால் தன் உடல் பாகங்களை இன்னும் இன்னும் கவர்ச்சியாக வெளிபடுத்தி, ஆணை வசப்படுத்த முயன்றாள் பெண். ஆனால் இதில் ஒரு சிக்கல் இருந்தது. எல்லா பெண்களுக்குமே அதே உடல் பாகங்கள் தானே இருக்கின்றன. ஒருத்தியின் கவர்ச்சியை விட இன்னொருத்தி அதிகமாய் கவர்ச்சியை காட்டிவிட்டால் போச்சு, ஆண் கட்சி மாறிவிடுவானே, அப்புறம் எப்படி அவனை அடிமை படுத்துவதாம்?

யு 2: சமையல், சேவை, உபசாரனை என்றெல்லாம் அவனுக்கு பிடித்த படி நடந்து அவனுக்கு சோப்பு போட்டு வைத்தால், அவன் இவள் துணையை இதற்க்காகவாவது மீண்டும் மீண்டும் நாடுவானே….ஆனால் இதிலும் ஒரு பிரச்சனை இருந்தது. சமையலை ஆண்கள் கூட வெகு ஜோராய் செய்ய முடியுமே!. வேலையாள் கூட அவன் மனைவியை விட அதிக கீழ்படிதலுடன் சேவை, உபசாரனை மாதிரியான சமாசாரங்களை செய்து அசத்திவிட முடியுமே!

யு 3: படுக்கையில் அவனுக்கு பிடித்த மாதிரி எல்லாம் நடந்து அவனை அசத்தோ அசத்து என்று அசத்தி வைத்தால், ”என் மனைவி மாதிரி வருமா” என்று இவள் முந்தானையிலேயே விழுந்து கிடக்கமாட்டானா என்றால், ஊகூம். இவன் நினைத்தால் எத்தனை முறை வேண்டுமானாலும் படி தாண்டி, மாற்றான் தோட்டத்து மல்லிகைகளை முகர்ந்துவிடுவானே. ஆண், பெண், அரவாணி என்று யாரிடமும் சுகம் கொள்ளும் தன்மைதான் அவனுக்கு இருந்ததே. ஆக வெறும் கலவி சுகம் தந்து ஒரு ஆணை கட்டிபோடுவதென்பது முடியாத காரியமாகிவிடுமே.

யு 4: அந்த ஆணின் மரபணுக்களை கொண்ட குழந்தையை பெற்றெடுத்துவிட்டால், தன் ரத்தம் என்கிற பாசப்பிணைப்பில், ”என் குழந்தையை பெற்றவளாயிற்றே” என்கிற தனி சலுகை தருவானே. இப்படி குழந்தையை வைத்து கொஞ்சம் பவரை சம்பாதித்துக்கொள்வது தான் பெரும்பாலான பெண்களின் ஆட்ட யுத்தியாக இருக்கிறது. உதாரணத்திற்கு ராமயண தசரத சக்ரவர்த்தியை எடுத்துக்கொள்வோமே. சோசலை, சுமித்திரை, கைகேயீ, மூவருமே, தங்கள் குழந்தைகளை வைத்து தானே காய்களை நகர்த்தினார்கள்.

ஆனால் இதிலும் ஒரு பிரச்சனை: குழந்தை என்றால் எந்த குழந்தை? பெண் குழந்தை என்றால், அது இன்னொருவர் வீட்டிற்கு போய்விடும், காலம் முழுக்க அக்குழந்தையை வைத்து காய்களை நகர்த்த முடியாது. ஆனால் ஆண் குழந்தை? அப்பாவிற்கு பிறகு அவன் தான் குடும்ப பெயர், வருமானம், ஆஸ்தி, அந்தஸ்து என்று எல்லாவற்றையும் கட்டிக்காக்க போகிறவன். பெற்றோருடனே இருந்து, அவர்கள் மறைவிற்கு பிறகும் பித்ரு கடன்களை செய்ய கடமை பட்டவன்…….அதனால் ஆண் குழந்தையை பெற்றால், பெண்களுக்கு கையில் ஒரு ரெடிமேட் ஆயுதம் கிடைத்த திருப்தி. ஆனால் இதிலும் ஒரு பிரச்சனை. ஒரு வேளை, அவள் கணவனுக்கு பல தாரங்கள் இருந்து எல்லோருமே ஆண் குழந்தைகளாக பெற்றிருந்தால், அப்புறம் எல்லா மனைவியருக்குமே சமமான பவர் என்றாகிவிடுமே. இப்படி இருந்தால் ஒருத்தி மட்டும் தன் பிழைப்பு விகிதத்தை எப்படி அதிகரித்துக்கொள்ள முடியும்?

யு 5: கொண்டவனை நம்பினால் தானே இப்படி கண்டவளோடு போட்டியிடும் நிலைமையே. தானே பெற்றெடுத்த தன் மகனை தனக்கு சாதகமாக வளர்த்து, கடைசி வரை அவனையே தனக்கு துணையாக வைத்துக்கொண்டால், எப்படியும் ஒரு காலத்தில் தந்தையின் எல்லா பவரும் அவனுக்கு தானே வந்து சேரும். அட தந்தையின் பவர் இல்லாவிட்டாலும், தனக்கென்று உள்ள ஆற்றலினால் மகன் சாதித்துவிட்டால், அவனை தன்னுடனே தக்க வைத்துக்கொள்வது, இந்த தாய்க்கு சாதகம் ஆகாதோ? அவனுக்கு ஆயிரம் மனைவியர் கிடைக்கலாம், ஆனால் தாய் என்றால் இவள் ஒருத்தி மட்டும் தானே?

ஆக ஆண் பெண்ணை அடிமை படுத்தி, அவளை வெறும் ஒரு பிரசவ யந்திரமாக பயன்படுத்தினான். ஆனால் பெண்ணோ, தன் பிரசவ இயத்தையே ஒரு எதிர் யுத்தியாக பயன்படுத்தி, தன் ஆண் குழந்தையை தனக்கு அடிமையாக்கிக்கொண்டாள்.

அதெப்படி, பெண்ணுக்காவது கல்வி அறிவில்லை, ஆனால் ஆண் அறிவில் சிறந்தவன், உலகம் அறிந்தவன், பெண்ணை காட்டுலும் பல விதங்களில் வலிமையானவன். இப்பேற்பட்ட ஆண் எப்படி பெண்ணுக்கு அடிமையாகி போனான்? எப்படி இதை அனுமதித்தான் என்றெல்லாம் உங்களுக்கு ஆட்சட்யமாக இருக்கிறதா? இவ்வளவு வலிமையான இந்த ஆணை அடக்கும் பல அங்குசங்கள் பெண்ணின் கையில் இருந்தனவே. அதுவும் தான் பெற்றெடுத்து, வளர்த்த பிள்ளை என்றால் அவனை எப்படி எல்லாம் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்பது இவளுக்கு தெரியாதா! யாரோ ஒருத்தி பெற்ற ஆணான தன் கணவனையே தன் கட்டுபாட்டிற்குள் கொண்டுவர, அவ்வளவு யத்தனிக்கும் இவளுக்கு, தானே பெற்ற மகனை தன் ஆதிக்கத்தினுள் கொண்டுவருவது பெரிய காரியமா என்ன?

ஆணின் மிக பெரிய தவறே, “போயும் போயும் பெண் தானே, இவளால் இனி என்ன செய்ய முடியும்?” என்கிற குறைந்த மதிப்பீடு தான். அவளிடம் அவன் எச்சரிக்கையாகவே இருப்பதில்லை. அதிலும் தன்னை பெற்ற தாய் என்றால் அவனுக்கு சந்தேகமே வருவதில்லை. பெண்கள் எல்லாம் சுத்த மோசம் என்று பொத்தம் பொதுவாய் பாடிவைத்த பட்டினத்தார் மாதிரியான ஆசாமிகள் கூட தன்னை பெற்ற தாய் என்றதும், “தாயை சிறந்த கோயில் இல்லை” என்று போற்றத்தானே செய்தார்கள். ஆண்களுக்கு இயல்பிலேயே இருக்கும் இந்த எடிபெஸ் காம்பிளெக்ஸ் தான் அவர்களின் மிக பெரிய பலவீனம். இந்த ஒரு பலவீனம் போதாதா? இதை வைத்தே, தன் மகனை கடைசி வரை தனக்கு அடிமையாகவே வைத்திருக்க பெண்கள் பல ரகசிய யுத்திகளை மிக பகிரங்கமாகவே பயன் படுத்துகிறார்கள். அவை என்னென்ன என்று உங்களால் யூகிக்க முடிகிறதா? இல்லையா, அட்சர்யங்களுக்கு காத்திருங்கள், அடுத்த இதழில்…….

Sunday, October 17, 2010

பெண்ணடிமைத்தனம்


என்ன ஆகிவிட்டது இந்த தமிழ் பெண்களுக்கு? புறனாற்று காலத்தில் மிக தெளிவாக இயற்கையின் விதிகளுக்கு உட்பட்டு வாழ்ந்த இதே பெண்கள், போஸ்ட் மார்டன் யுகத்தில் ஆண்குழந்தைகளை முந்தானையிலேயே முடிந்துவைத்துக்கொள்ள முயல்கிறார்களே, ஏன்?
இதற்கு ஒரு மிக முக்கியமான காரணம்:  புறனானூற்று காலத்து பெண்களுக்கு, குறைந்த பட்சம் தமிழ்நாட்டில், நிறைய பவர் இருந்தது.  அதில் முக்கியமான பவர், தன் துணையை தானே தேர்ந்தெடுத்துக்கொள்ளும் சுதந்திரம்.  இந்த சின்ன விஷயம் மனித குணத்தை எப்படி இந்த அளவிற்கு மாற்றும் என்கிறீர்களா?
ஆட்சர்யமான உண்மை தெரியுமா: உலகில் உள்ள எல்லா ஜீவராசியிலும் பெண் மிருகம் தான் ஆணை கலவிக்கு தேர்வு செய்யும்.  ஆண் பிற ஆண்களோடு போட்டியிட்டு, “தான் எவ்வளவு பெரிய கொம்பன்” என்பதை நிருபவிக்கும்.  இப்படி போட்டியில் ஜெயிக்கும் ஆணை மட்டும் தன்னோடு இணைய அனுமதிக்கும் பெண்.  இப்படி பெண் மிக கவனமாக ஜெயிப்பவனையே ஜலித்தெடுத்து இனம் சேருவதை தான் செக்‌ஷுவல் செலக்‌ஷன் sexual selection என்றார் சார்ல்ஸ் டார்வின். ஆண் பெண் என்கிற இந்த இரண்டு பாலினம் இருக்கும் எல்லா மிருகங்களும், அவ்வளவு ஏன், செடி கொடிகளுமே கூட இந்த செக்‌ஷுவல் செலக்‌ஷன் என்கிற கலவியல் தேர்வு முறையை பயன் படுத்துகின்றன.  பயன்படுத்தியே ஆகவும் வேண்டும், காரணம் இது தான் சிறந்த மரபணுக்களை தேர்ந்தெடுக்க, இயற்கை வைத்திருக்கும் ஒரு வடிகட்டு வழி.  இந்த மரபணு போட்டியில் ஜெயிக்கவே உலகெங்கும் உள்ள ஆண் விலங்குகள் கொம்பு, பிடரி, கொண்டை, சிறகு, தோகை, தந்தம் என்று பல விதங்களில் “என் மரபணு எவ்வளவு உசத்தியானது பார்” என்று விளம்பரப்படுத்தும் உடல் பாகங்களை வளர்த்துக்கொள்கின்றன.  சில விலங்குகள் இதற்கு இன்னும் ஒரு படி மேலே போய், பாட்டு, ஆட்டம், வாசனை, வெளிச்சம், என்று பல வித ஜால வேலைகளில் ஈடுபட்டு பெண்களை கவர முயல்கின்றன.
ஆதிகால மனிதர்களும் இந்த இயற்கை வழியில் தான் செயல் பட்டார்கள்.  ஆண் தன் வீரம், பராக்கிரமம், விளையாட்டு, கலை, பேச்சு, சாகசம், திறமை என்று வெளிபடுத்துவான்.  அல்லது மற்ற மிருகங்களின் கவர்ச்சி பாகங்களை கடன் வாங்கி அதை தான் அணிந்துக்கொண்டு பெண்களை அசத்த பார்ப்பான்.  ஆண்களுக்குள் நடக்கும் போட்டிகளில் வென்றுவிட முயல்வான். இப்படி எல்லாம் தன் கவர்ச்சியை கடை பரப்பி காட்டுபவனை பெண் லபக் என்று பிடித்துக்கொள்வாள்…..அவன் மரபணுக்களை கொண்டு வலிமையான பிள்ளைகளை பெற்றுக்கொள்வாள்.
சே சே, இதெல்லாம் அபாண்டம், பெண்கள் இப்படி எல்லாம் செய்யவே மாட்டார்கள் என்று அவநம்பிக்கையாக இருக்கிறதா?  ராமாயண சீதை ராமனை எப்படி தேர்ந்தெடுத்தாள்?  "கவுசல்யா சுப்ரஜா ராமா, இதோ சீதை நான் உனக்கு தான்" என்று உடனே அவன் மடியில் விழுந்தாவிட்டாள்? மஹா விஷ்ணுவின் அவதாரமாகவே இருந்தாலும், இந்த வில்லை உடைத்து உன் வலிமையை நிரூபவி, என்று சொல்லவில்லையா?  ராமன் மட்டும் அன்று வில்லை உடைக்காமல் இருந்திருந்தால், அன்னலும் நோக்கி அவளும் நோக்கியதெல்லாம் utter waste ஆகியிருக்குமே!
ஆக, மனிதர்களிலும் அந்த காலத்தில் பெண் தான் ஆணை தேர்வு செய்தாள்.  ஒரு ஆணின் மரபணுக்கள் மறுமைக்கு பரவுவதும், வீணாகி சூனியமாகி போவதும் ஒரு பெண்ணின் முடிவை பொருத்து தான் இருந்தது. அதனால் அக்கால பெண்களுக்கு ஆண்களின் மேல் கொஞ்சம் பவர் இருக்க தான் செய்தது.
இந்த ஏற்பாடு யானைக்கும், சிங்கத்திற்கும், புலிக்கும் சரிபட்டு வந்தாலும், மனித ஆணுக்கு இது கொஞ்சம் நெருடலாக இருந்தது…….”இவள் என்ன நம்மை தேர்வு செய்வது, அதற்கு பதில் இவளை நாம் தேர்வு செய்துவிட்டால், அப்புறம் எல்லா பவரும் நமக்கு தானே?”  அதனால் பெண்ணின் இந்த கலவியல் தேர்வு முறையை முறியடிக்க ஆண்கள் பல ஐடியாக்களை பிரயோகித்தார்கள்.  அதில் முக்கியமானது: ஆணை தேர்வு செய்ய தனக்கு அதிகாரம் இருப்பதாக இவள் நினைத்தால் தானே வம்பு, அப்படி ஒரு அதிகாரமே தனக்கு இல்லை என்கிற அளவிற்கு அவள் மனதை மாற்றிவிட்டால், அதன் பிறகு அவளை அடக்கி ஆள்வது சுலபமாகிவிடுமே. 
ஒருவரையோ, ஒரு பாலினத்தையோ, ஒரு இனக்குழுவையோ, அடக்கி ஆள சில சுலபமான யுத்திகளை மட்டும் பயன்படுத்தினால் போதும். இந்த யுத்திகளை காலம் காலமாய் மனிதர்கள் பிறரை அடிமைகளாக்க பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.
யு 1)  ”பிறவியிலேயே நீ தாழ்த்தி, கடவுள் உன்னை அப்படி ஈனமாகவே படைத்தார், அதனால் இயல்பிலேயே நீ மட்டம், நான் தான் உசத்தி” என்கிற ஒரு தாழ்வு மனப்பான்மையை முதலில் அவர் மனதில் அழுத்தமாக பதிய வைக்க வேண்டும்
யு 2) “நீ தாழ்த்தி என்பதற்கு நிரூபனங்கள்…” என்று அவருக்கு இயல்பாக இருக்கும் உடல், மன, சமூக அமைப்புக்களை மட்டம் தட்டி, அதையே ஏதோ அசிங்கம் மாதிரி சித்தரித்து அவர்களுகென்று மான உணர்வே இல்லாத அளவிற்கு அவர்கள் மூளையை மழுங்கடிக்க வேண்டும். 
யு 3) ஏதோ காலத்தில் அவர்கள் நன்றாக வாழ்ந்த சரித்திரம் இருந்தால், அதை அப்படியே இருட்டடித்து, ”உலகம் தோன்றிய காலத்தில் இருந்தே நீ அடிமையாக இருக்க மட்டுமே படைக்க பட்டவள்” என்று மாற்று கருத்துக்கு இடமே இல்லாதபடி சொல்லி வைத்துவிட வேண்டும்.  அப்போது தான் அவளுக்கு சுயமரியாதையே ஏற்படாது, தனக்கு நடக்கும் இழிவுகளை இயல்பு என்று ஏற்றுக்கொள்ளும் அடிமை மனநிலை ஏற்படும்
யு 4) நாம் இப்படி சொல்லி வைத்ததெல்லாம் சரியா தவறா என்று தானே யோசித்து ஆராய்ந்து கண்டுபிடிக்க அவள் முற்பட்டுவிட்டால், நம் குட்டு வெளிபட்டுவிடுமே. அதனால், “உனக்கு அறிவே இல்லை, உனக்கு படிப்பே வர்றாது” என்றும், “நீ புத்தகத்தை தொட்டாலோ, பாடத்தை கேட்டாலோ அது மஹாபாவம், அப்புறம் நகரத்தில் உன்னை எண்ணெய் கொப்பறையில் போட்டு வருத்தெடுப்பார்கள்,” என்று பயமுறுத்தி வைப்பது. கல்வி வாய்ப்புக்களே தராமல் அவளை மடச்சியாகவே வைத்திருப்பது……இதெல்லாம் அவள் சுய அறிவை ஆஃப் செய்து விடும் என்பதால் அதன் பிறகு அவளை நம் இஷ்ட்டபடி வளைத்து போடலாமே.
யு 5)  இப்படி எல்லாம் நாம் மூளை சலவை செய்து வைத்தும், அவள் நமக்கு ஊழியம் செய்யாமல் வேறு எவனிடமாவது ஓடிவிட்டாள்?  அதனால், “நீ எனக்கு மட்டுமே விஸ்வாசமாய் இருந்து, நான் எவ்வளவு மோசமாய் இருந்தாலும் பதிபக்தியோடு என்னை கவனித்துக்கொண்டால், சொர்கத்தில் உனக்கு ஒரு சீட்டும், வரலாற்றில் உனக்கொரு நல்ல பெயரும், பீச் ஓரமாய் உனக்கொரு சிலையும் கிடைக்கும்….” என்று வாக்குருதிகளை அள்ளி தெளித்தால், ஏற்கனவே அச்சம், நாணம், மடம், பயிற்ப்பு என்று இருக்கும் இந்த அற்ப பெண்ணுக்கு நம் யுத்திகள் புரியவா போகிறது…..அது பாட்டிற்கு அடிமையாய் இருப்பதில் ஆனந்தம் காணும்.  இவளை போல இன்னும் பல அடிமைகளை சேர்த்து வைத்து மரபணுக்களை மடமடவென்று பரப்பிக்கொண்டால், மரபணு போட்டியில் இந்த ஆணுக்கு தானே வெற்றி.....
ஆனால் இதில் தான் பிரச்சனையே ஆரம்பித்தது.  பவரே இல்லாத சூழ்நிலையிலும் தனக்கென்று ஒரு பவரை உருவாக்கிக்கொண்டாள் பெண்.

Tuesday, September 28, 2010

உயிர் மொழி: 6

தாய்மை வெளிபாடுகள்


இயற்கையின் அமைப்பு இது தான்: மிருகங்களின் எண்ணிக்கை அதிகமாகும் போது, இதில் யார் பிழைப்பார்கள் என்பதில் கடும் போட்டி நிலவுகிறது. Struggle for survival எனும் இந்த போட்டியில் அதிகம் சாப்பிடுவதற்கோ, அதிகம் சம்பாதிக்கிறதுக்கோ, அதிக அழகு சொட்டுவதற்கோ எல்லாம் வெற்றி கிடைப்பதில்லை. அதிக எண்ணிக்கையில் மரபணுக்களை பரப்பிக்கொள்பவற்களுக்கே வெற்றி. இந்த வெற்றியை பெற வேண்டுமானால் ஒவ்வொரு தாயும் தன் குட்டிகளுக்கு நல்ல ஜீன்ஸ், (மரபணுக்களை) மட்டும் கொடுத்தால் போதாது. இந்த மரபணுக்களை வைத்து சூழ்நிலைக்கு ஏற்றாற்மாதிரி எப்படி தன்னை தானே மாற்றிக்கொண்டு தொடர்ந்து ஆட்டத்தில் ஜெயிப்பது என்கிற வாழ்வியல் யுத்திகளான memes, மீம்ஸையும் குட்டிகளுக்கு சொல்லி தரவேண்டும். இப்படி சொல்லி தருவதில் பெண்குட்டிகளுக்கு வேறு மீம்ஸும் ஆண் குட்டிகளுக்கு வேறு மீம்ஸும் கற்பித்தாக வேண்டும்.

பெண் துணையை தேடிபோகாது, தானாய் வரும் துணையோடு சேர்வது மட்டும் தான் அதன் வேலை. ஆனால் ஆண் பெண்ணை தேடிக்கொண்டு போயாக வேண்டும். அதுவும் ஏதோ ஒரு பெண்ணோடு சேர்ந்துவிட்டால் குட்டிபிறக்காதே. தன் இனத்தை சேர்ந்த பெண்ணோடு கூடினால் மட்டும் தானே குட்டி பிறக்கும். ஆக, தன்னினம் என்பது எது? அதில் பெண் என்றால் எப்படி இருப்பாள், அவள் உடலை எப்படி கையாள வேண்டும் என்று தெரிந்திருக்க வேண்டும்…..அப்போது தான் அந்த குட்டி வெற்றிகரமாக தன் மரபணுக்களை பரப்பிக்கொள்ள முடியும்.

அதே போல பெண் குட்டிக்கு பிள்ளை வளர்ப்பு, பராமறிப்பு, வேட்டுவ வித்தைகள், அதை அடுத்த தலைமுறைக்கு சொல்லிதரும் யுத்திகள் ஆகிய மீம்களை தாய் சொல்லி தரவேண்டும். இப்படியாக ஆண்குட்டிகளுக்கு சில மீம்ஸ், பெண் குட்டிகளுக்கு வேறு சில மீம்ஸ் என்று இந்த எல்லா விவரங்களையும் தாய் தான் சொல்லித்தந்தாக வேண்டும். இதை எல்லாம் அவள் சொல்லித்தர தவறினால் அவள் குட்டிகள் அவள் மரபணுக்க்ளை செம்மையாக பரப்பாது, இப்படி பரப்பாமல் விட்டால் அவள் வம்சம் அழிந்துவிடும் அபாயம் இருக்கிறதே……..இந்த துரதுஷ்டம் நிகழக்கூடாது என்று தான் எல்லா ஜீவராசிகளிலும் தாய் மிக உஷாராக இயங்குகிறது. ஆண் குட்டி பருவம் அடையும் பிராயம் வந்ததும், அதை தன் கூட்டத்தை விட்டு வெளியேற்றி, வெளி பிரசேத பெண்களை தேடி போக தூண்டுகிறது. இதனால் புது புது பிரசேதங்களில் இந்த தாயின் மரபணுக்களை கொண்டு சென்று பரப்பி, அதிக மகசூல் பெற்று தருகிறது இந்த ஆண்குட்டி.

ஆக பிள்ளை பிராயம் முழுக்க குட்டியை தன்னுடனே வைத்து வித்தைகளை சொல்லித்தரும் தாய், அது பருவம் அடைந்துவிட்டால், விலகி அதை சுயேட்சையாக இயங்க விட்டு அதன் மூலம் தன் மரபணுக்களை பரப்பிக்கொள்கிறாள். இது தான் ஒரு தாயின் இயல்பு. பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் மனிதர்கள் காட்டுவாசிகளாக வாழ்ந்த போது, மனித தாய்மார்களும் மற்ற விலங்கின தாய்களை போலவே செயல்பட்டார்கள், அதனால் தன் குட்டி காடு மலை பள்ளத்தாக்கு என்று பிழைப்பு/துணை தேடி போவதை அவர்கள் தடுக்கவில்லை. மாறாக ஊக்குவித்தார்கள். இன்றும் காட்டுவாசிகளாக வாழும் பழங்குடி மனிதர்களில் இப்படி மகனை அம்மாவிடமிருந்து பிரித்து காட்டு வாழ்விற்கு தயார் படுத்தும் சடங்குகள் நடப்பதுண்டு. இதை ”coming of age ceremony” வயதிற்கு வருதல் சடங்கு என்போம்.

ஆஃப்ரிக்க பழங்குடி மனிதர்கள் பருவ வயதை அடைந்த ஆண்களை அம்மாவிடமிருந்து பிரித்து கொண்டுப்போய் ஒரு தனி கூடாறத்தில் அடைத்து, அந்த பையன்களின் தோலை சிறு கத்தியால் கீறி காயங்களை ஏற்படுத்துகிறார்கள். இந்த வலி, வேதனை, இதனால் ஏற்படும் இன்ஃபெக்ஷன், அது ஏற்படுத்தும் காய்ச்சல், தனி கூடாரத்தின் இருட்டு, எல்லாவற்றையும் தாண்டி அந்த பையன் பிழைத்தால் அவன் காட்டுவாழ்விற்கு உகந்தவன், சர்வைவலுக்கு ஃபிட் ஆனவன் என்று அவனை சீராட்டி, பாராட்டி, கடா வெட்டி கொண்டாடி,”முழுமைபெற்ற ஆண்” என்று பட்டம் கொடுத்து ஏற்றுக்கொள்கிறார்கள். அதுவே அந்த பையன் குழந்தை மாதிரி அம்மாவை கட்டிக்கொண்டு, அவளை விட்டு பிரிய மறுத்தாலோ, உடல் வலியை பொறுத்துக்கொள்ள முடியாமல் பாதியில் ஓடி போனாலோ, உயிர் பிழைக்க தவறினாலோ, அவனை முழு ஆண் என்று ஏற்கமாட்டார்கள்.

கிட்ட தட்ட இதே போன்ற மரபு, தமிழ் நாட்டிலும் அந்த காலத்தில் இருந்து வந்ததை நம் இலக்கியங்கள் வெளிபடுத்துகின்றன. தாயை ஒட்டிக்கொண்டு இருக்கும் மகன்களை நிஜ ஆண்கள் என்று யாரும் கருதியதில்லை. அவளை விட்டு பிரிந்து போர், வேட்டை, வியாபாரம், கல்வி, துறவு என்று வெளி பிரதேசங்களுக்கு போன ஆண்களை தான் நிஜ ஆண்களென கருதினார்கள். அதிலும் தன் உடம்பில் காயமே இல்லாத ஆண்களை முழு ஆண்கள் என்று ஆதி தமிழர்கள் ஏற்றுக்கொண்டதில்லை, அதனால் பிறந்த சின்ன குழந்தை ஏதோ காரணத்திற்க்காக இறந்துவிட்டால் அதை அப்படியே காயமற்று புதைப்பது அதன் ஆண்மைக்கு களங்கம் ஆகிவிடும் என்று அந்த குட்டியின் உடம்பை வாலால் கீறி காயப்படுத்தி, அவனை ”முழுமைபெற்ற ஆண்” ஆக்கிவிட்டு தான் அவனை புதைத்தார்கள்.

அந்த கால தமிழ் பெண்களும் ஆண் குழந்தைகளை தங்களின் தனி சொத்தாகவோ, முதுமைகாலத்து காப்பீடுகளாகவோ கருதவில்லை. புறநானூற்று தாய் ஒருத்தி தன் கடமைகளும் எதிர்பார்ப்புகளும் என்ன என்பதை தெள்ள தெளிவாக தெரியபடுத்துகிறாள்:

ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே!

சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே!

வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே!

நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே!

ஒளிறு வால் அருஞ்சமம் முருக்கிக்

களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே!

ஆக அந்த காலத்து தமிழ் தாய் தன் மகனிடம் எதிர்பார்த்ததெல்லாம், காளை மாதிரி போய் போரில் யானைகளை தோற்கடித்து, வென்றுவரும் வீரத்தை மட்டுமே. அப்ப மரபணுக்கள் என்கிறீர்களா? இவ்வளவு வீரம் இருக்கும் வெற்றியாளன் மரபணுக்களை பரப்பாமலா இருப்பான்!

இந்த காலத்து தமிழ் தாய் எப்படி இயங்குகிறாள் என்பதற்கு இந்த புது கவிதை ஓர் உதாரணம்: மழையில் பையன் நனைந்துவிட்டானாம். ”ஏன் குடை எடுத்துட்டு போகலை, சளி பிடிக்க போகுது, ஜூரம் வரப்போகுது, கொஞ்சம் கூட பொருப்பே இல்லை”, என்று அப்பா, அண்ணா, தங்கை என்று எல்லோருமே பையனை திட்டினார்களாம். அம்மா மட்டும், “என் பையன் வெளியெ போகுற நேரத்துலயா வந்து தொலைக்கணும் இந்த சனியன் பிடிச்ச மழை” என்று மழையை திட்டினார்களாம். என்ன தாய்பாசம்…..என்பதாக அமையும் இந்த தற்கால புதுகவிதை.

இந்த கவிதையில் வரும் அம்மா பையனுக்கு புத்தி சொல்ல மாட்டாள், அவனுடைய தப்பு என்று வெட்ட வெளிச்சமாக தெரிந்தாலும் பிறர் மீது பழி போட்டு தன் பிள்ளைக்கு பரிந்து பேசுவாள், அவனுக்கு வீரத்தை புகட்டாமல் அவனை வெறும் ஒரு குழந்தையாகவே கடைசி வரை பாவிப்பாள்…..இவை எல்லாம் தான் ஓர் அதர்ஸ் தாய்க்கு உண்டான அடையாளங்கள் என்று இந்த கவிதை சொல்லிக்கொள்கிறது.

இந்த இரண்டு கவிதைகளுக்கும் உள்ள கால இடைவெளி இரண்டாயிரம் ஆண்டுகள் மட்டுமே. அதற்குள் தமிழ் தாயின் சிந்தனையும் செயல்பாடும் இப்படி தலைகீழாக மாறிவிட்டனவே, ஏன்?

Sunday, September 19, 2010

உயிர் மொழி: 5

அம்மா செண்டிமெண்ட்


தமிழக முதல்வர் எப்போது தொலைகாட்சியில் தோன்றினாலும், அவருக்கு வலது பக்கமாய் ஆளுயர பெண் சிலை ஒன்று தெரியும். அவருடைய அம்மா அஞ்சுகத்தின் சிலை. தலைவருக்கு தாய் பாசம், அதனால் அம்மாவின் நினைவாக தத்ரூபமான சிலையை வடித்து தன் பக்கத்திலேயே வைத்திருக்கிறார்….ஆனால் ஒன்று கவனித்தீர்களா? முதல்வர் அவருடைய அப்பாவுக்கு ஒரு சிலையை வைக்கவே இல்லையே? ஏன்?

தமிழக முன்னால் முதல்வர் மக்கள் திலகம் எம் ஜி ஆர் கூட அன்னை சத்யாவின் பெயரில் அத்தனை ஸ்தாபித்தார், ஆனால் அப்பா கோபாலனின் பெயரை எந்த நிருவனத்துக்கும் வைக்கவில்லையே, ஏன்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ”அம்மா என்று அழைக்காத உயிரில்லையே” என்று உருகி உருகி பாடினாரே, அப்பாவை பற்றி ஒரு வரி கூட பாடவில்லையே, ஏன்?

இவர்கள் என்ன? சாமானிய மனித ஆண்கள் அனைவருக்குமே அவர்கள் அம்மா தான் தெய்வம். அம்மா செண்டிமெண்ட் தான் உலகின் உச்ச கட்ட செண்டிமெண்ட். அப்பாவை அடிக்க கை ஓங்கும் மகன்கள் கூட அம்மா என்றால் அடங்கி போகிறார்கள். இந்த நிலை இந்தியாவில் மட்டும் இருப்பதில்லை. உலகெங்கும் உள்ள எல்லா மட்டத்து மனிதர்களுமே இப்படி தான் இருக்கிறார்கள். ஏன்? இந்த கேள்விக்கு பல பேர் பல பதில்களை முன்வைக்கிறார்கள்.

சிக்மெண்ட் ஃப்ராய்ட் சொன்ன பதில் தான் உலகை உலுக்கிய முதல் பதில்: எல்லா ஆண் குழந்தைகளுக்குமே தன் தாய் தான் முதல் காதலி. 2 – 3 வயதில் இவளை ரசித்து, இவள் எனக்கே எனக்கு தான் என்று உரிமை கொண்டாடுகிறார்கள் ஆண் குழந்தைகள். இதை எடிபெஸ் காம்ப்லெக்ஸ் என்றார் ஃபிராய்ட். அநேகமான ஆண்கள் 5 – 6 வயதிலேயே இந்த எடிபெஸ் காம்ப்லெக்ஸிலிருந்து மீண்டு விடுகிறார்கள், அம்மா என்பவள் அப்பாவின் மனைவி, நான் வளர்ந்து அப்பாவை போல பெரியவன் ஆன பிறகு எனக்கே எனக்கென்று வேறொருத்தியை மணந்துக்கொள்வேன் என்கிற புரிதலுக்கு மாறூகிறார்கள். ஆனால் சில ஆண்கள் இப்படி மீளாமல் தொடர்ந்து அம்மாவையே ஓவராய் நேசிக்கிறார்கள், எடிபெஸ் காம்ப்லெக்ஸில் சிக்கிக்கொள்கிறார்கள் என்றார் ஃபிராய்ட்.

அடுத்த பதிலை சொன்னவர் ஹாரி ஹார்லோ என்கிற அமேரிக்க விஞ்ஞானி. இவர் குரங்குகளை வைத்து, தாய் சேய் உறவை பற்றிய ஆராய்ச்சிகளை செய்தவர். இவர் தன் ஆராய்ச்சியில் குட்டி குரங்கை பிறந்த உடனே தன் தாயிடமிருந்து பிரித்து வளர்த்தார். ஆனால் வேளா வேளைக்கு உணவையும், விளையாட்டு பொருட்களையும் கொடுத்து ஊக்குவித்தார். இப்படி தன் தாயை சந்திக்காமலேயே தனிமையில் வாழ்ந்த இந்த குரங்கு பிற்காலத்தில் பிற குரங்குகளுடன் எப்படி பழகுகிறது என்று பரிசோதித்து பார்த்தால், ஊகூம், மற்ற குரங்குகளின் பக்கத்திலேயே போகவில்லை குட்டி. சரி, மற்ற குரங்குகளுடம் தான் விளையாடவில்லை, குறைந்த பட்சம் பெண் குரங்கை கண்டால் கூடவாவது தோன்றுதா என்று பார்த்தால், ஊகூம், பெண்ணை சீண்டக்கூட விரும்பவில்லை இந்த விசித்திர குட்டி. இதிலிருந்து ஹார்லோ கண்டுபிடித்த விஷயங்கள்: தாய் சேய் உறவு தான் குழந்தையின் சமூக பழக்க வழக்கங்களுக்கும், எதிர்கால காம உறவுக்கும் ஆதாரமே. அப்பா இல்லை என்றால் நஷ்டமில்லை, ஆனால் அம்மா இல்லையென்றால் முதலுக்கே மோசமாகிவிடும். அதனால் குரங்குகளில் மட்டுமல்ல, எல்லா உயிரினத்திலும் தாய்வழியாக தான் சமூகம் அமைகிறது. மனிதர்கள் உட்பட. இது தான் இயற்கையின் விதி.

இதை நிரூபவிப்பது போல லண்டன் ஸூவில் ஒரு சம்பவம் நடந்தது. அந்த ஸுவின் காப்பாளர் டெஸ்மண்ட் மோரிஸுக்கு அப்போது குழந்தை இல்லை. அதனால் அவர் மனைவி அங்கிருந்த காங்கோ என்கிற குட்டி சின்பான்சியை தன்னுடனேயே வைத்து, வளர்க்க ஆரம்பித்தார். காங்கோ சட்டை போட்டு கொள்ளும், ஸ்பூனில் சாப்பிடும், கழிப்பறையை பயன்படுத்தும், அவ்வளவு என்ன மிக அற்புதமாய் ஓவியம் வரையும். காங்கோ வரைந்த ஓவியங்களை ஒரு கண்காட்சியில் வைத்தார் மோரிஸ். பிகாசோவின் ஓவியத்தை விட அதிக விலை கொடுத்து இதை வாங்கினார்கள் கலைஆர்வளர்கள். அத்தனை சுட்டியாக, சமர்த்தாக இருந்த காங்கோ கடைசிவரை இனபெருக்கமே செய்யவில்லை, ஏன் என்று ரொம்ப காலம் சோதித்து பார்த்தார் மோரிஸ். கடையில் தான் அவருக்கு புரிந்தது: காங்கோ மனித பெண்ணால் வளர்க்க பட்டபடியால் அது தன்னையும் மனிதன் என்றே நினைத்திருந்தது, அதனால் திருமதி மோரிஸ் மாதிரியான பெண்களை தான் அதற்கு படித்தது. சின்பான்சி பெண்களை அதற்கு பிடிக்கவில்லை. ஆக, “நீ இந்த இனம்” என்கிற ஜீவ அடையாளத்தை தருவதே தாய் சேய் உறவு தான், அதனால் தாய் எந்த இனமோ அந்த இனத்திலேயே துணை தேடுவது தான் உயிரினங்களின் கலவியல் லாஜிக் என்று விளக்கினார் டெஸ்மெண்ட் மோரிஸ்.

இதற்கு ரொம்ப வருடங்கள் கழித்து மைக்கேல் மீனி என்பவர் எலிகளின் தாய் சேய் உறவை பற்றி ஆராய்ச்சி செய்யும் போது, இன்னொரு முக்கியமான விஷயத்தை கவனித்தார். தாய் எலிகள் குட்டி எலிகளை நாவால் தடவி சுத்தம் செய்யும். அதிலும் ஆண் குட்டி என்றால் கூடுதல் நேரத்திற்கு இப்படி தடவிக்கொண்டிருக்கும். ஏன்? என்று அந்த ஆண் குட்டிகளின் மூளை பரிசோதித்து பார்த்தால் தெரிந்த திடுக்கிடும் தகவல்: தாயால் இப்படி வருடப்பட்ட ஆண் எலிகளுக்கு மூளையில் புதிய இணைப்புக்கள் உருவாகி இருந்தன. ஆனால் தாய் வருடாமல் விட்ட ஆண்களுக்கு இந்த இணைப்புக்கள் ஏற்படவே இல்லை. இந்த இணைப்புக்கள் தான் எலி குட்டியின் எதிர்கால கலவியல் தேர்வுகளை முடிவுசெய்கிறன, ஆக ஆண் குட்டியின் கலவியல் விசையை உருவாக்குவதே அம்மா தான்.

ஃபிராய்ட், ஹார்லோ, மோரிஸ், மீனி ஆகிய எல்லோருமே ஒன்றையே தான் திரும்ப திரும்ப நிரூபவித்துக்கொண்டிருக்கிறார்கள். எல்லா ஜீவராசியிலும் ஆண்குட்டிக்கும் அதன் தாய்க்கும் ஒரு பிரத்தியேகமான பாச பிணைப்பு இருந்து வருகிறது. இந்த பந்தம் தான் சுய அடையாளம், எதிர்பாலின அடையாளம், சமூக நடத்தை, கலவியல் தேர்வுகள் ஆகிய அனைத்து முக்கியமான விஷயங்களையும் நிர்ணயிக்கிறது. அதனால் இயற்க்கை இந்த தாய் சேய் பந்தத்தை மேலும் அழுத்தமாக வலியுறுத்துகிறது. இதனால் தான் எல்லா ஜீவராசி குட்டிகளும் அம்மா செண்டிமெண்டுக்கு ஆட்பட்டு போகிறதுகள். இப்படி கண்மூடித்தனமாக அம்மாவை நேசிப்பது பிள்ளை பிராயத்தில் இந்த குட்டியின் பிழைப்பு திறனை அதிகரிக்கும்.

ஆனால் வயதுக்கு வந்து இனபெருக்க பருவத்தை அடைந்துவிட்டால் ஆட்டவிதிகள் அப்படியே மாறிவிடும். அதன் பிறகு அம்மாவை கட்டிக்கொண்டு இருப்பது மரபணுமுன்னேற்றத்தையும் பிழைப்பையும் பாதித்துவிடும், அதனால் அம்மாவை மறந்து அடுத்த தலைமுறையை நோக்கி போயாக வேண்டும். இப்படி போவதை அம்மாவே ஊக்குவிக்கும். மற்ற எல்லா உயிரினத்திலும் இயற்கையின் இந்த இரட்டை நிலை அமைப்பு மிக கச்சிதமாக வேலை செய்கிறது. ஆனால் மனிதர்களில் மட்டும் இது மக்கர் செய்கிறது…..ஏன் தெரியுமா?

Saturday, September 18, 2010

உயிர் மொழி: 4

பெண்பாலின் நிஜமுகம்


மோசமான மாமியார்கள் ஏன் உருவாகிறார்கள்? அதெப்படி இந்திய ஆண்களுக்கு மட்டும் தன் அம்மாவின் குறைகள் எதுவுமே கண்ணில் தெரிவதே இல்லை? என்று பல வாசகிகள் ஃபோனிலும் நேரிலும் போட்டு தொலைத்தெடுத்துவிட்டார்கள். ஆண்களை விடுங்கள், பெண்களுக்கே கூட தெரியாத ஓர் அறிவியல் ரகசியம் என்ன தெரியுமா? ஆண்களை விட பெண்களுக்கு தான் பவர் வேட்கை அதிகம்.

உலகெங்கும் இருக்கும் சர்வ ஜீவராசிகளின் பெண்பாலினத்தை கூர்ந்து கவனித்தால் வெட்டவெளிச்சமாக தெரிந்துபோகும் உண்மை, the female of the species is deadlier than the male அதாகப்பட்டது எல்லா உயிரிலும் பெண்பாலே மிக ஆபத்தானது. காரணம் பெண்பாலுக்கு தான் ஆணைவிட அதிகபட்ச வேட்டுவகுணமும் பிழைக்கும் திறனும் இருக்கிறது. இப்படி இருந்தாகவும் வேண்டும், காரணம், குட்டிகளுக்கு இரை தேடுவதும், அவற்றுக்கு வேட்டையை கற்றுத்தருவதும் பெண்ணின் வேலை தானே….இவள் சிறந்த வேட்டுவச்சியாக இருந்தால் தானே அவள் குட்டிகள் பிழைக்கமுடியும். அதனாலேயே இயற்கை பெண்களை பிறவி வேட்டைகாரிகளாக படைக்கிறது. மனிதர்களிலும் அப்படித்தான், ஆனால் ஒரு சின்ன வித்தியாசம், பிற பெண்பாலினம் நேரடியாக தன் வல்லமையை வெளிபடுத்தும். தனக்கு வேண்டிய பவரை தானே போராடி பெற்றுக்கொள்ளூம்.

ஆனால் மனித பெண்கள் தங்கள் பவர் தேவைகளை இப்படி நேரடியாகவோ பகிரங்கமாகவோ தீர்த்துக்கொள்வதில்லை. எல்லாமே மறைமுக தாய்வழி ஆதிக்கமாய் தான். காரணம் பிற ஜீவராசி தாய்கள் யாரையும் அண்டிப்பிழைப்பதில்லை, சுயமாக வாழ்கின்றன. ஆனால் மனித தாய்க்கு மட்டும் சமீபத்திய சில காலம் வரை யாரைவாவது, அண்டி பிழைக்க வேண்டிய நிர்பந்தம் இருந்தது, காரணம் நம் சமூக அமைப்பில் எல்லா அதிகாரங்களும் ஆண்களிடமே இருந்தன. அதனால் யாரையாவது ஒரு ஆணை பிடித்து, அவன் மேல் ஒரு ஒட்டுண்ணியாய் வாழ்ந்தாலே ஒழிய இவளுக்கென்று ஒரு வாழ்க்கையே இல்லை என்கிற நிலை தான் மனித பெண்களுக்கு.

ஆக இயற்கையின் விதிப்படி பெண் வேட்கையில் சிறந்தவளாய் இருந்தாக வேண்டும், ஆனால் மனித சமூக அமைப்பில் அவளுடைய வேட்டுவகுணம் வெளியே தெரிந்தால் ஆண்கள் ஆட்சேபிப்பார்கள். இந்த முரண்பாட்டை சரி செய்யவும் பெண்கள் பல வழிகளை வைத்திருந்தார்கள்.

முதல் வழி: மற்ற மிருக பெண்களை போல தானே வேட்டைக்கெல்லாம் போய் நேரத்தை விரயம் செய்யாமல் ஒரு ஆணை தேர்ந்தெடுத்து, அவனுக்கு பதி/புருஷன்/பிராணநாதா/பிரபோ என்கிற பதவிகளை கொடுத்து, அவனுக்கு கொம்பு சீவிவிட்டு, அவனை வேட்டைக்கு அனுப்பி, அவன் மூலமாய் உணவு, ஆதாயம், ஆற்றல் என்று பல வசதிகளை பெற்றுக்கொள்வாள். இந்த ஆணும் லொங்கு லொங்கென்று இவளுடைய ஆசைகளை நிறைவேற்ற தன் ஒட்டு மொத்த வாழ்நாளையே அற்பணித்துவிடுவான். தன் பங்கிற்கு இந்த பெண் அவனுடைய மரபணுக்களை மட்டும் பரப்பித்தர தன் கர்பப்பையை பயன்படுத்துவாள். இந்த கொடுக்கல் வாங்கல் திருப்தி கரமாய் இருந்தால் எல்லாம் ஓகே. ஏதோ காரணத்திற்க்காக, இந்த பெண் எதிர்பார்த்த அளவுக்கு இந்த ஆண் வேட்டையாடி வெற்றியை குவிக்கவில்லை என்றால் அடுத்து அந்த பெண் என்ன செய்வாள் தெரியுமா?

2) முன்பு தேர்ந்தெடுத்த ஆணை கழற்றிவிட்டு, இன்னொரு புதிய ஆணை அந்த பதவிக்கு உயர்த்திவிடுவாள். இப்படி பகிரங்கமாக இன்னொரு ஆணுடன் கூட தைரியம் இல்லாத பெண் என்ன செய்வாள்? 3) கள்ளத்தனமாக, ரகசியமாக வேறொரு ஆணுடன் கூடி, அவன் மூலமாய் தன் காரியங்களை சாதித்துக்கொள்வாள்.

4) இப்படி பகிரங்கமாகவோ, ரகசியமாகவோ தன் தேவைகளை தீர்த்துக்கொள்ள வாய்ப்புகள் அமையாத பெண் என்ன செய்வாள்? தன் மகனை வைத்தே தன் எல்லா nonsexual தேவைகளையும் தீர்த்துக்கொள்வாள். பல இந்திய குடும்பங்களின் நிலை இது தான். ”இந்த மனிஷனை கட்டிக்கிட்டு நான் என்ன சுகத்தை கண்டேன்? இந்த ஆள் சுத்த வேஸ்ட்! நீயும் அப்படி இருந்துடாதேடா, அம்மா உன்னை நம்பி தான் இருக்கேன், என் பிள்ளை தான் என்னை கரைசேர்க்கணும்” என்று புலம்பி, அழுதுவைத்தால் போதும். என்னமோ உலகத்தில் இவனுக்கு மட்டும் தான் தாய்பாசம் பொத்துக்கொண்டு வந்துவிட்டது போல உடனே பையன் அம்மாவை ”சந்தோஷமா வெச்சிக்கணும்” என்று சந்தனமாய் இழைய ஆரம்பித்துவிடுவான். ”அம்மா கஷ்டப்படும் போது, நான் மட்டும் எப்படி என் பொண்டாட்டியோடு தனியா ஹனிமூன் போறது” என்றூ அங்கேயும் அம்மாவை மடியில் கட்டிக்கொண்டு போன மடசாம்பிராணிகள் நம்ம ஊரில் இருக்கிறார்கள்! இந்த ஆடவர் குல திலங்களுக்கு தெரிவதே தெரியாது, இவர்கள் இப்படி அரும்பாடுபட்டு வீடு, வசதி, புடவை, நகை, உணவு, ஊருலா என்று ஆற்றுவதெல்லாம் ஒரு மகன் தன் தாய்க்கு செலுத்தும் நன்றியை அல்ல, ஒரு கணவன் கொண்டவளுக்கு செய்யும் கடமையை என்று. இப்படி தன் ஆண்குழந்தையை கணவன் ஸ்தானத்திற்கு உயர்த்தி அவன் மூலமாய் தன் பவர் தேவைகளை தீர்த்துக்கொள்ளும் பெண்கள் இந்தியாவில் ஏராளம். காரணம், மறுமணம் செய்துக்கொள்ளும் சுதந்திரமோ, கள்ள உறவு வைத்துக்கொள்ளும் தைரியமோ, நம்மூர் பெண்களுக்கு பெரும்பாலும் இருப்பதில்லை. அதனால் தங்கள் மகனை வைத்தே தங்கள் ஆட்டத்தை ஆடிமுடிக்க பார்க்கிறார்கள்.

5) சரி மகனே பிறக்கவில்லை, அல்லது பிறந்ததும் உதவாக்கரையாகிவிட்டதென்றால், அடுத்து அந்த தாய் என்ன செய்வாள்? தனக்கு பிறந்த மகளையே ஒரு மகன் மாதிரி வளர்த்து, அந்த பெண்ணை “the man of the family” என்கிற அந்தஸ்த்துக்கு உயர்த்தி, ஒட்டுண்ணி மாதிரி அந்த மகளை உறிந்து வாழ்வாள் தாய்.

6) இந்த எந்த வழியும் வேலை செய்யவில்லை, என்றால் கடைசி கட்டத்தில் பெண்ணே கோதாவில் குதித்து சுயமாய் போராட ஆரம்பித்துவிடுவாள். ஜான்சி ராணி மாதிரியும், கித்தூர் செங்கமா மாதிரியும். தங்கள் ஆக்ரோஷத்தை வெளிபடுத்தி பவர் தேவையை தானே சுயமாய் பூர்த்திசெய்துக்கொள்ளும் பெண்களை, கண்டு வியப்போம் அல்லது, ”சே, பொம்பளையா அடக்கமா இருக்கானு பார்றேன்” என்று மிக துச்சமாய் விமர்ச்சிப்போம். ஆனால் பால் வடியும் முகத்திற்கு பின்னால் அம்மா செண்டிமெண்ட் எனும் பிரம அஸ்திரத்தை தனக்கு சாதகமாய் பயன்படுத்தும் பெண்களை பார்த்தால், கை எடுத்து கும்பிடுவோம்…….அந்த அளவுக்கு கைதேர்ந்த வித்தகி பெண் என்று புரியாமலேயே.

இதில் பெரிய வேடிக்கை என்ன தெரியுமா? பெண்கள் எல்லா காலத்திலும் இந்த ஆறு வழிகளையும் பயன்படுத்திக்கொண்டே தான் இருக்கிறார்கள், தங்கள் ஆதிக்க ஆசைகளை தீர்த்துக்கொள்ள. ஆனால் நம் கண் முன்னாலேயே இது நடந்துக்கொண்டே இருந்தாலும் நமக்கு இது உரைப்பதே இல்லை. அதுவும் இந்த ஆட்டத்தை ஆடுவது நம் அம்மா என்றால் நம்மால் அதை உணரவே முடிவதில்லை…..லேசாய் பொறி தட்டினாலும் ”சே சே எங்கமா அப்படி இல்லப்பா” என்று நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோம். ஏன் தெரியுமா? இது பற்றி எல்லாம் அடுத்த இதழில்…..

Friday, July 23, 2010

உயிர் மொழி: மாமியார்த்தனம்….

தாயா தாரமா என்கிற இந்த குழப்பத்தில் நிறைய ஆண்கள் சிக்கிக்கொள்கிறார்கள். இந்த பிரச்சனைக்கு பஞ்சாயத்து செய்யவே பல ஆண்களின் பாதி பிராணன் போய்விடுகிறது. இன்றைக்கு இந்திய திருமணத்தில் ஏற்படும் மிக மோசமான விரிசல்களுக்கு காரணமே இந்த சமண்பாட்டு கோளாறு தான்.


உதாரணத்திற்கு இவரை எடுத்துக்கொள்வோமே, பெயரெல்லாம் சொல்லமுடியாது, தொழில் தர்மம் தடுக்கிறது, கதைக்காக வேண்டுமானால் இவரை பெயரை ரகு என்று வைத்துக்கொள்வோம். இவருக்கு திருமணமாகி பல ஆண்டுகளுக்கு இவர் அம்மாவின் பேச்சை கேட்டுக்கொண்டு தினமும் மனைவியை டார்சரோ டார்சர்…சும்மா அவளையும் அவள் குடும்பத்தையும் குறைசொல்லிக்கொண்டிருப்பது, கிடைத்த சாக்கிற்கெல்லாம் அவளை மட்டம் தட்டி அவமானப்படுத்துவது, உங்க வீட்டில் செய்தது/கொடுத்தது/பேசியது இத்யாதி இத்யாதி சரி இல்லை என்று எல்லாவற்றையும் நொட்டை சொல்லிக்கொண்டிருப்பது. இப்படியே இருந்தால் பாவம் மனைவி தான் என்ன செய்வாள். வேலைக்காவது போய் சற்று நேரம் குடும்ப பிரச்சனைகளை மறந்து நிம்மதியாக இருக்கலாம் என்றால் அதற்கும், “படிச்ச திமிர், வேலைக்கு போகிற திமிரு” என்றெல்லாம் சொல்லி, சமையல், குழந்தை பராமறிப்பு மாதிரியான விஷயங்களில் ஆப்படிக்க ஆரம்பித்தார் மாமியார். இதை தட்டிக்கேட்க துப்பில்லாமல், ”பெரியவங்கன்னா அப்படித்தான் பேசுவாங்க, அட்ஜெஸ்ட் பண்ணிக்கிட்டு போக தெரியலன்னா நீயெல்லாம் என்ன பொம்பளை,” என்று அதற்கும் மனைவி மேலேயே பழியை போட்டுவிட்டு எஸ்க்கேப் ஆனார் ஹீரோ.

பொருத்து கொள்ள முடியாமல் தனி குடித்தனம் போயிடலாமே என்று மனைவி மன்றாடி கேட்டுக்கொண்டால், “எங்கம்மா கிட்டேர்ந்து என்னை பிரிக்க பார்க்கிறியா?” என்று சண்டைக்கு வந்துவிட்டார் ரகு. சரி இதெல்லாம் இப்படி நடந்துக்கொண்டிருக்கும் போது மாமியார் என்ன செய்தார்? மாமனார் என்ன செய்தார் என்று தானே யோசிக்கிறீர்கள்? மகன் தன்னை விட்டு போய்விடுவான் என்கிற ஆதங்கத்தில் மாமியார் எல்லோருக்கும் ”நான் செத்துபோறேன்” என்று அறிவித்துவிட்டு, தடபுடலாக அதிகமாத்திரைகள் சாப்பிட்டு விட, மாமனார் அவசரமாக அவரை ஹாஸ்பிட்டலில் சேர்த்து ரகசியமாய் என்னை வந்து பார்த்து, சொன்னதாவது: ”என் மருமகள் பாவம் படாத பாடு படுகிறாள். ஒரு பெண்னை இன்னொரு பெண்ணே இப்படி துன்புறுத்துவதை என்னால் சகிக்கவே முடியவில்லை. என் மனைவியை எந்த காலத்திலும் என்னால் அடக்க முடிந்ததே கிடையாது, அழுகை, நச்சு, உண்ணாவிரதம், ”இந்த குடும்பத்திற்காக நான் எவ்வளவோ செய்தேனே, என்னை இப்படி படுத்துறீங்களே” என்கிற ஒப்பாறி, ”வீட்டை விட்டு போறேன்”, ”எல்லோருக்கும் சொல்லி நியாயம் கேட்குறேன்”, எதுவுமே பலிக்காவிட்டால் ”செத்து போறேன்” என்று பன்முனை தாக்குதலாக இமோஷனல் பிளாக்மெயில் செய்ய, நான் சூழ்நிலை கைதியாக ஏதும் செய்ய முடியாமல் மாட்டிக்கொள்கிறேன். இந்த லட்சணத்தில் இந்த தற்கொலை டிராமா வேறு. அவள் போட்டுக்கொண்டது வெறும் பத்து ஆண்டாசிட் மாத்திரை தான், அதில் எல்லாம் சாக மாட்டாள் என்று எனக்கும் தெரியும், அவளுக்கும் தெரியும். ஆனாலும் நான் அவளை இங்கே அட்மிட் செய்தது, கொஞ்ச நாளாவது நாங்கள் நிம்மிதியாக இருக்கலாம், அதுவும் இல்லாமல் நீங்கள் எப்படியாவது என் மனைவியை திருத்திவிடுவீர்கள் என்று தான்”

மாமியார்களை திருத்துவதென்னவோ ரொம்ப சுலபம் மாதிரி அவர் சொல்லிவிட்டு போனார். முழுக்க முழுக்க மனநலம் குன்றிய மனிதர்களை கூட சீக்கிரமே சரி செய்து ஓரளவு அவர்களது செயல்பாட்டை முன்னேற்ற முடியும், ஆனால் மோசமான மாமியாருக்கு மனமாற்றம் செய்வதென்பது அதை விட கடினமான வேலையாற்றே, இருந்தாலும் முயற்ச்சிக்கிறேன் என்று பெருந்தலைவியை பார்க்க போனேன்.

பால் வடியும் முகமும், என்னை போல பாவமான பெண் உலகிலேயே இல்லை என்பது மாதிரி ஒரு பாவ்லாவுமாக படுத்திருந்தார் மாமியார் அவர்கள். தன் மகனை பெற்று வளர்க்க அவர் பட்ட பாடுகளை அடுக்கி, இப்படியெல்லாம் அரும்பாடுபட்டு வளர்த்து ஆளாக்கிய தன் மகனை ”அந்த மூதேவி தலையனை மந்திரம் ஓதி கைக்குள் போட்டுக்கொண்ட” கதையை மாம்ஸ் நீட்டி முழக்கி, “அவனுக்கு ஆயிரம் பொண்டாட்டி கிடைப்பா டாக்டர், ஆனா இன்னொரு அம்மா கிடைபாளா?” என்று பஞ்ச் டைலாக் எல்லாம் அடித்து அசத்த, நான் இப்படி எல்லாம் பாடு பட்டு உங்கள் மகனை வளர்த்து ஆளாக்கியதற்கு அர்த்தமே இல்லாமல் போய்விட்டது போங்கள் என்றதும் மாமியார் யோசிக்க ஆரம்பித்தார்.

புழு, பூச்சில் ஆரம்பித்து, சிங்கம், புலி, கரடி, மனிதன் வரை எல்லா ஜீவராசியிலுமே தாய் என்பது குட்டிகளுக்காக ரொம்பவே மெனக்கெடத்தான் செய்கிறது. எந்த குட்டியும் என்னை பெற்றுக்கொள், எனக்காக சிரம்படு என்று தாயிடம் வேண்டிக்கொண்டு பிறப்பதில்லை. தாய் தான் வேண்டுமென்றே குட்டிகளை பெறுகிறது. இப்படி எல்லாம் தன் உடலை வருத்தி தாய் ஏன் குட்டிகள் போடவேண்டும்? காரணம் இது மட்டும் தான் அவள் மரபணுக்களை பரப்பிக்கொள்ள இருக்கும் ஒரே வழி. ஆக, தன் மரபணுக்கள் பரவவேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக, முழுக்க முழுக்க சுயநலமாக தாய் செய்யும் காரியம் தான் இனவிருத்தி.

இந்த இனவிருத்தியை மனித தாய் மட்டும் செய்யவில்லை. உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளும் செய்யும் அநிச்சை செயல் இது. மனிஷிக்காவது பிரசவிக்க, டாக்டர், பயிற்றுவிக்க வாத்தியார், கட்டுபடுத்த சட்டம், என்று எத்தனையோ ஊன்று கோல்கள் உள்ளன. ஆனால் பிறஜீவராசி தாய்மார்கள் இந்த எல்லா வேலையையும் தானே செய்கின்றன. ஆக தாய்மை சுமை என்று பார்த்தால் மனித தாயை விட, பிறஜீவராசி தாய்களுக்கு தான் அதிக பளு. இத்தனை செய்தும் இந்த பிற ஜீவராசிகள் தாய்கள் தன் கஷ்டத்தை சொல்லிக்காட்டி அதற்கு பிரதிஉபகாரம் எதிர்ப்பார்ப்பதில்லை. பிற ஜீவராசி குட்டீசும், இதை ஓவர் செண்டிமெண்டலாக எல்லாம் அனுகுவதில்லை, பிறந்தோமா, வளர்ந்தோமா, இனபெருக்கம் செய்தோமா, அடுத்த தலைமுறை எனும் தொடர் சிங்கிலியை உருவாக்கினோமா என்று மிக கேஷுவலாக வாழ்கின்றன. காரணம் இயற்க்கையை பொருத்த வரை, குட்டி வெற்றிகரமாய் இனபெருக்கம் செய்து தன் முந்தைய தலைமுறையிடமிருந்து பெற்ற மரபணுக்களை, சேதாரமின்றி, அடுத்தடுத்த தலைமுறைக்கு ஒரு அறுபடாத சங்கிலி தொடராய் பரப்புவதே குட்டி தாய்க்கு ஆற்றும் உதவியும் நன்றியும் ஆகும். இதை மீறி குழந்தை தாய்க்கு வேறு எதுவும் செய்ய வேண்டிய கடமை இருப்பதில்லை. சமூக கூட்டமாய் வாழும் யானை, டால்ஃபின், குரங்கு மாதிரியான ஜீவராசிகளில் முதுமையில் குட்டிகள் பெருசுகளை பராமறிக்கும், ஆனால் அதில் பாசம் இருக்குமே தவிற, கண்மூடித்தனமான அம்மா செண்டிமெண்ட் இருக்காது.

மற்ற ஜீவராசியில் எந்த தாயும், “நான் உன்னை பெற்றேனே, வளர்தேனே, எனக்காக நீ என்ன செய்தாய்?” என்றெல்லாம் பேரம் பேசி தாய் பாசத்தை பண்டமாற்றமாக்கி கொச்சை படுத்துவதில்லை. ஆனால் மனித தாய் மட்டும் கொஞ்சமும் சங்கோஜப்படாமல், மிக வெளிபடையாக தன் பதவியை துஷ்பிரயோகம் செய்கிறாள். சில சமயத்தில், தன் குட்டியின் இனபெருக்கமே தடைபடும் அளவுற்கு! மற்ற ஜீவராசி எதுலுமே இல்லாத இந்த விசித்திரம் மனித தாய்களில் மட்டும், அதிலும் சிலபேருக்கு மட்டும் நிகழ்வது ஏன் என்று யோசிக்கிறீர்காளா? இதற்கு விவகாரமான சில காரணங்கள் உள்ளன, அது பற்றி எல்லாம் அடுத்த இதழில்……………..

Wednesday, July 14, 2010

உயிர்மொழி: புது மாப்பிள்ளைக்கு….

அவளூடைய முன்னால் கணவனுக்கு பெண் தேடிக்கொண்டிருக்கிறார்கள். ஏன் இவள் திருமணம் என்ன ஆயிற்று என்கிறீர்களா? அதை நம்மூர் நீதி மன்றம் ஒரு செல்லா திருமணம் என்று தள்ளுபடி செய்துவிட்டது. செல்லா திருமணமா? ஏன்? என்றால், மேட்டர் இது தான், அவர்களுக்குள் முக்கியமான மேட்டரே நடக்கவில்லை. பிகாஸ் மாப்பிள்ளை சாருக்கு சிஸ்டம் ஒழுங்காய் வேலை செய்யவில்லை. சிஸ்டம் ஒழுங்காய் வேலை செய்யாதவனுக்கு இன்னொரு கல்யாணமா? என்று வியப்பாக இருக்கிறதா? அதை விட அந்த முன்னால் மனைவி சொன்னது இன்னும் வியப்பாக இருக்கும்: என்னை படுத்துன பாடு போதும், அவனால் இன்னொரு பெண்ணும் பாதிக்கபடக்கூடாதில்லை, அதனால் ஆம்பிளைனா எப்படி இருக்கணும், கல்யாணம்னா என்ன, பொண்டாட்டிகிட்ட எப்படி நடந்துக்கணும், செக்ஸ்னா என்னனு எல்லாம் அவனுக்கு புரியுறா மாதிரி நீங்க தான் சொல்லித்தரணும்….

அது சரி, இது மாதிரியான விசித்திரங்கள் சைக்கியாட்டியில் சகஜமாயிற்றே. இந்த பெண் தன் முன்னால் கணவனுக்காக வைத்த இதே கோறிக்கையை இன்னும் எத்தனையோ பெண்கள் தங்கள் நிகழ்கால கணவனுக்காக கேட்டுக்கொள்வது உண்டு…..கல்யாணம்னா என்னனே தெரியாம கட்டிக்கிட்டு, இப்ப போட்டு என் தாலிய அறுக்குறார். எப்படியாவது அவருக்கு புரியுறா மாதிரி சொல்லி கொடுத்து என் வாழ்க்கைய காப்பத்துங்க என்று புலம்பும் பெண்களின் எண்ணிக்கை ரொம்பவே அதிகம்.

அதெப்படி கல்யாணம் என்றால் என்ன என்று கூட தெரியாத பையன்கள் இருப்பார்களா? அதுவும் ’உயிர் தவசிறுது, காமமோ பெரிதே” என்று அந்த காலத்து பெண் புலவர்கள் பாடி வைத்த இந்த தமிழ் திருநாட்டில்! என்று நீங்கள் ஆட்சரியப் பட்டால், கசப்பான உண்மை இது தான்: இன்றூம் நிறைய ஆண்களுக்கு திருமணம் என்பது ஒரு குறிப்பிட்ட வயதுக்கு வந்த பிறகு, “அம்மா அப்பா, ஆசை படுறாங்க, எல்லாரும் செய்துக்குறாங்க நானும் செய்யலன்னா, அசிங்கமா போயிடும்” என்பதற்காக நடக்கும் ஒரு சடங்கு மட்டுமே. பெண்களையாவது சின்ன வயதிலிருந்தே, “இன்னொருத்தன் வீட்டுக்கு போக போறவ” என்று சொல்லி சொல்லியே ஏதோ ஒரு அளவிற்கு அவர்களை தயார் செய்து வைக்கிறார்கள் வீட்டு பெரியவர்கள். ஆனால் ஆண்களை இப்படி தயார் செய்வதில்லை, அதனால் தான் திருமணம் என்கிற இந்த அமைப்பில் ஆண்கள் ரொம்பவே திக்குமுக்காடி போகிறார்கள். அவர்களின் அறியாமை பெண்களையும் பாடுபடுத்தி விடுகிறது.

திருமணத்தின் முதல் நிலை: துணை தேர்வில் இருந்தே ஆரம்பிப்போமே. அந்த வாலிபன் மெத்த படித்து வெளிநாட்டில் வேலையில் இருப்பவன். முப்பது வயது நெருங்குகிறதே, கூட இருக்கும் பசங்களுக்கு எல்லாம் கல்யாணம் ஆகிவிட்டதே, எத்தனை நாள் தான் படம் பார்த்து படுக்கையில் புரண்டுக்கொண்டிருப்பதாம், என்றெல்லாம் பல வாராக யோசித்து, “பொண்ணு பாருங்க” என்று ஜாடை மாடையாகவும், அது பலிக்காத போது நேரடியாகவும் சொல்லி விட்டான் பையன். ஜாதகம் பார்த்து, நிறம், வசதி, வருமாணம், அந்தஸ்து பார்த்து, இதனால் பல நூற்றுக்கணக்கான பெண்களை கழித்து கட்டி, இறுதியில் மூன்றே பெண்களின் வரலாற்று குறிப்பை கொடுத்தார் அம்மா. அதில் ஒரு பெண்ணை காட்டி, “இந்த பொண்ணை தான் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு” என்று அம்மா சொல்லிவிட, பையனும் சுறுசுறுப்பாக அம்மா சிபாரிசு செய்த பெண்ணை முதலில் போய் பார்த்தான். ஆனால் அந்த பெண் அவனுடைய உலகமயமான சிந்தனைக்கு ஒத்துவரவில்லை. லிஸ்டில் அடுத்த பெண்ணை பார்த்தான், அவளை என்னவோ அவனுக்கு பிடித்து போனது…..அம்மாவிடம் சொன்னால் முகம் சுளித்தாள். இப்போது பையனுக்கு ஒரே குழப்பம், தனக்கு பிடித்த பெண்ணை தேர்ந்தெடுப்பதா, அல்லது அம்மாவுக்கு பிடித்த பெண்ணை தேர்ந்தெடுப்பதா? தனக்கு பிடித்த பெண் என்றால் அது அம்மாவுக்கு செய்யும் துரோகம் ஆகாதா? அம்மாவுக்கு பிடித்த பெண் என்றால் குறைந்த பட்சம் அம்மாவாவது திருப்தி அடைவார்கள், அம்மாவுக்காக தியாகம் செய்துவிட்டால் தான் என்ன, என்பது பையனின் பெருங்குழப்பம்.

இதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அம்மாவுக்கு தெரியாதா? பெரியவங்க பார்த்து பண்ணி வெச்சா தப்பா போகாது, அதனால அம்மா சொல்லுகிற பெண்ணை மனமாற ஏத்துகிட்டா, போக போக தானா ஆசை வந்திரும் என்கிற கட்சியா நீங்கள். கல்யாணம் யாருக்கு, உனக்கு தானே? நீ தானே வாழப்போறே, உனக்கு பிடிச்ச பொண்ணா பாருப்பா, என்கிற கட்சியா நீங்கள்?

உங்கள் கருத்து ஒரு பக்கம் இருக்கட்டும். அறிவியல் என்ன சொல்கிறதென்று பார்போமே:

1. திருமணம் சொர்கத்தில் நிச்சையமானது என்கிற பேத்தல்களை எல்லாம் மீறி, திருமணம் என்பது ஒரு ஜெனடிக் ஒப்பந்தம், இரண்டு பாலினரின் மரபணுக்கள் கலந்து ஆரோகியமான அடுத்த தலைமுறை உருவாகிட சமூதாயம் ஏற்படுத்திய ஒரு சடங்கு. அதனால் தான் திருமணம் என்றாலே, “சாந்தி முகூர்த்தம்” என்கிற சடங்கை முதலில் செய்கிறார்கள்.

2. இப்படி ஒரு ஆணும் பெண்ணும் இணைய வேண்டும் என்றால் அவர்களுக்குள் செக்ஷுவல் கெமிஸ்டிரி சரியாக ஒருங்கிணைய வேண்டும். இந்த கலவியல் கவர்ச்சி என்பது அவரவர் சொந்த விஷயம், இதில் பெற்றவர்கள் கூட கருத்து சொல்லிவிட முடியாது.

3. அம்மா அப்பாவை திருப்தி படுத்த, அவர்களை பார்த்துக்கொள்ள, என்ற காரணங்களுக்காக எல்லாம் ஒருவனோ ஒருத்தியோ திருமணம் செய்துக்கொள்கிறார்கள் என்றால், அவர்கள் தங்கள் மரபணுக்களை பரப்பிக்கொள்வதற்கு முக்கியத்துவம் தரவில்லை என்று அர்த்தமாகிறது. மனித விதிகளின் படி, ”அடடா, என்ன ஒரு அம்மா செண்டிமெண்ட், என்ன ஒரு குடும்ப அக்கறை” என்றெல்லாம் நாம் பாராட்டினாலும், இயற்க்கையை பொருத்தவரை, “உன் மரபணுக்களை எதிர்காலத்திற்கு பரப்பிக்கொள் என்றால், உன்னை பெற்றவர்களின் கடந்த கால மரபணுக்களை பராமறிக்க நேரத்தை வீண்டிக்கிறாயே.” ரிவர்ஸ் கியரில் மரபணு பயணம் செய்தால், சர்வைவல் ஆஃப் தி ஃபிட்டெஸ்ட் என்கிற இந்த ஆட்டத்தில் தோற்றுவிட்டதாய் தானே அர்த்தம்.

அதற்காக, அம்மா அப்பாவை அப்படியே விட்டுவிடுவதா, நம்மை பெற்று, வளர்த்து ஆளாக்கியவர்களை இப்படி உதாசீனப்படுத்துவது அநியாயமாகாதா? அதுவும் சரி தான், இந்த ஈக்குவேஷனை எப்படி சமன் படுத்துவது என்பதை பற்றி எல்லாம் அடுத்த இதழில்

உயிர் மொழி

ஈரக்கூந்தலுடன் வந்து வாசலில் கோலம் போட்டு, கணவனுக்கு ஆவி பறக்கும் காபி கொடுத்து, துளசி மாடத்தை சுற்றிவந்து, கலாச்சார பாரம்பரியங்களை அடி பிரளாமல் கடைபிடிக்கும், “பொண்ணுனா இப்படி இருக்கணும்!” என்று பெயர் வாங்கும் பெண் அவள். அத்தனை அழகு, அடக்கம், ஒடுக்கம். தன் வீடு உண்டு வேலை உண்டு என்று இருப்பாள். அதிர்ந்துக்கூட பேச மாட்டாள். திருமணமாகி பதினைந்து வருடங்கள் ஆகிவிட்டிருந்தன. இரண்டு மணியான குழந்தைகள். யாரும் பார்த்தால் பொறாமை படக்கூடிய வாழ்க்கை தான். ஆனால் யாருக்கும் தெரியாத ரகசியம் என்னவென்றால் அந்த குடும்ப தலைவி, கணவன் வேலைக்கு போன அடுத்த நிமிடம் தன் செல்ஃபோனில் இன்னொரு காதலுடன் மணிக்கணக்கில் பேசி, சிரித்துக்கொண்டு இருந்தாள். அவனிடம் ஒரு நாள் பேசவில்லை, இல்லை, பேச கொஞ்சம் தாமதமாகிவிட்டாலும் போதும் அவளால் அதை தாங்கிக்கொள்ளவே முடியாது. உடனே இருப்புக்கொள்ளாமல் தவிப்பதென்ன, பட படவென வருவதென்ன, பார்ப்பவர் மேலெல்லாம் எரிச்சலுற்று கோபப்படுவதென்ன. இந்த புதியவனுடன் பேச ஆரம்பித்ததிலிருந்து இவளுக்கு தன் கணவனுடைய நெருக்கமே பிடிப்பதில்லை…. தன் கணவனை விட்டு விட்டு இன்னொரு ஆளோடு இப்படி கொஞ்சிக்கொண்டிப்பது தவறு என்று அவளுக்கு குற்ற உணர்ச்சி குத்தாமல் இல்லை…..இருந்தாலும் இந்த வழக்கத்தை அவளால் விட முடியவில்லை. அதனால் மிக மிக ரகசியமாய் இவளது தொலைப்பேசிக்காதல் தொடர்ந்துக்கொண்டே இருந்தது.


அதெப்படி, இந்த தமிழ் திருநாட்டில் ஒரு பெண் இப்படி கற்புக்கெட்டு நடக்கலாமா? இது பத்தினிதர்மத்துக்கு புறம்பானது அல்லவா? கட்டின கணவனை விட்டுவிட்டு ஒருத்தி இப்படி எல்லாம் கண்டவனோடு கடலை போட்டுக்கொண்டிருக்கலாமோ? என்று நாம் என்னதான் வியாக்கியானம் பேசினாலும், இது போன்ற நடப்புக்களை தடுக்க முடிவதில்லை. காரணம் மனிதன் நியமித்த விதிகள் எல்லாவற்றையும் கடந்து, எல்லாம் வல்ல இயற்கை ஏற்கனவே ஏற்படுத்தியுள்ள வேறு சில விதிகளும் இருக்கின்றன. இந்த விதிகள் ரொம்பவே வலிமையானவை என்பதால், இவற்றுக்கு நாம் உட்பட்டுவிடுகிறோம். விரும்பியோ, விரும்பாமலோ.

இதற்கு நேர்மாறாகவும் நடப்பது உண்டு. அவன் அந்த பெண்ணை உயிருக்கு உயிராய் நேசித்தான், அவள் வேண்டாம் வேண்டாம் என்று பல தடைகளை முன் நிறுத்திய போதும், அவளை கன்வின்ஸ் பண்ணி மசிய வைத்தான். வேறு வேறூ ஜாதிகள் என்பதால் வழக்கம் போல பெருசுகள் பெரிதாய் மறுத்தார்கள். குடும்ப மானம், குல கௌரவம், லொட்டு லொசுக்கு என்றெல்லாம் அவர்கள் மொக்கை போட்டுக்கொண்டிருக்க, சத்தம் போடாமல் பதிவு திருமணம் செய்துக்கொண்டு, பெற்றோருக்கு செக் வைத்தார்கள் காதலர்கள். வேறு வழி இல்லாமல் இந்த திருமணத்தை ஏற்றுக்கொண்டார்கள் இருவீட்டாரும். ஆனால் பையனின் அம்மா, “இந்த கல்யாணத்தை நான் ஏத்துக்கவே மாட்டேன்” என்று ஒரு தற்கொலை நாடகம் நடத்த, அன்றோடு தீர்ந்து போனது பையனின் ஆண்மை எல்லாம். அதற்கு பிறகு அவன் மனைவியுடன் அவனால் ஆசையாக இருக்கவே முடியவில்லை. காதலர்களாய் இருந்த போது, இவன் அவளை ஆசையாய் தொட்ட போதெல்லாம் அவள், “கல்யாணத்துக்கு அப்புறம்…” என்றூ காக்க வைத்த காலம் போய், இப்போது, இவள் அவன் எப்போதடா கிட்டே வருவான் என்று ஏங்கிக்கொண்டிருக்க, அவன் பக்கத்தில் வந்ததும், “எங்கம்மாவை நீ மதிக்கிறதே இல்லை,” என்று ஆரம்பித்தான் என்றால் ராத்திரி முழுக்க ஒரே ரம்பம் தான். அழகான பெண்டாட்டி ஆவலாய் பக்கத்தில் இருக்கும் போது அந்த நேரம் பார்த்து, அம்மாவை மதிக்கவில்லை என்று கவலை படுபவன் எல்லாம் ஒரு ஆம்பிளையா? வாழ்க்கைய என்ஜாய் பண்ண தெரியாத முட்டாளா இருக்கானே, இவன் மூஞ்சுக்கெல்லாம் ஒரு கல்யாணமா? என்று நீங்கள் கூட அவனை நிந்திக்கலாம். ஆனால் கசப்பான உண்மை என்ன தெரியுமா? இந்த ஓவர் அம்மா சொண்டிமெண்டினாலேயே ஆண்மையை இழந்து வாழ்க்கையில் தோற்றுப்போன ஆண்கள் ஏராளம். தன்னால் இப்படி மகன் ஊனமானி போனான் என்று தெரிந்தும், பையனை தன் கட்டுபாட்டிலேயே வைத்துக்கொண்டிருக்கும் தாய்குலங்கள் அதை விட ஏராளம். இப்படி கூட இருப்பார்களா?. இது இயற்கைக்கே புரம்பானதாயிற்றே. ஈ, கொசு, கரப்பான்பூச்சி கூட, யாரும் சொல்லித்தரமால் சமர்த்தாய் இனம் சேர்ந்து அடுத்த தலைமுறையை பெற்று பல்கி பெருகிக்கொள்கின்றனவே. இத்தனை அறிவும், ஆற்றலும் இருக்கும் மனிதன், இந்த பேசிக் மேட்டரில் கோட்டை விடுவானா? என்று நீங்கள் யோசித்தால், விந்தையான உண்மை என்ன தெரியுமா? இயற்கையின் விதிகளை மீறி, ஈ கொசு மாதிரியான ஜீவராசிகளுக்கு இயல்பாய் ஏற்படும் இச்சைகளை மீறி, மனிதர்களுக்கு என்று மட்டும் சில பிரத்தியேக விதிகள் உள்ளன. இந்த விதிகளுக்கு உட்பட்டு வாழ முயலும் மனிதர்களும் பலர் இருக்கிறார்கள்.

ஆக, எல்லா ஜீவராசிகளுக்கும் பொதுவாய் இருக்கும் சில universal விதிகள், மனிதர்களுக்கு மட்டும் பொருந்தும் சில தனி விதிகள் என்று இரண்டு நிலைகளில் மனிதர்கள் வாழ்கிறார்கள். இந்த இரண்டு செட் விதிகளும் ஒத்துப்போகும் போதும் பிரச்சனைகள் இருப்பதில்லை, ஆனால் இவை முரண்படும் போது ஏற்படும் பிரச்சனைகளுக்கு அளவே இல்லை! இவை ஏன் முரன்படுகின்றன? இதனால் தானே இவ்வளவு துன்பங்களும், குழப்பங்களும். யோசித்துபாருங்களேன்….ஆதிமனிதர்களுக்கு அதிசயமாய் இருந்ததெல்லாம் நமக்கு இன்று அற்ப சமாசாரமாகிவிட்டன. அவர்களுக்கு அற்ப மேட்டராய் இருந்ததெல்லாம் இன்று நமக்கு அசிங்கமாகிவிட்டன. ஆதிமனிதன் காலத்தில் இத்தனை வசதிகள் கிடையாது, உயிருக்கு எந்நேரமும் ஆபத்து, சாப்பாட்டிற்கு உத்திரவாதமே இல்லை, தனி மனிதனின் வாழ்விற்கு பெரிய மகிமை இருந்திருக்காது. ஆனால் இன்றூ, ஆதிமனிதன் நம்மை பார்த்தால், ஏதோ இறை அவதாரம் என்றல்லவா நினைப்பான்? நினைத்தால் பிடித்தவரின் முகத்தையும், குரலையும் செல்ஃபோனில் இருந்தே எடுத்து காட்டிவிடுவோம்! இதெல்லாம் ஆதிமனிதனுக்கு மாயாஜாலமாயிற்றே…..ஆனால் இத்தனை இருந்தும் என்ன, இன்னும் மனிதர்கள் சந்தோஷமாய் இல்லையே!

இத்தனைக்கும் இன்றைய மனிதர்களுக்கு சாப்பாட்டு பிரச்சனை இல்லை, வேலை இல்லா திண்டாட்டம் இல்லை, ஏன் உடல் கோளாறு கூட இல்லை….ஆனால் மனிதர்கள் இன்னமும் சோகமாகவே இருக்கிறார்கள். காரணமே உறவுகளில் ஏற்படும் விரிச்சல்கள் தான். எல்லா உறவுகளுமே இப்போது மெயிண்டேன் செய்வதற்கு கடினாகிக்கொண்டே போனாலும், இந்த ஆண் பெண் உறவு இருக்கிறதே, இது படுத்தும் பாடு ரொம்பவே அதிகம். அது ஏன் அப்படி? அதிலும் குறிப்பாக ஆண் பெண் அகஉறவுகளில், ஏன் இவ்வளவு பெரிய விரிசல்கள்? , உங்கள் மனதை ரொம்ப நாளாய் அறித்த அதே கேள்விகள் தான்…..ஆனால் அதற்கு நீங்கள் சற்றும் எதிர்பார்க்காத, திடுக்கிடும் பதில்கள். அடுத்த வாரத்தில் இருந்து……தவறாமல் படியுங்கள், திகைத்து போவீர்கள்!