Monday, September 12, 2011

வேட்டுவ மூளை!

இவன் வேட்டைக்கு உகந்தவனா, இவன் மரபணுக்கள் வேட்டுவ வீரியம் கொண்டவனவா என்று தரம் பிரிந்து பெண்கள் ஆண்களை தேர்ந்தெடுத்தால், ஆண்களுக்கு வேட்டையின் தங்கள் திறமையை நிரூபவித்துக்காட்ட வேண்டிய நிர்பந்தம் எழுந்தது.


ஆனால் இதில் ஒரு பெரிய பிரச்சனையே இருந்தது. புலி, சிங்கம், ஓநாய் மாதிரி மனிதன் பரம்பரை வேட்டுவன் அல்லவே. இவன் குரங்கு வம்சாவழியிலிருந்து வந்தவனாயிற்றே. குரங்குகள் பெரிதாய் வேட்டையாடாதே. அப்படியே பார்த்தாலும், இயல்பில் எல்லா ஜீவராசிகளிலுமே ஆணை விட பெண் தானே அதிக திறமையாய் வேட்டையாடும். இவனோ ஆண், ஆனால் வேட்டையில் சிறந்து விளங்கினாலே ஒழிய பெண் இவனோடு கூடமாட்டாள் என்கிற நிலைமை….ஆனால் இவனுடைய மரபணுக்கள் லேசுபட்டவை இல்லையே…..எந்த சூழ்நிலையிலும் தன்னை மீட்டுருவாக்கம் செய்து ஜெயித்துக்கொண்டே இருக்க முயல்வது தானே இவற்றின் ஸ்பெஷாலிட்டி……அதனால் மீண்டும் தம்மை புதுபித்துக்கொண்டன ஆணின் மரபணுக்கள். எப்படி என்று தானே கேட்குறீர்கள்:

இயற்கையின் பொது விதி: ஆண் பால் தான் பெண்ணை தேடி கண்டு பிடித்து கூட வேண்டும். அதனால் இயல்பிலேயே ஆண்களுக்கு தொலை தூரம் துணை தேடி போகும் தன்மை உண்டு. இன்றும் கூட இளவட்ட ஆண்கள் வயசுக்கு வந்துவிட்டாலே, ஏதாவது வண்டி பிடித்து அக்கம் பக்கத்து ஊர்களுக்கு போய் அங்கிருக்கும் பெண்களை எல்லாம் தரிசித்துவிட்டு வருவதையே ஒரு ஸ்வாரசியமான பொழுது போக்காய் வைத்திருக்கிறார்களே….அது தான் இயல்பான ஆடவர் குணம். இதற்காகவே ஆண்பால் மூளையில் தூரம், திசை, ஆகியவற்றை எடைபோட வல்ல பிரத்தியேக மையங்கள் உள்ளன. இந்த மையங்கள் பெண்பால் மூளையில் அவ்வளவு வலிமையாக இருப்பதில்லை. அதனால் தான் இன்றும் கூட பெண்களால் திறந்த வெளிகளில் திக்கு திசை அனுமானிக்க முடிவதில்லை. ஏதாவது நில குறிகள் (landmarks) இருந்தால் அவற்றைவைத்து இடங்களை அடையாளம் கண்டு கொள்ள முயல்கிறார்கள் பெண்கள். இப்படி இயற்கை துணை தேடலுக்காக ஆண்களுக்கு இயல்பாக அருளிய இந்த மூளை மையத்தை தான் ஆண்கள் மிக சாமார்த்தியமாக இரை தேடவும் பயன் படுத்திக்கொள்ள ஆரம்பித்தார்கள். போக போக இதில் செம்மை தேர்ச்சி பெற்றவர்களாகவும் மாறி போனார்கள்

இயற்கையின் அடுத்த அமைப்பு: ஆண்களின் மூளை இருக்கும் “உருவம் அறிந்து பொருத்தும் தன்மை” இதை stereognosis என்போம். கலவியின் போது பெண்பால் பெரிதாய் மூளையை பயன்படுத்த வேண்டி இருப்பதில்லை. சும்மா வெறுமனே அசையாமல் இருந்தாலே போதும். ஆனால் ஆணின் பணியோ ரொம்பவே நுனுக்கமானது. உடல் பாகங்களை மிக சரியாக ஒரிங்கிணைத்து, பொருத்தினாலே ஒழிய இனவிருத்தி ஏற்படாது. ஆக ஒரு ஜீவராசி தழைப்பதும், சுவடே இல்லாமல் மறிப்பதும் ஆணின் ஸ்டீரியோகுனோஸிஸ் என்கிற இந்த திறமையை பொருத்து தான். அதனால் இயற்க்கை ஆணின் மூளைக்கு மட்டும் இப்படி உருவங்களை உணரும் பிரத்தியேக மையத்தை அமைத்திருக்கிறது. குரங்காய் இருந்த போது இந்த மையத்தை வெறுமனே துணை சேர்க்கைக்காக பயன்படுத்தியவன், மனிதனாய் மாறி மாமிச வேட்டைக்கு போகும் போது, இதே மையத்தை ஆயுதம் தயாரிக்க பயன்படுத்த ஆரம்பித்தான். இதனால் மனித குலமே கூடுதல் பிழைக்கும் திறனை பெற்றது

இப்படி இயறக்கையில் ஏற்கனவே இருந்த அமைப்புக்களை வைத்து ஆண் வேட்டைக்கு தன்னை தயார் படுத்திக்கொண்டாலும், அடிப்படையில் இவன் வேட்டுவ வம்சாவழி இல்லை…..அதனால் வேட்டைக்குண்டான குறி பார்த்தால், வேகம் உணர்தல், திட்ட மிட்டு கூடி வேட்டையாடுதல், சமிஞ்சையின் மூலமாய் இரைக்கு தெரியாமல் உரையாடிக் கொள்ளுதல், என்பது மாதிரியான மற்ற மையங்கள் அவன் மூளையின் இருந்திருக்கவில்லை. ஆனால் இந்த மையங்கள் இல்லாமல் வேட்டையாட முடியாதே! இதற்க்காக புது புது மையங்களை மூளையில் உருவாக்கினாலோ, மூளையின் சுற்றளவு பெரிதாகிவிடும். மூளையின் சுற்றளவு ரொம்பவும் பெரிதாகிவிட்டால் மனித பெண்ணின் இடுப்பு வழியாக இந்த பெரிய தலையை பிரசவிப்பது என்பது பெரும் பாடாகிவிடும். இதுவே பெரிய இக்கட்டாகி போனது. மூளையில் புது மையங்களும் வேண்டும், ஆனால் மூளையின் மொத்த சுற்றளவும் பெரிதாகாமல் பிரசவத்திற்கு தோதான சைஸிலேயே இருக்க வேண்டும் என்றால்………..அதற்கும் ஒரு வழியை கண்டு பிடித்தன ஆணின் மரபணுக்கள்: பேச்சுக்கு உண்டான மையத்தை ஒரு வேட்டுவன் ரொம்பவும் பயன் படுத்த முடியாதே…….அவன் பலநாட்கள் அமைதியாய் பதுங்கி இருந்து தானே வேட்டையாடவே செய்வான், ஆக எப்படியும் பேச்சு அவனுக்கு உதவ போவதில்லை. அடுத்து முகத்தை பார்த்து உணர்வை புரிந்துக்கொள்ளும் மையமும் வேட்டையின் போது ரொம்பவும் தேவை படாது………அப்புறம் இவன் பாட்டிற்கு “அய்யோ பாவம் இந்த குட்டி மான்.” என்று முகம் பார்த்து உருக ஆரம்பித்துவிட்டான் என்றால் வேட்டையை கொட்டை விட்டு விடுவான், அப்புறம் இவன் குட்டிகள் பட்டினி கிடக்க நேரிடலாம். அதனால் இந்த முகத்தை பார்த்து ஃபீல் செய்யும் மையமும் அவனுக்கு அவ்வளவாக தேவை படவில்லை. ஒரே சமயத்தில் பல விஷயங்களை போட்டு மனதில் உலப்பிக்கொண்டே இருந்தாலும் அவனால் வேட்டையில் கவனம் செலுத்த முடியாது. அதனால் multi tasking மையமும் ஒரு வேட்டுவனுக்கு தேவை இல்லை. பல நாட்களுக்கு ஏக மனதாய் ஒரே குறியாய் கவனம் சிதறாமல் காத்திருந்தால் தான் அவன் வேட்டையில் வெற்றி பெறவே முடியும்……..ஆக கூட்டி கழித்து பார்த்தால், மொழி மையம், முகபாவத்தை கிரகிக்கும் மையம், பலவிஷயங்களை ஒரே சமயத்தில் ஒரிங்கிணைத்து யோசிக்கும் மையம் ஆகியவை எல்லாம் வேட்டைக்கு தேவைபடவில்லை. அதனால் இந்த மையங்களுக்காக அதுவரை ஒதுக்கிய இடத்தை பெரும்பாலும் காலி செய்துவிட்டு, வேட்டைக்கு வேண்டிய புதிய தேர்ச்சிகளை வெற்றிடங்களில் நிரப்பின ஆண்களின் மரபணுக்கள்.

இந்த மாற்றங்களினால் மனித ஆண் கை தேர்ந்த வேட்டுவன் ஆனான். ஆனால் அதற்கு மேல் பெண்களின் மனதையோ, முக பாவத்தையோ புரிந்துக்கொண்டு இனிமையாய் பேசும் தன்மையை அவன் இழந்து விட்டான். இரை கிடக்கிறதோ இல்லையோ, ஒரே இலக்கை துரத்திக்கொண்டு போய், தவமாய் தவம் கிடந்து அதில் பெரிய ஸ்வாரசியம் உணரும் விசித்திரமான குணத்தையும் பெற்றான். அதனால் ஆண் பெண் என்கிற இந்த இரண்டு பாலினத்திற்கும் பெரிய மன இடைவெளி உருவாக ஆரம்பித்தது. அதற்கு மேல் ஒருவரை மற்றவர் புரிந்துக்கொள்ளுவது கடினமாகிவிட்டது. அனால் புரிந்துக்கொள்வதை விட, பிழைத்துக்கொள்ளுதல் அந்த காலத்தில் முக்கியமாக பட்டதால் ஆணின் மூளை மாற்றங்களை பெண்கள் சட்டை செய்துக்கொள்ளவில்லை…………உணவு கொண்டு வரும் வரை எல்லாமே ஷேமம் தான் என்று இருந்து விட்டார்கள். ஆனால் போக போக ஆணின் மூளை மாற்றத்தினால் பல பிரச்சனைகள் தலை தூக்க ஆரம்பித்தன………அவற்றைபற்றி எல்லாம்………..