Saturday, November 21, 2009

Thursday, November 19, 2009

Tuesday, November 17, 2009

ஆண்களை ஹாண்டில் செய்ய: அத்தியாயம் 26

ஆண்களைத் தேர்ந்தெடுக்கும்போது பெண்கள் செய்யும் இன்னொரு மஹா பெரிய தப்பு என்ன தெரியுமா? `மாப்பிள்ளை என்ன படிச்சிருக்கார்?' என்று படிப்பிற்கு மட்டுமே பெரிய முக்கியத்துவம் தருவதுதான்.


இது என்ன பெரிய அநியாயமா இருக்கே! மாப்பிள்ளை படிச்சவரா இருக்கணும்னு நினைக்கிறதெல்லாம்கூட ஒரு தப்பா? பையன் படிச்சிருந்தாதானே நிறைய சம்பாதிக்க முடியும்? உயர் பதவி வகிக்க முடியும்? என்று நீங்கள் ஆட்சேபிப்பது எல்லாம் சரிதான். ஆனால் நீங்களே ஒரு விஷயத்தை கவனித்திருப்பீர்களே. வெறும் படிப்பிற்கும் ஒருவர் வாழ்வில் அடையும் வெற்றிக்கும் எந்த நேரடியான சம்பந்தமும் இல்லை. பிழைக்கத் தெரிந்தவன் படிக்காவிட்டாலும் வெற்றி பெற்றே தீருவான். பிழைக்கத் தெரியாதவன் என்ன படித்தாலும் தேறவே மாட்டான்.

உதாரணத்திற்கு இரண்டு ஆண்களை எடுத்துக் கொள்வோமே. முதலாம் ஆண் நிறைய படித்தவர். ஒரு என்ஜினியரிங் டிகிரி, ஒரு மருத்துவ டிகிரி, அதற்கு மேல் ஒரு ஸ்பெஷலிஸ்ட் டிகிரி. அதுவும் போதாதென்று நிர்வாகத்துறையிலும் ஒரு கொசுறு டிகிரி. இத்தனையும் ஒரே ஆண் படித்திருக்கிறான் என்றால் அவன் எப்பேர்ப்பட்ட அறிவுக் களஞ்சியமாக இருப்பான். இத்தனை சரஸ்வதி கடாட்சம் கொட்டும் இந்த அறிவுக் கொழுந்தை கட்டக் கொடுத்து வெச்சிருக்கணுமே என்று தானே எல்லோரும் நினைப்பார்கள். ரொம்பத் தங்கமான பையன். எப்போதுமே புக்கும் கையுமாதான் இருப்பான்' என்று அவன் உறவினர்கள் எல்லாம் அவனுக்கு தரச் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்கள் என்றால் பாருங்களேன்.

இவ்வளவு படிப்பறிவுள்ள இந்தப் பையனுக்குத் திருமணம் முடிவானது. `நாங்க எல்லாம் ரொம்ப ஆச்சாரமான குடும்பம் தமிழ் கலாச்சாரம்னா எங்களுக்கு உயிர். எங்க வீட்டையே கோயில் மாதிரி வெச்சிருப்போம். அவ்வளவு பக்திமான்கள். இந்து முறைப்படி சாஸ்திரம் சம்பிரதாயம் எல்லாம் சரியா பார்த்து முறைப்படி கிராண்டா கல்யாணம் பண்ணித் தரணும். ஒரு சடங்கு கொறஞ்சாலும் நாங்க ஏத்துக்கமாட்டோம்'' என்று மாப்பிள்ளை வீட்டார், அக்கு வேறு ஆணி வேறாக சடங்குகளை பட்டியல் போட்டார்கள்.

ஆஹா என்ன ஒரு கலாச்சார பாரம்பரியம் மிக்க குடும்பம் என்று எல்லோரும் மனமார பாராட்டி மாப்பிள்ளை வீட்டார் கேட்டபடியே கிராண்டாக எல்லா ஏற்பாட்டையுமே செய்தார்கள். முகூர்த்த நேரமும் வந்தது. அட்சதையும் கையுமாக எல்லோரும் ஆசி கூற காத்திருக்க, ஐயர் எல்லோரும் தொட்டு ஆசிர்வதித்த தாலியை தேங்காயின் மேலே வைத்து மாப்பிள்ளையிடம் நீட்டினார். மும்முரமாய் மந்திரம் ஓதியபடியே. மாப்பிள்ளைப் பையன் தாலியை எடுக்காமல் பார்க்க `முகூர்த்த நேரமாச்சு தாலிய எடுத்து கட்டுங்க' என்று தாம்பாளத்தை மாப்பிள்ளையின் கையடியில் நீட்டினார். மாப்பிள்ளை இடது கையால் தாலிக் கயிற்றின் ஒரு முனையை மட்டும் தூக்கி எடுக்க, மறுமுனை படக்கென சரிய அதை உடனே மணப்பெண் லபக்கென்று பிடித்து நிறுத்த ஐயர் அவசரமாக தாலிக் கயிற்றை தானே எடுத்து மாப்பிள்ளையின் கையில் திணித்து `கட்டுங்க' என்று கெட்டிமேளத்திற்கு சிக்னல் கொடுத்துவிட்டு, `மாங்கல்யம் தந்துனானே நாம் மமஜீவன ஹேதுனாம்ஞ்' பாட ஆரம்பிக்க பீ பீ டும் டும் சத்தம் கேட்டதும் கூடி இருந்தவர்கள் எல்லாம் உடனே அட்சதையைத் தூவி வாழ்த்தி முடித்தார்கள்.

போட்டோகிராஃபர் தாலி கட்டும் சீனை டைட் குளோஸப்பில் புகை மட்டும் எடுக்கலாம் என்று படக் படக் என கேமிராவை அழுத்தித்தள்ளினார். அப்போதுதான் எல்லோரும் கவனித்தார்கள். மாப்பிள்ளை இன்னமும் தாலியைக் கட்டவே இல்லை என்று. `என்ன ஆச்சு?' என்று எல்லோரும் வியக்கத் தாலி கயிற்றை பத்திரமாக இரண்டு கைகளிலும் கெட்டியாக பிடித்துக் கொண்டு மாப்பிள்ளை அட்சதை வந்து தன் மேல் விழாபடி பெண்ணைவிட அதிக அடக்கமாய் தலை குனிந்து கொண்டிருந்தார். ``என்ன இது தாலி கட்டி முடிங்கோ... முகூர்த்தம் முடியப் போகுது' என்று ஐயர் எரிச்சல் பட்டுவிட்டு மீண்டும் ஒருமுறை கெட்டிமேளத்திற்கு சிக்னல் கொடுத்து `மாங்கல்யம் தந்துனானே' சொல்ல, இம்முறையும் மாப்பிள்ளை தாலிக் கயிற்றைப் பிடித்துக் கொண்டு சும்மாவே வேடிக்கை பார்க்க, பதறிப்போன பெண்ணின் அக்கா, `தாலிய கட்டுங்க சீக்கிரம்' என்று மாப்பிள்ளையின் கையை பெண்ணின் கழுத்தைச் சுற்றி கொண்டு வர அப்போதும் மாப்பிள்ளை முடிச்சுப் போடாமல் விழிக்க, கடைசியில் அக்காளே தங்கைக்குத் தாலியைக் கட்டி முடிக்க வேண்டியதாயிற்று. இந்த கண்கொள்ளா காட்சியை டைட் குளோஸப்பில் பார்த்துக் கொண்டிருந்த கேமராக்காரர்களும் தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த பந்து மித்திரர்களும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். `என்னதிது பெரிசா தமிழ் கலாச்சாரம் சாஸ்திரம் சம்பிரதாயம்னு எல்லாம் வாய் கிழிய பேசினாங்க. இந்த மாப்பிள்ளைக்கு தாலி கூட கட்டத் தெரியலையே. சரியான சின்ன தம்பி கேசா இல்ல இருக்கான்? இதை கல்யாணம் பண்ணிக்கிட்டு இந்தப் பொண்ணு என்ன பாடு படபோகுதோ?'

அவர்கள் சொன்னதைப் போலவே அவன் மனைவி நிறைய பாடுகள் படத்தான் செய்தாள். நிறைய படித்திருந்தானே தவிர அந்தப் பையனுக்கு யாரிடம் எப்படி நடந்து கொள்வது என்ற அடிப்படை அறிவு கூட இருக்கவில்லை. மனைவியை விட்டுட்டு தான் மட்டும் போய் தனியாகவே கல்யாண விருந்து சாப்பாட்டை மொக்குவதென்ன, எதற்கெடுத்தாலும் `அம்மா அம்மா' என்று அவர் முந்தானையைப் பிடித்துக் கொண்டே அலைவதென்ன, தன்னுடைய சொந்த உறவினரிடம் கூட முகம் கொடுத்துப் பேசாமல் ஏதாவது ஒரு புத்தகத்தினுள் தலைமறைவானதென்ன, பெரியவர்கள் சிறியவர்கள் என்று மட்டு மரியாதையே தெரியாமல் மாமனாரையே படு ஜோராய் சொல்லி அழைப்பதென்ன. `என்னதிது. படிச்சவன்னு சொன்னீங்களே, கொஞ்சம்கூட பண்பே இல்லாம இருக்கானே இந்தப் பையன்' என்று எல்லோரும் வியந்து போனார்கள்.

எல்லோரையும் விடுங்கள். இந்தப் படிப்பு கேஸை மணந்த பெண்ணின் கதியோ பெரிய கேலிக் கூத்தாகிப் போனது. இவள் அவன் முகத்தைப் பார்த்து பேசினால் போச்சு. `எதற்கு என் முகத்தையே பார்க்கிறாய்' என்று கோபித்துக் கொண்டு அவள் பார்வை வளைவை விட்டு விலகிவிடுவானாம். இதுவே இந்த லட்சணம் என்றால், தாம்பத்திய வாழ்க்கையைப் பற்றி சொல்ல வேண்டுமா? சரி. தம்பதி சமேதராய் கோயில் குளம் என்று சுற்றி வந்தாலாவது பையனுக்கு கொஞ்சம் மன்மத அருள் கிடைக்காதா என்று இருவரையும் கோயிலுக்கு அனுப்பினார்கள். `பூ வாங்கலாமா?' என்று மனைவி கேட்க மாப்பிள்ளை விறுவிறுவென்று போய் சாமிக்கு சாத்தும் மாலையை வாங்கி வர, மனைவி ரொம்பவே நொந்து போய் ஏமாற்றம் தாளாமல் அம்மன் சன்னதியின் முன்னால் நின்று, `கடவுளே இப்படி ஒரு இடியட்டா எனக்கு புருஷனா அமையணும்னு' என்று வாய் விட்டு புலம்பித் தீர்க்க இது வேறு பையன் காதில் விழுந்து தொலைக்க, கேட்க வேண்டுமா? `என்னைப் பார்த்தா இடியட்டுன்னு சொன்ன? என் படிப்பென்ன. என் பதவி என்ன, என் வீட்டை வந்து பார். என் காரை வந்து பார். என் கால் தூசி பெற மாட்டாய் நீ. உங்கப்பனை வந்து என் கால் செருப்பை லிக் பண்ணைச் சொல்லு' என்று உலகில் பெண்களைத் திட்ட என்னென்ன கெட்ட வார்த்தைகள் உண்டோ அவை அத்தனையும் சொல்லி பையன் மனைவியை அர்ச்சனை செய்ய, `அட கண்றாவியே' இவன் எத்தனை பட்டம் வாங்கி என்ன பிரயோஜனம்? வாயைத் திறந்தால் சரியான சாக்கடை' என்று அப்போதே மனமுடைந்து போனாள் மனைவி. சரி ஏதோ தெரியாம பேசுகிறான். போகப் போக புரிந்துகொள்வான். திருந்திவிடுவான் என்று அந்தப் பெண் எவ்வளவு பொறுத்துப் போயும், பையன் என்னவோ அறுரம் மாதிரி அறிவு இருந்தாலும், மக்கள் பண்பே இல்லாத மரக்கட்டை மாதிரிதான் தொடர்ந்து இருந்தான். இதனாலேயே உடன் வேலை செய்பவர்கள், வாடிக்கையாளர்கள் என்று எல்லோருமே அவனை, ``சரியான முசுடு'' என்று ஒதுக்கித்தள்ள அந்த கோபத்தையும் மூட்டை கட்டிக் கொண்டு வீட்டிற்கு வந்து மனைவியைப் போட்டு வறுத்தெடுத்தான். இவன் இம்சை தாங்காமல் திருமணமான சில மாதங்களிலேயே அவன் மனைவி விவாகரத்துக் கோர, இத்தனை பட்டங்கள் வாங்கிய அந்தப் பையனின் மணவாழ்க்கை நூலறுந்த பட்டமாய் தொலைந்தேபோனது.

இனி அடுத்த பையனின் கதையைப் பார்ப்போம். அவனுக்கு நிறைய கேள்வி ஞானமும் உயர்ந்த சிந்தனையும் இருந்தாலும் அதென்னவோ தெரியவில்லை. கல்லூரிப் பாடம் என்றால் அப்படி ஒரு அலுப்பு. அதனால் ஏதோ கொஞ்சம் ஒப்பேற்றி பரீட்சையை செகண்ட் கிளாஸில் தேறி முடித்தான். `இந்தக் காலத்துல பொண்ணுங்க எல்லாம் ரொம்ப நிறைய படிக்கிதுங்க. நீ அட் லீஸ்ட் ஒரு பிஜீ முடிச்சாதான் கவுரவமா இருக்கும்' என்று வீட்டில் எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் அவனுக்கு பாடப் புத்தகம் என்றாலே செம்ம போர் அடித்தது. கூகுலிலும் விக்கிமீடியாவிலும் ஊரில் உள்ள அத்தனை விஷயங்களைப் பற்றி குடைந்து குடைந்து ஆர்வமாய் படிப்பான். யாராவது புதுத் தகவல் சுவாரசியமான சமாசாரம் பற்றி பேசினால் ஆசையாய் கேட்டுக்கொள்வான். ஆனால் பாடப் புத்தகம் என்றால் மட்டும் அலர்ஜி. அதனால் இளங்கலை படிப்பை முடித்ததும் சட்டுபுட்டு என்று ஒரு வேலையில் சேர்ந்து அதையே சாக்காகச் சொல்லி, படிப்பை நைஸாக தள்ளிப் போட்டு அப்படியே நிரந்தரமாக ஏற்றம் கட்டிவிட்டான். படிக்கத்தான் அவனுக்கு சோம்பேறித்தனமே தவிர வேலையில் பையன் படுசுட்டி என்பதால் மடமடவென வேலையில் உயர்வு பெற்று ஐந்தே வருடத்தில் மேல் நிலைக்கு வந்தான். கம்பெனியிலேயே அவன் திறமையைப் பார்த்து, மேற்கொண்டு ஏதேதோ டிரெயினிங்குக்கு அனுப்பினார்கள். எதிலுமே பாடம், பரீட்சை என்பதே இல்லை வெறுமனே பார்த்து புரிந்து கொண்டு செய்து காட்டும் தேர்வுகள் என்பதால் பையன் எல்லாவற்றையும் சரியாகச் செய்து தேறி அதிக வருமானம் ஈட்டும் அந்தஸ்துக்கு உயர்ந்தான்.

இப்படி வேலையில் பிஸியாக இருந்த நேரம் போக உடன் வேலை செய்த சகாக்களிடம் ஆண் - பெண் என்கிற பாரபட்சம் பார்க்காமல் நிறைய கதை அடித்து, பேசி, `பையன் ரொம்ப நல்லா பேசுறான். ரொம்ப நல்ல டைப்' என்று பெயர் வாங்கினான். உறவினர்கள் வீட்டில் கல்யாணம். இழவு என்றால் மூத்த மகனாய் லட்சணமாய் தன் குடும்பப் பிரதிநிதியாய் போய் தலையைக் காட்டுவதோடு நில்லாமல் எல்லோரிடமும் நிறைவாக பேசிவிட்டு வருவான்.

திருமண வயது வந்த போது இவனுக்கு பெண் பார்த்தார்கள். சொல்லி வைத்தாற் போல எல்லா பெண்களும் இவனை விட அதிகம் படித்திருந்தார்கள். ஆனால் இவன் குணம், ஆபீசில் இவனுக்கு இருந்த நல்ல பெயர், உறவினர் இவனைப் பற்றி கொடுத்த நற்சான்றிதழ் இவைகளை முக்கிய பரிந்துரைகளாக கருதி ஒரு புத்திசாலிப் பெண் அவனை திருமணத்திற்குத் தேர்ந்தெடுக்க, ஒரு சுப முகூர்த்த சுப தினத்தில் இருவருக்கும் திருமணம் நல்லபடியாக நடந்தேறியது. படிப்பே கதி என்றில்லாமல் பல பேரின் திருமணத்தை நேரிலும், சினிமாவிலும் பார்த்த பழக்கத்தில் மாப்பிள்ளைப் பையன் தானே தன் மனைவிக்கு லட்சணமாய் தாலிகட்டி தம்பதி சமேதராய் அவளுடன் உட்கார்ந்து திருமண விருந்தை சிரிப்பும் கேலியுமாக சாப்பிட்டு, அவள் குடும்பத்தினருடன் சுமுகமாய்ப் பேசி, மனைவியை ஃபஸ்ட் நைட் ஹனிமூன், மல்லிப்பூ, சினிமா, பீச், தலை தீபாவளி, பொங்கல், வளைகாப்பு, சீமந்தம் என்று அசத்தினான்.

அவள் அவனை விட அதிகம் படித்தவள்தான். ஆனால் அவனுக்குத்தான் வாழ்வியல் வித்தைகள் அதிகம் தெரிந்திருந்தன. அவன் நினைத்தால் எப்போது வேண்டுமானாலும் படிக்கலாம். எத்தனையோ தொலைதூர கல்வி மையங்கள் வேலை செய்தபடியே படிக்க ஏதுவாக இருக்கின்றனவே. தனக்கு வேண்டிய தகவல்களை தன் ஆர்வத்திற்காக அவன் தொடர்ந்து கற்றுக் கொண்டே இருந்தாலும் சும்மா பட்டம் பெறுவதற்காக படிக்க அவனுக்கு விருப்பமில்லை. வெறும் படிப்பு என்கிற அணிகலனை விட வேறு பல நற்குணங்கள் அவனுக்கு இருந்ததால் அவன் மனைவியைப் பொறுத்தவரை அவன்தான் இந்த உலகிலேயே மிகச் சிறந்த ஹீரோ. அவள் பட்டப்படிப்பைவிட அவன் மனதின் பட்டத்து ராணி என்ற ஸ்தானமே அவளுக்குப் பெரிய சந்தோஷத்தைத் தர... இருவரும் இன்னமும் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள்.

இப்போது சொல்லுங்கள். வெறும் படிப்பை மட்டும் வைத்து ஒரு ஆணைத் தேர்ந்தெடுப்பது புத்திசாலித் தனமாகுமா? அநேக சந்தர்ப்பங்களில் ஆண் ஆதிகம் படித்திருந்தால் அவன் வெறும் ஏட்டுச் சுரைக்காயாகத்தான் இருக்கிறான். அதிகம் படித்த ஆண்களைவிட அதிகம் படிக்காத ஆண்களே பெரிய சாதனைகளைப் புரிகிறார்கள் அதற்குப் பின்னால் ஒரு முக்கியமான உளநல உண்மை ஒன்று உண்டு. நாம் ஏற்கெனவே இந்த ஆண்களை ஹேண்டில் செய்வது எப்படியென்று ஆரம்பத்தில் சொன்னதுதான். பெண் மூளையில் மொழிக்கான மையம் மிகப் பெரிய சைஸில் இருக்கிறது. ஆண்களுக்கோ இந்த மையம் ரொம்பவே சின்னதாக இருக்கிறது. இதற்கான பரிணாம காரணம் பெண்கள் பல காலம் குகையில் தங்கி குழந்தைகளைப் பராமரித்தார்கள். ஆண்கள் பல மில்லியன் ஆண்டு காலமாய் அமைதியாகப் போய் வேட்டையாடி வந்தார்கள். அதனால்தான் இந்த மொழிவள மையத்தின் சைஸ் வித்தியாசம் எல்லாம்.

 இது இப்படி இருக்க நம்மூர் கல்வித் திட்டத்தைப் பாருங்கள். படிப்பது எழுதுவது ஒப்பிப்பது ஓதுவது பரீட்சை எழுதுவது என்று எல்லாமே மொழியின் அடிப்படையில்தான் இருக்கிறது. இதெல்லாம் பெரிய சைஸ் மொழிவள மையம் இருக்கிற பெண்களுக்கு சாதகமாக இருப்பதால்தான் எல்லா வகுப்புகளிலும் பெண் குழந்தைகள் சமர்த்தாக படித்து, அதிக மதிப்பெண்கள் வாங்குகிறார்கள். ஆனால் பாவம் ஆண்கள். அவர்களது இத்துனூண்டு மொழி வள மையத்தை வைத்துக் கொண்டு அவர்களால் எபபடி இத்தனை மொழிசார் பணிகளில் பிரகாசிக்க முடியும்? ஆண் குழந்தையிடம் விஷயத்தை செயல்முறையாக விளக்கி, `எங்கே எப்படி என்று சொல் பார்க்கலாம். நீ செய்து காட்டு பார்க்கலாம்' என்று கை வேலை வழியாக பரிசோதித்துப் பார்த்தால் பெண்களைவிட அவர்களே அதிக மதிப்பெண் பெறுவார்கள். துரதிர்ஷ்டவசமாக நமது பாடத்திட்டம் எல்லாம் பெண்களுக்கே சாதகமாக இருந்து ஆண்களுக்கு பெரும் இம்சையாக இருப்பதனால்தான் ஆண்களால் படிப்பில் பெரிதாக சாதிக்க முடிவதில்லை. ஆனால் என்னதான் பெண்கள் பள்ளியிலோ கல்லூரியிலோ அதிக மதிப்பெண் வாங்கினாலும் நடைமுறை வாழ்வில் ஆண்களே அதிகம் வெற்றி பெறுகிறார்கள். காரணம், வெளி உலகம் எனும் இந்தப் பரந்துவிரிந்த பட்டறையில் எழுதிக் காட்டினால் எல்லாம் மார்க் இல்லை. செய்து காட்டினால்தான் சாதிக்கவே முடியும் என்பதால் என்னதான் பரீட்சையில் கோட்டைவிட்டாலும் நிஜ வாழ்வில் ஆண்களே அதிகம் ஜெயித்து சாதிக்கிறார்கள்.

அதெல்லாம் இல்லையே. நிறைய ஆண் குழந்தைகள் பாடத்திலும் நிறைய மதிப்பெண் வாங்கத்தானே செய்கிறார்கள் என்று நீங்கள் ஆட்சேபித்தால் யூ ஆர் ரைட். இப்படியும் சில ஆண்கள் உண்டுதான். வெகு சில ஆண்கள் அதிக பட்ச அறிவுக்கூர்மை கொண்டிருந்தால் ரொம்பவே முயன்று இந்த மொழி சார் சமாசாரங்களிலும் சாதிக்கிறார்கள். இன்னும் சில ஆண்களை அதிக பட்ச அம்மா கோண்டாக இருந்தால், பெண்புத்தி தொத்திக் கொள்ள படிப்பில் ஜெயிக்கிறார்கள். இதையும் தாண்டி சமூகத்தோடு பழக கூச்சப்படும் பையன்கள். பிறரிடமிருந்து தப்பிக்க புத்தகங்களுக்குள் ஒளிந்து கொள்கிறார்கள். இப்படி பள்ளிப் பாடநூலைத் தவிர வேறு பேச்சுத்துணையே இல்லாத இது மாதிரி பிள்ளைகள் நிறைய மதிப்பெண்கள் வாங்கினாலும் முதல் கதையில் வந்த மக்கு மாப்பிள்ளையைப் போல வாழ்வியல் நுணுக்கங்களை கோட்டைவிட்ட வெறும் ஏட்டுச் சுரைக்காய்களாகி விடுகிறார்கள்.

ஆதலினால் சிநேகிதிகளே, ஆண்கள் அதிகம் படிக்காவிட்டால், அதை அவர்களுக்குப் பாதகமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். பள்ளிப் படிப்பு என்பது ஒரே ஒரு வகை ஞானம் மட்டுமே. பள்ளி, கல்லூரி எல்லாம் ஏதோ சமீப காலமாய் ஏற்பட்டவைதான். இந்த குறுகிய வட்டத்தை விட்டுவிட்டு விசாலமாக அவனை அளவிடுங்கள். காலாகாலமாய் பெண்கள் ஆண்களின் அறிவை அளவிட பயன்படுத்திய கேள்விகள் என்ன தெரியுமா? இவனுக்கு உலக விஷயம் தெரிகிறதா? பொது அறிவு இருக்கிறதா? பிழைக்கத் தெரிகிறதா? இவை எல்லாவற்றையும் விட மக்கட்பண்பு இருக்கிறதா? புது விஷயங்களை ஏற்றுக் கொண்டு தன்னை மென்மேலும் வளர்த்துக் கொள்ளும் ஊக்கம் இருக்கிறதா? மனைவி, மக்கள், குழந்தை, குடும்பம் என்கிற அமைப்பை கட்டிக் காப்பாற்றும் சாமர்த்தியம் இருக்கிறதா? உலகோடு ஒத்துவாழும் வித்தைகள் தெரிகிறதா? இவை எல்லாம் இருந்தால் அவன் படிக்கவே இல்லை என்றாலும் அவன் ஒரு மேதைதான். அவனை கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள். இவை இதுவுமே இல்லை. ஆனால் பெயருக்குப் பின்னால் வரிசையாய் நிறைய பட்டங்கள் மட்டுமே இருக்கின்றன என்றால், ச்சு. பையன் சுத்த வேஸ்ட். ஏதாவது பல்கலைக்கழகத்திற்கு அவனை தானமாய் கொடுத்துவிடுங்கள்.

Wednesday, November 4, 2009

ஆண்களை ஹாண்டில் செய்ய: அத்தியாயம் 25

என்ன சிநேகிதிகளே சென்ற இதழில் சொன்னதை வைத்து நியாய தர்மங்களுக்கு கட்டுபட்டு நடக்கும் இண்டெகிரிட்டியுள்ள நல்லவனாய் தேர்ந்தெடுக்கப் பழகிக்கொண்டீர்களா?


பல பேர் நினைக்கிறார்கள், நல்லவன் என்றால், சிகரெட் பிடிக்கக்கூடாது. மதுவை தொட்டே பார்த்திருக்கக்கூடாது பெண்கள் என்றாலே தெய்வம் என்று மட்டும்ட நினைத்து கையெடுத்து கும்பிடுபவனாக இருக்க வேண்டும். படிப்பு, வேலை, வீடு, ஆபீஸ் என்று மட்டுமே இருக்க வேண்டும். இப்படிப்பட்ட உத்தம புருஷனை கட்டிக்கொண்டால் தான் வாழ்க்கை இனிமையாய் இருக்கும் என்று பலர் நம்புகிறார்கள்.

இப்படிப்பட்ட ஒரு உத்தமபுத்திரனை எனக்கு தெரியும். அவனுக்கு சிகரெட் பிடிக்கத் தெரியாது மதுவென்றால் ‘‘உவாக்’’ சொல்லும் அளவுக்கு அப்படி ஒரு அருவெறுப்பு. வெளிநாட்டில் வாழ்ந்ததாலும் வாழ்நாள் முழுக்க சுத்த சைவமாக இருக்கும் மஹா கொள்கை வீரன். நாள் தவறாமல் சாமி கும்பிடுவான். இதை எல்லாவற்றையும் விட பெரிய ஹைலைட், அவன் பெண்களை நிமிர்ந்துக்கூட பார்க்க மாட்டான். அவன் எதிரில் ஒரு அப்சரஸே வந்து நின்றாலும் கொஞ்சம் கூட சலனப்படாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று எப்போதும் புத்தகமும் கையுமாக இருக்கும் அறிவுக் களஞ்சியம். படிப்பில் இத்தனை மும்முரம் காட்டியதால் அவன் தொழிலில் வெற்றியடைந்தான். வசதியாக வாழ்ந்தான். அவன் அம்மாவுக்கு அவனை நினைத்தால் அவ்வளவு பெருமை ‘‘என் பையனைப் போல ஒரு நல்லவன் இந்த அண்ட சராசரத்திலேயே இல்லை. இவனைக்கட்டிக்க கொடுத்து வெச்சிருக்கணுமே’’ என்று எல்லோரிடமும் அலட்டிக்கொள்வார்.

கொடுத்து வைத்தாளோ இல்லையோ இந்தப் பையன் அவன் பெற்றோர் பார்த்து பார்த்து சலித்து எடுத்துக்கொடுத்த பெண்ணையே திருமணம் செய்துக்கொண்டான். திருமணத்திற்கு முன்னால் அந்த பெண்ணிடம் பேசுவது, அவளை வெளியே கூட்டிப்போவது, அப்படி இப்படி ஜொள்விட்டு ஈஷிக்கொள்வது என்பது மாதிரியான ‘‘அசிங்கங்கள்’’ எதையுமே செய்ய அவனுக்குப் பிடிக்கவில்லை. ‘‘எங்கம்மா என்னை அப்படி எல்லாம் வளர்க்கலையாக்கும்’’ என்று அவன் பாட்டிற்கு தன் தொழிலிலேயே மும்முரமாய் இருந்தான். திருமண நாள் அன்று வரை தன் எதிர்கால மனைவியைப் பார்க்கவோ, பேசவோ அவன் முயற்சி செய்யவே இல்லை.

திருமணமும் இனிதே நடந்தேறியது. முதல் இரவு முடிந்தது. அதன் பிறகு இரண்டாம் மூன்றாம் இரவுகளும் தாண்டிப் போயின. வாரம், மாசம், வருஷம் என்று காலம் ஓடிக்கொண்டே போனது. ஆனால் அவன் மனைவி மட்டும் கண்ணகியை விட சிறந்த கற்புக்கரசியாக இருந்தாள். கண்ணகியை கோவலனாவது தொட்டிருந்தான். ஆனால் இவளை அவள் கணவன் கூட தொட்டிருக்கவில்லை. அந்த அளவுக்கு புனிதமான ஆத்மா அவள் புருஷன்! அவன் கையில் ஒரு புத்தகத்தைக் கொடுத்தால், இரண்டே மணி நேரத்தில் படித்து முடித்து விடுவானாம். ஆனால் அவன் மனைவியை மட்டும் வருடக்கணக்கில் திறக்காத புத்தகமாய் அப்படியே புதிது போலவே வைத்திருந்தான். ஏன் தெரியுமா?

அவன் அவ்வளவு நல்லவன்! ஒரு பெண்ணிடம் எப்படிப் பேச வேண்டும். அவளிடம் எப்படிப் பழக வேண்டும். அவளோடு எப்படி உறவு கொள்ளவேண்டும் என்பது மாதிரியான எந்தத் ‘‘தப்பு தண்டாவும்’’ செய்யத் தெரியாத அக்மார்க் கற்புக்கரசன் அவன், அட, இந்த கலிகாலத்துல இவ்வளவு நல்லவனா என்று யாரும் அவனைப் பாராட்டவே இல்லை.‘‘இப்படியும் ஒருத்தன் இருப்பானா? இவன் எல்லாம் ஒரு ஆம்பிளையா, இவன் மூஞ்சுக்கு கல்யாணம் ஒரு கேடா?....’’ என்று எல்லோரும் அவனைப் பரிகாசம் தான் செய்தார்கள்.

இத்தனைக்கும் அவன் ரொம்பப் படித்தவன் தான், பணக்காரன் தான்...எந்த விதமான கெட்ட பழக்கமுமே இல்லாத, சுத்த சைவமான நல்லப்பையன் தான். ஆனால் ‘‘சீ பாவம்’’ என்று அவனுக்காக இரக்கப்பட அவன் மனைவி ஒருத்தியை தவிர ஒட்டு மொத்த உலகமுமே அவனை ஒரு கோமாளியாகத்தான் பார்த்தது. யூ நோ வொய்.

‘‘எனக்கு எந்தத் தப்புமே செய்ய தெரியாது. நான் அவ்வளவு உத்தமனாக்கும்.’’ என்று இருக்கும் ஆண்களை இந்த உலகம் மதிப்பதே இல்லை... எல்லா விதமான ஜித்து வேலைகளையும் தெரிந்துக்கொண்டு, பிறகு என் தகுதிக்கு இது இது ஓக்கே. இது நாட் ஓக்கே என்று தனக்கென்று ஒரு தரத்தை தக்க வைத்து கொள்பவனையே சிறந்த ஆண் என்று நாம் அனைவரும் கருதுகிறோம்.

அதிலும் குறிப்பாக ஆண்-பெண் உறவு என்று வரும் போது, பெண்ணிடம் செக்ஸியாக நடந்துகொள்ள கூடத்தெரியாதவனை நிஜமான ஆண் என்று யாரும் மதிப்பதே இல்லை. அண்ணன்-தங்கை உறவிற்கும், காதலன்-காதலி அல்லது கணவன்-மனைவி உறவிற்கும் இருக்கும் முக்கியமான வித்தியாசமே இது தானே. அதனால் தானே, செக்ஸே இல்லாத திருமணத்தை சட்டம் கூட ஏற்றுக்கொள்வதில்லை.

அதனால் சிநேகிதிகளே, உங்களுக்கு ரூட் விடும் ஆண் நல்லவனா என்று பார்ப்பதை விட்டு விடுங்கள். ஓவர் நல்லவன் என்று தன்னை காட்டிக்கொள்ள முயலும் ஆண்கள் அநேக சந்தர்ப்பங்களில் ‘தில்’ இல்லாத கோழைகளாக தான் இருக்கிறார்கள். இந்த மாதிரி ஓவர் நல்லவர்களை கட்டிக்கொண்டு இளமையையும், நேரத்தையும் வீணடிக்க முடியுமா என்ன? நூறு சதவிகிதம் தூய்மையான தங்கத்தை வைத்து எதுவுமே செய்ய முடியாது. அதற்காக டோட்டல் தகரத்தைப் பார்த்து தேர்ந்தெடுக்க முடியுமா என்ன?

‘‘சந்தர்ப்பமே கிடைக்கவில்லை. எப்படி என்ஜாய் செய்வது என்றே தெரியவில்லை. அதனால் நான் ராமனாகிப் போனேன்.’’ என்று இருக்கும் ஆண் நல்லவன் அல்ல. அவன், இயலாமையில் தவிக்கும் கையாலாகாதவன். நல்லவனை தேர்ந்தெடுக்கிறேன் பேர்வழி என்று இது மாதிரி ஒரு ஞானப்பழமாக பார்த்து தேர்ந்தெடுத்து விடாதீர்கள். அப்புறம் இல்வாழ்க்கையே இம்சையாகி விடும். இந்த மாதிரி too good but fit for nothing ரக ஆண்களை நண்பர்களாக தூரத்திலிருந்து பார்த்து, ‘‘அட, இப்படிக் கூட ஆம்பிளைங்க இருக்காங்களா?’’ என்று அதிசயிக்கலாம். ஆனால் குடும்பம் நடத்தவெல்லாம் முடியாது.

அதற்காக, ‘‘சந்தர்ப்பம் கிடைத்ததோ இல்லையோ, அதற்கெல்லாம் காத்திராமல் நானே சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக்கொண்டு இதே திருப்பணியாய் திரிகிறேன்’’ என்று சதா சர்வ காலமும், ‘தீனி, தம்மு, சரக்கு, ஃபிகர்’, என்றே அலையும் அற்ப கேசாக இருந்தாலும் அவனை மனிதனாக கூட மதிக்க நமக்கு மனசு வராது! அதனால சிநேகிதிகளே, ஓவர் நல்லவனாய் இருந்து உயிரை வாங்கும் வெத்து கேசுகளையும், வாழ்க்கையை வெறும் அற்ப சிற்றின்பத்திலேயே செலவிட்டு வீணடிக்கும் குப்பை கேசுகளையும் ஓரம் கட்டுங்கள்.

இந்த இரண்டு எக்ஸ்டிரீம்களுக்கு இடையில் இருக்கும். ‘‘எனக்கு சிகரெட் பிடிக்கத் தெரியும். மது அருந்தத் தெரியும். பெண்களை கொண்டாடத் தெரியும். ஆனால் அதே வேலையாக இருப்பதில்லை. அந்தந்த வயசுல அதை அதை பரிசோதனை செய்து பார்த்தாச்சு. இப்ப அதை எல்லாம் தாண்டி வந்துட்டேன்’’ என்று களவும், கற்று மறக்கவும் தெரிந்த ஆணாய் தேர்ந்தெடுக்க முயலுங்கள். சந்தர்ப்பம் கிடைத்தும் அனுபவிக்க ஆசை இருந்தும், அதை அடக்கி ஆள பழகுகிறவனே கண்ணியமான ஆண். அவனைத் தான் நிஜ ஹீரோ என்று எல்லோரும் கொண்டாடுவோம்.

இப்படிப்பட்ட நிஜ ஹீரோ ஒருவனை எப்படி கண்டு பிடிப்பதாம் என்று தானே கேட்குறீர்கள்? சிம்பிள். உங்களை முற்றுகை இடும் ஆண்களை கவனமாகப் பாருங்கள். நல்லவன், கெட்டவன் என்கிற ஒரே அளவுகோலை வைத்து அவனை எடை போடுவதை நிறுத்துங்கள். நல்லவனை வைத்துக் கொண்டு நாமென்ன சாமியார் மடமா நடத்தப் போகிறோம்? சம்சாரவாழ்விற்கு ஒத்து வருவானா மாட்டானா என்கிற கண்ணோட்டத்தோடு மட்டும் அவனை அளவிடுங்கள். ஆல் தி பெஸ்ட்!