Wednesday, July 14, 2010

உயிர்மொழி: புது மாப்பிள்ளைக்கு….

அவளூடைய முன்னால் கணவனுக்கு பெண் தேடிக்கொண்டிருக்கிறார்கள். ஏன் இவள் திருமணம் என்ன ஆயிற்று என்கிறீர்களா? அதை நம்மூர் நீதி மன்றம் ஒரு செல்லா திருமணம் என்று தள்ளுபடி செய்துவிட்டது. செல்லா திருமணமா? ஏன்? என்றால், மேட்டர் இது தான், அவர்களுக்குள் முக்கியமான மேட்டரே நடக்கவில்லை. பிகாஸ் மாப்பிள்ளை சாருக்கு சிஸ்டம் ஒழுங்காய் வேலை செய்யவில்லை. சிஸ்டம் ஒழுங்காய் வேலை செய்யாதவனுக்கு இன்னொரு கல்யாணமா? என்று வியப்பாக இருக்கிறதா? அதை விட அந்த முன்னால் மனைவி சொன்னது இன்னும் வியப்பாக இருக்கும்: என்னை படுத்துன பாடு போதும், அவனால் இன்னொரு பெண்ணும் பாதிக்கபடக்கூடாதில்லை, அதனால் ஆம்பிளைனா எப்படி இருக்கணும், கல்யாணம்னா என்ன, பொண்டாட்டிகிட்ட எப்படி நடந்துக்கணும், செக்ஸ்னா என்னனு எல்லாம் அவனுக்கு புரியுறா மாதிரி நீங்க தான் சொல்லித்தரணும்….

அது சரி, இது மாதிரியான விசித்திரங்கள் சைக்கியாட்டியில் சகஜமாயிற்றே. இந்த பெண் தன் முன்னால் கணவனுக்காக வைத்த இதே கோறிக்கையை இன்னும் எத்தனையோ பெண்கள் தங்கள் நிகழ்கால கணவனுக்காக கேட்டுக்கொள்வது உண்டு…..கல்யாணம்னா என்னனே தெரியாம கட்டிக்கிட்டு, இப்ப போட்டு என் தாலிய அறுக்குறார். எப்படியாவது அவருக்கு புரியுறா மாதிரி சொல்லி கொடுத்து என் வாழ்க்கைய காப்பத்துங்க என்று புலம்பும் பெண்களின் எண்ணிக்கை ரொம்பவே அதிகம்.

அதெப்படி கல்யாணம் என்றால் என்ன என்று கூட தெரியாத பையன்கள் இருப்பார்களா? அதுவும் ’உயிர் தவசிறுது, காமமோ பெரிதே” என்று அந்த காலத்து பெண் புலவர்கள் பாடி வைத்த இந்த தமிழ் திருநாட்டில்! என்று நீங்கள் ஆட்சரியப் பட்டால், கசப்பான உண்மை இது தான்: இன்றூம் நிறைய ஆண்களுக்கு திருமணம் என்பது ஒரு குறிப்பிட்ட வயதுக்கு வந்த பிறகு, “அம்மா அப்பா, ஆசை படுறாங்க, எல்லாரும் செய்துக்குறாங்க நானும் செய்யலன்னா, அசிங்கமா போயிடும்” என்பதற்காக நடக்கும் ஒரு சடங்கு மட்டுமே. பெண்களையாவது சின்ன வயதிலிருந்தே, “இன்னொருத்தன் வீட்டுக்கு போக போறவ” என்று சொல்லி சொல்லியே ஏதோ ஒரு அளவிற்கு அவர்களை தயார் செய்து வைக்கிறார்கள் வீட்டு பெரியவர்கள். ஆனால் ஆண்களை இப்படி தயார் செய்வதில்லை, அதனால் தான் திருமணம் என்கிற இந்த அமைப்பில் ஆண்கள் ரொம்பவே திக்குமுக்காடி போகிறார்கள். அவர்களின் அறியாமை பெண்களையும் பாடுபடுத்தி விடுகிறது.

திருமணத்தின் முதல் நிலை: துணை தேர்வில் இருந்தே ஆரம்பிப்போமே. அந்த வாலிபன் மெத்த படித்து வெளிநாட்டில் வேலையில் இருப்பவன். முப்பது வயது நெருங்குகிறதே, கூட இருக்கும் பசங்களுக்கு எல்லாம் கல்யாணம் ஆகிவிட்டதே, எத்தனை நாள் தான் படம் பார்த்து படுக்கையில் புரண்டுக்கொண்டிருப்பதாம், என்றெல்லாம் பல வாராக யோசித்து, “பொண்ணு பாருங்க” என்று ஜாடை மாடையாகவும், அது பலிக்காத போது நேரடியாகவும் சொல்லி விட்டான் பையன். ஜாதகம் பார்த்து, நிறம், வசதி, வருமாணம், அந்தஸ்து பார்த்து, இதனால் பல நூற்றுக்கணக்கான பெண்களை கழித்து கட்டி, இறுதியில் மூன்றே பெண்களின் வரலாற்று குறிப்பை கொடுத்தார் அம்மா. அதில் ஒரு பெண்ணை காட்டி, “இந்த பொண்ணை தான் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு” என்று அம்மா சொல்லிவிட, பையனும் சுறுசுறுப்பாக அம்மா சிபாரிசு செய்த பெண்ணை முதலில் போய் பார்த்தான். ஆனால் அந்த பெண் அவனுடைய உலகமயமான சிந்தனைக்கு ஒத்துவரவில்லை. லிஸ்டில் அடுத்த பெண்ணை பார்த்தான், அவளை என்னவோ அவனுக்கு பிடித்து போனது…..அம்மாவிடம் சொன்னால் முகம் சுளித்தாள். இப்போது பையனுக்கு ஒரே குழப்பம், தனக்கு பிடித்த பெண்ணை தேர்ந்தெடுப்பதா, அல்லது அம்மாவுக்கு பிடித்த பெண்ணை தேர்ந்தெடுப்பதா? தனக்கு பிடித்த பெண் என்றால் அது அம்மாவுக்கு செய்யும் துரோகம் ஆகாதா? அம்மாவுக்கு பிடித்த பெண் என்றால் குறைந்த பட்சம் அம்மாவாவது திருப்தி அடைவார்கள், அம்மாவுக்காக தியாகம் செய்துவிட்டால் தான் என்ன, என்பது பையனின் பெருங்குழப்பம்.

இதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அம்மாவுக்கு தெரியாதா? பெரியவங்க பார்த்து பண்ணி வெச்சா தப்பா போகாது, அதனால அம்மா சொல்லுகிற பெண்ணை மனமாற ஏத்துகிட்டா, போக போக தானா ஆசை வந்திரும் என்கிற கட்சியா நீங்கள். கல்யாணம் யாருக்கு, உனக்கு தானே? நீ தானே வாழப்போறே, உனக்கு பிடிச்ச பொண்ணா பாருப்பா, என்கிற கட்சியா நீங்கள்?

உங்கள் கருத்து ஒரு பக்கம் இருக்கட்டும். அறிவியல் என்ன சொல்கிறதென்று பார்போமே:

1. திருமணம் சொர்கத்தில் நிச்சையமானது என்கிற பேத்தல்களை எல்லாம் மீறி, திருமணம் என்பது ஒரு ஜெனடிக் ஒப்பந்தம், இரண்டு பாலினரின் மரபணுக்கள் கலந்து ஆரோகியமான அடுத்த தலைமுறை உருவாகிட சமூதாயம் ஏற்படுத்திய ஒரு சடங்கு. அதனால் தான் திருமணம் என்றாலே, “சாந்தி முகூர்த்தம்” என்கிற சடங்கை முதலில் செய்கிறார்கள்.

2. இப்படி ஒரு ஆணும் பெண்ணும் இணைய வேண்டும் என்றால் அவர்களுக்குள் செக்ஷுவல் கெமிஸ்டிரி சரியாக ஒருங்கிணைய வேண்டும். இந்த கலவியல் கவர்ச்சி என்பது அவரவர் சொந்த விஷயம், இதில் பெற்றவர்கள் கூட கருத்து சொல்லிவிட முடியாது.

3. அம்மா அப்பாவை திருப்தி படுத்த, அவர்களை பார்த்துக்கொள்ள, என்ற காரணங்களுக்காக எல்லாம் ஒருவனோ ஒருத்தியோ திருமணம் செய்துக்கொள்கிறார்கள் என்றால், அவர்கள் தங்கள் மரபணுக்களை பரப்பிக்கொள்வதற்கு முக்கியத்துவம் தரவில்லை என்று அர்த்தமாகிறது. மனித விதிகளின் படி, ”அடடா, என்ன ஒரு அம்மா செண்டிமெண்ட், என்ன ஒரு குடும்ப அக்கறை” என்றெல்லாம் நாம் பாராட்டினாலும், இயற்க்கையை பொருத்தவரை, “உன் மரபணுக்களை எதிர்காலத்திற்கு பரப்பிக்கொள் என்றால், உன்னை பெற்றவர்களின் கடந்த கால மரபணுக்களை பராமறிக்க நேரத்தை வீண்டிக்கிறாயே.” ரிவர்ஸ் கியரில் மரபணு பயணம் செய்தால், சர்வைவல் ஆஃப் தி ஃபிட்டெஸ்ட் என்கிற இந்த ஆட்டத்தில் தோற்றுவிட்டதாய் தானே அர்த்தம்.

அதற்காக, அம்மா அப்பாவை அப்படியே விட்டுவிடுவதா, நம்மை பெற்று, வளர்த்து ஆளாக்கியவர்களை இப்படி உதாசீனப்படுத்துவது அநியாயமாகாதா? அதுவும் சரி தான், இந்த ஈக்குவேஷனை எப்படி சமன் படுத்துவது என்பதை பற்றி எல்லாம் அடுத்த இதழில்

உயிர் மொழி

ஈரக்கூந்தலுடன் வந்து வாசலில் கோலம் போட்டு, கணவனுக்கு ஆவி பறக்கும் காபி கொடுத்து, துளசி மாடத்தை சுற்றிவந்து, கலாச்சார பாரம்பரியங்களை அடி பிரளாமல் கடைபிடிக்கும், “பொண்ணுனா இப்படி இருக்கணும்!” என்று பெயர் வாங்கும் பெண் அவள். அத்தனை அழகு, அடக்கம், ஒடுக்கம். தன் வீடு உண்டு வேலை உண்டு என்று இருப்பாள். அதிர்ந்துக்கூட பேச மாட்டாள். திருமணமாகி பதினைந்து வருடங்கள் ஆகிவிட்டிருந்தன. இரண்டு மணியான குழந்தைகள். யாரும் பார்த்தால் பொறாமை படக்கூடிய வாழ்க்கை தான். ஆனால் யாருக்கும் தெரியாத ரகசியம் என்னவென்றால் அந்த குடும்ப தலைவி, கணவன் வேலைக்கு போன அடுத்த நிமிடம் தன் செல்ஃபோனில் இன்னொரு காதலுடன் மணிக்கணக்கில் பேசி, சிரித்துக்கொண்டு இருந்தாள். அவனிடம் ஒரு நாள் பேசவில்லை, இல்லை, பேச கொஞ்சம் தாமதமாகிவிட்டாலும் போதும் அவளால் அதை தாங்கிக்கொள்ளவே முடியாது. உடனே இருப்புக்கொள்ளாமல் தவிப்பதென்ன, பட படவென வருவதென்ன, பார்ப்பவர் மேலெல்லாம் எரிச்சலுற்று கோபப்படுவதென்ன. இந்த புதியவனுடன் பேச ஆரம்பித்ததிலிருந்து இவளுக்கு தன் கணவனுடைய நெருக்கமே பிடிப்பதில்லை…. தன் கணவனை விட்டு விட்டு இன்னொரு ஆளோடு இப்படி கொஞ்சிக்கொண்டிப்பது தவறு என்று அவளுக்கு குற்ற உணர்ச்சி குத்தாமல் இல்லை…..இருந்தாலும் இந்த வழக்கத்தை அவளால் விட முடியவில்லை. அதனால் மிக மிக ரகசியமாய் இவளது தொலைப்பேசிக்காதல் தொடர்ந்துக்கொண்டே இருந்தது.


அதெப்படி, இந்த தமிழ் திருநாட்டில் ஒரு பெண் இப்படி கற்புக்கெட்டு நடக்கலாமா? இது பத்தினிதர்மத்துக்கு புறம்பானது அல்லவா? கட்டின கணவனை விட்டுவிட்டு ஒருத்தி இப்படி எல்லாம் கண்டவனோடு கடலை போட்டுக்கொண்டிருக்கலாமோ? என்று நாம் என்னதான் வியாக்கியானம் பேசினாலும், இது போன்ற நடப்புக்களை தடுக்க முடிவதில்லை. காரணம் மனிதன் நியமித்த விதிகள் எல்லாவற்றையும் கடந்து, எல்லாம் வல்ல இயற்கை ஏற்கனவே ஏற்படுத்தியுள்ள வேறு சில விதிகளும் இருக்கின்றன. இந்த விதிகள் ரொம்பவே வலிமையானவை என்பதால், இவற்றுக்கு நாம் உட்பட்டுவிடுகிறோம். விரும்பியோ, விரும்பாமலோ.

இதற்கு நேர்மாறாகவும் நடப்பது உண்டு. அவன் அந்த பெண்ணை உயிருக்கு உயிராய் நேசித்தான், அவள் வேண்டாம் வேண்டாம் என்று பல தடைகளை முன் நிறுத்திய போதும், அவளை கன்வின்ஸ் பண்ணி மசிய வைத்தான். வேறு வேறூ ஜாதிகள் என்பதால் வழக்கம் போல பெருசுகள் பெரிதாய் மறுத்தார்கள். குடும்ப மானம், குல கௌரவம், லொட்டு லொசுக்கு என்றெல்லாம் அவர்கள் மொக்கை போட்டுக்கொண்டிருக்க, சத்தம் போடாமல் பதிவு திருமணம் செய்துக்கொண்டு, பெற்றோருக்கு செக் வைத்தார்கள் காதலர்கள். வேறு வழி இல்லாமல் இந்த திருமணத்தை ஏற்றுக்கொண்டார்கள் இருவீட்டாரும். ஆனால் பையனின் அம்மா, “இந்த கல்யாணத்தை நான் ஏத்துக்கவே மாட்டேன்” என்று ஒரு தற்கொலை நாடகம் நடத்த, அன்றோடு தீர்ந்து போனது பையனின் ஆண்மை எல்லாம். அதற்கு பிறகு அவன் மனைவியுடன் அவனால் ஆசையாக இருக்கவே முடியவில்லை. காதலர்களாய் இருந்த போது, இவன் அவளை ஆசையாய் தொட்ட போதெல்லாம் அவள், “கல்யாணத்துக்கு அப்புறம்…” என்றூ காக்க வைத்த காலம் போய், இப்போது, இவள் அவன் எப்போதடா கிட்டே வருவான் என்று ஏங்கிக்கொண்டிருக்க, அவன் பக்கத்தில் வந்ததும், “எங்கம்மாவை நீ மதிக்கிறதே இல்லை,” என்று ஆரம்பித்தான் என்றால் ராத்திரி முழுக்க ஒரே ரம்பம் தான். அழகான பெண்டாட்டி ஆவலாய் பக்கத்தில் இருக்கும் போது அந்த நேரம் பார்த்து, அம்மாவை மதிக்கவில்லை என்று கவலை படுபவன் எல்லாம் ஒரு ஆம்பிளையா? வாழ்க்கைய என்ஜாய் பண்ண தெரியாத முட்டாளா இருக்கானே, இவன் மூஞ்சுக்கெல்லாம் ஒரு கல்யாணமா? என்று நீங்கள் கூட அவனை நிந்திக்கலாம். ஆனால் கசப்பான உண்மை என்ன தெரியுமா? இந்த ஓவர் அம்மா சொண்டிமெண்டினாலேயே ஆண்மையை இழந்து வாழ்க்கையில் தோற்றுப்போன ஆண்கள் ஏராளம். தன்னால் இப்படி மகன் ஊனமானி போனான் என்று தெரிந்தும், பையனை தன் கட்டுபாட்டிலேயே வைத்துக்கொண்டிருக்கும் தாய்குலங்கள் அதை விட ஏராளம். இப்படி கூட இருப்பார்களா?. இது இயற்கைக்கே புரம்பானதாயிற்றே. ஈ, கொசு, கரப்பான்பூச்சி கூட, யாரும் சொல்லித்தரமால் சமர்த்தாய் இனம் சேர்ந்து அடுத்த தலைமுறையை பெற்று பல்கி பெருகிக்கொள்கின்றனவே. இத்தனை அறிவும், ஆற்றலும் இருக்கும் மனிதன், இந்த பேசிக் மேட்டரில் கோட்டை விடுவானா? என்று நீங்கள் யோசித்தால், விந்தையான உண்மை என்ன தெரியுமா? இயற்கையின் விதிகளை மீறி, ஈ கொசு மாதிரியான ஜீவராசிகளுக்கு இயல்பாய் ஏற்படும் இச்சைகளை மீறி, மனிதர்களுக்கு என்று மட்டும் சில பிரத்தியேக விதிகள் உள்ளன. இந்த விதிகளுக்கு உட்பட்டு வாழ முயலும் மனிதர்களும் பலர் இருக்கிறார்கள்.

ஆக, எல்லா ஜீவராசிகளுக்கும் பொதுவாய் இருக்கும் சில universal விதிகள், மனிதர்களுக்கு மட்டும் பொருந்தும் சில தனி விதிகள் என்று இரண்டு நிலைகளில் மனிதர்கள் வாழ்கிறார்கள். இந்த இரண்டு செட் விதிகளும் ஒத்துப்போகும் போதும் பிரச்சனைகள் இருப்பதில்லை, ஆனால் இவை முரண்படும் போது ஏற்படும் பிரச்சனைகளுக்கு அளவே இல்லை! இவை ஏன் முரன்படுகின்றன? இதனால் தானே இவ்வளவு துன்பங்களும், குழப்பங்களும். யோசித்துபாருங்களேன்….ஆதிமனிதர்களுக்கு அதிசயமாய் இருந்ததெல்லாம் நமக்கு இன்று அற்ப சமாசாரமாகிவிட்டன. அவர்களுக்கு அற்ப மேட்டராய் இருந்ததெல்லாம் இன்று நமக்கு அசிங்கமாகிவிட்டன. ஆதிமனிதன் காலத்தில் இத்தனை வசதிகள் கிடையாது, உயிருக்கு எந்நேரமும் ஆபத்து, சாப்பாட்டிற்கு உத்திரவாதமே இல்லை, தனி மனிதனின் வாழ்விற்கு பெரிய மகிமை இருந்திருக்காது. ஆனால் இன்றூ, ஆதிமனிதன் நம்மை பார்த்தால், ஏதோ இறை அவதாரம் என்றல்லவா நினைப்பான்? நினைத்தால் பிடித்தவரின் முகத்தையும், குரலையும் செல்ஃபோனில் இருந்தே எடுத்து காட்டிவிடுவோம்! இதெல்லாம் ஆதிமனிதனுக்கு மாயாஜாலமாயிற்றே…..ஆனால் இத்தனை இருந்தும் என்ன, இன்னும் மனிதர்கள் சந்தோஷமாய் இல்லையே!

இத்தனைக்கும் இன்றைய மனிதர்களுக்கு சாப்பாட்டு பிரச்சனை இல்லை, வேலை இல்லா திண்டாட்டம் இல்லை, ஏன் உடல் கோளாறு கூட இல்லை….ஆனால் மனிதர்கள் இன்னமும் சோகமாகவே இருக்கிறார்கள். காரணமே உறவுகளில் ஏற்படும் விரிச்சல்கள் தான். எல்லா உறவுகளுமே இப்போது மெயிண்டேன் செய்வதற்கு கடினாகிக்கொண்டே போனாலும், இந்த ஆண் பெண் உறவு இருக்கிறதே, இது படுத்தும் பாடு ரொம்பவே அதிகம். அது ஏன் அப்படி? அதிலும் குறிப்பாக ஆண் பெண் அகஉறவுகளில், ஏன் இவ்வளவு பெரிய விரிசல்கள்? , உங்கள் மனதை ரொம்ப நாளாய் அறித்த அதே கேள்விகள் தான்…..ஆனால் அதற்கு நீங்கள் சற்றும் எதிர்பார்க்காத, திடுக்கிடும் பதில்கள். அடுத்த வாரத்தில் இருந்து……தவறாமல் படியுங்கள், திகைத்து போவீர்கள்!

Tuesday, June 22, 2010

ஆண்களை ஹாண்டில் செய்வது எப்படி: 35

ஆண்களை ஹாண்டில் செய்வதெல்லாம் இருக்கட்டும்.  முதலில் ஆண் என்றால் யார், அவன் எப்படி தோன்றுகிறான்? என்பது பற்றி ஒரு குட்டி ஃபிலாஷ்பேக்.  இந்த தொடரின் ஆரம்பத்திலேயே சொன்ன சங்கதி தான்:  ஆண் என்பவனுக்கும் பெண் என்பவளுக்கும் இருக்கும் ஒரே வித்தியாசம் அவனுக்கு டெஸ்டோஸ்டீரோன் என்கிற ஹார்மோன் அதிகம், பெண்ணுக்கு அது மிக சொர்பமே. 
இந்த டெஸ்டோஸ்டீரோன் என்கிற ஹார்மோன், இரண்டு சமயங்களில் உற்பத்தி ஆகிறது. ஒன்று:  கரு உருவாகிய ஆறு வாரத்தில் அதன் மரபணுக்களில் ஒரு Y குரோமோசோம் இருந்தால், அது  டெஸ்டோஸ்டீரோனை சுரக்க வைக்கிறது. அதுவரை பெண்பாலை போலவே இருக்கும் இந்த வருங்கால ஆணின் உடலில் இந்த டெஸ்டோஸ்டிரோன் பாய்ந்த உடன் அந்த கருவின் உடலும், மூளையும் மனமும் ஆண்மை படுத்த பட்டுவிடுகிறது.  இது தான் முதல் கட்டம்.
அதன் பிறகு குழந்தை பிராயத்தில் மேற்கொண்டு டெஸ்டோஸ்டீரோன் உற்பத்தி ஆவதில்லை.  அதனால் தான் ஆண் குழந்தைகளின் உடல் தோற்றமும், குரலும், தோலும், பெண்ணை போலவே இருக்கின்றன.  ஆனால் இந்த பையன் வயதிற்கு வரப்போகும் காலம் நெருங்க நெருங்க, அவன் விந்தகங்கள் மீண்டும் டெஸ்டோஸ்டீரானை மிக அதிக அளவில் சுரக்க ஆரம்பிக்கின்றன.  இதனால் மீண்டும் ஒரு முறை, ஆண்மைபடுத்தும் படலம் அமலாகிறது.  இன பெருக்க உருப்புக்களின் வளர்ச்சி, ரோம வளர்ச்சி, குரல் மாறூதல், எலும்புகள் நீளுதல், தசைகள் புடைத்தல் என்று இந்த டெஸ்டோஸ்டீரோன் கலந்த உடன் அந்த பையனின் உடலில் பல மாற்றங்கள் உருவாகுவதை நம்மால் வெறும் கண்ணாலேயே பார்க்க முடியும்.
ஆனால் அவன் வயதிற்கு வந்த பின், நம் கண்ணுக்கு தெரியாமல் அவன் மூளையில் வேறு சில மாற்றங்களும் ஏற்பட்டுக்கொண்டு இருக்கும்.  எதிர் பாலினத்தின் மீது ஈர்ப்பு, காமம் சார்ந்த சிந்தனை, எந்த விஷயத்திலும் தீவிர கவனம், இதெல்லாம் போக கொசுறாய், அவனுக்கு திடீரென்று Dominance என்கிற ஆதிக்க மனப்பான்மையும் தோன்றிவிடும்.  எங்கு சென்றாலும் தான் முதன்மை இடத்தை பிடித்துவிட வேண்டும், எல்லோரையும் விட முந்திக்கொண்டு ஜெயிக்க வேண்டும் என்கிற வெறி அவனுக்கு தோன்ற ஆரம்பிக்கும். அதனால் வயதிற்கு வந்தவுடன் ஆண் குழந்தைகள் தங்கள் தகப்பனோடோ சண்டை போடுவார்கள், தாயிடம் எதிர்த்து பேசுவார்கள், எல்லோர் எதிரிலும் தங்கள் வீர தீர பராக்கிரமங்களை ஷோ காட்டிக்கொள்ள முயல்வார்கள்.
ஏன் இப்படி?  பிகாஸ், இயற்கை வல்லமையே வெல்லும், survival of the fittest என்கிற ஒரு விதியை வைத்திருப்பதால், தான் ரொம்பவே ஃபிட் என்று காட்டிக்கொண்டால் தான் அந்த ஆணை பிறர் கவனிப்பார்கள்.  அப்போது தான் பெண் பாலினம் அவனை தேர்ந்தெடுத்து, மரபணுக்களை பரப்பிக்கொள்ள ஒரு வாய்ப்பை தரும்.  இதனால் தான் இயற்கை எல்லா உயிரினத்திலும் ஆண்பாலுக்கு மட்டும் இந்த டாமினென்ஸ் குணத்தை டெஸ்டோஸ்டீரோனின் மூலமாக தூண்டுகிறது.
ஆணின் இந்த டாமினென்ஸ் அவன் டெஸ்டோஸ்டீரோன் அளவை பொறுத்தது. ஆனால் இந்த டெஸ்டோஸ்டீரோனோ எப்போதும் ஒரே மாதிரி அளவில் இருக்கும் ஹார்மோன் அல்ல. ஒரே நாளில் பல நூறு நானோ கிராம் அளவுற்கு அலைபாயும் தன்மை டெஸ்டோஸ்டீரோனுக்கு உண்டு.
ஆண்களுக்கு டெஸ்டோஸ்டீரோனை போலவே பெண்களுக்குள்ளும் இரண்டு பாலியல் ஹார்மோன்கள் உள்ளன….அவை தான் ஈஸ்டிரஜென், ப்ரொஜெஸ்டிரான்.  ஆனால் டெஸ்டோஸ்டீரானை போல இல்லாமல் இந்த பெண்பால் ஹார்மோன்கள் இரண்டுமே சொல்லி வைத்தாற் மாதிரி நிலையான அளவிலேயே இருக்கும். மாதவிடாய் நாளில் இருந்து அடுத்து வரும் ஒரு மாதத்திற்கு ஒரு பெண்ணின் பாலியல் ஹார்மோன்கள் எந்த நாள் எந்த அளவில் இருக்கும் என்பதை துல்லியமாக அனுமானித்துவிட முடியும்.  ஆனால் ஆணின் உடலிலோ, ஒரு நாளின் 24 மணி நேரத்திற்குள் டெஸ்டோஸ்டிரோன் மேலும் கீழுமாய் நிலை இல்லாமல் அலைபாய்ந்துக்கொண்டே இருக்கும்.  எப்போது எவ்வளவு இருக்கும் என்பதை முன்னறியவே முடியாது.
ஏன் அப்படி என்று தானே கேட்கிறீர்கள்.  காரணம், டெஸ்டோஸ்டீரோனின் அளவு ஆணின் மனநிலையை பொருத்தே இருக்கிறது.  அவன் தன்னை ஒரு வெற்றியாளனாக, வீரனாக, உயர்ந்தவனாக எண்ணிக்கொண்டால் உடனே அவனுடைய ரத்ததில் டெஸ்டோஸ்டீரான் அளவு கூடிவிடுகிறது.  இதுவே அவன் தன்னை ஒரு தோத்தாங்கோலியாகவோ, ஏமார்ந்தவனாகவோ, கோழையாகவே நினைத்தாலும் போச்சு, சடாரென டெஸ்டோஸ்டீரான் அளவு சரிந்துவிடும்.
ஒரு மனிதனின் டெஸ்டோஸ்டீரோன் அளவு அதிகமாய் இருக்கும் போது, அவன் சந்தோஷமாய் இருக்கிறான்.  தன்னம்பிக்கையும், விடா முயற்சியும் சாதிக்க வேண்டும் என்கிற வைராக்கியமும் அப்போது அவனிடம் அதிகமாக இருக்கும்.  ஆனால் அதே ஆணின் டெஸ்டோஸ்டீரான் அளவு குறைந்து போய்விட்டால் அவன் சோகமாகிவிடுகிறான்.  தேவையற்ற எரிச்சல், ஆத்திரம், பொறுமையின்மை, சுய பரிதாபம், தோல்வி மனப்பான்மை, கோழைத்தனம் எல்லாம் சேர்ந்து அவனை ஆட்டி படைக்க ஆரம்பிக்கின்றன.  இதனால் அவன் அதிக நோய்களுக்கு ஆளாகிறான். உடலாலும் மனதாலும் பெருத்த சங்கடத்திற்கு உள்ளாகிறான்.  அதற்கு மேல் போட்டி இட்டு ஜெயிக்கும் திராணியை அவன் இழந்துவிடுவதால் அவனால் வாழ்க்கையில் ஜெயிக்க முடியாமல் போகலாம்.
இது தான் டெஸ்டோஸ்டீரானின் தன்மை என்றால், இப்போது சொல்லுங்கள், உங்கள் ஆணின் டெஸ்டோஸ்டீரோன் அதிகமாய் இருந்தால் உங்களுக்கு லாபமா, அல்லது குறைவாய் இருந்தால் உங்களுக்கு லாபமா?
அவனுக்கு டெஸ்டோஸ்டீரோன் அதிகமாய் இருந்தால் அவன் சுலபமாய் அதிகமாய் சாதிப்பான்.  அவன் சாதனைகளின் மேல் நீங்கள் இலவச சவாரி செய்து சொகுசாய் வாழலாம்.  ஆனால் அவனுக்கு டெஸ்டோஸ்டீரான் குறைந்து போனால் அவனால் அதற்கு மேல் சாதிக்க முடியாது, அவனால் அவன் மனைவிக்கு பெரிய பயன்பாடு இருக்காது…….ஆக ஆணின் டெஸ்டோஸ்டீரோன் அதிகமாய் இருந்தால் தான் பெண்களுக்கும், சமுதாயத்திற்கும் லாபம்!!
இந்த டெஸ்டோஸ்டிரானை எப்படி அதிகமாக்கிவிடுவது என்று தானே யோசிக்கிறீர்கள்? சிம்பிள், அவன் தான் உயர்ந்தவன், வெற்றியாளன், வீரன் என்று அவன் நினைத்தாலே போதும், அவன் டெஸ்டோஸ்டீரான் அதிகமாகி விடுமே. வெளி உலகில் அவன் நிஜமாக ஜெயிக்கிறானா தோற்கிறானா என்பதெல்லாம் பெண்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் விஷயமே அல்ல.  அதனால் அவன் வெளியே இருக்கும் போது அவன் டெஸ்டோஸ்டீரான் அளவை பெண்களால் கட்டுபடுத்த முடியாது.
ஆனால் அவள் வீடு என்கிற தனி சாம்பிராஜியத்திற்குள் அவன் வந்துவிட்டால், அதன் பின் அவன் டெஸ்டோஸ்டீரானின் அளவை நிற்னயிப்பதே பெண் தான். அவனை, பெரிய ஹீரோ மாதிரி நடத்தி, உன்னை மாதிரி ஒரு வெற்றீயாளன் யாருமே இல்லையடா என்று நம்பவைத்தாலே போதும், அவன் டெஸ்டோஸ்டீரான் அளவு ஆகாஷம் வரை பாயும், உடனே சந்தோஷமும், உற்சாகமும் பீறீட்டு விட, அவன் இன்னும் இன்னும் அதிகமாய் சாதிக்கும் ஆர்வத்தை பெறூவான்.
அதை விட்டு விட்டு, என் அப்பா மாதிரி வருமா? என் அண்ணன் மாதிரி வருமா? எதிர்வீட்டுகாரன் மாதிரி வருமா, என்று அவன் எதிரில் வேற்று ஆண்களை நீங்கள் பாராட்டி, இவனை மட்டம் தட்டிவிட்டீர்ங்கள் என்று வையுங்கள்……போச்சு, அவன் டெஸ்டோஸ்டீரான் அந்தர்பல்டி அடித்துவிடும், அவன் ஆக்ரோஷத்துடன் உங்களை அடிக்க கிளம்பிவிடுவான், அல்லது வேண்டாத பழக்கங்களால் தன்னை அழித்துக்கொள்ள கிளம்பிவிடுவான்.
அதனால் ஆண்களை ஸ்மார்ட்டாக ஹாண்டில் செய்ய விரும்பும் ஸ்நேகிதிகாள், அவனை எப்போதுமே பாராட்டுங்கள்.  உன்னால முடியும், நீ சாதிக்கவே பிறந்தவன், நீ நினைத்தால் முடியாததா என்றெல்லாம் அவனுக்கு கொம்பு வீவி விடுங்கள் பிறகு பாருங்கள் அவன் எவ்வளவு சாதிக்கிறான் என்றூ.
உதாரணத்திற்கு சக்ரவர்தி திருமகன் ராமனை எடுத்துக்கொள்ளூங்களேன்.  அவன் மனைவி சீதாவை ராவணன் கடத்திக்கொண்டு போய் அசோக வனத்தில் சிறைவைத்த போது, அவளை தேடி போய் கண்டு பிடித்த அனுமான், “என் தோளில் ஏறிக்கொண்டால் நான் இப்போதுமே உம்மை காப்பாற்றிக்கொண்டு செல்வேன்” என்று சொன்னான்.  அப்போது சீதை, “ஐ சூப்பர் ஐடியாவா இருக்கே,” என்றூ உடனே அவன் தோளில் ஏறிவிட்டாளா என்ன? இல்லையே, “நான் நினைத்தால் எப்போதோ இங்கிருந்து தப்பி போயிருப்பேன், ஆனால் அது ராமனின் வீரத்திற்கு கலங்கமாகிவிடும்.  அவர் மாவீரர், அவரால் ஆகாதது ஏதும் இருக்கிறதா?  அவர் வந்து என்னை மீட்பார் என்கிற நம்பிக்கை எனக்கிருக்கிறது. போய் அவரிடம் இதை சொல்” என்றாள். இத்தனைக்கும் ராமன் காட்டில் சாப்பாட்டிற்கே லாட்டரி அடித்துக்கொண்டு, ஒரு குரங்கு கூட்டத்துடன் சுற்றிக்கொண்டு இருந்தான்.  அவனுக்கே இவ்வளவு ஊக்கம் தந்தாள் சீதை.
ராவணனோ பெரிய பராக்கிரம சாலி, ஏழு லோகத்தையும் வென்ற ஜித்தன்……ஆனால் அவனை அவன் மனைவி மண்டோதரி, “வேண்டாம், போருக்கெல்லாம் போய் டைம் வேஸ்ட் பண்ணாதே.  ராமன் உன்னை விட பலசாலி….” என்று ராமனோடு அவனை ஒப்பிட்டு மட்டம் தட்டி, டிஸ்கரேஜ் செய்து தடுத்தாள்.  இதனால் ராவணனின் டெஸ்டோஸ்டீரான் அளவு என்ன ஆகியிருக்கும்?  சந்தேகமே இல்லாமல் சுரத்தல் குறைந்திருக்கும்.  விளைவு, எவ்வளவோ சக்திவாயந்தவனாக இருந்தும் இராவணம் தோற்று போனான்.
சரியான சாப்பாடு இல்லாமல், குரங்குகளின் உதவியோடு போரிட்டாலும் இராமனே ஜெயித்தான்.  காரணம், அவன் மனைவி அவனை தூக்கிவைத்து பேசியதால் அவன் டெஸ்டோஸ்டீரோன் அளவு அதிகமாக இருந்தது.  அதனால் அவனால் ஜெயிக்க முடிந்தது.
இதெல்லாம் புராணகதையாக இருந்தாலும், இதில் இருக்கும் அறிவியல் துணுக்கு இது தான்:  பெண்ணின் பாராட்டுக்கு ரொம்பவே அதிக பவர் உண்டு.  நீங்கள் உங்கள் கணவன்/காதலன்/மகன்/சகா/நண்பன்/ஊழியனை ஒரு முறை பாராட்டிப்பாருங்களேன்.  அவன் பெரிய பெரிய சாதனைகளை சுலபமாக புரிவான்.  இதற்கு நேர்மாறாய், அவனை மட்டம் தட்டி, உதாசீனப்படுத்தி, “டேய் சரியான வேஸ்டுடா நீ!” என்றூ இழிவு படுத்தி பாருங்கள்…..இந்த காயம் அவனை தோற்கடித்துவிடும்.
ஆகயால் ஆண்களை ஹாண்டில் செய்ய விரும்பும் அன்பு ஸ்நேகிதிகாள்…..உங்கள் ஆணை ஹீரோ மாதிரி நடத்துங்கள், அவன் மென்மேலும் ஜெயித்துக்கொண்டே போவான்.  ஸீரோ மாதிரி நடத்தினீர்கள் என்றால் அவனுடன் சேர்ந்து நீங்களும் தோற்றுபோவீர்கள்.